.

Saturday, December 30, 2006

e-த்திச் சூடி

e-த்திச் சூடி

மேசானில் ஆர்டர் செய்
ர்க்கூட்டில் பழகு
ணைப்பை கைவிடேல்
பேயில் விற்றுவிடு
ரல்களை சேமி
ரெல்லாம் நண்பர்கொள்
ண்ணியதை கூகிள் தரும்
'ஏ' த்ளங்கள் பாப் அப் தரும்
யம் தீர்க்கும் விக்கிப்பீடியா
ரே மெயில் ஐடி கொள்ளேல்
சியிலேயே ப்ரவுசிங் செய்

வ் ஆர் யூவில் துவங்கு(How are you?)
தே e-நயம்.

சும்மா டைம் பாஸ் மச்சி (மச்சினி?)

Sad'AM' News

சுருக்க(கு)மான முடிவு
நேற்று! இன்று! நாளை?

ஒருவிரல் உன்னைச் சுட்டும்போது மற்ற மூன்றும்?

முன்பு! பின்பு!

தூக்கிலிடப்பட்டவர்கள்

அமைதியான உலகம்?


நீயும் நானுமா?

விளையாடு. வேட்டையாடு.

வேட்டைக்கார நண்பா?

நன்றி: http://www.cagle.com/main.asp

Friday, December 29, 2006

2007 தமிழ் திரைப்படங்கள் முன்னோட்டம்

இதுக்கு முன்னால போட்ட இந்தப் பதிவ படிச்சிட்டீங்களா?

தமிழ் திரையுலகத்துக்கு இது பொற்காலம். 2007ல் வெளிவர(மாட்டாத) படங்கள் பற்றிய முன்னோட்டம்

நோ (Sக்கு எதிர்சொல்) ப்ரொடக்சன்ஸ் வழங்கும் 'நிழல்':
நிழல், ரெண்டு பணக்காராப் பசங்களோட கதை. அண்ணன், தம்பி, ரெண்டுபேர். ஒருத்தன் வாழ்க்கைய கொஞ்சமா எஞ்சாய் பண்றான் இன்னொருத்தன் ரெம்ப டூ மச்சா எஞ்சாய் பண்றான். அண்ணன் தியேட்டர் ஓணர். தம்பி இந்தியாவிலேயே பெரிய விளம்பரக்கம்பெனி வச்சிருக்காரு. ரெம்ப உல்லாசமான வாழ்க்கை. கடைசில யார் இதுல எயிட்ஸ் வராம சர்வைவ் ஆகிறாங்கண்றதுதான் கத.

டுபாக்கூர் ப்ரொடக்சன்சின் 'ரெண்டரை':
மூணு மாதவன், ஒருத்தன் வெட்டிப் பய, ஒருத்தர் குருடு, இன்னொருத்தர் அரை லூசு. படம் கலக்கல் காமெடியா வரப் போகுது, முக்காவாசி டையலாக் வடிவேலுக்குத்தான். பேசிக்கிட்டே இருக்காரு. 'எப்படித்தான் நம்மளவச்சி காமெடி பண்றாங்களோன்னு?' ஒரு டையலக்வேற.

கே. எஸ். சிரிக் குமாரின் 'புவியியல்' :
வரலாறு எடுத்தாச்சு அடுத்தது புவியியல்தானே? வழக்கமா வரக்கூடிய பணக்கார வீட்டு பின்னணி. கதை ரெண்டு வார்த்தையில சொல்லிடலாம். ஆனா திரைக்கதை? வார்த்தையில சொல்ல முடியாது. பூமி பிரச்சனை(ரேண்டே வார்த்தையில சொல்லிட்டேன்). பணக்கார அண்ணன் தம்பிங்க சொத்த பிரிக்கிறதுல நடக்குற சண்டைய மையமா வச்சி புவியியல். படத்துக்கு ஆங்கிலத்துல 'Bad Father'னூ பேரு.

பேக்கிரி :
விஜய் பேக்கிரி வச்சு நடத்துறவரா வர்றார். 'தமிழ் நாட்டு கேக்கத்தின்னா தாகம் தீந்து போகும்டா.. தலைவா உன் கேக்கத்தின்னா காகம் வெள்ளையாகும்டா' பாட்டுடன் எண்ட்றி தர்றார் விஜய். வழக்கமான தெலுங்கு ரீ மேக் கதைன்னாலும் அங்கங்கே மானே தேனே எல்லாம் சேர்த்திருக்காங்க.

திருவிளையாடல் ஆ! ரம்பம்:
வழக்கமான முடிச்சுகளுக்கு புதுப் புது ட்விஸ்ட் வச்சு வரக்கூடிய படம். இப்ப வந்த படமும் அதமாதிரிதானேன்னு நினச்சீங்கன்னா என் பொறுப்பில்ல. தனுஷ் புதுசா எதுவுமே பண்ணாத இன்னொரு படமா இது இருக்கும் எல்லாரும் பேசிக்கிறாங்க. ரஜினிகாந்தின் பழைய பாட்டு ஒண்ண ட்ரம்ஸ் பீட்டோட போட்டு தாக்கியிருக்காங்க. 'என் சோகக் கதையக் கேளு' ரஜினி பாட்டில்லையா?

F
ஈ இயக்குனர் எடுக்கும் அடுத்த படம். என்னங்க ஆங்கிலப் பெயர்னு கேட்டா? ஈக்கு அப்புறம் Fதானேங்கிறார் மனுசன். தமிழகத்துல பஸ்லயெல்லாம் 12B, 47Dன்னு வச்சிருக்காங்களேன்னு லாஜிக் வேற. ப்ரொட்யூசர் வரி விலக்கு கிடைக்காதேன்னு கவலைப்படுறதால படத்துக்கு 'உ'ன்னு பேர் வச்சாலும் வைப்பாங்க. F, சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருத்தர் வைரஸ் ஒன்ன டெவலப் பண்ணி வச்சிட்டு ஒலகத்துல உள்ள கம்ப்யூட்டரையெல்லாம்... என்னது? இந்தக் கத ஏற்கனவே தெரியுமா?

சீமானின் தங்கச்சி:
தம்பி படத்த அப்படியே உல்டா பண்ணி தங்கச்சின்னு எடுக்கிறார். ஹீரோயின் ஒரு தமிழ் கவிதாயிணி. வார்த்தைக்கு வார்த்தை ஆம்பிள கவிஞர்கள் பேரச்சொல்லி திட்டுறமாதிரி டையலாக். கவிதைகள்ள வரும் வார்த்தைகள சென்சார் போர்டுல கட் பண்ணச் சொன்னதால படத்துல 20 நிமிஷம் அமைதியாவே இருக்குமாம்.

கிளை நகரம்:
A true story. அண்மையில் சென்னைக்கு அருகில் உருவாக்கப்படப் போவதா இருந்த துணை நகரம் பற்றிய கதை. ஒரு பெரிய நடிகர் தன் வேலக்காரங்களுக்காக இது வராம தடுக்கிறார். அவருக்கு முடி முளைச்சதும் படப் பிடிப்பு ஆரம்பம்.

சீரக சிந்தாமணி:
விஷால் ரகுவரன் காம்பினேஷன் அடுத்தது தரப்போற அதிரடி படம். சிலப்பதிகாரம் சிவப்பதிகாரமானதப் போல சீவக சிந்தாமணிய சீரக சிந்தாமணின்னு மாத்திட்டாங்க. டிஸ்கோ பாடல்கள பத்திய ரிசர்ச் பண்ண விஷால் சென்னைக்கு வர்றாரு. அங்க ரகுவரன பாக்கிறார். என்னது? இந்தக் கதையும் உங்களுக்கு தெரியுமா?

அ, இ, ஆ, ஈ:
இது பார்ட்டிBun சாரோட படமுங்க. எதையாவது டிபரண்டா செய்யணும்னு நீங்க நினைபீங்க ஆன இவரு எல்லாத்தையுமே டிபரண்டா செய்ய நினைப்பார். ரெம்ப கிரியேட்டிவா எடுக்கப்பட்ட படம்(னு அவர் சொல்லிகிறாரு). படத்தோட துவக்கவிழாவில எல்லாரையும் தலைகீழா உக்காரச் சொல்லி மேடையயும் தலைகீழா போட்டு வச்சிருக்காரு. ஹீரோயின் உதட்டுல 'வருக'ன்னு எழுதிவச்சி இதுதான் 'அழைப்பு இதழ்னு' சொல்லியிருக்காரு Partyபன். இவருக்கு மட்டும் எப்டீங்க இப்டி தோணுது?

இன்னும் கமல் அதிபர் புஷ் வேடம் பூணும் 'புஷ்ஷாவதாரம்', ஆர்யா கூத்தடிக்கும் 'கொட்டாரம்', பாக்கியராஜ் இயக்கும்,'லாறிஜாதம்', சிம்புவின் 'ஜொள்ளவன்', பரத் நடிக்கும் 'தம்(Dhum) மகன்', 'சித்திரம் பேசாதடி', 'கிழக்கு கடற்கரை லாட்ஜ்' , 'அழகாய் இருக்கிறாய் அசிங்கமாய் பேசுறாய்' போன்ற படங்கள் வர இருக்கின்றன.

பார்க்கத் தவறுங்கள்.

ரெம்ப கடிச்சிட்டேனோ?

சுட்டமீனும் சுறாபுட்டும்

(நட்சத்திரப் பதிவில் மீள் பதிவு தேவை எனும் விதிக்கேற்ப... அலைகள்..பாறைகளிலிருந்து..)

நமக்கு இல்லாத பழக்கங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. பொதுவாக நமக்கு விளங்காதவைகளை நாம் வெறுக்கவே செய்கிறோம். நம் மூளை செய்யும் வேலை அது. ஒருவருக்கு தெய்வீகமாகப்படும் விஷயங்கள்கூட மற்றவருக்கு அருவறுப்பகத் தோன்றுகிறது. நாம் சிறு வயது முதல் பழக்கப்பட்டு வந்தவைகள்தான் உயர்ந்தது என நமக்கு எண்ணத்தோன்றுகிறது. மதம், ஜாதி சார்ந்த நம் தீவிர (fanatic) மனப்பாங்குகளும் இதைப்போலத்தான்.

பலநேரங்களில் ஒரு மனிதனை மதிப்பிட அவரின் பழக்கவழக்கங்களை நாம் உபயோகிகின்றோம். இவையாவும் (அவருக்கு) கற்பிக்கபட்டவையே என்பதை நாம் பொதுவாக எண்ணி பார்ப்பதில்லை.

நம்மில் இருக்கும் பல பழக்கங்கள் யாரோ நமக்கு சொல்லித்தந்தது அல்லது யாரை பார்த்தோ நாம் கற்றுக்கொண்டது. மதங்களும, ஜாதி பற்றிய கொள்கைகளும்கூட யாரோ நமக்கு ஊட்டிய பால்தான். ஏதோ அவை நாமே உருவாக்கியது போல சில நேரங்களில் நடந்துகொள்கிறோம்.

ஜப்பானில் பல ஜந்துக்களை ருசித்து உண்கின்றனர். அமெரிக்காவில் மாட்டிறச்சியை சுட்டு சாப்பிடுகின்றனர், இதெல்லாம் நம்மில் பலருக்கு வியப்பளிப்பது போலவே நாம் பட்டை இலவஙத்தைப் போட்டு குழம்பு வைத்து அதை சோறில் ஊற்றி சாப்பிடுவது அமெரிக்கர்களுக்கு வியப்பளிக்கிறது. பட்டை மணம் மெற்கு நாடுகளில் இனிப்புகளில் (மட்டும்?) பயன்படுத்தப் படுகின்றது.

பச்சை மீனை சுட்டு உண்பதை மீன் உண்பவர்கள்கூட புரிந்து கொள்வதில்லை. கடல்புறங்களில் பேர்போன ஒரு பழக்கம் அது.

காலப் பயணமாக பின் சென்று நம் முன்னோர்கள்போல வாழும் ஒர் அரிய அனுபவம். இதன் சுவை பற்றி கவிதைகள் வரையலாம். மாமிசம்/மீன் உண்ணாதவர்கள் சில கிழங்கு வகைகளை சுட்டு உண்டு பார்க்கவும். மற்றவர்கள் இந்த அனுபவத்தை பெறுவார்களாக.சுடுவதற்கு ஐஸ் மீன் உகந்ததல்ல. கடற்கரையில் கிடைக்கும் வாடாத மீன்களைச் சுடுவதே நல்லது. எல்லா வகை மீன்களும் சுட்டால் ருசிப்பதில்லை. அதற்கென்று சில மீன் வகைகள் உள்ளன. சாளை(மத்தி), அயிலை, போன்ற மீன்கள் பெயர்போனவை. முட்டத்தின் கள்ளுக்கடைகளில் சுட்ட பச்சை மீன் மிகப் பிரபலம்.

அவித்த மரச்சீனி(மரவள்ளி) கிழங்கும் சுட்ட பச்சை மீனும் நிகரில்லா இணைகள். இதற்கு மாற்று மரவள்ளிக் கிழங்கும் அவித்த தோடும். தோடு (mussel) என்பது ஒருவகைச் சிப்பி. ஒரு பருவத்தில் முட்டம் மற்றும் கடியப்பட்டிணத்தின் பாறைகளில் அதீதமாக விளையும் இந்தத் தோடுகள். இதைக் கழுவி உப்பு கூட போடாமல் அவிக்கலாம். உப்பு அதிலேயே இருக்கும். மரச்சீனிக் கிழங்குக்கும் இந்த தோடுக்கும் அப்படி ஒரு சம்பந்தம். கள்ளுண்ன சிறந்த கூட்டு.இந்த அவித்த தோடுகள் அமெரிக்காவின் சீன பஃபேக்களில்(buffet) கிடைக்கின்றன.

எச்சரிக்கை: சென்னை அடுக்கு மாடி வீடுகளில் மீன்சுடுவது உங்கள் பின்புலனை பறைசாற்றுவது போலாகும். மகாபலிபுரம் போன்ற கடற்கரைகளுக்கு சிற்றுலா(picnic) போகும்போது இதை செய்து பார்க்கவும்.

மரவள்ளிக்கிழங்கை, மசாலாவுடன் நெத்திலி போன்ற சிறிய மீன்களைப் போட்டு மசிய அவித்தால் 'கிழங்குக் களி'. சரவணாபவனின் முதல் மாமிச உணவாக இதை சேர்க்கலாம். மிகச் சத்தான உணவு. இந்தக் கிழங்கை துண்டுகளாக வெட்டி காயப்போட்டால் 'வெட்டுக் கிழங்கு'. இதுவும் இடித்துக் களியாக்கப்படும்.

'கூனி' எனப்படும் சிறிய இரால் வகை ஒன்றை காயவைத்து அதை மிளகு, மசாலாவுடன் இடித்து பொடிசெய்வார்கள். நெத்திலி கருவாடும் இவ்வாறு பொடி செய்யப் படும்.

கடற்கரையின் இட்லி பொடி இது. தேனீர் தவிர வேறெந்தெ உணவுக்கும் சுவை சேர்க்கும். நான் இதை அமெரிக்கவிற்கு அனுமதியின்றி இறக்குமதி செய்திருக்கின்றேன், எனக்கு மட்டுமாக.

கடற்புறங்களில் ஊருக்கு ஊர் மீன்குளம்பு வேறுபடும். மணம் நிறம் குணம் மாறும். எனக்கு சிறிது புளிப்பு தூக்கலக பச்சை மிளகாய் போட்டு வைத்த குளம்பு பிடிக்கும். வேலு மிலிட்ரி போல பூண்டு போட்டு மீன் குளம்பு வைப்பதில்லை.(அதையும் ரசித்து ருசித்திருக்கிறேன்).

மூரை எனப்படுவது கடல் பாறைகளில் ஒட்டி வளரும். மெல்லிய, மண்டையோட்டின் மேற்புரம் போன்ற கூட்டின்மேல், முள் போன்ற குச்சிகள் நீண்டு நிற்கும். காய்ந்த இதன் குச்சிகளை சிலேட்களில் எழுதப் பயன்படுத்துவதுண்டு.

மூரையை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் ஒர் இளந்திடப்(semi solid) பொருள் இருக்கும். இதை சமைக்காமல் பச்சையாக உண்ணலாம். பாறையிலிருந்து எடுத்து சில மணி நேரங்களுக்குள் இவற்றை உண்ண வேண்டும். முட்டத்தில் பாறைகள் அதிகமானதால் மூரைகளும் அதிகம். எல்லா நேரங்களிலும் இவை கிடைப்பதில்லை. டிசம்பரில் கட்டாயம் கிடைக்கும். மூரைகள் எனக்குப் பிரியம். வேறெந்த மீனையும் சமைக்காமல் உண்பதில்லை.

குமரிமாவட்டத்தில் அநேகமாக எல்லா பதார்த்தங்களிலும் தேங்காய் சேர்ந்திருக்கும். தலைக்கு தினமும் தேங்கய் எண்ணைதான், சமையலுக்கும். மீன்குழம்புகள் இந்த விதிக்கு விலக்கல்ல.தேங்காய் இல்லாமல் சமைக்கும் 'மஞ்சள் தண்ணி' எங்கள் வீட்டில் பிரசித்தம், தூண்டிலில் பிடித்த மரத்து மீன்களே இதற்கு சிறந்தவை.

சின்ன வெங்காயம் (குமரியில் 'உள்ளி'), மஞ்சள், புளி, சின்ன சீரகம் சேர்த்து அரைத்து கூட்டப்படும் குளம்பு. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நம் வீட்டின் சமையலை வெளிப்படுதும் குளம்புகளில் இதுவொன்று. மற்றது நண்டுக்கறி.

பழைய சோற்றிற்கு மஞசள் தண்ணி அசாத்திய சுவை சேற்கும். சுடு சோற்றை நன்கு ஆறவைத்தால்தான் மஞசள் தண்ணியின் குணம் தெரியும்.

தேங்காய் இல்லாமல், மாங்காய் போட்டு அவியல் என்று ஒன்று. இரண்டு மூன்று நாட்கள் கெடாமல் இருக்கும். மீன்போட்ட புளிக்காய்ச்சல் இது.

சுறாபுட்டு அதிகமாகப் புழங்கவில்லை. எப்போதாவது சின்ன சுறா மீன்கள் கிடைத்தால் அதை அவித்து, உதிர்த்து, வறுத்து புட்டு செய்வதுண்டு. இந்தப்புட்டை வடைபோல உருட்டி முட்டையில் தோய்த்து பொரிப்பார்கள் சிலர். சைவம் உண்பவர்கள் ஏமாந்து போகுமளவுக்கு இருக்கும். சுறா மீன்களில் மசாலா எளிதில் பிடிபதில்லை அதனால் குளம்பை விட அவியல் அல்லது புட்டுக்குத்தான் அது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது, திருக்கையும் அதுபோலத்தான்.

சுறா மட்டுமன்றி வாளை மீனிலும் புட்டு நன்றாக வரும். இதில் சதைக்குள் முள் அதிகமிருக்கும் 'துப்பு வாளை' புட்டுக்குச் சிறப்பு. சாப்பிடும்போது, முள்ளை, துப்பிக்கொண்டே சாப்பிடவேண்டும். உதிர்த்து விடுவதால் புட்டில் முள் இருப்பதில்லை.

பாம்புபோல நீளமாக, ஆனால் தட்டையாக வெள்ளி பூசிய பட்டை போலிருக்கும் வாளை மீன். முதுகுப்புறத்தில் பச்சை கலந்த நீல நிறம்.துப்பு வாளை அல்லாத வாளையில் நெய் சுரக்கும். நெய்மீனை விட சுவையாக இருக்கும் அதன் குளம்பு. வாளைக் குளம்பை சுடச்சுட சாப்பிட்டால் மட்டனை மறக்க நேரிடும்.

மீனவர்கள் தட்டு நிறைய சோறு போட்டு சாப்பிடுவது வியப்பாக இருக்கலாம். அத்தனை உடலுழைப்புக்குப் பிறகு அது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல தேவையானதும்கூட. மீன் இல்லமல் சாப்பாடு இறங்குவதில்லை கடலோர மக்களுக்கு. மீன்பிடிக்கச்செல்லாத நாட்களில் கருவாடு அல்லது இறைச்சிக் குழம்பு கட்டாயம் இருக்கும்.

மீனை பொரித்து உண்பது ஒரு சிறப்பு உணவு. கருவாட்டைப் பற்றி வர்ணிக்கத்தேவயில்லை திரைப்படப் பாடல்களே சான்று.

பெரிய மீன்களை பக்கவாட்டில் இரண்டாய்க் கீறி உப்பு, சில நேரம் மஞ்சள், தடவி காய வைப்பது ஒருவகை, நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை அப்படியே காயப்போட்டு எடுப்பது இன்னொரு வகை. சில பருவங்களில் ஊர் முழுவதும் மீன்கள் காயும். அந்த நேரங்களில் சளி பிடித்திருப்பது நல்லது. கருவாடாகும்வரைதான் இந்த ஊர் மணக்கும் நிலை.

நெத்திலி கருவாடு வீட்டின் அறைகள் முழுக்க, காற்றும் புக முடியாதபடி நிரப்பி வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். காயப் போட்ட மீன் மீது பஸ் ஏற்றிச் சென்று அடி/திட்டு வாங்கிய ஓட்டுனர்கள் பலர்.

கருவாட்டுக்கு இடம் விட்டுவிட்டு ரோடு போட்டிருக்கலாமோ?

Thursday, December 28, 2006

நாவல் எழுதுறேங்க....

(அப்படா ஒருவழியா நட்சத்திரம்னு தலைப்பில்லாத பதிவு)

ஒரு நாவல் எழுதணும்னுதான் பதிவு எழுதத் துவங்கினேன். பின்பு அதையே மாற்றி முட்டம் பற்றிய பதிவாக எழுதினேன். மீண்டும் நாவல் முயற்சியில் இறங்கியுள்ளேன். இறங்கினேன்னு சொல்லலாம். ஐந்து அத்தியாயங்களுக்குப் பிறகு கிடப்பில் கிடக்கிறது நாவல்.

இதுவரைக்கும் எழுதுனதுலேர்ந்து சில அத்தியாயங்கள் உங்கள் பார்வைக்கு.

நாவல் தற்காலத்துல நடக்குற கதை ஒரு அத்தியாயமும், நடந்து முடிந்த கதை இன்னொரு அத்தியாயமுமாய் போகுது. (எச்சரிக்கை: கொஞ்சம் நீளமான பதிவு. )


அத்தியாயம் ஒன்று : விடியல்

கடலும், வானமும் இரவின் கருநீலம் களையத் துவங்கின. கலங்கரை விளக்கொளி மங்கலாகத் துவங்கியிருந்தது. சேவல்கள் ஏற்கனவே விழித்துவிட்ட ஊரை எழுப்பக்கூவின. பாறை மீது சில கடல் பறவைகள் தங்கள் நாட்குறிப்பை சரிபார்த்துக்கொண்டன. கிழக்கே வானம் மெல்ல சிவந்திருந்தது. தூக்கம் கலைந்தெழுந்தன கடல் அலைகள், விடியலில் தினமும் பாடும் பாடல்களைப் பாடிக் கொண்டும், கடற்கரையில் தவமிருக்கும் பாறைகளை விழிக்கச்சொல்லியும். நண்டுகள் சில கடலலை மூடிவிட்டிருந்த குழிகளின் கதவுகளைத் திறந்துகொண்டிருந்தன. கடல்மேல், தூரத்தில், மின்மினி விளக்கொளிகள் மீனவர்கள் விடியலுக்கு முன்னமே கடலுக்குப் போனதைக் காட்டின. இரவின் குளிர்தென்றல் கடைசியாய் ஊரை வலம் வந்துகொண்டிருந்தது. ஆண்களை கடலுக்கு அனுப்பிய பெண்கள் விடியலென்றும் பாராமல் சத்தமாய் பேசிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். கையில் செபமாலையுடன் சில கிழவிகள் கோவில் நோக்கி நடந்துகொண்டிருந்தனர்.

கோவிலில் இரண்டாம் மணி அடித்தது. கடற்கரையில் தூங்கிக்கொண்டிருந்த விக்டர் விழித்துக்கொண்டான்.

'வீட்டுக்குப் போணுமா?' குழப்பமாயிருந்தது விக்டருக்கு.

"எல..பத்தாங்க்ளாஸ் வரைக்கும் படி. பெறவு கடலுக்குப் போ." அம்மா சொன்னது நியாபகம் வந்தது.

"எம்மா எனக்கு படிக்க இஸ்டமில்ல. ஸ்க்கூல்ல வாத்தியார் அடிக்காரு தெரியுமா?"

"நீ பாடம் எழுதாம போனியோ? வாத்தியார்ட்ட நான் சொல்லுதேம்புள்ள ஸ்கூலுக்குப் போல ராசா."

"நான் அண்ணங்கூட வலைக்குப் போறேன்."

"அண்ணன் கேட்டா அடிப்பான்ல. ஒழுங்கா பள்ளியூடத்துக்கு போ."

அம்மா என்ன சொல்லியும் கேட்காமல் அண்ணன் பையிலிருந்து 30 ரூபாய் எடுத்துக் கொண்டு நாகர்கோவில் சென்று இரண்டு திரைப்படங்கள் பார்த்துவிட்டு பரோட்டா சகிதமாய் ஊருக்கு வரும்போது இரவு 10:30.

பஸ் ஸ்டாப்பில் விக்டரின் அண்ணன் நின்றுகொண்டிருந்தான்.

"எல இங்க வா. அம்மாட்ட ஸ்க்கூல் போவ மாட்டென்னியாம்? இங்க வால எல." அண்ணன் அடிப்பான் எனத் தெரிந்ததும் ஓட்டம்பிடித்தான் விக்டர்.

மெத்தைகளை விட மென்மையான மணல் பரப்பை சமன் செய்து படுத்துக்கொண்டான். 'கடலுக்குப் போணும், காசு சேத்து தங்க வாட்ச் முழுக்கை சட்ட எல்லாம் போடணும். நெனச்ச நேரம் நார்கோலுக்குப் போயி படம் பாக்கணும். ஃபாரின் போயிட்டு மச்சி வீடு கட்டணும். அண்ணனையும் ஃபாரினுக்கு கூட்டிட்டுப் போணும்.' பல எண்ணங்களோடு கடல் காற்றின் மெல்லிய வருடலில் தூங்கிப் போனவன் காலையில் கோவில் மணி அடிக்க எழுந்துகொண்டான். இன்னும் முழுதுமாய் விடிந்திருக்கவில்லை. மெல்லிய இருள் சூழ்ந்த விடியல் சமையம் அது.

கடல் அலை நனைத்துச் சென்ற மணல் கொஞ்சம் எடுத்து பல்துலக்கி உப்புத் தண்ணீரிலேயே கழுவினான். பாறை மறைவில் காலைக் கடன் கழித்துவிட்டு கடலில் கழுவிக்கொண்டிருக்கும்போது ஈரமாய் ஒரு கை அவன் பின்பக்கம் தொட்டது. திடுக்கிட்டு எழுந்தான். கால் சட்டையை மாட்டிக்கொண்டு இரண்டு எட்டு ஒடிச் சென்று திரும்பிப் பார்த்தான். கடலினுள்ளே திரும்பிச் சென்ற அலை மட்டுமே தெரிந்தது. பயத்தில் பார்வை உறைந்துபோனது. மீண்டும் அலை கரை திரும்பியது. அப்போது அவன் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது திரும்பிவந்த அலையில் கிடந்த பிணம்.

அலை உடலை மீண்டும் உள்ளிழுத்தது. விக்டர் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அலை கரைக்குத் திரும்பியது. சாப்பாட்டு இலையில் வேண்டாத பதார்த்தத்தை விலக்கி வைக்கும் ஒரு சிறிய செயல்போல, கடல், பிணத்தை விக்டரின் காலடியில் விட்டுச் சென்றது.

அத்தியாயம் 2 - ஜூலை 7 1974

'ஆலையத்தில் நாம் நுழைகையிலே
புது நினவுகள் நுழைகின்றன..'

பாடற்குழுவின் வருகைப்பாடலோடு ஞாயிற்றுக்கிழமையின் முதல் பூசை ஆரம்பித்தது. பாதிரியார் செல்வராஜ் பூசைக்கு உதவி செய்யும் சீசர் பிள்ளைகள் முன் நடக்க பலி பீடம் வந்து வணங்கி பாடலில் சங்கமித்தார். முதல் பூசைக்கு வழக்கமாக வரும் கூட்டம். காலையில் ஆறுமணிக்கே எழுந்து பூசைக்கு வருவதென்பது பலருக்கும் பாவ பரிகாரமாய் பட்டது. சிலரே அந்தப் பரிகாரம் செய்துகொண்டனர்.

"பிதா சுதன் பரிசுத்தா ஆவியின் பெயரால்." பாடி ஆரம்பித்தார் செல்வராஜ்.

"ஆஆஆஆ மென்" மக்களும் பாட்டில் பதிலளித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை பூசை ஃபாதர் செல்வராஜுக்கு பிடிக்கும். திருவிழாக்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலுமே பாடல் பூசை நடத்தப் படுமென்பதால். இசையில் ஆர்வமுள்ளவர். சில பாடல்களை இயற்றி, இசையமைத்து கோவிலில் பாடவும் வைத்திருக்கிறார்.

"இயேசுவில் அன்பானவர்களே, இன்று இறைவன் நம்மை அவரின் சாட்சிகளாக வாழ அழைக்கிறார். இன்றைய சுவிசேஷ வாக்கியங்கள், இயேசுவை உலகுக்கு பறைசாற்ற நம்மை அழைக்கிறது. 'இறை அழைத்தல்' சாமியார்களுக்கும் திருக்கன்னியர்களுக்கும் மடுமல்ல பொதுமக்களுக்கும் உரித்தானது என்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன. இந்த இறை அழைத்தலை மறுதலித்து நாம் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்துவோமாக." பூசைக்கான அறிமுகவரிகளை பேசி பாவத்திற்காக மனம் வருந்த மக்களை அழைத்தார். கூட்டம் அமைதியாய், கைகூப்பி தலை தாழ்த்தி நின்றது, சிலர் பாவங்களை நினைத்து மனம் வருந்தியும் சிலர் வழமையாகவும்.

கோவிலின் வெவ்வேறு கதவுகள் வழியாக எப்போதும் சிலர் உள்ளே வந்துகொண்டேயிருந்தனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடந்திருநாட்கள் என குறிக்கப்பட்ட சில நாட்களிலும் முழுப் பூசையில் பங்கெடுக்கவேண்டும் என்பது திருச்சபையின் சட்டங்களில் ஒன்று. 'பூசையில் சுவிசேஷ வாசகத்துக்கு முன்னால போனா முழுப் பூச பாத்த மாதிரி.' என்கிற நினைப்பு பலவிசுவாசிகளுக்கும் இருந்தது.

பெண்கள் சேலையால் தலையை மூடியிருந்தனர். ஆண்கள் வேட்டி சட்டையிலும் சில வயதானவர்கள் சட்டையில்லாமல் வெறும் தோள் துண்டோடும் அமர்ந்திருந்தனர். முன் வரிசையில் சில சிறுவர்கள் ஏற்கனவே தூங்கி விழுந்துகொண்டிருந்தனர். பாடகர் குழுவில் ஆர்மோனியம் வாசிக்கும் சிஸ்டர் ஆரோக்கியம் ஆர்மோனியத்தை, தனக்கு மட்டுமே கேட்கும்படி முனகவைத்து ராகம் பழகிக்கொண்டிருந்தார்.

"சகோதர சகோதரிகளே நம் பாவங்களின் பொருட்டு இறைவனிடமும் நம் சகோதரிடமும் மன்னிப்பை வேண்டுவோமாக. எல்லாம் வல்ல இறைவனிடமும்..." பாவமன்னிப்பு ஜெபத்தை ஆரம்பித்துவைத்தார் செல்வராஜ்.

"சகோதரே உங்களிடமும்," மக்கள் தொடர்ந்தனர்,"நான் பாவி என்பதை ஏர்றுக்கொள்கிறேன். ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமைகள் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே! என் பாவமே! என் பெரும்பாவமே!..."நெஞ்சில் மூன்றுமுறை தொட்டுக்கொண்டனர். செபம் தொடர்ந்தது. 'ஆண்டவரே இரக்கமாயிரும்' மற்றும் 'உன்னதங்களிலே இறைவனுக்கு' பாடல்களுக்குப் பின் மக்கள் அமர்ந்திருக்க, முதல் வாசகம் வாசிக்க வந்தார் உபதேசியார்.

"முதல் வாசகம். இசையாஸ் எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். அதிகாரம் 66 வசனங்கள் பத்திலிருந்து பதிநான்கு வரை. எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லோரும் அவளோடேகூட மகிழ்ந்து, அவளைக் குறித்து களிகூறுங்கள்; அவள் நிமித்தம் துக்கத்திலிருந்த நீங்கள் எல்லோரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்."

பெண்கள்பகுதியில் இரண்டாம் கதவின் அருகே அமர்ந்திருந்த 'மூக்கி' எனப்படும் தெரசம்மாவிற்கு கீழே அமர்ந்திருப்பது அசௌகரியமாயிருந்தது.
"நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு நிறைவடைந்து, நீங்கள் சூப்பிக் குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்", உபதேசியார் வாசகத்தை தொடர்ந்தார். "கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்:..."

மூக்கிக்கு இடுப்பு வலிக்க ஆரம்பித்தது.

"இதோ நான் சமாதானத்தை ஒரு நதியைப் போலவும், இனங்களின் மகிமையை கரைபுரண்டு ஓடுகிற ஆற்றைப் போலவும் ஓடச்செய்வேன்."
மூக்கி முகத்தை சுளித்துக்கொண்டு முனகலோடு வலியை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தாள். எழுந்து நிற்கவும் இயலவில்லை அவளால்.

"பால்குடிக்கும் மகவைப் போல நீங்கள் அவளின் கரங்களில் சுமக்கப்படுவீர்கள்; அவளின் தொடைகளில் தாலாட்டப் படுவீர்கள்"
பெண்கள் பகுதியில் மூக்கி இருந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

"ஒரு தாய் தன் மகனை தேற்றுவது போல.." உபதேசியார் தொடர்ந்தார்."நான் உன்னை தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்".

"எம்மா..." நிறைமாதக் கர்ப்பிணி மூக்கி அலறினாள். சப்தம் கேட்டதும் ஃபாதர் செல்வராஜ் எழுந்தார் உபதேசியாரை வாசகத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு.
"என்னாச்சு?" என்றார்.

பெண்கள் சிலர் மூக்கியை சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர்.
உபதேசியாரின் மனைவி முன்வந்தார்,"நம்ம பரட்டையார் மவளுக்கு ப்ரசவ வலி. இப்ப வெளிய கொண்டுபோகமுடியாது. இங்கயே பாக்கணும். ஆம்பிளைகள வெளிய போச்சொல்லிருங்க."

"ஏன் இவங்க கோயிலுக்கு வந்தாங்க? கூட யாராவது வந்திருக்காங்களா? "

"அவ ஆத்தா இருக்கு."

"பரட்டையார் மகன்னா செபாஸ்டின் தங்கச்சியா?"

"ஆமா ஃபாதர்."

"டேய் நீ போய் செபாஸ்டின் சார்கிட்ட சொல்லிடு." சீசர் பிள்ளை ஒருவனை ஏவினார் ஃபாதர்.அங்கே வியப்பாய் கூடியிருந்த மக்களைப்பார்த்து,"எல்லாம் கொஞ்சம் வெளியப் போங்க ரெண்டாம்பூசைக்கு வாங்க." எனச் அறிவித்தார். சிஸ்டர் ஆரோக்கியத்திடம் போய்,"சிஸ்டர் என்னானு பாருங்க. நான் பின்னால இருக்கேன் அவசரம்னா சொல்லுங்க." எனச் சொல்லிவிட்டு சக்ரீசுக்குள் நுழைந்தார்.

மூக்கி வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். கீழே படுத்துக் கொண்டு இரண்டு பெண்கள் அவள் கையை பிடித்திருக்க பிரசவிக்கத் தயாரானாள். உபதேசியாரின் மனைவி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளை வெளியே போகச் சொல்லிவிட்டு கோயிலின் கதவுகளை மூடிக்கொண்டிருந்தாள்.

மூக்கியின் போராட்டம் தொடர்ந்தது. ஆளுக்காள் ஏதேதோ பேசிக்கொண்டும் அவளை முயற்சி செய்யச் சொல்லிக்கொண்டுமிருந்தனர்.

"எக்கி, தல தெரியுது இன்னும் கொஞ்சம் முக்கு." செவிலியாய் செயல்பட்டுக்கொண்டிருந்த பெண் கூறினாள். கவலையும் எதிர்பார்ப்பும் படர்ந்த முகத்துடன் மூக்கியின் ஆத்தா பார்த்துக்கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரப் போராட்டத்துக்குப் பின் குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஒரு பொம்மையைக் கையாழுவதுபோல இரத்தமும் இன்னும் திரவங்களும் சொட்டிக்கொண்டிருந்த அந்தக் குழந்தையைத் தூக்கினாள் செவிலிப் பெண். குழந்தையின் அழுகுரல் கோவிலுக்குள் எதிரொலித்தது. சன்னல்களில் கூடுவைத்திருந்த சில சிட்டுக்குருவிகள் குரலெடுத்துப் பாடின.

"மூக்கி, பொட்ட புள்ள பொறந்துருக்குடீ." செவிலி சொன்னாள்.

"சம்மனசு பொறந்திருக்கு தெரசம்மா." சிஸ்டர் ஆரோக்கியம் சொன்னார்.

"கோயிலுக்குள்ள பொறந்தபுள்ள. ஏஞ்சல்னு பேர் வைங்க."
கோவிலின் வெளியே செவத்தியான் என அழைக்கப்பட்ட செபஸ்டியான் வாத்தியார் தங்கையின் குழந்தையைப் பார்க்க ஆவலோடு நின்றுகொண்டிருந்தார். செவத்தியான் மகன் இனியனும் அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு குழந்தையைப் பார்க்கும் ஆவலில் நின்றுகொண்டிருந்தான். கோவில் கதவு திறந்தது. செவத்தியானின் அம்மா வெளிவந்தார்.

"ஆத்தா என்னாச்சு?"

"திடீர்னு வலி வந்து படுத்துட்டா. கோயில்லையே கொழந்த பொறந்திடுச்சு." செவத்தியானின் அம்மா சொன்னார். பேரனைப் பார்த்து,"ஏல, இனியா, ஒன் பொண்டாட்டி பொறந்துருக்கால."

இனியன், கண்கள் பிரகாசிக்க வெட்கத்தோடு சிரித்தான்.


அத்தியாயம் 3: கடலும் கடல் சார்ந்த இடமும்
முட்டம் ஒரு சராசரி மீனவக் கிராமம். நாகர்கோவிலிலிருந்து 16 அல்லது 17 கி,மீ தென் மேற்கில் அமைந்துள்ளது. 'சேரியா முட்டம்' எனவும் 'லைட் ஹவுஸ் முட்டம்' எனவும் வழங்கப்படுகிறது. முட்டத்தின் சிறப்பு அதன் நிலப்பரப்பு எனலாம். கடலுக்குள் முட்டி நிற்கும் நிலம். கடலைத் தடுத்து நிற்கும் குன்றின்மேல் ஊர். வீடுகள் குன்றின்மேல் கட்டப் பட்டிருப்பதை அங்கு வாழ்பவர்கள் உணர்ந்திருக்கவில்லை. உற்றுநோக்கியே அதை உணர முடிந்தது.


முட்டத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பது அதன் கரையில் வீழ்ந்து கிடக்கும் பாறைகள். காலம் செதுக்கிய சிலைகளாக, என்றோ சிலர் பூஜித்துவிட்டு விட்டுப் போன கோவில்கள் போல அவை நின்றுகொண்டிருக்கின்றன.

மேலமுட்டம், நடுமுட்டம், கீழமுட்டம் மற்றும் ஏப்பு முட்டம் என ஊர் பிரிக்கப் பட்டிருந்தது. எழுபதுகளில் மேற்கே இருந்த செம்மண்காட்டை சமன் செய்து 'சிவந்தமண்' என்ற ஊர் உருவாக்கப்பட்டது. இன்று 'ஜேம்ஸ் நகர்' எனவும் அழைக்கப்படுகிறது. இயற்கை எழுப்பிய செம்மண் அகழிகள் நிறைந்த இடம் சிவந்தமண்.

சிறிய ஓட்டு வீடுகளுக்கும் மத்தியில் எழுந்து நிற்கும் பழமையான கோவில். கடலுக்கு மிக அருகில் கட்டப்பட்டிருக்கும் வெகுசில அழகிய கோவில்களில் ஒன்று. கடவுள்கள் பக்தர்களைக் காட்டிலும் பணக்காரர்கள் என்பதை உணர்த்தும் கோவில். கோவில் தவிர்த்து ஒவ்வொரு தெருவிலும் ஒரு புனிதரின்பெயரில் அமைந்திருக்கும் சில குருசடிகள்.

படகுகளை கரையில் நிறுத்திக்கொள்ளவும், பிடித்துவந்த மீன்களை விற்கவும் உள்ள கடற்கரை தவிர்த்து ஆள் நடமாட்டம் அதிகமில்லாத கோட்டாமடை எனும் கடற்கரைப் பகுதி மேற்கில் உள்ளது. இங்கே எப்போதாவது வரும் சில சுற்றுலா பயணிகள் தவிர்த்து ஆள் நடமாட்டம் அதிகம் இருப்பதில்லை. இரவில் அலைகள் மட்டுமே இங்கே சஞ்சரித்தன.

விக்டர் அங்கேதான் அலைகள் இவன் பொறுப்பில் விட்டுச் சென்ற பிணத்தின் முன் நின்றுகொண்டிருந்தான். ஊருக்குள் கடற்கரையில் உறங்க பலரும் வருவதுண்டு என்பதால் விக்டர் தனித்துறங்க கோட்டாமடையே நல்ல இடமாயிருந்தது.

ஊருக்குள் குளிப்பாட்டி சிலுவை எழுதப்பட்ட கறுப்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் சில வயதானவர்களின் உடல்களைத் தவிர வேறு உயிரற்ற மனித உடல்களை பார்த்திருக்கவில்லை விக்டர். பயத்தில் தன் கால்சட்டை ஈரமாயிருப்பாதை உணர்ந்தான்.

பிணத்தின் நீலச் சட்டை கிழிந்துபோயிருந்தது. இடுப்புக்குக் கீழே சிவப்பு நிற உள்ளாடை மட்டுமே இருந்தது. மண்ணுக்குள் செல்ல விளைந்தோ என்னவோ, கவிழ்ந்தே கிடந்தது. அழுகிப் போயிருக்கவில்லை. உடல் முழுவதும் சிராய்ப்புக் காயங்கள். சில பெரிய காயங்களில் வெள்ளையாய் சதை தெரிந்தது. உற்றுக் கவனித்ததில் கால்கள் முறிந்ததுபோல வளைந்திருந்ததைப் பார்த்தான் விக்டர். கையில் தங்க வாட்ச் உள்ளே தண்ணீர் ஏறி பனித்திருந்தது.

கொஞ்சம் சுதாகரித்து பக்கவாட்டில் நடந்து முகம் தெரிகிறதா எனப் பார்த்தான். கவிழ்ந்திருந்த முகத்தை திருப்பிப்போட காதைப் பிடித்து தூக்கினான். விறைத்துப்போயிருந்தது காது. வேண்டாத ஒன்றை நுனிவிரல்களில் பிடித்து தூக்குவதைப் போல தூக்கி முகத்தை திருப்பினான்.

பிணத்தின் முகம் சிதைந்திருந்தது. முன்தலை பாறையில் அடிபட்டு நைந்து அடையாளம் தெரியாமல் கோரமாயிருந்தது முகம். பற்கள் கோரமாய் கிழிந்து தொங்கின. கடல்மணல் ஒட்டியிருந்தும் கோரம் தெளிவாய் தெரிந்தது.

கழுத்தில் சிலுவை டாலருடன் தங்கச் சங்கிலி.

இன்னொருமுறை முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு ஊரை நோக்கி ஓட்டம் பிடித்தான் விக்டர்.


அத்தியாயம் 4: 1979 ஒரு பள்ளி நாள்.
பள்ளிக்கூட மணி அடித்து குழந்தைகள் கூட்டமாய் வகுப்புகளிலிருந்து வெளியே ஒடினர். பள்ளிக்கு வெளியே பெட்டியில் வறுத்த காணம், தேங்காய் புண்ணாக்கு, புளிப்பு மிட்டாய், தேன்மிட்டாய், தெங்கா முட்டாய் முதலான தின்பண்டங்கள் விற்கும் கடைகளில் கூட்டம் சேர்ந்தது. குச்சி ஐஸ் பால் ஐஸ் விற்பவர் உலோகத்தால் செய்யப்பட்டைருந்த ஒலிஎழுப்பியை இயக்க ஆரம்பித்தார். பள்ளிக்கூட மணியின் தொடர்ச்சியாய் அது ஒலித்தது.
வகுப்பறைக்கு வெளியே இனியன் முழங்காலில் நிற்கவைக்கப்பட்டிருந்தான். அந்த நீண்ட திண்ணையின் கடைசித் தூணின் பின்னால் மறைந்து நின்று சிறுமி ஏஞ்சல் இவனை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வகுப்பிலிருந்து செபஸ்டியான் வாத்தியார் வெளியேவந்தார்.

"டேய். எழும்பு. இனிமே இப்படி பண்ணுன. அடி பின்னிருவேன். வீட்டுக்குப்போ. வீட்ல வந்து இருக்கு ஒனக்கு. போ..போ."

தந்தையை இறுகிய முகத்துடன் பார்த்தான். முறைப்பிற்கும் அவன் பார்வைக்கும் சற்றே வித்தியாசம் இருந்தது.

கணக்கு வாத்தியார் வந்தார்.

"என்ன சார், பையன் என்ன செஞ்சாங்?"

"இவனா நம்ம செலின் டீச்சர பட்டப்பேர் சொல்லி கூப்டிருக்கான் சார். அதுவும் பஸ்டாண்ட்ல எல்லார் முன்னாலயும் வச்சு கோழீன்னுட்டு ஓடியிருக்கான்"

"இவனா?"

"ம்."

இனியன் இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்தான். கணக்குவாத்தியாரும் செபஸ்டியானும் ஆசிரியர் அறையை நோக்கி நடந்தனர்.

"அவுங்க பேரு கோழியா?"

"மெதுவா சார். பாவம் எங்கிட்ட சொல்லும்போ அழுதுட்டாங்க. அவங்க கொண்ட போடுறதப்பாத்து .."

"ஓகோ. இவனுக்கு செலின் பாடம் எடுக்கமாட்டாங்களே சார்."

"என் தங்கச்சி பொண்ணு ஒண்ணாங்க்ளாஸ் படிக்கிறாளே, அவள அடிச்சுட்டாங்கன்னு இந்தக் கோவம்." சிரித்தபடியே சொன்னார் செவத்தியான்.

"ஓகோ. சின்னப்பசங்க. சார் ஒங்ககிட்ட வாங்குன அந்த ஃபைவ் ஹண்ரட் இந்தாங்க. ரெம்ப தேங்க்ஸ்."

"பையனுக்கு அட்மிஷன் கெடச்சுதா சார்?"

"ஆமா சார். அடுத்தவாரம் மெட்ராஸ் போறோம்."

பள்ளிக்கு வெளியே ஏஞ்சலுக்கு ஐஸ் வாங்கித் தந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தான் இனியன்.

"இனியா, மாமா ஏன் ஒன்ன மொழங்கால்ல நிக்கவச்சாவு?" ஏஞ்சல் கேட்டாள்.

"குச்சி ஐஸ் நல்லா இருக்காடி?" இனியன் பதிலை தவிர்த்தான்.

"நாளைக்கு சேமியா ஐஸ் வாங்கித் தருவியா?"

"சரி." இனியன் தலையாட்டினான்.

ஏஞ்சலின் புத்தகப் பையையும் சேர்த்து தோளில் ஏற்றிக்கொண்டிருந்தான் இனியன் அவன் வலக்கை ஏஞ்சலின் வலக்கையை பற்றியிருந்தது.

"இனியா எங்கம்மா கலர்குச்சி வாங்கி தந்துச்சே?" சிறு துள்ளலோடு சொன்னாள் ஏஞ்சல். இனியனின் பின்னால் தொங்கிக்கொண்டிருந்த பையிலிருந்த பென்சில் பெட்டியை திறந்து காண்பித்தாள்.

"கலர் குச்சி."

"எங்கிட்ட சாக்கட்டி இருக்குதே?" பைகளை கீழே இறக்கி வைத்து தன் பென்சில் பெட்டியிலிருந்த வெள்ளை சாக்பீசை எடுத்துக் காட்டினான் இனியன்.

"ஐ. எனக்கு?"

சாக்பீசை உடைத்துப் பகிர்ந்தான். வகுப்புத் தலைவன் என்பதால் சாக்பீஸ் எடுத்துவரும் பொறுப்பு அவனுக்கு இருந்தது. அவ்வப்போது ஒரு சாக் பீசை பாக்கெட்டில் போட்டுவைப்பது வழக்கம். வாத்தியார் பையன் என்பதில் பல சௌகவுரியங்கள் இருக்கவே செய்தன. சாக் பீஸ் வைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் அந்தஸ்தை பெற்றுத் தந்தது.

ஏஞ்சல் வீடு வந்தது. பக்கத்து வீட்டில் பொனிப்பாஸ் கிழவர் இவர்கள் கைகோர்த்து வருவதைப் பார்த்து சிரித்தார்.

"ஏல. ஒங்களுக்கு எப்பம் கல்யாணமாச்சு? எப்பப் பாத்தாலும் கையப் புடிச்சுட்டு சேந்தே நடக்கிய? ஒரு சோடியாத்தான் போவுது."

"போம் வோய். போய் வேலையப் பாரும்."

"ஏஞ்சல் புள்ள. இந்தப் பயகூட சேராத. எம் பேரனக் கட்டிக்க என்னா?" எதிர் வீட்டு திண்ணையிலிருந்தவர்கள் தெருக்குழாயில் தண்ணி பிடித்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட அனைவரும் சிரிக்க. வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே ஓடினர் இருவரும். ஏஞ்சலின் அம்மா, மூக்கி வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள்.

"மக்கா, இனியன் வந்துருக்கானா?"

"ஓமும்."

"அவன நிக்கச்சொல்லு. சேர்ல பணியாரம் இருக்கு ரெண்டுபேரும் தின்னுங்க." வேலையிம் கையுமாயிருந்தபடியே சொல்லிக்கொண்டிருந்தாள் மூக்கி.

"சரி."

மூக்கியின் மாமியார் தன்ணி குடத்தோடு உள்ளே வந்தார்.

"ஏ கேட்டியா? இவங்க ரெண்டுபேரும் சேந்து வந்தா தெருவே சிரிக்கு. பொனிப்பாசு இவங்களுக்கு கல்யாணமாயாச்சான்னு கேக்காரு. பைப்ல இருந்தவ எல்லாம் சிரிச்சு.." சிரித்துக்கொண்டே சொன்னார்.

"எல அப்டியா?" கொஞ்சம் பெருமையோடே கேட்டாள் மூக்கி.

இனியன், ஏஞ்சல் இருவர் முகத்தில் வெட்கம்.

"மக்கா. எவ்வளவு பெருசானாலும் இந்த பாவப்பட்ட மாமிய மறந்துராத என்னல?" பாசம் பொங்க கேட்டாள் மூக்கி. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தான் இனியன்.

அலமாறியின் உள்ளிருந்து செய்தித் தாள் துண்டில் பொதியப் பட்டிருந்த சிறு பொதியலை எடுத்து இனியனின் பையில் வைத்தாள் மூக்கி.

"மக்கா, இதுல பைசா இருக்கு அம்மாட்ட குடு என்ன? அப்பாட்ட சொல்லாத, என்ன மக்கா?."
"சரி அப்பா வர நேரமாவும் அதுக்குள்ளால கொடுக்கேன். வரட்டா?" கதவுவரைப் போனவன் திரும்பி,"மாமி ஏஞ்சலக் வெளையாட கூட்டிட்டு போட்டா?" என அத்தையைக் கேட்டான்.

"போறியாடீ?"

ஏஞ்சல் தலையாட்டினாள்.

"போயி அரங்கூட்ல துணிமாத்திட்டு போ. மக்கா நீயே கொண்டுவந்து வுடு என்னா?"

"சரி" சம்மதித்தான் இனியன்.

"எடி நாக்குல நீலமாயிருக்கு. ஐஸ் வாங்கித் தின்னியோ."

"இனியந்தா வாங்கித்தந்தாங்...."

இனியனினும் ஏஞ்சலும் மீண்டும் கைகோர்த்துக் கொண்டே இனியனின் வீடு நோக்கி நடந்தனர்.

அத்தியாயம் 5: சேதி
விக்டர் வீட்டை அடைந்தான். கதவு திறந்திருந்தது. விக்டரின் அம்மா ஊரெல்லாம் விக்டரைத் தேடிக்கொண்டிருந்தாள். அவன் அண்ணன் கடலுக்குப் போயிருந்தான். அரங்கு வீட்டில் நுழைந்தான். கடற்கரையில் கண்ட பிணத்தின் நினைவுகளிலிருந்து மீளமுடியாதவனாய், பயம் மேற்கொள்ள அரங்கிலிருந்த கட்டிலின் கீழ் படுத்துக் கொண்டான்.

ஊரின் வடக்கு எல்லையிலிருந்து ஊருக்குள் ஒரு நீல நிற அம்பாசடர் கார் நுழைந்தது. உள்ளே புதிதாய் மணமான தம்பதியர் இருவரும் கல்யாண வீடியோ எடுப்பவரும் அவரின் உதவியாளரும் ஒரு சின்னப் பெண்ணும் இருந்தனர். திருமண வீடியோக்களில் முட்டத்தில் கடல் மணல் பாறைகள் பின்னணியில் தம்பதிகள் நிற்பதுபோன்ற காட்சிகளை சேர்த்துக்கொள்வது வழக்கமாயிருந்தது.

காரை கடற்கரைக்கு அருகில் நிறுத்திவிட்டு ட்ரைவர் சிகரட் பத்தவைத்துக்கொண்டார். புதுமணத் தம்பதிகள் பாறைகளின் மேல் நின்று காமெராவுக்குப் போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். "சார் கையப் புடிங்க. மேடம் கொஞ்சம் நெருங்கி நில்லுங்க." எனும் கட்டளைகளுக்கு தம்பதிகள் கட்டுப்பட்டனர்.

காரின் ட்ரைவர் பாலு காரின் டேப் ரெக்கார்டரில் சிக்கிக்கொண்ட ஒலிநாடாவை வெளியே எடுத்துக்கொண்டிருந்தான். "சார், ஸ்டாண்ட்ல எல்லா கார்லயும் சி.டி இருக்கு. நம்மளும் போட்ரலாம். லாங்ல போம்போது மக்கள் ஆசப் படுதாங்கல்லா?" பலமுறை முதலாளியிடம் சொல்லிப்பார்த்தும் அவர் கேட்காததால் ஒலிநாடா சிக்கும்போதெல்லாம் அவருக்கு வசவு கிட்டிக்கொண்டிருந்தது.

பாலு டிரைவர் ஆனது பெரிய கதை. சுருங்கச் சொன்னால். வீட்டில் கஷ்டப் பட்டு படிக்கவைத்தார்கள். பாளையங்கோட்டையில் கல்லூரி போகும்வரை நல்லபிள்ளையாகத்தான் இருந்தான். ஹாஸ்டலில் இடம் கிடைக்காமல் வெளியே தங்கியிருந்தான். ஒரேவருடத்தில் அத்தனை 'நல்ல' பழக்கங்களையும் கற்றுக்கொண்டான். படிப்பு பாழானது. வீட்டில் அவனை நல்லவன் என நம்பிக்கொண்டிருதனர். மூன்றுவருடம் முடிந்ததும் வீட்டில் பி.காம் படிப்புக்கேத்த(?) வேலை தேட ஆரம்பித்தனர். பாலுவின் அப்பா பக்கத்துவீட்டு வாத்தியாரிடம் சொல்லியிருந்தார்.

"நம்ம பைக் டீலர் இருக்கான்லா அவன் கேசியர் வேணும்னான் போறியாடே. ஆயிறத்து ஐநூறு தருவான். பெறவு அப்பப்ப ஏதாது கெடைக்கும்." வாத்தியார் கேட்டார்.

'படிப்புக்கேத்த வேலை இல்லை' என மகன் மறுப்பான் என நினைத்தார் பாலுவின் அப்பா. எதிர்பார்த்ததற்கு மாறாய் ஒத்துக்கொண்டான். மூன்றுமாதத்திற்குப் பிறகு ரிசப்சனிஸ்ட் ப்ரியாவுடன் பழக ஆரம்பித்தான். காதல் முத்திப்போனது. ப்ரியாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. பாலுவின் அப்பா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு பாத்துக்கலாமென்றார். ப்ரியாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து இருவரும் பாளையங்கோட்டைக்கு ஓடிப் போய் நண்பர்கள் முன்னிலையில் கல்யாணம் செய்துகொண்டனர். கல்லூரி நாட்களிலேயே இதுபற்றிய ஒப்பந்தம் ஒன்றை விளையாட்டாகச் செய்திருந்தனர். "எல, யாராவது பொண்ணக் கூட்டிட்டு ஓடி வந்தா அடுத்தவங்க பாத்துக்கணும் என்னா?" இதுதான் அந்த ஒப்பந்தம்.

பாளையங்கோட்டைக்கும் நாகர்கோவிலிக்கும் அதிக தூரமில்லையே. ப்ரியாவின் மாமா இவர்களை கண்டுபித்தார். வீட்டிற்கு கூட்டிவந்து பேச்சு நடந்தது. இரண்டுபேர் வீட்டிலும் சமாதானம் செய்துவைக்கப் பட்டது. ஓடிப் போனதில் பைக் டீலரிடம் வேலையும் போயிருந்தது. ப்ரியாவின் அப்பா 'வேலை வாங்கித் தருகிறேன் டிக்ரி சர்ட்டிபிக்கேட்டத் தாங்க' எனக் கேட்டார். பூகம்பம் வெடித்தது. பாலு டிக்ரி முடிக்கவே இல்லை. தீவிர விசாரிப்பில் அவன் மூன்றாமாண்டு கல்லூரிக்கே போகவில்லை எனவும் சென்னையில் சினிமா வாய்ப்புத் தேடி அலைந்ததாகவும் தெரிய வந்தது. பாலுவின் அம்மா மண்ணை வாரித் தூற்றினார். ப்ரியாவின் அப்பா தலையில் அடித்துக்கொண்டார். அவள் மாமா இவைனை ஆள்வைத்து அடிக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்,"பச்ச புள்ளைய ஏமாத்திட்டியேல." என சீறினார். பாலுவின் அப்பா,"என் மொகத்துல முழிக்காதல"எனச் சொல்லிவிட்டுப் போனார். ப்ரியா ரெம்ப ஏமாந்தவளாய் அழுதுகொண்டேயிருந்தானள். பாலு மட்டும் தவறே செய்யாதவனைப் போல மாப்பிள்ளை மிடுக்கில் சுற்றிக்கொண்டிருந்தான். "என்ன செய்ய சொல்லுதிய? நான் மட்டும் சினிமால பெரியாளா ஆயிருந்தா இப்டி சொல்லுவேளா?" ஏதோ மற்றவர்கள் மேல்தான் தவறு என்பதுபோல நடந்துகொண்டான்.

நிலமை சமனாக நாள் பிடித்தது. ட்ரைவிங் தெரிந்திருந்ததால் ஸ்டாண்டில் தன் பள்ளித் தோழனிடம் சொல்லி ட்ரைவரானான். ப்ரியாவைக் கூட்டிவந்து தனிக்குடித்தனம் வைத்தான். இதுதான் பாலு டிரைவர் ஆன கதை. இன்னும் எப்போதும் ஏதாவது சென்னைக் கதைகளை சக ட்ரைவர்களோடு சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்வான்

காரின் வெளியே வந்து இன்னுமொரு சிகரட் பத்தவைத்தான். அப்போதுதான் அதைப் பார்த்தான். கடற்கரையில் கிடந்த பிணம். ஆர்வம் தூண்ட அருகில் சென்றான். காரில் வந்தவர்களைத் தேடினான். தூரத்தில் ஒரு பாறைமேல் புதுப்பெண் பரதநாட்டிய அபிநயம்பிடிக்க அருகில் பத்மினியுடன் சிவாஜிபோல மாப்பிள்ளை நின்று போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

மேட்டிலேறி ஊரை நோக்கி நடந்தான். . போஸ்ட் ஆபீஸ் பக்கம் 'லைட் ஹவுஸ் பஸ் ஸ்டாப்' இருந்தது. பஸ்ஸுக்காக காத்திருக்கும் சிலரும், வெட்டியாய் பேசிக்கொண்டு சிலரும் இருந்தனர்.

"அங்க கடக்கரையில பொணம் ஒதுங்கி கெடக்கு." கூட்டமாய் பேசிக்கொண்டிருந்த பெரியவர்களிடம் சொன்னான்.

"ஆம்பிள்ள பொணம். சின்ன வயசுதான். பாத்தா தெக்க உள்ள ஆள்மாறிதான் தெரியுது."
பெரியவர்கள் எழுந்தனர்.

"எங்கைய்யா? கோட்டாமடையிலையா?"

"ஆமா."

"நீ எப்ப பாத்த?"

"இப்பத்தான். பார்டி ஒண்ண கூட்டிட்டு வந்தேன். நார்கோவில் வேப்பமூடு ஸ்டாண்ட்ல கார் ட்ரைவர்."

கோட்டாமடை நோக்கி சின்னக் கூட்டம் நகர்ந்தது. போஸ்ட்மேன் செல்வம் போஸ்ட் ஆஃபீசில் செய்தியை பரப்பினான்.
---
பிணத்தைச் சுற்றி சற்றே பெரிய கூட்டமொன்று கூட ஆரம்பித்தது. சிறுவர்களை சிலர் விரட்டிக்கொண்டிருந்தனர்.

"நம்மூரு ஆளில்ல." பெரிய்யவர் ஒருவர் சொன்னார்.

"ஒமக்கு எப்டித் தெரியும். மூஞ்சியே தெரிலியே?" இளைஞர் மறுத்தார்.

"எல நம்ம ஊர்ல இந்தமாரி சட்டையும் ஜட்டியும் எவன்ல போடுதான்?" பெரியவர் அறிவுபூர்வமாக பதிலளித்துவிட்டோம் என்பதைவிட இளஞனை மடக்கிவிட்டோம் என்கிற பெருமிதத்தில் சொன்னார்.

"இப்ப எல்லாரும் போடுதாவு. வேணும்னா பாக்கீரா?" இளைஞன் லுங்கியை பாதி உயர்த்தியபடி பதிலளித்தான்.

"ஒங்க ஆத்தாட்ட போய் காட்டுல தேவ்டியாமோன." பெரியவர் கோபத்தில் சொல்ல. இளைஞனும் அவன் நண்பர்களும் கேலியாய் சிரித்தனர்.

"இது இங்கன கெடந்தா சரியாவாது." இன்னொரு பெரியவர் ஆலோசனை சொன்னார்,"தொளவைய எடுத்து கடலுக்குள்ள தள்ளிவுட்லாம். என்னா?"

"ஆமாடே நல்ல யோசனதான். போயி பழய தொளவ ஒண்ண கொண்டாங்க."

"தொளவ எதுக்கு? அப்டியே காலப் புடுச்சி இழுத்துப் போட்ருவோம்." இளஞர் ஒருவர் முன்வந்தார்.

"எல கொலக் கேசா இருக்கப்போவுது. போலீஸ் மோப்ப நாய் வந்தா ஒங்க வீட்டுக்குத்தான் வரும் பெறவு போய் களி திங்கணுமால?"

"இவனுவளுக்குத்தான் எல்லாந் தெரியுண்ணு வந்துட்டானுவ. போங்கல அங்க. பெரியாளு சொன்னா கேக்கணும்." முதலில் கடுப்பேத்தப்பட்ட பெரியவர் பழிதீர்த்துக்கொண்டார்.
கொஞ்ச நேரத்தில் தொளவை எனப்பட்ட கடலில் கட்டுமரங்களை தொடுக்க பயன்படுத்தப்படும் துடுப்பு எடுத்துவரப் பட்டது. ஐந்து முதல் ஆறடியில் இரண்டாய் பிளக்கப்பட்டிருந்த மூங்கிலின் தடித்த அடிப்பாகத்தில் ஒரு பாகம் இந்தத் துடுப்பு.

பிணத்தின் அடியில் துளவை சொருகப்பட்டது. இரண்டு நடுவயது ஆண்கள் ஒரு புரட்டு புரட்டிப் போட்டனர்.

பாலு காரில் வந்த புதுமணப்பெண் காருக்கருகில் நின்றுகொண்டே பிணத்தருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கணவனை அழைத்துக்கொண்டிருந்தாள். "ஏய் இங்க வாங்க. வாங்க போலாம்." .

ட்ரைவர் பாலு, "வாங்க சார். இது சரியாப் படல. அங்க மேடம் கூப்ட்றாவல்லா? போவோம். இவனுக போலீஸுக்கெல்லாம் போறமாறி தெரியல." எனச்சொல்லி புது மாப்பிள்ளையை கிளப்பினான்.

"அவ்ளவுதாம்புள்ள. இன்னும் ரெண்டு பொரட்டு போடுங்க அந்தால போட்டும்." பெரியவர் சொல்ல துளவை பிணத்துக்கடியில் சொருகப்பட்டது.

"என்னங்க இவைங்க போலிசுக்குப் போறதில்லியா?" புது மாப்பிள்ளை பரிதாபமாகக் கேட்டார்.

"சார் இது மதுர சிட்டியில்ல. முட்டம் கடற்கர. இங்க கடற்கரையில ஒரு போலீஸ் ஸ்டேசன்கூடக் கெடையாது தெரியுமா? மணவாளக்குறிச்சி போணும். இங்கேர்ந்து நாலு கிலோமீட்டர். சிட்டியிலயே தெருவுல நடக்கத கண்டுக்கமாட்டென்றானுவ."
மதுரக்கார மாப்பிள்ளையின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் பாலு.
பாலுவின் கார் சற்று வேகமாகவே முட்டத்தை விட்டுக் கிளம்பியது.

(மூள) நட்சத்திரம்

இந்த வாரம் பாபா(Boston Balaji) விடுமுறையில் இருக்கிறதால வழக்கமா அவர் போடுறத நான் போடவேண்டியதாயிடுச்சு.

ஆமாங்க. நான்தாங்க இந்த வார தமிழோவிய சிறப்பாசிரியர். நட்சத்திர வாரம், கிறிஸ்துமஸ் சிறப்பிதழ்னு எழுதி எழுதி மூளைல சரக்கு தீந்து போச்சு. (அப்பாடா தலைப்ப ஜஸ்டிபை பண்ணியாச்சு).

இந்தவாரம் எல்லாத்தையும் நானே எழுதி போர் அடிக்காம நம்ம பதிவுலக நண்பர்கள் சிலரை எழுதக் கேட்டிருந்தேன்.

வெடி - பிரபு ராஜதுரை


எங்கள் வீட்டிலெல்லாம் கிறிஸ்மஸ் ஏற்பாடுகள் தீபாவளிக்கு முன்னரே
ஆரம்பித்து விடும். அம்மா அலுவலகத்தில் தீபாவளிக்கு முன்னரே கொடுக்கப்படும் போனஸ் மட்டும் காரணமில்லை. தீபாவளிக்கு கோ-ஆப்டெக்சில் துணி வாங்குவதற்காக அலுவலகத்தில் கிடைக்கும் வட்டியில்லாக் கடனும் ஒரு காரணம

கிறிஸ்மஸ் - வரலாரற்றுப் பார்வை - நிர்மல



கிருத்துவ மதத்தின் துவக்க காலத்தில் கிருஸ்மஸ் பண்டிகை
இல்லாதிருந்தது. பைபிளில் இயேசுவின் பிறந்த தினம் பற்றிய துல்லிய குறிப்புகள்
எதுவும் இல்லை. கி.பி நான்காம் நூற்றாண்டில் போப் முதலாம் ஜீலியஸ் காலத்தில்தான் கிருஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் துவக்கப்பட்டன.
பெற்றால்தான் அன்னையா? - கோ. இராகவன் (மயிலாரேதான்)


தொழுதால் வருவாய் விழுதாய்த் தொடர்வாய் - துயராம் பழுதைத் துடைப்பாய் உணர்வாய்,
உயிராய், எமதாய், நிறைவாய்

இயற்கை நின்று கொல்லும் - மதுமிதா


நெருப்புக் குஞ்சுநம் வசமிருந்தால் அணைத்துவிடலாம் இல்லையேல் நம்மை
அணைத்துவிடும் நெருப்பு


இலக்கிய விளக்கு - ஷைலஜா



கலைப்படைப்புகள் காலம் கடந்து நிற்கத் தக்க வகையில் உருவாக வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற நல்ல சமுதாயச் சூழ்நிலை உருவாக வேண்டும். ஒரு நாட்டில் விளைந்து வருகிற, உலவிவருகிற, ரசிக்கப்பட்டுவருகிற பெரும்பான்மையான புத்தகங்களைவைத்தே ஒரு சமுதாயத்தின் நாடியைபிடித்துப் பார்த்துவிட முடியும்.

விழாக்கால நல் வாழ்த்துக்கள் - சிறில் அலெக்ஸ்


நம் ஊர்களில் புகைபோக்கிகள் இல்லாததாலோ என்னவோ இங்கே கிறிஸ்மஸ்தாத்தா கொடுப்பவராக இல்லாமல் வாங்குபவராகவே வருகிறார். வீடு வீடாகச் சென்று கிடைக்கும் பண்டங்களை பங்கிடுவதும் காசு பிரிப்பதும் இங்கே கிறிஸ்மஸ்கால கொண்டாட்டங்களில் கலந்துவிட்டிருக்கும் வேடிக்கைகளில் ஒன்று.

இயேசு பிறந்த கதை - சிறில் அலெக்ஸ்

தூரத்தில் கிடை போட்டிருந்த மேய்ப்பர்களுக்குத் தூதுவன் ஒருவன்
தோன்றினான்."அஞ்சாதீர் இதோ நற்செய்தி ஒன்றை உங்களுக்குத் தருகின்றேன் தாவீதின் நகரத்தில் இன்று இயேசுக் கிறீஸ்து பிறந்துள்ளார் துணியில் பொதியப்பட்டு முன்னணையில் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தையைக் காண்பீர்கள்." என்றார்.


இன்னும் சில சிறப்பான படைப்புக்களோடும் டாக்டர் ஐயாவின் சிறப்பு பேட்டியோடும் இந்த வார தமிழோவியம். காணத் தவறாதீர்கள்.

Wednesday, December 27, 2006

(சிரி) நட்சத்திரம்

எரி நட்சத்திரம் தெரியும் அதென்ன சிரி நட்சத்திரம். கீழே படியுங்க கிச்சு கிச்சு வருதாங்க?.

ஹலோ ஹவ் ஆர் யூங்க,
என் பேரு A. மாந்தவன், 'ந்' சைலண்டுங்க. இணையத்துல வாழ்க்கை நடத்துற ஆட்களுல நானும் ஒருத்தருங்க.

நிஜ வாழ்கையில எனக்கு நண்பர்கள் ரெம்ப கம்மிங்க. ஆனா எனக்கு தினம் தினம் மெயில் அனுப்புற இணைய நண்பர்கள் ஏராளமுங்க. இணையத்துல எனக்கு கெடச்ச அனுபவங்கள ஒங்களோட பகிர்ந்துக்கிறேனுங்க.

முதல்ல நான் அமெரிக்காவுல தனியா இருந்தப்போ எங்கம்மா சொன்னாங்க,"ஒரு வேலக்காரப் பொண்ண வச்சுக்கடா. ஈசியா இருக்குமே?"ன்னு.

ஒரு இணைய வரி விளம்பரத் தளத்துக்குப் போனேங்க. நம்ம ஊரு பொண்ணா இருந்தா நல்லாருக்குமேன்னு."Help! Asian woman wanted" அப்படீன்னு போட்டேங்க. நெறைய நண்பர்கள் இதுக்கு படத்தோட பதிலனுப்புனாங்க.

அம்மாகிட்ட காமிச்சேன். "டேய், ட்ரெஸ் போடாத பொண்ணுங்க வீட்டுவேல எப்டிடா செய்வாங்கன்னு." சொல்லிட்டாங்க. அதனால என் நண்பர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிட்டு நானே வீட்டு வேலையெல்லாம் செஞ்சுகிட்டிருக்கேனுங்க.

இன்னொரு நண்பன் டெய்லி எனக்கு மெயிலனுப்பிச்சு நான் UK லாட்டரில வெற்றி பெற்றதாகவும் சின்ன தொக ஒண்ண அனுப்புனா பெரிய தொக ஒண்ணு கிடைக்கும்னு மெயில் அனுப்பிட்டிருந்தாரு. எனக்கு லாட்டரி விழுந்திருக்குன்னு எனக்கே தெரியாது ஆனா இவரு எத்தன கவனமா பாத்து இதச் சொல்லியிருக்காரு பாத்தீங்களா? நல்ல நண்பருங்க. இப்பத்தான் இவருக்கு 500 டாலர் அனுப்பி வச்சேன். கூடிய சீக்கிரத்துல பணக்காரனாயிடுவேன். என்ன நல்லெண்ணம் பாத்தீங்களா என் நண்பருக்கு.

இன்னொரு நண்பரும் இதப்போல தினமும் நைஜீரியாவுலேந்து மெயில் அனுப்புவாரு. அவரு பேங்க் மேனேஜராம் ஆப்ரிக்காவுல நியோமியாங்கிற இடத்துல இருந்த அரசர் அவங்க பேங்குல ரெம்ப பணம் போட்டுட்டு செத்துப் போனாராம். அந்தப் பணத்த நம்மகூட பங்குபோடணுமாம். அதுக்கும் கொஞ்சம் காசு கேட்டிருந்தாரு. கொடுத்திருக்கேன். சீக்கிரம் அதுவும் வந்து சேந்த்துடும். எனக்கு என்ன பயம்ணா அந்த அரசப் பதவிய எனக்குத் தந்துட்டா ஆப்ரிக்கா போகணுமே?

இப்படி எனக்கு தினமும் மெயில் வந்துகிட்டே இருக்குதுங்க. ஆனா எல்லா மெயிலும் தனியா SPAM அப்டீங்க்ற Folderல போயி சேந்திரும். என் இணைய நண்பர்கிட்ட மெயில் அனுப்பிச்சு SPAMனா என்னண்ணு கேட்டேன். அவரு Special, Personal, Afeectionate Mails. அப்படீன்னாரு.

LonelyGirl69 அப்டீன்னு ஒரு தோழிய சாட்டிங்ல புடிச்சேன். ரெம்ப அருமையா பேசுவாங்க. கிழுகிழுப்பாயிருக்குமுங்க. ரெம்ப சீரியசா அவங்கள லவ் பண்ண ஆரம்பிச்சேனுங்க. அவங்க போட்டோ அனுப்பச் சொன்னேன், அனுப்பினாங்க. என்ன அழகாயிருந்தாங்க தெரியுமா? என் பிரண்டு ஒருத்தங்கிட்ட காமிச்சேன் அவன் பொறாமையில இது ஆஞலீனா ஜோலிங்கிற நடிகையோட படம்டான்னுட்டான்.

என் இணைய தோழி ஆஞலினா ஜோலி மாதிரி இருக்கலாம்லன்னு சொன்னேன். அவன் சிரிக்கிறான். பொறாமைங்க. சரி நம்ம போட்டொவையும் அனுப்பிவைப்போமேன்னு அனுப்பினேன் அதுக்கப்புறம் lonelyGirl69 என்கூட சாட் பண்றதே இல்லங்க.

ஒருநா ஒரு சோகமான மெயில் வந்துச்சுங்க ஒரு சின்னப் பையனுக்கு மூளையில ஏதோ ப்ராப்ளமாம். இதுவரைக்கும் அந்த வியாதி யாருக்கும் வந்ததேயில்லையாம். பாவம் அந்த சின்னப்பையன். அவனுக்கு மாசா மாசம் காசனுப்புவேன். பலபேரு இதப்பத்தி எனக்கு மெயிலனுப்பியிருக்காங்க. இதுலெ என்னண்ணா ரெண்டு வருசமா இந்தப் பயனுக்கு 10 வயசுதான் ஆகுதுங்க. இன்னைக்கும் அப்டித்தான் மெய்யில் வருது.

இன்னொரு நண்பர் ரெம்ப நாள மெயில் அனுப்பிட்டேயிருப்பாரு. ஒங்க ஆண்மைய பெரிதுபடுத்தணுமான்னு கேட்டு. இது நல்ல விஷயந்தானேன்னு அவருக்கும் காசனுப்பினேன் ஒரு பாட்டில் மாத்திரைய அனுப்பினாரு. அதுல சொல்லியிருந்தமாதிரியே சாப்பிட்டேன். இப்ப ரெம்ப நல்ல பலன் கெடச்சிருக்குது.

அதாவது அந்த மருந்து சாப்பிட்டதுலேர்ந்து எனக்கு 'அந்த' மாதிரி எண்ணங்களே கொறஞ்சுபோச்சுங்க. இப்ப எனக்கு ஆண்மை பெருசா இருந்தா என்ன சின்னதா இருந்தா என்ன? எப்படி ஒரு நிரந்தரத் தீர்வு பாத்தீங்களா. இணைய நண்பர்கள் இணைய நண்பர்கள்தாங்க.

நான் தனியான ஆளுங்க. அதுக்கு இணையத்துல ஒரு சொலூஷன் கெடச்சது. 'Are you single? Call this number'னு ஒரு மெயில ஒரு தோழி அனுப்பினாங்க. போன்போட்டு பேசினா அவ்வளவு இனிமையான குரல். ரெம்ப நேரமா பேசினோம். எதெல்லாமோ பேசினோம். ஆனா ட்ரெஸ் போட்டுட்டு பேசினா அவங்களுக்குப் பிடிக்காதாம். ஒவ்வொண்ணண கழட்ட சொல்லிட்டாங்க ரெம்ப ஜாலியா இருந்துச்சு. அந்த மாசம் ஃபோன் பில் செமையா போயிடுச்சு. ஆஃபீஸ் கெஸ்ட் ஹவுஸ் ஃபோன் வேறையா. வேலையிலேர்ந்தே தூக்கிட்டாங்க.

அட தோழிக்காக இதுவுமில்லண்ணா எப்டி?

சாட்ல ஒருநா ஒரு தொழி என் க்ரெடிட் கார்டு நம்பரச் சொன்னா என் அக்கவுண்ட் பாஸ்வோர்ட சொல்றதா சொன்னாங்க. அட இந்த விளையாட்டு நல்லா இருக்குதேன்னு அவங்களுக்கு விபரத்த தந்தேன். ஆனா தப்பா கெஸ் பண்ணிட்டாங்க. நாலு தடவைக்கப்புறம் நானே சரியான விடைய அவங்களுக்குத் தந்தேன்.

இன்னைக்கும் பல தோழர்கள்கிட்டேந்து மெயில் வந்துட்டே இருக்குது. என் படம் அங்க இருக்குது போய் பாருன்னு ஒரு தோழி, AOL மைக்ரொசாஃப்ட் இணைஞ்சி காசு தர்றாங்கன்னு ஒரு தோழர். இந்த சர்வே எடுத்தா ப்ளாஸ்மா டி.வின்னு ஒருத்தர், இந்த மெயில 10 பேருக்கு அனுப்பினா சொர்க்கம் போகலாம் இல்லண்ணா நரகம்னு சிலர்.

தினம் தினம் இணையத்துல என்னையும் ஒரு நண்பனா ஏத்துக்கிட்டு மெயில் அனுப்புற எல்லா நண்பர்களுக்கும் இந்த A. மாந்தவனின் நன்றிகள். 'ந்' சைலன்டுங்கோவ்.

Tuesday, December 26, 2006

(விண்) நட்சத்திரம்

விண்ணில் தோன்றியது வால் நட்சத்திரம்
மண்ணில் விண்ணவனே நட்சத்திரம் - மன்னன்
உறங்க இடமில்லா சத்திரம்
உலகில் இதுவன்றோ விசித்திரம்?
மாட்டுதொழுவம் மாளிகையானது
ஆடும் கோழியும் தோழர்களாயினர்
கந்தல் ஆடைக்கு கண்ணியம் வந்தது
கொசுவின் பாடலே தேவகானமாம்.

செவியுள்ளோர்க்கு விண் பாடல் கேட்டது
'விண்ணகத்தில் இறைவன் போற்றப் படுக
மண்ணகத்தில் நல்மனத்தோர் அமைதிபெறுக'
இதுவே இவர் பிறப்பின் தத்துவமானது.
இடையர்களுக்குத்தான் கிடைத்தது முதல் செய்தி
இறைவன் பிறந்துள்ளான் என்கிற புது செய்தி - இருள்
விலகிடும் என்பதே அந்நற்செய்தி.

ஏரோது அரசன் கொல்லத் தேடினான்
ஏழைமக்கள் காணத்தேடினர்
கிழக்கின் அரசர் மூவர் வந்தனர்
கிடையில் குழந்தையை வணங்கிநின்றனர்.

மாளிகை பலவும் உன் பேரில் இருக்குது - எங்கள்
மனங்கள் கூட வெறுமையாய் கிடக்குது
மாட்டுத் தொழுவமே போதுமென்றாலும்
அதைவிடக் கீழாய் பலர் வீடும் இருக்குது
இன்னும் ஒருமுறை இங்கே வந்திடு
குடிலோ, குடிசையோ எங்களில் தங்கிடு
அன்பே! அன்பு, அன்புதான் என்றிடு - எம்மில்
ஆலயம் வேண்டாம் அன்பே வேண்டிடு.


மீண்டும் ஒரு முறை இனிய கிறீஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

(வாள்) நட்சத்திரம்

போர்வாள்
அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது எனப்பாடிய பாட்டி இன்றிருந்தால் போர், கலகம் இல்லாத இடத்தில் பிறப்பதரிதுன்னு சொல்வாங்களோ என்னவோ? போர் பூமியில் வாழும் சாமான்யர்களை எண்ணிப்பார்க்கவைத்தது மணிரத்தினத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்'.

அமுதா, போர் காரணமாய் புலம் பெயர்ந்து, தன் உறவுகளையும், உணர்வுகளையும் பிறந்தமண்ணில் புதைத்துவிட்டு எங்கோ அடைக்கலம்புகும் ஆயிரக்கணக்கானோரின் பிரதிநிதியாகத் தெரிகிறாள். அமுதாவுக்கு கிடைத்ததுபோல போகும் இடத்தில் எத்தனை வசதிகள் வந்தபோதும் உள்ளே எரிந்துகொண்டிருக்கும் உணர்வுகளை எவராலும் தொலைக்க முடிவதில்லை.

புலம் பெயர்ந்தவர்களின் ஏக்கமயமான துயரம் ஒருபக்கமிருக்க போர்க்களங்களின் நடுவிலேயே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் அப்பாவி மனிதர்களின் சோகம் அவர்களின் சந்ததிகளின் மனதில் கண்ணீர் வெடிகளாக விதைக்கப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை.

கொள்கை ரீதியிலான போராட்டங்கள் முதிர்ந்து ஆயுதப் போராட்டங்களாக உருப்பெறுவது நிச்சயம் ஒரு குறுகிய வட்டத்துள் நடக்கும் விஷயமல்ல. Lord of the war எனும் திரைப்படம் ஆயுத வியாபாரி ஒருவனின் வாழ்வைச் சொல்கிறது. ஆயுதங்களை கொத்தவால்சாவடி தக்காளிபோல விலைபேசி விற்கிறான் அவன். "உலகில் 11பேருக்கு ஒரு துப்பாக்கி உள்ளது, என் வேலை மீதியுள்ள 10பேர்கையிலும் எப்படி துப்பாக்கியைத் தருவது என்பதுதான்?" என்கிறான் நாயகன் எடுத்த எடுப்பிலேயே. அமைதி விரும்பிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் நாடுகள் பல ஆயுத வியாபாரத்தில் அபார இலாபமூட்டுகின்றன. இவையே ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய உறுப்பினர்களாகவும் செயல்படுகின்றன எனும் தகவலோடு முடிகின்றது படம்.

வசதியான தூரத்தில் நின்றுகொண்டு யார்மீதுவேண்டுமானாலும் கல்லெறியத் துணியும் என்னைப் போன்றவர்களால் தன் உடம்பை வெடிகுண்டாக்கித் தன் கொள்கைகளை வாழவைக்கத் துணியும் ஒரு போராளியின் மனதைப் புரிந்துகொள்ள இயல்வதில்லை. பல நேரங்களில் இந்த உயிர்சேதங்கள் சத்தியாகிரக முயற்சியில் நிகழ்ந்திருந்தால் உலகம் இவர்களைத் திரும்பிப் பார்த்திருக்குமோ என எண்ணத்தோன்றும்.
எனினும் நம் போராட்டமுறைகளை வரையறுப்பது நம் எதிரிகளே!

பதிவர்வாள்
தெலுங்கு எழுத்துருவைப் பார்த்திருப்பீர்கள். நடிகர் விவேக் சொல்வதைப்போல ஜிலேபியாகத்தான் அவை எனக்கு காட்சியளிக்கின்றன. தமிழில் அன்பு என்பதையே ஆங்கிலத்தில் Love என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். தமிழ் தெரியாத ஒருவருக்கு தமிழ் எழுத்து புரிவதில்லை, ஆங்கிலம் தெரியாதவருக்கு ஆங்கிலம் புரிவதில்லை (அட என்னையா சொல்ல வர்ற?). இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தை அளிக்கின்றபோதும் நம் மூளையால் நமக்குத் தெரியாத ஒன்றை புரிந்துகொள்ள இயலவில்லை. (ரெம்ப சிம்பிள் லாஜிக்டா நட்சத்திரக் கொழுந்து).

அப்ப வலைப்பதிவுல மட்டும் ஏம்பா இப்டி அடுத்தவன போட்டுத் தாக்குறீங்க? எத்தனை முயன்றாலும் அடுத்தவரின் நிலையில் நின்று நம்மால் ஒருபோதும் சிந்திக்க இயல்வதில்லை. ஒருவரின் கொள்கைகள் நம்பிக்கைகள் குறைந்தபட்சமே அவரால் வகுக்கப் படுகின்றன பலது அவரவர்க்கு ஊட்டப்பட்டவையே. அதை யாராவது உங்களுக்கு ஊட்டியிருந்தால் நீங்களும் அவரைப்போல நிச்சயம் ஆகியிருப்பீர்கள் என்பதை நம்புங்கள்.

கருத்துக்கள், எதிர் கருத்துக்களை முன்வைக்கும்போது கருத்துக்களையே குறிவையுங்கள். உங்கள் கொள்கைகளை எடுத்துரைப்பதே முக்கியம் அடுத்தவரை தாக்குவது சிறந்த பதில் ஆகாது. உங்க கொள்கையின் மகத்துவத்தச் சொல்லணும்னா அதன்படி நடங்க. அதை மற்றவருக்குப் பிடிக்கும்படி செய்யுங்க. அடுத்தவங்களை குறைத்துப் பேசினால் உங்க கொள்கைகள் உயர்ந்து நிற்கும் என்பது உங்கள் கொள்கையின் வலிவின்மையையே காட்டும்.

பைபிளில் பேபலின் கோபுரம்பற்றிய ஒரு கதை உண்டு. உலக மக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு கோபுரத்தை கட்டி வானத்திலிருக்கும் கடவுளைச் சென்றடைந்துவிடலாம் என முயன்றுகொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த கடவுள் மனிதர்களிடையே இனம் மொழி என வேற்றுமையை உண்டாக்கி அவர்களை பிரித்துவிட்டாராம். நம்மில் வேற்றுமைகளைக் களையக் களைய நாம் கடவுளர்கள் ஆகிவிடுவோமோ என்னவோ?

நினைவுப் பேரலைகள்
சுனாமி அழிவை வருத்ததுடன் நினைவுகூறும் நாள் இது. இரண்டு வருடங்கள் கழிந்தபின்னும் மனதில் நினவுப் பேரலைகள் இன்னும் வீசிக்கொண்டிருக்கின்றன. சுனாமியின் விளைவு ஓரிருவருடங்களில் தீர்வதல்ல, இன்னும் சில தலைமுறைகளை அந்த நினைவுகள் வாட்டும் என்பதில் ஐயமே இல்லை.

கடற்கரை ஓரங்களில் உருவெடுத்திருக்கும் ஆயிரமாயிரம் அனாதை இல்லங்களே இதற்குச் சான்று. இன்னும் தேவைகள் உள்ளவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவ முன் வருவோம்.

இயற்கை மனிதர்களை அழிக்கலாம். மனிதத்தை?

Sunday, December 24, 2006

(வால்) நட்சத்திரம்

(மீள்)அறிமுகம்
வலைப்பதிவு துவங்கி ஒரு வருடம் ஆகிறது. நூத்தி சில பதிவுகள், சில பரிசுகள், பல பாராட்டுக்கள், அப்பப்ப ஏச்சுக்கள் என வருடம் ஓடினதே தெரியவில்லை. தமிழ் பதிவுக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்பதே மறந்துவிட்டது. நண்பர்
ஜோவின் உதவி மடல்களை நன்றியுடன் நினைவுகூறுகிறேன்.

முதலில் துவங்கியது ஒரு
ஆங்கிலப் பதிவு. ரெம்ப கஷ்டப்பட்டு அதில் சில பதிவுகள் அப்பப்ப போட்டுவிடுகிறேன். (அட பத்து பதிவத் தாண்டிடுச்சுங்க). அடுத்ததாக நான் அப்பப்ப நினைத்து வியப்புறும் அலைகள் பாறைகள் மணல்மேடுகள் துவங்கினேன். மொத்தம் 23 பதிவுகளே, ஆனாலும் எனக்கென்று ஒரு அறிமுகத்தை, அடையாளத்தை தந்த பதிவுகள். முட்டம் எனும் ஒரு கிராமத்தின் வெளிச்சத்தில் எனக்கு கொஞ்சம் பெயர் தேடிக்கொண்டேன் எனச் சொல்லலாம். தினமலரின் 'டாட் காம்' பக்கத்தில் இடம் கிடைத்தது. திரு செயமோகன் அவர்களின் மடலும், நண்பர்களின் பாராட்டும் மேலும் எழுதத் தூண்டியது.

அடுத்தது
பைபிள் கதைகள். அது துவங்கிய வேகத்தோடேயே முடங்கிக் கிடக்கிறது. அநியத்துக்கு டைம் கெடச்சா அத தொடரலாமுன்னு இருக்கேன்.

பத்தாம் வகுப்புக்குப் பின் நான் மறந்து, விட்ட தமிழ் என்னில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறதென்பது எனக்கு ஆச்சர்யமான விஷயம். இணைய எழுத்தாளர்கள் பலருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

இன்றைக்கு பல நண்பர்களை இந்த வலைத்தளம் பெற்றுத்தந்துள்ளது. அனைவருக்கும் இந்த நடசத்திர மகிழ்ச்சியில் பங்குண்டு என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அறிவுஜீவிகள், உணர்வுக் கொழுந்துகள், நடுநிலை நாயகர்கள்.
வலைப்பதிவில் ஒரு குறிப்பிட்ட சமூக நிகழ்வை அல்லது சமூகவியல் கூற்றுக்களை விவாதிப்பவர்களை மேல் குறிப்பிட்ட மூன்று குறிச் சொற்களுக்குள் அடக்கிவிடலாம். இவர்கள் நடத்தும் ஒரு கற்பனை(?) உரையாடல்.

"அன்பு நண்பர்களே வணக்கம்."

"டேய் நீ என்ன ஜாதி, என்ன மதம். ஒன்னப்பத்தி தெரியாதா. ஒங்க அப்பா பாட்டங்காலத்துல... "

"அட இருப்பா அவர் வணக்கந்தானே சொன்னாரு."

"சில கலாச்சார விளைவுகளாலத்தான் இப்படி இவர் ஆயிட்டாரு. பல ஆயிரம் காலமாக மனிதம் எத்தனை மாற்றங்களைக் கண்டிருக்கிறது. எத்தனையோ பல உண்மைகளைக் கண்டறிந்திருக்கிறது பல பொய்கள் மெய்யாயிருக்கின்றன மெய்கள் பொய்யாயிருக்கின்றன. ஆண்டாண்டு காலமாக மனிதனின் மூளை சலவை செய்துவரப்படுகிறது."

"எங்க மூளை சலவை செய்து வெளுப்பாக வைக்கப்பட்டுள்ளது ஒங்க மூளைதான் வெளுக்காத அழுக்காயிருக்குது."

"இப்ப நீங்க ரெண்டுபேரும் எத வச்சிகிட்டு சண்டபோடுறீங்கன்னே தெரியல. சமாதானமா போங்க. ஹாப்பி கிறிஸ்மஸ்."

"கிறீஸ்மசா? கிறீஸ்துன்னு ஒருவர் பிறக்கவேயில்ல தெரியுமா? எல்லாமே புருடா... எல்விஸ் ப்ரஸ்லி இதப் பத்தி பக்கம் பக்கமா எழுதியிருக்கார். ராபர்ட் கென்னடி இதச் சொன்னதால கொல்லப்பட்டாரு. ஆதாம் ஏவாள் இருந்தாங்கன்னா நம்பலாம் ஆனா இயேசு கிறீஸ்து இருந்தார்னு நம்பும்படியா ஆதாரம் எதுவுமே இல்ல."

"என்ன சொல்றீங்க. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால வாழ்ந்ததாச் சொல்ற இயேசு இல்லைன்னு ஊர்ஜிதமாயிடுச்சா? அப்ப அதுக்கும் முன்னால இருந்த கடவுள்கதியெல்லாம் என்னவாகும்? மதம், கடவுளெல்லாம் நம்பிக்கை சம்பந்தமான விஷயமில்லையா? உங்களுக்கு நம்பிக்கையில்லைன்னா அந்த விஷயம் பொய்யாத்தான் தெரியும்."

"அதத்தான் நாங்களும் சொல்றோம்ல? எங்க கடவுள் உண்மையில்லன்னு நீங்க சொன்னா உங்க கடவுளும் உண்மையில்லண்ணு நாங்க சொல்வோம்."

"இயேசு இருந்ததும் உறுதியாகல்ல, இல்லைங்கிறதும் உறுதியாகல்லன்னு வச்சுக்கலாமா?"

"அதெப்டி? திருச்சபை உலகத்த ஏமாத்தியிருக்குது. பல கலாச்சாரங்கள் அழிஞ்சிருக்கு."

"யோவ் மனுச வரலாத்துல எத்தனையோ கலாச்சாரங்கள யார்யாரெல்லாமோ அழிச்சிருக்காங்க். திருச்சபை ஒரு மத அமைப்பா மட்டுமில்ல மாபெரும் அரசியல் அமைப்பா இருந்துச்சு. இவுங்க செய்த ஆன்மீகத் தப்பையும் அரசியல் தப்பையும் போட்டு கொழப்பாதீங்க. இந்தியாவுலகூட பல கலாச்சாரங்கள் மதத்தின் பெயரால ஒண்ணாயிருக்கு."

"அப்ப திருச்சபை தப்பே செய்யலியா?"

"எத்தனையோ செஞ்சிருக்கு. பலதையும் திருத்தியிருக்கு. அவனவன் தப்ப அவனவனே திருத்திக்கட்டுமே?"

"அப்பாவி மக்கள ஏமாத்தி மதம் மாத்துறது சரியா?"

"யார யார் எந்த விதத்துல ஏமாத்துனாலும் அது தப்புத்தான்."

"அடுத்த மதமெல்லாம் சாத்தான் மதம்னு சொல்றது சரியா?"

"அது அவங்க நம்பிக்கை."

"அதத்தான் நாங்க எதிர்க்கிறோம். இயேசுவ எங்களுக்குப் பிடிக்கும் ஆனா ஏசு பேரால ஏமாத்துறவன கொளுத்துவோம்."

"டாப்பிக் ரெம்ப தெச மாறிப் போகுதே. ப்ளீஸ் இப்டி வெட்டியா பேசுறது வுட்டுட்டு கல்விக்கு ரூ60000 கேட்கும் பெண்ணுக்கு உதவுங்களேன்."

"கல்விக்கு 60000 ?அந்தப் பெண் படிக்கலியா?"

"எம் எஸ் ஸி படிச்சிருக்காங்க. உதவலைன்னா தற்கொல செஞ்சிருவாங்க."

"அடப் பாவமே. எங்க எப்ப யாருக்கு பணம் அனுப்புறது. தற்கொல செஞ்சாச்சா செய்யப் போறாங்களா? எப்டி எப்டி இது?"

"ஏன் இப்டி அவசரப் படுறீங்க? அவங்க ஏற்கனவே எம்.எஸ்.ஸி படிச்சிருக்காங்க எங்கையாவது வேல பார்த்துக் குடுங்க"

"யோவ் இப்போ அவங்களுக்குத் தேவ மீன் துண்டு. மீன் பிடிக்க அவங்களே கத்துக்குவாங்க."

"60000 வச்சு 60 பேருக்கு மீந்துண்டு தரலாமே?"

"என்னையா இவன். இவனத் திட்டி பதிவு போட்டத்தான் சரியாவான்போல."

"நீங்க சொல்ற லாஜிக்கும் புரியுதுங்க. எனக்கு ஒரு ஐடியா தோணுது. இந்தக் காச அந்தப் பொண்ணு கடனா வாங்கிக்கணும். அந்தக் கடன அது வேலைக்கு சேர்ந்ததும் முடிஞ்சவரை திருப்பித் தர முயற்சி செய்யணும், கொடுத்தவங்களுக்கில்ல, இன்னொரு ஏழைக்கு. இது நல்ல ஐடியா இல்ல?"

"யோசிக்கலாம்."

"போங்கையா உங்க லாஜிக்கும் நீங்களும். உதவி செய்யுங்க இல்லன்னா ஒதுங்கிப்போங்க."
இதுல யார் அறிவு ஜீவி யார் உணர்ச்சி பிழம்பு யார் நடுநிலமை நாயகம்னு நீங்களே முடிவுபண்ணிக்கங்க.

பட்டியல்
இதுவர நான் போட்ட சில பதிவுகள்ள உருப்படியான சிலத என்
100வது பதிவுல தொகுத்திருக்கேன் ஒரு எட்டு போய் முடிஞ்சா படிச்சுட்டு வாங்க. வார்ப்புருவுல ஏதோ தவறாயிடுக்கிறதால என்னுடைய சைட் பார் கீழ போயிடுச்சு (எக்ஸ்ப்ளோரர்ல) அதையும் போய் பாருங்க. 100வதுக்கப்பறம்போட்ட சில உருப்படியான பதிவுகள் கேழே பட்டியல் போட்டுள்ளேன்.

அமைதி அமைதி

புள்ளியியல் ராஜாவுக்கு பின்னூட்டம் வருமா?

உறவுகள்(சிறுகதை)

சுதந்திரம்

திண்ணையில் - தமிழோவியத்தில்

மான்ஸ்டர் - சிறுகதை

'திரவ'வாதமும் தீவிர சிரிப்பும்

நிலவில் நாளை..

லிஃப்ட் - சிறுகதை

இளையக் கன்னி

த'சாவு'தாரம்

தீட்டு

ஒருநாள் கழிந்தது.

சுவையான தகவல்

விடுதலை - சிறுகதை

விடுதலை

ஆதாம், ஏவள் மற்றும் சில குரங்குகள்

மரணதண்டனைப் பதிவுகள்

தீபாவளி வாழ்த்துக்கள்

தேன்கூடு பெட்டகம்

சொர்க்கம் இலவசம்

இ.இ.ஆ முதல் பரிசு எனக்கே எனக்கே

பகுத்தறிவாளனுக்கான பதிவு

போக்கர் ஆடுவது எப்படி?

டிசம்பர்-தேன்கூடு போட்டி தலைப்பு

வலைப்பதிவில் புகைப்படத்தை போட்டதன் விளைவு...

சிரி சிரி கிறீஸ்மஸ்

ஆங்கிலம் பேசலாம் வாங்க!

வருத்தம்
விழாக்கால சலுகையில் தமிழ்மணம் நட்சத்திரமாக மதி முன்பே தேர்ந்தெடுத்திருந்தாலும், தமிழ்மணம் இதை உறுதிப்படுத்துவதில் பலத்த தாமதம் ஏற்பட்டுவிட்டது என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம். இன்று ஆறு மணி அளவிலேயே எனக்கு அறிவிப்பு வந்தது. இந்த தாமத்திற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தபோதும் இதை இங்கே தெரிவித்தால் இந்தப் பதிவு ஏன் இப்படி அவசரத்தில் எழுதுனதுபோல இருக்குண்ணு நினைக்கிறவங்களுக்கு பதில் கிடைக்கலாம். தமிழ்மணம் குழு தந்த நட்சத்திர வாய்ப்புக்கு நன்றி.

வாழ்த்துக்கள்
கிறீஸ்துமஸ் பற்றி சிறப்பாய் ஏதாவது எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். அவசர பதிவானதால் இப்போதைக்கு கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். அதான் ஒரு முழு வாரம் இருக்கே இன்னும் நிறைய பேசுவோம்.

இப்பத்தான் சர்ச்சிலேர்ந்து திரும்பினேன்.

நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

Wednesday, December 20, 2006

ஆங்கிலம் பேசலாம் வாங்க!

ஆங்கிலத்தில் பேசுவது இப்போது ஒரு அடிப்படை தகுதியாகிவிட்டது. கிராமங்களிலிருந்து நல்ல மதிப்பெண்களுடனும் திறமையுடனும் வேலைதேடி வரும் நண்பர்கள் பலருக்கும் ஆங்கிலம் பேசும் திறமை குறைவாக இருப்பதால் (மட்டுமே) பல சமயங்களில் வேலைகிடைக்காமல் போகிறது. பொதுவாக கிராமத்து இளைஞர்களை விரும்பி தேர்வு செய்யும் நான்கூட பல சமயங்களில் பல திறமையானவர்களை 'Poor Communication Skill' என்று சொல்லி வருத்தத்துடன் நிராகரிக்க வேண்டியிருந்தது.

நானும் ஒரு கிராமத்தாந்தான். 10வரைக்கும் தமிழ் வழிக் கல்விதான் படித்தேன். 11 மற்றும் 12 ஆங்கிலத்தில் படிக்கவேண்டிய நிர்பந்தம். படித்தேன். 11ல் எப்போதும் ஜஸ்ட் பாஸ் மதிப்பெண்களே வாங்குவேன். ஆனால் 12 முடிக்கும்போது மாநில பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி பள்ளியில் மூன்றாவது இடத்தைப் பெற்றேன், அதே ஆங்கில வழிக் கல்வியில்.

ஆரம்ப பள்ளி முதலே ஆங்கிலம் நமக்கு சொல்லித்தரப் படுவதால் நமக்கு போதுமான அளவு அடிப்படை ஞானம் இதில் இருக்கிறது. ஆனால் நம்மிடம் இல்லாத ஒன்று ஆங்கிலம் பேசிப் பழகும் பழக்கம். செந்தமிழ் போல ஆங்கிலமும் "நாப்பழக்கம்தான்".

எளிதில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அல்லது ஆங்கில அறிவை மேம்படுத்த நீங்கள் தமிழில் அதிகம் தெரிந்து வைத்திருக்கும் கதைகளை அல்லது கருத்துக்களை ஆங்கிலத்தில் படிக்கக் கிடைத்தால் அதை ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கத்தோடு படிப்பது எளிய முயற்சி.

எனக்கு கைகொடுத்தது ஆங்கில பைபிள். பைபிளை தமிழில் தெரிந்துவைத்திருந்த நான் ஆங்கில பைபிள் படிக்க ஆரம்பித்தபோது ஒப்பீடு செய்து படிக்க முடிந்தது. இதுபோல உங்களுக்குத் தமிழில் தெரிந்த காப்பியங்களை, கதைகளை ஆங்கிலத்தொல் வாசிக்கக் கிடைத்தால் படிக்கலாம். படக்கதைகள் ஆங்கிலப் பேச்சறிவு வளர்ப்பதற்கு உதவும், அவற்றில் உரையாடல்கள் அதிகம் இருப்பதால்.

நம் மக்கள் பலர் ஆங்கிலம் அதிகமாய் பேச ஆரம்பித்தாலும் பல இலக்கணப் பிழைகளோடேயே பேசுகிறோம். பொதுவான சில ஆங்கில இலக்கணப் பிழைகளையும் அவற்றின் சரியான வடிவங்களையும் பார்ப்போம். (டேய்! மொதல்ல தமிழ் இலக்கணத்த படியுங்கடான்னு குரல்கொடுக்கிற மக்களுக்கு; தெரிஞ்சவங்க சொல்லுங்க, நிச்சயம் படிக்க ஆவலாயிருக்கிறேன்)

1. Did உபயோகிப்பது.
பலருக்கும் did என்பது இறந்த காலத்தில் செய்யப்பட்ட செயலை குறிக்கும் என்பது தெரியும்.
He did it. அவன் அதை செய்தான்/செய்துமுடித்துவிட்டான்.

did பயன்படுத்தும்போது அதனை அடுத்து வரும் வினைச் சொற்களில்(Verbs - செயலைக் குறிக்கும் சொற்கள்) Present Tenseஐயே பயன்படுத்த வேண்டும்.

உதாரணத்துக்கு He did killed. என்பது தவறானதாகும் He did kill. என்பதே சரியானதாகும். இந்தத் தவறை பலமுறை பலர் செய்யக் கேட்டிருக்கிறேன். முக்கியமாக கேள்வி கேட்கும்போது.

When did you arrived? என்பது தவறானது. ஏற்கனவே did இறந்த காலத்தை குறித்துவிட்டமையால் arrive எனும் வினைச் சொல் இறந்தகாலத்தை குறிக்கத் தேவையில்லை.

When did you arrive?(எப்போது நீ வந்து சேர்ந்தாய்) என்பதே சரியான உபயோகமாகும்.

சில சரியான did பிரயோகங்கள்
When did you do it?
When did you come?
Did you find it?
Did she finish it?

2. Does உபயோகம்.
Does என்பது did என்பதற்கான நிகழ்காலச் சொல். (Does, did இரண்டுமே Do என்பதின் மாற்றுருக்கள்.) பொதுவாக He, She, it எனும் Pronoun(சுட்டு பெயர்)களை நிகழ்காலத்தில் பயன்படுத்தும்போது வினைச் சொல்லை 's' சேர்த்து சொல்லவேண்டும்.

உதாரணமாய். He come(அவன் வருகிறான்). என்பது தவறானது. He comes என்பதே சரியான உபயோகம்.

She dance well. தவறு She dances well சரியானது.

Does உபயோகிக்கும்போது இந்த 's' சேர்க்கை அதிலேயே இருப்பதால் அடுத்துவரும் வினைச்சொல்லில் 's' சேர்க்கத் தேவையில்லை.

Does என்பது do என்பதின் மறுவடிவம். He, she, it எனும் சுட்டுப் பெயர்களை பயன்படுத்தும்போது doவிற்குப் பதில் does பயன்படுத்துகிறோம்.

She does dances well. தவறானது She does dance well. சரியானது.

3. பலரில் ஒருவர்.
One of my friend என்பதுபோல பலசமயம் நாம் பேசுவதுண்டு. "என் சொந்தக்காரங்கள்ள ஒருத்தன் வலைப்பதிவுன்னு அலஞ்சுகிட்டிருக்கான்." என உங்களைப்பற்றி யாராவது சொல்லியிருக்கக்கூடும்.

one of my friend என்பது தவறான உபயோகம். One of my friends என்பதே சரியான உபயோகம். என் நண்பர்களில்(friends) ஒருவர் என்பதே சரி அல்லவா? எனவே பன்மை அவசியம்.

One my friends இன்னும் சில தவறுகளுக்கு வழி வகுக்கலாம். friends என வந்ததால் பன்மை என நினைக்கிறோம். அதனால் சிலர் one of my friends have a horse named Cyril. என்பதுபோல சொல்கிறோம்.

ஆனால் நாம் பேசுவது 'One' of my freinds பற்றி. நம் நண்பர்களில் 'ஒருவரைப்' பற்றி பேசுவதால், அவரைப் பற்றியே பின்வரும் செய்திகளும் சொல்லப்படுவதால் haveற்குப் பதில் has தரப்படவேண்டும்.

One of my friends has a horse named Cyril. என்பதே சரியான வாக்கியம்.

4.அது, அதனது.
இதுல நான் பலமுறை தள்ளாடியிருக்கேன். It'sக்கும் Itsக்கும் என்ன வித்தியாசம்?
It's என்பது 'it is' என்பதன் சுருக்கம். It is a beautiful day என்பதை it's a beautiful day எனவும் சொல்லலாம்.


Its என்பது அதனது அல்லது அதனுடையது எனப் பொருள்படும். I can't remember it's name. என்பது தவறு. I can't remember its name. -அதனது பெயர் நினைவில்லை- என்பதே சரியானது.
It's its. - அது அதனுடையது ( how is it ?- இது எப்டி இருக்கு! ha ha ha :)

5. Can't able
தமிழில் 'செய்ய இயலவில்லை' என்பதை சிலர் அப்படியே I can't able to do this என மொழி பெயர்ப்பதுண்டு.

Can't என்பதே முடியாமையை குறிப்பதால் able தேவையில்லை. ஆனால் I can't do it. என்பது உங்கள் இயலாமையை முற்றுமாகச் சொல்வதில்லை. இது ஒரு மறுப்பாகவும் எடுத்துக்கொள்ளப் படலாம். எனவே உங்கள் இயலாமையை சொல்ல ableஐ பயன்படுத்துங்கள்.

I am not able to do it. - என்னல் அதை செய்ய இயலவில்லை.
I can't do it - என்னால் இதை செய்ய முடியாது.

இதுபொலவே I can able என்பதும் சரியானதில்லை.

I can - என்னால் முடியும்
I am able/ I will be able to do something - என்னால் செய்ய இயலும்.
able - ability - இயலும் அல்லது இயலாமையை குறிப்பது.
6. Is he is there?
மேலுள்ள கேள்வியில் அவர் அங்கே இருக்கிறாரா என கேட்க நினைத்திருக்கிறார். இரண்டு is இதில் தவறாக வந்துள்ளன. இதுவும் ஒரு பொதுவான தவறே.

Is he there? Is he in yet? - என்பவைகளே சரியான உபயோகங்கள்.

7. more and morer
Comparitive speech. ஒப்புமைப்படுத்தி பேசும்போது மூன்று நிலைகளை ஆங்கில இலக்கணம் அனுமதிக்கிறது. சமதளம்(Positive), ஒப்புமைப்படுத்தும் நிலை(Comparative), ஒப்புமையில்லாத நிலை(Superlative).

இரு பதிவாளர்கள் சம அளவு பின்னூட்டம் பெறுவது சமதளம். Both the bloggers get same number of comments.

ஒருவருக்கு அதிகம் கிடைக்கையில் இருவரில் எவர் அதிகம் பெறுகிறார் என ஒப்புமைப் படுத்தலாம்.

Blogger Earthworm gets more comments than blogger Lukeworm.
இவை பொதுவாக -er எனும் எழுத்துக்களில் முடியும் சொற்களால் குறிக்கப்படுகின்றன. taller, smaller என்பதுபோலெ.

ஆனால் நம்ம இலவசக்கொத்தனாரை குறிப்பிடும்போது He gets the most comments. அவருக்கு ஒப்பேயில்லை. இவை -est எனும் எழுத்துக்களில் முடியும் சொற்களால் குறிக்கப்படுகின்றன. tallest, smallest என்பதுபோல.

இதெல்லாம் பலருக்கும் தெரியும் என்றாலும் more உபயோகப் படுத்தும்போது இன்னுமொரு -er வார்த்தையை உபயோகப் படுத்துவோர் பலர்.

He is more taller than her. என்பது தவறானது.

He is taller than her. என்பதே சரியான வாக்கியம். இந்த இடத்தில் moreஐ தவிர்ப்பதே நல்லது ஏனெனில் Taller எனும் வார்த்தை சரியாக அமைந்துள்ளது.
பேச்சு வழக்கில் இதைப்பற்றி அதிகம் கவலைப்படுபவர்கள் இல்லை எனச் சொல்லலாம்.

8. ஒப்புமைகள் பலவிதம்.
மேலே கூறிய ஒப்புமைகளுக்கு சிலசமயங்களில் பிரத்யோக வார்த்தைகள் உபயோகிக்கப்படுகின்றன.

Good - Better - Best
bad - worse - worst (Worser என்பது தவறான உபயோகம்)
little - less- least
much - more - most
many - more - most
some - more - most
far - further - furthest

absolute, impossible, principal, adequate, inevitable, stationary, chief, irrevocable, sufficient, complete, main, unanimous, devoid, manifest, unavoidable, entire, minor, unbroken, fatal, paramount, unique, final, perpetual, universal, ideal, preferable and whole போன்றவற்றை more உடன் பயன்படுத்தலாம். (மோர்கூட ஊறுகாய் நல்லாயிருக்கும்னு சொல்றீங்களா - Could I have more pickle please?)

9. எடுத்துட்டு வந்ததும் வாங்கிட்டு வந்ததும்
Brought என்பது எடுத்துவருவது bought என்பது வாங்கி வருவது.

My brother brought me books from the exhibition. என் சகோதரர் புத்தகம் எடுத்து வந்தார் (அவர் வாங்கியிருக்கலாம், சுட்டிருக்கலாம், கடைவைத்திருப்பவராயிருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை எனக்கு எடுத்து வந்தார்).

My brother bought me books from exhibition. எனது சகோதரர் எனக்கு புத்தகங்களை வாங்கித்தந்தார் (அவர் வாங்கியது எனக்காகத்தான்.)

Brought என்பது Bringன் இறந்தகாலச் சொல். Bought என்பது buyன் இறந்தகாலச் சொல்.
10. a university;an hour
ஆங்கிலத்தில் a மற்றும் an உபயோகத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. பொதுவாக a, e, i, o மற்றும் u வில் துவங்கும் வார்த்தைகளுக்கு an உபயோகிப்பது வழக்கம். ஆனால் இந்த (உயிர்) எழுத்துகளில் துவங்கும் வார்த்தைகள் என்பதை விட இந்த உயிரெழுத்துக்களின் உச்சரிப்பில் துவங்கும் வார்த்தைகள் என்பதே பொருத்தமாகும்.

இதன் அடிப்படையிலேயே Hour Hல் துவங்கினாலும் அது an Hour (அவர்) எனப்படுகிறது. University Uவில் துவங்கினாலும் யூ எனும் உச்சரிப்பில் துவங்குவதால் a பயன்படுத்தப்படுகிறது.

எளிதில் இதை நினைவுகூற என் 10ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியை சொல்லித்தந்த வழி என்னவென்றால், தமிழின் உயிரெழுத்துக்களான அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ எனும் ஒலிகளில் ஒரு வார்த்தை துவங்குமானால் அவற்றிற்கு an பயன்படுத்தவேண்டும். மற்றவைக்குத் தேவையில்லை. இதுபோல பேசும்போது theவை 'தி' எனச் சொல்வதும் இந்த உயிரெழுத்து ஒலிகளுக்கே பொருந்தும். It works all the time.

hour - சொல்லும்போது 'அவர்' என்கிறோம் எனவே an சேர்க்கப்படுகிறது.
University - 'யூ' எனும் உச்சரிப்பில் துவங்குகிறது எனவே a.


உங்களுக்கு மேலும் கேள்விகளிருந்தால் கேட்கலாம் பதில் தர முயற்சிக்கிறேன். ஏதோ எனக்குத் தெரிஞ்சத சொன்னேனே தவிர என் பெயர பீட்டர் அலெக்ஸுன்னெல்லாம் மாத்திவைக்க மாட்டேன். ஓரளவுக்கேனும் ஆங்கில அறிவு எல்லாருக்கும் தேவை (பின்ன எப்படி இலக்கியம் படைக்கிறது?) வெளிநாட்டில் வந்து வேலை பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே தேவை.

Thursday, December 14, 2006

திருக்குறள் குழுமம்

பதிவுகளில் குறள் விளக்கங்களை 'மயிலை மன்னார்' தருவதுபோல வேறு யாரும் தரவில்லை.

திருக்குறளுக்கென்றே ஒரு பதிவைத் துவங்கி ஒவ்வொரு பதிவிலும் ஒரு அதிகாரமென எளிமையாய் இனிமையாய் விளக்கம் அளிக்கலாம் எனும் எண்ணத்தில் ஒரு பதிவை துவங்கியுள்ளேன்.

இதை தனியாய் செய்வதைவிட குழுவாய் செய்வதே எளிதானதாகும் என்பதால் இந்த அறிவிப்பு.

'குறள் பக்கங்கள்' எனும் இந்த புதிய குழுமப் பதிவில் பங்குபெற விரும்புபவர்கள் cvalex at yahoo .com அல்லது cyril.alex@gmail.com ற்கு தனிமடல் அனுப்பவும்.

விரைவில் எதிர்பாருங்கள் 'குறள் பக்கங்கள்'.

பி.கு: SK, மயிலை மன்னாரை குழுமத்துக்கு வரவேற்பது எங்கள் மகிழ்ச்சியும் பாக்கியமும் ஆகும்.

சிரி சிரி கிறீஸ்மஸ்



வருத்தப்பட்டு பாரம் சுமப்போர்

Screwed up




இரண்டு ராஜாக்களும் ஒரு வாடிக்கையாளரும்

Be Prepared


மீட்பு விற்பனைக்கு

Breaking Traditions

எல்லோரும் கொண்டாடுவோம்

How to celebrate Xmas?

Away in a Parking lot...

Away in a parking lot

வாழ்(க்கை)த்து அட்டைகள்

Xmas card

Thursday, December 07, 2006

வலைப்பதிவில் புகைப்படத்தை போட்டதன் விளைவு...

வலைப்பதிவில் புகைப்படம் போடுவது பற்றி பலருக்கும் பல தயக்கங்கள் இருக்கும். புனைபெயரைப்போல புனை படங்கள் ஊள்ள பதிவுகளே அதிகம். நான் தைரியமாய் என் படத்தை போட்டதன் விளைவு இதோ கீழே.





மூன்றாவது படத்தை யார் இப்படி செய்தார்கள் என்பதை இங்கே போய் தெரிந்துகொள்ளவும்.

இந்த வரைமுறையற்ற செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

'குறும்பு' தலைப்புல இதுபோல குசும்பு செஞ்சும் பதிவு போடலாமே?


Wednesday, December 06, 2006

காலங்களில் இது பனிக்காலம்

போனவாரம் வெள்ளிக்கிழமை சிகாகோவில் நான் வசிக்கும் வடக்கு பகுதியில் பனிப் பொழிவு சற்று அதிகமாகவே இருந்தது. அப்போது சுட்ட அல்லது உறைந்த (Freeze) சில படங்கள்.















Thursday, November 30, 2006

சிக்காகோ பதிவர்கள் சந்திப்பு

சிக்காகோவில் பதிவர்கள் மூவர் கடந்த ஞாயிறன்று சந்தித்தோம். அயராது பதிவு போடும் சிவபாலன், சவுண்டாய் பதிவு போடும் உதயக் குமார் மற்றும் அப்பப்போ பதிவு போடும் நான்.

மூவரும் சந்திப்பது கடைசி நேரத்தில்தான் முடிவானது. அறிவிப்பும் காடைசி நேரத்திலேயே தரப்பட்டிருந்தது. நண்பர் சுந்தரமூர்த்தி மின் மடல் அனுப்பியிருந்தார். தொலைபேசினார். சந்திப்பில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார்.

ஞாயிறு மாலை நான்கு மணிக்கு சிக்காகோ தாவரவியல் பூங்காவில் சந்திப்போம் எனக் கூறியிருந்தார் சிவபாலன். தாவரங்களெல்லாம் வறண்டு நிக்கும் இந்தக் குளிர்காலத்தில் இங்கே ஏன் வருகிறீர்கள் என எண்ணியோ என்னவோ நானும் என் நண்பரும் குடும்பங்களுடன் போய் சேரும்போது பூங்காவை மூடியிருந்தார்கள்.

சிவபாலன் வீட்டுக்கு வழிசொல்ல நானும் என் மனைவி, மகனும் போய் சேர்ந்தோம்.

இரண்டு முறை தட்டியும் கதவு திறக்கவில்லை. உள்ளே சிவபாலன் உதயக்குமாரோடு பயங்கர விவாதத்தில் இருந்திருப்பார் போல.

'அண்டக்கா கசம் அபுக்கா குசம்..' சொல்லிக்கொண்டிருக்கும்போதே கதவு திறந்தது.

சிவபாலன். எளிமை இனிமை. அவர் எழுத்தைப் போலவே பட படவென இருக்கிறார் மனிதர். அருமையாய் உபசரித்தார். (பதிவுகள் போலவே) சமூக, அரசியல் விவாதங்களையே விரும்பிச் செய்தார். உண்மையில் அவர் சொல்வதற்கும் அவரின் கொள்கைகளுக்கும் தொடர்புள்ளது என்கிற நேர்மையைப் புரிந்துகொண்டேன்.

உதயக்குமார் எனும் விளையாட்டுப்பிள்ளை வந்திருந்தார். பீர் மணம் மாறாத முகம். (ரெம்ப இளையவர்னு சொல்ல வர்றேங்க) மத்தபடி அவர் சவுண்ட் பார்டின்னு தெரியும் தண்ணி பார்ட்டியான்னு தெரியல. வலைப்பதிவுகளில் சீரியசான இளைஞர். நேரிலும்.

மூவரும் ஏதோ சின்ன வயசுலேர்ந்தே பக்கத்து வீட்டில் வளர்ந்தவர்கள் போல பேசிக் கொண்டோம். வலைப் பதிவுகளில் அப்படி ஒரு அறிமுகம் கிடைக்கிறது. ஒருவரைப் பற்றிய முன் அனுமானங்களை அவரின் எழுத்திலிருந்தே செய்துகொள்ள முடிகிறது(ஓரளவுக்கு சரியாகவே) . சின்னச் சின்ன விவாதங்களே புரிந்தோம். கலந்துரையாடல். சீரியசாக எதையும் விவாதிக்கவில்லை எனச் சொல்லலாம்.

சிவபாலன் மனைவி மசால் வடை பரிமாற சந்திப்பு சூடு பிடித்தது. அடுத்து டீ இன்னும் இனிப்புடன் உபசரிப்பு தொடர்ந்தது. மசால்வடை போண்டா வடிவில் திரித்து செய்யப்பட்டிருந்தது. (வலைப்பதிவர் சந்திப்பில் போண்டா இருக்கவேண்டும் எனும் விதிமுறைக்கேற்ப.)

நண்பர்களை சந்தித்ததில் மெத்த மகிழ்ச்சி. வரும் கோடையில் மெகா சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என முடிவு செய்தோம்.

வலைப்பதிவர் சந்திப்பு என்பதை விட நண்பர்களின் சந்திப்பு எனச் சொல்லலாம். நிறைவான சந்திப்பு இனிவரும் சந்திப்புக்களுக்கு முத்தாய்ப்பு.

விடை பெறும்போது உதயக் குமார் நண்பர்களோடு கசினோ ராயேல் பார்க்கப் போவதாகச் சொன்னார்.

கூடவே வந்துகொண்டிருந்தார். ஹைவேயில் காரை விட்டபோது காணாமல் போயிருந்தார்.

இன்னும் சந்திப்போம். மகிழ்வோம். (போண்டா) பகிர்வோம்.

டிசம்பர்-தேன்கூடு போட்டி தலைப்பு

கரும்பு விலை தன்னாலத்தான் ஏறிப்போச்சுன்னு ஜெ சொல்வது
அரசியல் குறும்பு
ப்ளூட்டோ திடீர்னு கோள் இல்லன்னு சொல்றது
அறிவியல் குறும்பு
கைப்புள்ள சீறி எழுந்தா
கிராமத்துக் குறும்பு
விவேக் விசிலடிச்சா
சிட்டிக் குறும்பு
ஆபீசில் பிற பாலிடம் சில்மிஷக் குறும்பு
ஸ்கூலில் ப்ரின்ஸ்பாலிடம் சின்னவயசுக் குறும்பு
கவுண்டமணி ஒதச்சா கர்வக் குறும்பு
செந்தில் ஒதச்சா காமெடிக் குறும்பு
காதலி லேட்டா வந்தா காதல் குறும்பு
காதலன் லேட்டா வந்தா குறும்பில்ல குமுறு
வெள்ளை சட்டை பாத்து கக்கா போவது
குழந்தைக் குறும்பு
வெள்ளை சுவத்தோரம் கண்டதும் போவது
பெரியவர் குறும்பு
விசிலோ, கண்ணோ அடிப்பது
வாலிபக் குறும்பு
விட்டா ஆளையே அடிப்பது
வயோதிகக் குறும்பு
மீள்பதிவு, தனிமனிதத் தாக்குதல்
வலைப்பதிவர் குறும்பு
படித்துவிட்டு சும்மா போவது
வாசகர் குறும்பு.

இந்த மாத தலைப்பு 'குறும்பு'. சும்மா கலாட்டாவா எழுதுங்க.

நகைச்சுவை படைப்புகள் வருவதென்பதே மிகக் குறைவாக இருக்கும் இந்த காலத்தில் குறும்பு என்ற இந்த தலைப்பை மையமாக வைத்து ஜாலியான படைப்புகளை எழுதி மகிழ்வியுங்களேன்.

பிற தலைப்புக்களை தந்திருந்த நண்பர்களுக்கு நன்றி.

போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.phpபடைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - டிசம்பர் 20, 2006டிசம்பர் 21 முதல் வாக்கெடுப்புகள் நடைபெறும்.

Monday, November 27, 2006

நன்றி

நவம்பர் தேன்கூடு போட்டியில் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் போட்டி நடத்திய தமிழோவியம் தேன்கூடு நிர்வாகிகளுக்கும் நன்றி.

தேன்கூடு நடத்திய முதல் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசும் பெனாத்தல் சுரேஷுக்கு முதல் பரிசும் கிடைத்தது. நவம்பரில் எனது 'சொர்க்கம் இலவசம்' கதைக்கு முதல் பரிசும் அவருக்கு இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளது. (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆர்னர்).

மக்கள்ஸ் அனைவருக்கும் நன்றி.


கூடவே ஒரு சின்ன போட்டி.

அடுத்த மாதப் போட்டிக்கு ஒரு நல்ல தலைப்பை பின்னூட்டுங்கள். கடைசி போட்டி என தேன்கூடு அறிவித்திருப்பதால் சிறப்பாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

தலைப்பு போட்டிக்குப் பரிசு பாராட்டு மட்டுமே. :)

சிறில் அலெக்ஸ்