.

Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Wednesday, March 14, 2007

இயேசுவின் கல்லறை

The lost tomb of Jesus எனும் ஆவணப் படம் போன ஞாயிறன்று டிஸ்கவரி தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. இயேசுவின் குடும்பக் கல்லறை என நம்பப்படுகிற கல்லறை ஒன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற (சவப்)பெட்டிகள், அவற்றின்பேரில் நிகழ்ந்த ஆய்வுகளை ஆவணப்படம் முன்வைக்கிறது.

இயேசுவின் காலத்தில் இறந்தவர் உடலை முதலில் ஒரு கல்லறையில் வைத்துவிட்டு ஒரு வருடம் கழித்து மிச்சமிருக்கும் எலும்புகளை ஒரு பெட்டியில் போட்டு குடும்ப கல்லறைகளில் வைப்பது வழக்கமாம். இப்படிப் பட்ட கல்லறையின்றில் கண்டெடுக்கப்பட்ட பெட்டிகள்தான் ஆவணப்படத்தின் அடிப்படை ஆதாரம்.

டிஸ்கவரி துவக்கத்திலேயே ஒரு பெரிய டிஸ்க்ளெய்மரோடு (Disclaimer ) ஆரம்பிக்கிறது.

ஆவணப் படத்தின் இயக்குனரோடும், இன்னொரு முக்கிய ஆலோசகரோடும், அகழ்வாராய்ச்சி துறையினரும், அறிவியல் வல்லுநர்களும் இன்னும் கிறீத்துவ இறையியலாளர்களும் உரையாடிய ஒரு கலந்துரையாடலைக் காண்பித்தனர். தான் ஒளிபரப்பும் ஒரு நிகழ்ச்சிபற்றி நேர், எதிர் கருத்துக்களை விவாதிக்கச் செய்த டிஸ்கவரியை வியக்காமல் இருக்கமுடியாது. இதை வழிநடத்திய அனுபவமிக்க ஊடகவியலாளர் டெட் காப்பல் தன் அனுபவத்தை சிறப்பாக பயன்படுத்தியிருந்தார்.

பொதுவாகக் கருதப்படுவதுபோலல்லாமல் இந்தக் குடும்பக் கல்லறையை கண்டு பிடித்து 27 வருடங்கள் ஆகின்றன, இப்போதையக் கண்டுபிடிப்பல்ல. இந்த ஆவணப்படம் எடுக்க ஆன காலகட்டம் 3 வருடங்கள். 24 வருடங்களாக அந்தக் குடும்பக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட பெட்டிகள் ஜெருசலெம் அருங்காட்சியகத்தின் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பெட்டிகளை அருங்காட்சியகம் ஆவணப்படுத்துவதிலிருந்தே குழப்பங்கள் துவங்குகின்றன. இவை அவசரமாக ஆவணப்படுத்தப்பட்டு சேமிக்கப் பட்டுள்ளன என்கிறார் இஸ்ரயேல் அருங்காட்சியகத்தில் அப்போது ஆய்வாளராக இருந்தவர். இவையெல்லாம் ஒரே நாளில் அல்லது ஒரே காலகட்டத்தில் சேர்க்கப்பட்டவையா என உறுதியாக அறிய இயலவில்லை.

இந்தக் கல்லறை இயேசுவின் குடும்பக் கல்லறை எனப் பெட்டிகளின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்களை வைத்து சொல்ல முயல்கிரார்கள். இந்தப் பெயர்கள் மிகத் தெளிவாக தெரியவில்லை என்பதும் உணரப்பட்டுள்ளது. இவை அரமைக் எனும் இயேசுவின் தாய் மொழியில்பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட மொத்தம் 10 பெட்டிகளில் 6ல் பெயர்கள் உள்ளன. ஜோசப்பின் மகன் இயேசு எனும் பெயருள்ள ஒரு பெட்டி, மரியா என ஒன்று மரியம்னெ எனப் பெயருள்ள ஒரு பெட்டி யூதா எனும் பெயருள்ள இன்னொரு பெட்டி, இன்னும் பெயருள்ள இரண்டு பெட்டிகள். இந்தப் பெயர்கள் முதலாம் நூற்றாண்டில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டன என்பதையும் ஆவணப்படம் தெரிவிக்கிறது. (Use stats) இதற்குமுன் பல கல்லறைகளில் இயேசு எனும் பெயர்பொறிக்கப்பட்ட பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஆவணப்படம் வியாபார நோக்கோடு, பரபரப்பை உண்டாக்க எடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் சில வல்லுநர்கள். அகழ்வாராய்ச்சியாளர் ஒருவர் இதை அகழ்வாராய்ச்சியின் ஆபாசத் திரைப்படம்(Archeological pornography) என்கிறார்.

அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் பொருள்சார்ந்த அறிவியலையும்(Material Scinece), எண்ணிக்கை சர்ந்த அறிவியலையும் கொண்டே முடிவுகளை செய்ய இயல்கிறது. இதில் பொருள்சார்ந்த் ஆதாரங்கள் அதிகமிருப்பின் முடிவுகளின் மேல் அதிக நம்பிக்கை உருவாகும் வாய்ப்பிருக்கிறது. உதாரணமாய் பரிணாம வளர்ச்சிக் கொள்கை.மரபணு சோதனை ஒரு பொருள்சார்ந்த அறிவியல். இந்த ஆவணப்படம் குறைந்த பட்ச மரபணு சோதனையையே செய்துள்ளது. புள்ளியியல்(Statistics) ஒரு அறிவுசார்ந்த அறிவியல் இதை அதிகமாகப் பயன்படுத்தி முடிவுகளைச் சொல்கிறார்கள் ஆவணப் படத்தில்.

புள்ளியியல் அனுமானங்களை ஏற்படுத்தவும், தோராயமான முடிவுகளைப் பெறவுமே பயன்படுகிறது. புள்ளியியல் அடிப்படையில் இயேசுவின் காலத்தில் இருந்த மக்கள் தொகையில் எத்தனைபேருக்கு இயேசு எனப் பெயர் இருந்திருக்கும் எனும் தோராயக் கணக்கில் துவங்கி எத்தனைபேருக்கு மரியாள் , ஜோசப் எனும் தாய் தந்தை இருந்திருப்பர் எனும் அனுமானங்களினூடாகப் பயணிக்கிறது 'ஆய்வு'.

ஆவணப் படம் தொட்டுச்ச் செல்லும் இன்னொரு கருத்து இயேசுவுக்கும் மரிய மதலேனாளுக்கும் திருமணமாயிருந்தது எனும் கூற்று. இதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யப்பட்டுள்ளது. டா வின்சி கோடின் பரபரப்பு தொத்திக்கொள்கிறது.

இதில் இருக்கும் பெரிய ஓட்டை என்னவென்றால், மரியம்னே எனும் பெயருள்ள பெட்டியில் இருக்கும் பெண்ணின் மரபணுவுக்கும், இயேசு எனப் பெயரிட்ட பெட்டியிலுள்ள் மரபணுவுக்கும் இரத்த சம்பந்தம் இல்லை என சோதனை தெரிவிக்கிறது. இரத்த சம்பந்தம் இல்லையென்பதாலேயே இருவரும் மணமானவர்கள் எனும் முடிவுக்கு வருகின்றார்கள். எல்லா பெட்டிகளில் உள்ள மரபணுக்களும் சோதிக்கப்பட்டிருக்கின்றனவா எனும் விவரம் இல்லை. பெயரில்லாத மீதம் 4 பெட்டிகளில் உள்ளவர்களுக்கும் மரிமனெவுக்கும் தொடர்பிருக்கிறதா? தெரியவில்லை. ஆவணப் படம் தரும் வாதப் படி பார்த்தால் மரியம்னெவுக்கும் அந்தக் கல்லறையிலிருக்கும் யாருக்கும் வேண்டுமானாலும் திருமணம் நடந்திருக்கலாம், பெண்களைத் தவிர்த்து. So much for science.

மரிய மதலேனாளுக்கும் இயேசுவுக்குமான மரபுவழிக் கதைகளைக் கொண்ட டாவின்சி கோடின் அனுமானங்களைக் கொண்டு, சாதகமான அறிவியல் சோதனைகளோடு முடிவுகள் சொல்லப்படுகின்றன.

'மரியம்னெ' எனும் பெயர் இன்னும் முக்கியத்துவம் பெறக் காரணம் என்னவென்றால் பிலிப்பின் நற்செய்தி(Gospel of Philip) மரியம்னெ எனும் பெயரில் மரிய மதலேனாளை குறிக்கிறது. ஆனால் பிலிப்பின் நற்செய்தி 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது மரிய மதலேனாள் வாழ்ந்ததோ முதலாம் நூற்றாண்டு. முதலாம் நூற்றாண்டில் மரியம்னெ எனும் பெயர் பரவலானதாக இல்லை. இதை ஆவணப் படக் குழுவும் விவாதத்தின்போது ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஆவணப் படத்தில் தங்கள் வாதத்தை பலவீனம் செய்யும் கருத்துக்களை குறைவாகவே சொல்கிறார்கள்.

400 ஆண்டுகள் கழிந்தபின் மரிய மதலேனாளுக்கு கிடைத்த மரியம்னெ எனும் பெயர் அவர் இறந்து ஒருவருடத்துக்குப் பின் உருவாக்கப்பட்ட சவப் பெட்டியில் பொறிக்கப்பட்டிருக்கிறதென்பது, தமிழ் திரைப்படங்களில் பாம்பு தட்டச்சு செய்து எச்சி போட்டு கடிதம் ஒட்டி அஞ்சல் செய்கிற கற்பனையின் ஓட்டையை விட பெரியதாயுள்ளது.
வாதங்களுக்குப் பின் வாதங்களாகத் தொடர்புகள் ஏற்படுத்தப் பட்டிருப்பினும், ஒவ்வொரு வாதங்களும் பெரும் சந்தேகங்களுடன் கூடிய அனுமானங்களோடு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதால் தொடர்புள்ள வாதங்களின் தனிப் பகுதிகள் வலுவிழந்து போகின்றன, எனவே மொத்த வாதமும் வலுவிழக்கிறது.

ஆவணப்படம் சொல்லவரும் விஷயங்களையும் ஒழுங்கற்ற சம்பாஷணைகளின் மூலமே பொதுவாகச் சொல்கிறது. முக்கியமான கட்டங்கள் வாதங்களாகவே (உரையாடல்) செல்கின்றன. டீக் கடை பெஞ்சில் சதாம் உசைனுக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் என்ன சந்ம்பந்தம் என்பதுபோன்ற உரையாடல்கள்.ஆவணப் படத்தில் பங்குபெற்ற 'அறிவியல்' வல்லுனர்கள் பலரும் தங்கள் முடிவுகள் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருப்பதாக 'டிஸ்கவரிக்கு' தெரியப்படுத்தியுள்ளனர். புள்ளியியல் முடிவுகளைச் சொன்ன டொராண்டோ பல்கலையின் பேராசிரியர் ஆண்ட்ரே, அகழ்வாராய்ச்சித் துறையிலோ, பைபிள், கிறீத்துவ வரலாற்றின் ஆராய்ச்சியிலோ எள்ளவும் அனுபவமில்லாதவர். அவரின் முடிவின்படி இந்தக் கல்லறையில் உள்ள பெயர்கள் இயேசுவின் குடும்பமாக இருக்க அறுநூற்றில் ஒரு சாத்தியம் இருக்கிறது. (1 in 600 probability). இந்த சாத்தியமும் மரியம்னெ எனும் பெயர் மரிய மதலேனாளின் பெயர் என்பது உண்மை என எடுத்துக்கொள்வதால் வருவது. அந்த வாதம் பொய்த்துப் போவதால் 600ல் ஒன்று எனும் சாத்தியம் இல்லாமல் போகிறது.

மரியமதலேனாளின் உடல் இயேசுவின் உடலோடு கண்டுபிடிக்கப் பட்டிருப்பதைவிட இயேசுவின் உடல்(எலும்புகள்) கண்டுபிடிக்கப்பட்டது என்பதே கிறீத்துவர்களின் பெருங்கவலையாக இருக்கும். இயேசு உடலோடு பரலோகத்துக்குச் சென்றார் என்பது பரவலான கிறீத்துவ நம்பிக்கை.

இந்த ஆவணப் படம் வியாபார நோக்கில், பரபரப்புக்காகவே எடுக்கப்பட்டிருப்பதை பல பத்திரிகைகளும், டிஸ்கவரியின் வல்லுநர் குழுவுமே சொல்கின்றன. டாவின்சி கோட் நாவல் ஏற்படுத்திய பரபரப்பு அலையில் சறுக்கி விளையாடும் அவசரம் தெரிகிறது.
டைம் இதை 'அவசர, விளையாட்டுத் தனமான அறிவியல்' என்கிறது. இதுபோன்ற அவசர அறிவியல்கள் சொன்ன பல கருத்துக்களும் குழப்பத்தை ஏற்படுத்தவே தவிர வேறொன்றுமில்லை.

கடவுளை நம்ப அறிவியல் தேவயில்லை. கடவுள் நம்பிக்கைக்கு அறிவியல் மாற்று இல்லை என்பதை புரிந்துகொண்டிருக்கும் வரையில் இதுபோன்ற வெற்றுத் தகவல்கள் பரபரப்பை மட்டுமே ஏற்படுத்தும். கடவுள் இல்லாத வாழ்க்கையை மனித இனம் பரவலாகத் தேர்ந்தெடுக்கும் நாள் வரலாம். அப்போது கல்லறைகளைத் தோண்டும் அவசியங்கள் இருக்காது. (அதுவரைக்கும் ஆயிரம் கல்லறைகளைத் தோண்டினாலும் நம்பிக்கைகளை அசைக்க முடியாது)

நன்றி: தமிழோவியம்

Wednesday, February 28, 2007

Sunday, February 18, 2007

Gas chambers அல்லது அரவிந்தன் நீலகண்டனுக்கான பின்னூட்டம்

கிறீத்துவ வழிபாட்டு முறைகளில் என்னைக் கவர்ந்த ஒன்று சிலுவைப்பாதை. இயேசுவை தீர்ப்பிடுதல் துவங்கி அவரை கல்லறையில் அடக்கம் செய்தல் வரை நிகழும் நிகழ்வுகளாக மொத்தம் 14 நிலைகள் வகுக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் ஒரு தியானமும் செபமும் செய்யப்படும்.

இயேசு ஒரு மனிதன் என்றே வைத்துக்கொள்வோம், அவரின் அகால மரணத்தை அசைபோடுவதென்பது அதுவும் ஆன்மீகப் பழக்கமாக செய்வதென்பது எனக்குள் பல சிந்தனைகளைத் தூண்டியிருக்கிறது ஆனால் ஒருபோதும் வெறுப்பைத் தூண்டியதில்லை. சாதாரணமாக ஒரு கல்லறையைக் கடந்துபோகும்போதே வாழ்க்கையைப் பற்றி அலசத்தூண்டப் படும் என்னால் சிலுவைப்பாதைகளை விரும்பாமல் இருக்க இயலவில்லை

பொதுவாக சிலுவைப்பாதைகள் எழுதி வாசிக்கப்படுகின்றன. கிறீத்துவ புத்தகக் கடைகளில் நிச்சயம் கிடைக்கும் அதை வாங்கிப் படித்தால் உங்களுக்கு சிலுவைப் பாதைகள் நடக்கும்போது கிறீத்துவர்கள் என்ன தியானிக்கிறார்கள் என்பது புலப்படும்.

சிறிய உதாரணம். முதல் நிலையில் (ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறது இது) இயேசு தீர்ப்பிடப் படுகிறார். இயேசு, தான் இறைமகன் என்கிறார், யூதர்கள் தேடிக்கொண்டிருந்த மீட்பர் நான் என்கிறார். இதனால் யூதர்களின் ஆதிக்க சக்திகளும் அவர்கள் பின்னிருந்த மக்களும் இயேசுவை சிலுவையில் அறையும்படி கையளிக்கின்றனர். ரோம ஆளுனன் போஞ்சியஸ் பைலட் (பிலாத்து) இவரிடம் நான் எந்தக் குறையையும் காணவில்லை என்கிறான்.

பிலாத்து ஆளுனன். நீதிவழங்குபவன். அரசின் சட்டங்கள் எதையும் இயேசு மீறாதபோது தாண்டனை வழங்கத் தயங்கினான்.

யூதர்கள் இவன் இரத்தப் பழி எங்கல் மேல் விழட்டும் எனச் சொல்கிறார்கள். பின்பு பிலாத்து இயேசுவை சிலுவைமரணத்துக்கு தீர்ப்பிடுகிறார்.

இந்த நிலை சிலுவைப்பதையில் எப்படி இருக்கும்.

'இயேசு நாதர் பாடுபட்ட முதலாம் ஸ்தலம்: இயேசுவை தீர்ப்பிடுகிறார்கள்' என்பார் நடத்துனர். மக்கள் எல்லோரும் 'திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றிஅறிந்த தோத்திரம் செய்கீறோம். ஏனெனில் அந்த பாரமான சிலுவையைக் கொண்டு உலகை மீட்டு ரட்சித்தீர்.' என பதிலளிப்பார்கள்.

அப்புறமா ஒரு சின்ன தியானம். தியானிக்க ஒரு கருத்து சொல்லப்படும் இது 100க்கு 99 முறை 'இந்த முதலாம் நிலையில் நாம் யாரையெல்லாம் தீர்ப்பிட்டிருக்கிறோம், அநியாயமாய் குற்றம் சாட்டியிருக்கிறோம் என எண்ணிப்பார்த்து வருந்துவோம்' என்பதுபோலத்ததன் இருக்கும். மீதம் ஒரு முறை ஒரு மாற்றுச் சிந்தனையாக இதுபோன்ற சிந்தனை ஏதாவது சொல்லப்படும்.

இதுபோல 14 தலங்களும் சுயபரிசோதனைக்கான உந்துதல்களே தவிர அரவிந்தன் நீலகண்டன் சொல்வதைப்போல வெறுப்பை விதைக்க அல்ல.

சரி சிலுவைப்பதை பற்றிய பெரிய புரிதலை அவரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. எனவே தொடர்புள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்.

மெல்கிப்சன் எடுத்த இயேசுவின் பாடுகள் (Passion of Christ) என்கிற படம் யூதர்களுக்கு எதிரான படம் என்கிறார். இதை க்ரஃபிக்ஸ் கலக்கல் எனவும் சொல்லிவிடுகிறார். இந்தப்படம் இயேசுவின் கடைசிப்பயணமான சிலுவைப் பயணத்தை விவரிக்கிறது.

சிலுவை மரணம் என்பது அப்போது மிகக் கொடிய தண்டனை. இயேசுவை கட்டிவைத்து சாட்டையால் அடிக்கின்றனர் பின்னர் தோளில் சிலுவையை சுமக்கச்சொல்லி கொல்கத்தா எனும் மலைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே சிலுவையில் அறைகின்றனர். இயேசு மரிக்கிறார்.

மேல்சொன்ன இந்த வரிகளைப் படிக்கும்போது உள்ளுக்குள் ஒரு காட்சிபோல (Visualization) தோன்றியிருக்கும். நானும் இயேசு சிலுவையில் தொங்குவதாக வடிக்கப்பட்டிருக்கும் சிருபங்கள் பலதையும் பார்த்திருக்கிறேன். அத்தனை கோரமானதாக அவை இருப்பதில்லை. பொதுவாக பார்த்தால் ஓரளவு பரிதாபம் வரும். இப்படி இயேசு தொங்கும் சிலுவைகள் ஒரு அடையாளமாகத்தான் அப்படி வைக்கப்படுகின்றனவே தவிர அவையே தத்ரூப மறுவடிப்புக்கள் அல்ல.

உண்மையில் சிலுவைப்பயணம் எப்படி இருந்திருக்கும்? தசைகள் கிழிய சாட்டையடிபட்டு, தெருத்தெருவாக விழுந்து எழுந்து, ஒரு ஆளைத் தாங்கும் பலம் கொண்ட மரங்கள் இரண்டினால் செய்யப்பட்ட சிலுவையை அடிபட்டத் தோளில் தசைகள் நையச் சுமந்து, தலையில் முள்ளினால் ஆக்கப்பட்டு இறுக்க பிணைக்கப்பட்ட முடியை, முகமெங்கும் இரத்தம் வழியத் தாங்கிக்கொண்டு, முள்குத்தினாலே இரத்தம் வழிந்தோடும் கைகளிலும் காலிலும் உலோக ஆணியால் துளைக்கப்பட்டு இறந்துபோன ஒருவரின் உடல் நம் கோவில் சிலுவையில் தொங்கும் உடல்போலவா இருக்கும்?

அது வேலிமீது விழுந்த துணிபோலக் கிழிந்திருக்கும். தசைகள் கிழிந்து தொங்கியிருக்கும், இரத்தம் வழிந்தோடும் புண்களும், ஆடையையும் தோலையும் இரத்தப் பிசினால் ஒன்றாக ஒட்டிவைக்கும் புண்களுமாய் இருந்திருக்கும். எச்சில் துப்பல்களும் ஏளனப் பேச்சுக்களும் நிறைந்த பயணமாயிருந்திருக்கும். உருக்குலைந்து போயிருக்கும் அந்த உடல்.

மெல் கிப்சனின் திரைப்படம் இந்த உண்மையைத்தான் எடுத்துரைக்கிறது.

என் அப்பா படத்தை பார்க்க இயலாமல் பாதியிலே வந்துவிட்டார். ஏன் எனக் கேட்டேன். 'இப்படியெல்லாம் நடந்திருக்குமா?' எனச் சொன்னார். நான் சொன்னேன்,"அப்புறம்? சிலுவை மரணம்னா சும்மாவா." இன்றைக்கு ஒரு திருடனை ஊரில் பிடித்துவைத்தால் என்ன செய்கிறோம்? எல்லாருமா செர்ந்து இரத்தம் வரும்வரைக்கும் அடிக்கிறோம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர். சமத்துவம், சகோதரத்துவம், மக்களாட்சி, நீதிமன்ரம் எனும் இன்றைய நிலமைகள் எல்லாம் துவக்கநிலைகளில் இருந்த காலங்களில் ஒருவனுக்கு சிலுவை மரணம் தருகிறார்கள் என்றால் சும்மா அழைத்துச் சென்று. வாங்க, இந்த சிலுவையில் படுங்க உங்களை அறைகிறோம் எனவா சொல்வார்கள்?

பைபிளில் சொல்லப்படாத எதுவும் 'இயேசுவின் பாடுகளில்' சொல்லப்படவில்லை என்பது நானறிந்தவரையில் உண்மை. அதுபோல யூதர்களுக்கு எதிராக பைபிளில் இல்லாத எதையும் மெல் கிப்சன் படத்தில் சொல்லவில்லை.

அப்ப பைபிள் யூதர்களுக்கு எதிரானதா? இயெசுவின் போதனைகள் மதத்தின் பெயரால் சட்டதிட்டங்கலைப் போட்டுக்கொண்டு தங்களைத் தாமே உயர்த்திக்கொண்டும், சடங்குகளின் பெயரில் மக்களை ஏமாற்றிக்கொண்டுமிருந்த மதக்குருக்களின் இருப்பை கேள்வி கேட்டது. அவர் இவர்களை 'விரியன் பாம்புக் குட்டிகளே', 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்' எனத் திட்டினார். ஒரு கட்டத்தில் கோவிலில் வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களை கயிறால் கட்டிய சாட்டையால் 'என் தந்தையின் இல்லத்தை வியாபாரக்கூடாரமாக்காதீர்கள்' எனக் கூறி விரட்டியடிக்கிறார்.

வெறும் சட்ங்குகளை வலியுறுத்தவில்லை இயேசு. புதிய மனித மனித உறவு மனித இறை உறவுக்கான போதனைகளை, படிப்பினைகளை உருவாக்கினார் இயேசு. பத்துக் கட்டளைகளையும் 'எல்லாவற்றிற்கும் மேலாக இறறவனன நேசி. தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசி' எனும் இரண்டு கட்டலலகளுக்குள் அடக்கினார் இயேசு. இதுதான் இயேசுவின் போதனையின சாரம்.

நோன்பிருக்கிறேன் என முகத்தை வாட்டமாக வைத்துக்கொண்டு வெளி அடையாளமாக கிழிந்த ஆடைகளை அணிந்துகொண்டும் திரிபவர்களை வெளிவேடக்காரர்கள் என்றார். நோன்பிருக்கும்போது அறையில் தனித்திருந்து இறைவனை வேண்டுதல் போதுமானது என்றார் இயேசு. வெளி அடையாளம் எதுவுமே தேவையில்லை என்றவர். இதெல்லாம் யூத 'ஆச்சார்யார்களுக்கு' ஆட்டத்தைத் தந்தது. இதுபோன்ற ஆட்டம்கண்டு அழிக்கத் துணிபவர்களை எல்லா கலாச்சாரங்களிலும் காண முடிகிறது. இப்படி யூத மதத்தின் அதிகார வர்கத்தில் இருந்துகொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்த யூத 'ஆச்சாரியார்களை'க் கேள்விகேட்டார் இயேசு அவர்களின் தூண்டுதலாலும் முழுமுயற்சியாலும் கொல்லப்பட்டார் இயேசு.

அரவிந்தன் ஒரு பைபிள் வாசகத்தை கையாளுகிறார்.

//நாடகங்களில் ரோமானிய அதிபன் போண்டியஸ் பைலேட் ஏசுவை கொல்ல மிகவும் தயங்குவான். யூதர்களும் அதன் ஆச்சாரியர்களும் அவனை கட்டாயப்படுத்துவர். அதன் விளைவாகவே அவன் அவனுக்கு இஷ்டமில்லாது இந்த அப்பாவியின் இரத்தத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதைக் காட்ட கை கழுவுவான். யூதர்களோ இந்த கொலைக்கான பழி எங்கள் மீதும் எங்கள் சந்ததியினர் மீதும் விழட்டும் என குரலெழுப்புவர். இது மத்தேயு எழுதியதாகக் கூறப்படும் 'பரிசுத்த நற்செய்தி 'யிலிருந்து (மத்தேயு-27:25). பின்னர் சிலுவைபாடுகள் தொடங்கும்.//

அரவிந்தன் இதை யூதர்கள் மீது விழுந்த இரத்த சாபம் என்கிறார். மீண்டும் வசனத்தை படியுங்கள். இது சாபமா? யார் பேசுவதுபோல அமைந்துள்ளது இது. இயேசுவோ அவரது சீடர்களோ சொல்வதைப்போலவா இல்லை யூதர்கள் சொல்வதுபோலவா?

தாங்களே தங்களை சபித்துக்கொண்டார்கள் என்கிறாரா அரவிந்தன்?

பைபிளில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இயேசு மரணத்தின் முன்பு சிலுவையிலிருந்த 'இவர்கள் செய்வதென்ன என்பதை உணராமல் செய்கிரார்கள் இவர்களை மன்னியும்' என வேண்டிக்கொள்வதாகச் சொல்கிறது பைபிள். இதன் உள் அர்த்தத்தத உணர்ந்து நடப்பவந்தான் உண்மையான கிறீத்துவன், மனிதன். இதை செய்யாத எவனுமே பாவி எனவும் நீங்கள் குற்றம் சாட்டியிருக்கும் அதே கத்தோலிக்க கிறீத்துவ சபை எனக்குச் சொல்லித் தந்திருக்கிறது.

மிச'நரி'கள் என நீங்கள் எல்லாம் சதா திட்டிக்கொண்டிருக்கும் கிறீத்துவ சாமியார்களைப்பற்றி என்ன குற்றச்சாட்டுக்களை வைக்கிறீர்களோ அத்தனையும் உங்களுக்கு எவ்வளவு பொருந்துகிறது என சுயசோதனை செய்யுங்கள் நண்பரே.

ஹிட்லர் காலத்தில் நடந்தது என்ன?

போப்தான் ஹிட்லரைத் தூண்டி விட்டார் என்பதுபோல அரவிந்தன் பேசுகிறார். ஆனால் அவரின் முந்தையக் கட்டுரை ஒன்றில் (ரெம்ப முந்தையது அல்ல 2 கட்டுரைக்கு முன்னால்) இவர் ஹிட்லரைப் பற்றிய குஜராத் பாடபுத்தகத்தில் இருப்பதைச் சொல்லும்போது ஹிட்லர் தன் மக்களின் பொருளாதார பலகீனத்தை பயன்படுத்திக் கொண்டார் என்பதை அவரே மேற்கோள் காட்டுகிறார். உண்மையும் அதுவே. யூதர்கள் தங்களுக்கே உரிய (நல்ல) குணமான வியாபாரத் திறமையைக் கொண்டு செல்வச் செழிப்பில் வாழ்ந்துவந்தனர். இதுகுறித்து எழுந்த 'அரசியல் சிந்தனையில் உதித்ததுதான் நாஜியிசம். இது கட்டுரையில் எங்கும் காணப்படவில்லை. நாஜியின் அடையாளமாக ஹிட்லர் தேர்ந்தெடுத்தது சிலுவையா அல்லது வேறெதுவுமா என்பது அரவிந்தன் நீலகண்டனுக்குத் தெரியாமலில்லை.

ஹிட்லர்காலத்தில் கத்தோலிக்க திருச்சபை செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது திருச்சபை. தப்பே செய்யலேன்னா எதுக்கு மன்னிப்பு? கத்தோலிக்க திருச்சபை செய்த தவறு என எல்லோரும் குறிப்பிடுவது திருச்சபை ஹிட்லரைக் கண்டுகொள்ளாமல் இருந்ததைத்தான். திருச்சபை யூதர்களுக்கெதிராக ஹிட்லரைத் தூண்டிவிட்டது என்பது யூதர்கள்கூட சொல்லாத கதை. ஹிட்லரின் உண்மை முகம் தெரிய வந்ததும் அவனை விட்டு விலகி நின்றது கத்தோலிக்கம். கத்தோலிக்கம் ஹிட்லர் காலத்து செயல்களுக்காக (சயலின்மைக்காக) மன்னிப்பபக் கோரவில்லை மாறாக தன் பெயரில் நிகழ்த்தப்பட்ட அனைத்து தவறுகளுக்ககவும்.

"It is appropriate that, as the Second Millennium of Christianity draws to a close, the Church should become more fully conscious of the sinfulness of her children, recalling all those times in history when they departed from the spirit of Christ and his Gospel and, instead of offering to the world the witness of a life inspired by the values of faith, indulged in ways of thinking and acting which were truly forms of counter-witness and scandal".

இதைப்போல ஒரு மன்னிப்பை. பகிரங்கமாகத் தன் தவறை ஒப்புக்கொண்டு வரலாற்றில் தன் பெயரில் நடந்த கொடுமமகளை நினைந்து கணக்கெடுத்து வெளிக்கொண்டுவரும் மற்றொரு மதத்தை அரவிந்தன் நீலகண்டன் சொல்வாரா?

பின்சாஸ் லபைட் எனப்படும் யூத மதகுரு தனது புத்தகத்தில் கத்தோலிக்க திருச்சபை போப் 12ஆம் பயஸ்'ன் கீழ் கிட்டத்தட்ட 8,60,000 யூதர்களின் உயிரைக் காப்பாற்றியிருப்பதாக எழுதியிருக்கிறார்.

//The Israeli consul, Pinchas E. Lapide, in his book, Three Popes and the Jews (New York: Hawthorn Books, Inc., 1967) critically examines Pope Pius XII. According to his research, the Catholic Church under Pius XII was instrumental in saving 860,000 Jews from Nazi death camps (p. 214).//

பயஸ் குரல் விடுத்திருந்தால் மேலும் பலரை காப்பாற்றியிருக்க இயலுமா? மேல்கூறிய யூதர் கூறுகிறார் ஹிட்லரின் concentration campல் இருந்த மக்கள்கூட போப் ஹிட்லருக்கு எதிராகப் பேசுவதை விரும்பவில்லை என்று. ஏன்? அது மேலும் பல கிறீத்துவர்களையும் கிறீத்துவ குருக்களையும் ஹிட்லர் கொல்ல வழிவகுத்திருக்கும்?

அப்ப ஹிட்லர் கிறீத்தவர்களையே கொன்றிருக்கிறானா? ஆமாங்க ஆமா. அரவிந்தனுக்குத் தெரிந்தும் இதை மறைத்திருப்பர் அல்லது எப்படி சிலர் ஹோலொகஸ்ட் என்பதே இல்லை என மறுப்பார்களோ அதுபோல மறுக்கலாம்(அவ்வளவு தூரம் சிந்திக்கத் தெரியாதவரல்ல என் நண்பர்). யூதர்களுக்கு உதவிய லட்சக்கணக்கான கிறீத்துவர்களை சிறையில் அடைத்தான் ஹிட்லர். அவர்களில் பலர் இறக்கவும் செய்தனர். இப்படி ஹிட்லரை எதிர்த்து உயிர்விட்டவர்களை புனிதர்கள் என அறிவித்திருக்கிறது திருச்சபை. ஹிட்லரை அல்ல.

டிசம்பர் 23, 1940 டைம் பத்திரிகை ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் கருத்தத வெளியிட்டது,
Being a lover of freedom, when the revolution came in Germany, I looked to the universities to defend it, knowing that they had always boasted of their devotion to the cause of truth; but, no, the universities immediately were silenced. Then I looked to the great editors of the newspapers whose flaming editorials in days gone by had proclaimed their love of freedom; but they, like the universities, were silenced in a few short weeks...

Only the Church stood squarely across the path of Hitler's campaign for suppressing truth. I never had any special interest in the Church before, but now I feel a great affection and admiration because the Church alone has had the courage and persistence to stand for intellectual truth and moral freedom. I am forced thus to confess that what I once despised I now praise unreservedly.

இதைச் சொன்னவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அதனாலென்ன? இவர் நீங்க நினைப்பதுபோல கிறீத்துவர் அல்லர். இவர் ஒரு யூத வம்சாவளியில் வந்த ஜெர்மெனிக்காரர்.

Dec, 23 1940 Time மற்றுமொருமுறை கத்தோலிக்க ப்ராட்டஸ்டாண்ட் 200,000 கிறீத்துவர்கள் எப்படி யூதர்களுக்கு உதவியதால் ஹிட்லரால் சிறையிலடைக்கப் பட்டார்கள் எனச் சொல்கிறது. அதே பதிப்பில் பக்கம் 40ல் மூனிக்(Munich) ஆர்ச் பிஷப் பூசையின்போது ஜெர்மனிய கிரீத்துவ மக்களுக்குச் சொன்ன போதனையை குறிப்பிடுகிறது.

"Let us not forget that we were saved not by German blood but by the blood of Christ!" நாம் நாஜி ரத்தத்தால் அல்ல இயேசுவின் ரத்தத்தாலேயே மீட்கப்பட்டோம் எனப் பொருள். பின்னர் இவரைக் கொல்ல நாஜிகள் செய்த முயற்சியிலிருந்து தப்பினார்.

போப் பயஸ் முழுவதுமாக அமைதிகாக்கவில்லை.

According to The New York Times editorial on December 25, 1941 (Late Day edition, p. 24):

The voice of Pius XII is a lonely voice in the silence and darkness enveloping Europe this Christmas... he is about the only ruler left on the Continent of Europe who dares to raise his voice at all... the Pope put himself squarely against Hitlerism... he left no doubt that the Nazi aims are also irreconcilable with his own conception of a Christian peace.

Also The New York Times editorial on December 25, 1942 (Late Day edition, p. 16) states:This Christmas more than ever he is a lonely voice crying out of the silence of a continent... Pope Pius expresses as passionately as any leader on our side the war aims of the struggle for freedom when he says that those who aim at building a new world must fight for free choice of government and religious order. They must refuse that the state should make of individuals a herd of whom the state disposes as if they were lifeless things.

கத்தோலிக்க திருச்சபை தன் நடுநிலமையை தக்கவைத்துக்கொண்டு யூதர்களுக்கு எத்தனை உதவிகளை மறைமுகமாகச் செய்ய இயலுமோ அதைச் செய்துகொண்டிருந்தது என்பதே உண்மை.

போப் பயசின் முயற்சிகளையும், இரண்டாம் உலகப் போரின்போது செய்த தொண்டுகளையும் முன்வைத்து ரோமின் ராபை 1944 கத்தோலிக்கராக மதம் மாறியதாகச் சொல்கிறது வரலாறு.

முடிவாக...

நண்பர் திரு அவர்கள் கீதையைக் குறைவாக எழுதிய பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தில் "மத புத்தகங்களைப் படித்து நல்லகாரியங்களைச் செய்பவனும் இருக்கிறான் கெட்டதைப் பிடித்துக்கொண்டு அல்லாடுகிறவனும் இருக்கிறான்" எனச் சொன்னேன். இது பைபிளுக்கும் பொருந்தும்.

பைபிளின் பெயரால் கிறீத்துவின் பெயரால் பல கொடுமைகள் நடந்துள்ளன. அன்று இயேசு எதை எதிர்த்தாரோ அதாகவே கிறீத்துவம் பல கட்டங்களில் வாழ்ந்து வந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. இவற்றை ஒரு முழு வரலாற்றுப் பார்வையில் கத்தோலிக்க கிறீத்துவம் இந்த தவறுகளை நிகழ்த்திய காலங்களையும் அப்போது இருந்த நியாயங்களளயும் சீர்தூக்கிப் பபர்த்தோமானால் இராமன் பின்னாலிருந்து அம்பு எய்ததன் தர்மம் எப்படி தர்மமோ அதுபோலவே இதுவும் எனப் புரியும். சில கொடுமைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதில் ஐயமில்லை.

கத்தோலிக்கம் ஒரு காலகட்டத்தில் உலகின் பல வலுவாய்ந்த அரசர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருந்தது. பல அரசியல் முடிவுகளையும் எடுத்துவந்த ஒரு அமைப்பாக இருந்தது. இந்த கால கட்டங்களில் பல அரசியல் தவறுகளையும் செய்துள்ளது.

வரலாற்றைக்கொண்டே நம் எதிர்காலத்தை முடிவு செய்வோமென்றால் நாமெல்லாம் ஆடையின்றித் திரியவேண்டியதுதான் போலும்.

திருச்சபை தன்னை திருத்திக்கொள்ள தன் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட பல தவறுகளையும் தேடிப்பிடித்து ஆராய்ந்து தவறுகளை தவிர்க்க தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறது. இதுபோன்றதொரு முயற்சி எத்தனை மதங்களில் சாத்தியம்?

இந்து மதம் கிறீத்துவத்தால் அழிக்கப்பட்டுவிடுமோ எனும் அரவிந்தனின் போன்றோரின் பயம் ஓரளவுக்கு நியாயமானது. ஆனால் இதை எதிர்கொள்ள இவர்கள் எடுத்துக்கொள்ளும் முயர்சிகள் மிசனரிகளின் முயற்சிகளைவிட வருந்தத்தக்கதாகவே தெரிகிறது.

கிறீத்துவத்தையும் இஸ்லாமையும் குறைசொல்ல எடுத்துக்கொள்ளும் முயற்சிகளில் சமபங்கு முயற்சியையாவது தன் மக்களை ஒன்றுபடுத்துவதிலும், இந்துமதத்தின் தத்துவக் கூறுகளை விளக்குவதிலும் தூக்கி நிறுத்துவதிலும் செயல் படுத்தலாம். நடராஜரின் Cosmic dance போன்ற கருத்துக்களள இந்துமதம் உண்மையில் எப்படிச் சொல்லியுள்ளது என்பதுபோன்ற கட்டுரைகளை வரையலாம். சாதியை ஒழிக்கவேண்டும் எனும் உயரிய கருத்தைச் சொல்லும் (தீவிர) இந்து நீங்கள். சாதியை தூக்கிப்பிடித்தவரைச் சாடினீர்கள். இதை எப்படிச் செய்யப்போகிறோம் எனச் சொல்லலாம். இன்னும் எத்தனையோ வழிகளில் உங்கள் பிரச்சாரங்களைச் செய்யலாம். கிறீத்துவம் போர்களாலும் ஏமாற்று வேலைகளாலும் வளர்க்கப்பட்டிருந்தாலும் அது அழியாமல் நிலைத்திருப்பதற்கான ஒரே காரணம் அதன் அடிப்படியில் அமமந்திருக்கும் கிறீத்துவின் போதனைகள், மற்றும் இந்தப் போதனைகளை தொடர்ந்து போதிக்கும் கட்டுக்கோப்பு. இந்தக் கட்டுக்கோப்பை உருவாக்காதவரை அரைகுறை இந்துக்கள் மதம் மாறிக்கொண்டேதான் இருப்பார்கள்.

நூற்றுக்கணக்கான வருடங்களாயிருந்த இஸ்லாமியரின் ஆட்சியில், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இல்லாத மதவாதா தேசியம் இன்றைக்கு மக்களாட்சியில் தென்படுகிறதென்பது வருந்தத்தக்கதே.

தன் மதத்தை பலரும் குறை சொல்லும்போது அடுத்தமதமும் இப்படிக் குறைகளள செய்திருக்கிறது என்ச் சொல்வதன்மூலம் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கிறீர்கள் இல்லையா?

'புற்றில் வாழ் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்..' எனும் திருவாசகப் பாடல் ஈசனை நம்பாதவர்களை மூடர்கள் எனப் பழிக்கிறது. இந்தத் திருவாசகம் இசையை கத்தோலிக்க திருச்சபை வெளியிடுகிறது. (தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது). எதற்காக? நல்லிணக்கம் வரவேண்டும் என்பதற்கான முயற்சிகளில்லையா இவை?.

அந்தப் பாடலில் ஈசனைப் புகழ அன்றி மற்றவரை இகழ அவர் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ள எத்தனை புத்தகங்கள் நாம் படிக்கவேண்டும்? 'முருகா உன்னையல்லால் வேறு தெய்வமில்லை...' எனப்பாடினால் அவர் தெய்வ நிந்தனையாளரா?

நீங்கள் இந்து மதம் பற்றி எழுதும் கட்டுரைகளை தவறாது படித்து பயன்பெறும் வாசகன். இரசிகன் எனவே சொல்லுவேன். ஆனால் வரலாற்றை ஒருபக்கமாகப் பார்த்து பதிவிடுவதற்குப்பதிலாய், அதுவும் சில கடுமையான வார்த்தைகளோடு, இந்துமதத்தைப் பற்றிய புதைந்துகிடக்கும் உண்மைகளை, அவை எனக்குத் தெரிந்த அளவுக்குக் கூடத் தெரியாமல் இருக்கிற இந்துக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

பிரிந்துகிடக்க ஏராளம் காரணங்கள் இருக்கின்றன ஆனால் சேர்ந்திருக்க நாம் மனிதர்கள் எனும் ஒரே காரணம்தான் இருக்கின்றது.

இனியும் இதுபோல எழுதிக்கொண்டிருக்கப்போவதில்லை(கைவலிக்குது :) ). இதுபோன்ற விஷயங்களை எழுதுவதில் எனக்கு அதிகம் விருப்பமில்லை. கடவுள், ஒரு தனிமனித அனுபவமாயிருக்க வேண்டும். மதங்கள் வழிகாட்டிகளே தவிர அவையே நம் பயணத்தின் இலக்கு அல்ல. எல்லா மதங்களின் வரலாறுகளும் இரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை உங்களைப்போலவே நானும் உணர்ந்திருக்கிறேன்.

எதை நீ கொண்டுவந்தாய் இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய் வீணாவதற்கு?

இது நம் மத அடையாளங்களுக்கும் பொருந்தும். என்னை வழிநடத்தும் தத்துவங்களில் இதுவும் ஒன்று. (Thanks to De Melo: you know what I mean).

(அவசரமாய் எழுதியது பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்; யார் மனதையும் புண்படுத்த அல்ல சில சிந்தனைகளைத் தூண்டவே இந்தப் பதிவு. நானும் அரவிந்த நீலகண்டனும் சண்டைக்காரர்கள் என நினைத்து நண்பரை கேலிசெய்தோ தனிப்பட்டமுறையில் தாக்கி எதையும் எழுதினால் அதை வெளியிடப் போவதில்லை. நல்ல கருத்துக்களை மட்டும் முன்வைக்கவும். முன்வைக்கலன்னாலும் பரவாயில்ல.)

தன் நண்பருக்காக உயிரை விடுவதைவிட மேலான அன்பு எதுவுமில்லை - இயேசு

Tuesday, February 06, 2007

இயேசு சொன்ன கதைகள் - 4

கேளுங்கள் தரப்படும்

கடவுளுக்கும் மனிதனுக்கும் உண்டான உறவின் முக்கியக் கூறாக இருப்பது வேண்டுதல். கேட்டதைக் கொடுப்பவனாய், கையேந்துபவர்களுக்கு இல்லை எனச் சொல்லாதவனாய் கடவுள் எண்ணப்படுகிறார்.

மனித உதவிகள் மறுக்கப்படும்போது கடவுளைத் தேடுவது மனித இயல்பு.
இயேசு தன் சீடர்களுக்கு ஒரு செபத்தை கற்பித்தார். 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. உமது பெயர் போற்றப்படுவதாக உமது அரசு வருக. உமது எண்ணம் விண்ணகத்தில் செயல்படுவதுபோல பூவுலகிலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களை பொறுத்தருளும். சோதனையில் எம்மை விழ விடாதெயும். தீமையினின்று எங்களை விடுவித்தருளும். ஏனெனில் அரசு வல்லமையும் மாட்சிமையும் என்றென்றும் உமதே.'

மிகவும் எளிமையான அதெவேளை இறைவனைத் தந்தையென உரிமையோடு அழைத்து வேண்டும் செபம் இது.

செபங்கள் கேட்கப்படுகின்றனவா? இதை நிருபித்தால் கடவுளையும் நிருபிக்கலாமே? எனும் கேள்விகள் எழுகின்றன. அதிசயங்கள் பலவும் எல்லா காலகட்டங்களிலும், எல்லா மதங்களிலும், வேண்டுதல்களின் பலனாக விளைவதாகச் சொல்லப்படுகின்றன. கடவுள் எப்படி நம்பிக்கைக்குட்பட்டவரோ அதேபோல அற்புதங்களும் அறியப்படுகின்றன.

கடவுள் உதவுவார் எனும் நம்பிக்கை தன்நம்பிக்கைக்கு வலுசேர்ப்பதாய் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். சோதனைக் காலங்களில், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வேண்டுதல்களளே துணை. நம்பிக்கையே கைத்தடி.

வேண்டுதலின் உளவியல் கூறுகளை ஆராய்ந்தால் அதன் மனித பலன்கள் பலவாக இருக்கும். சோதனை மிகும் வேளையில் அது எப்படியாவது விலகும் எனும் நம்பிக்கை ஊக்கம்தருமே தவிற வேறென்ன?

மீண்டும் மீண்டும் செபிக்கும்போது ஒரு கவலைகுறித்தான (கவலை தவிர்த்த) மாற்றுச் சிந்தனை நம்மில் பிறக்கிறது.

ஒரு ஊரில் ஒரு நீதிபதி இருந்தான். கடவுளை அஞ்சாதவன்; மனிதரை மதிக்காதவன். அந்த ஊரில் இருந்த ஒரு விதவை நீதி கேட்டு அவளிடம் வருவது வழக்கம். பலமுறை வந்தும் அந்த நீதிபதி மனம் கசியவில்லை. இறுதியாய் அந்த நீதிபதி 'நான் கடவுளுக்கு அஞ்சாதவனாயும் மனிதரைப் பற்றி கவலையற்றவனாயும் இருந்தபோதும் இவள் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்வதால் இவளுக்கு நீதி வழங்குவேன்.' என்றான்.

'அந்தப் பண்பற்ற நீதிபதியைப் பாருங்கள். இவனைவிட விரைவாக இரவு பகலாய் தன்னை வேண்டும் மக்களின் வேண்டுதலைக் கடவுள் தரமாட்டாரா?' என்றார் இயேசு.

நன்றி: தமிழோவியம்

Monday, January 29, 2007

இயேசு சொன்ன கதைகள் - 3

மருத்துவன் நோயுற்றவனுக்கேயன்றி நலமாயுள்ளவனுக்கல்ல." இயேசு தன்னைப்பற்றி கூறிய உவமை இது."பாவிகளை மீட்கவே வந்தேன்." என்பது அவரது பொன்மொழி. கடவுள் பாவிகளையே தேடுகிறார், நீதிமான்களையல்ல என வெளிப்படையாகச் சொன்னவர் இயேசு.

பாவி ஒருவனின் மனதிருத்தம் எத்தகையது?

"உங்களில் யார் ஒருவன் தன் நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போக, தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு தொலைந்த ஆட்டை தேடிப்போகாமைலிருப்பான்? அதை அவன் கண்டதும் குதூகுலத்துடன் தன் தோள்களில் போட்டுக்கொள்வான். வீட்டுக்கு வந்ததும் தன் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,"என்னோடு கொண்டாடுங்கள், தொலைந்துபோன என் ஆட்டை கண்டெடுத்தேன்" என்பான். விண்ணுலகம், மனம் திருந்திய ஒரு பாவியின் நிமித்தம் அடையும் மகிழ்ச்சி, தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பற்றிய மகிழ்ச்சியைவிட அதிகமானது"

இயேசு தன்னை 'நல்ல மேய்ப்பன்' என்று சொல்வது இதனால்தான். இயேசுவை மேய்ப்பனாக சித்தரிக்கும் படங்கள் இந்தக்கருத்தையே சொல்கின்றன.

மேய்ப்பன் கதைக்குத் தொடர்ச்சியாக இன்னுமொரு கதை சொல்கிறார் இயேசு,"எந்தப் பெண் தன் பத்து வெள்ளிக்காசுகளில் ஒன்று காணாமல் போக, விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதை தேடாமலிருப்பாள்? அவள் அதை கண்டபோது அவள் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,"என்னோடு மகிழுங்கள், நான் தொலைத்ததை கண்டெடுத்தேன்" என்பாள். மனம் திருந்தும் பாவியை முன்னிட்டு கடவுளின் தூதர்கள் மகிழ்வார்கள்" என்றார்.

ஒரு வெள்ளிக் காசு ஒரு நாள் ஊதியத்துக்கு சமமானதாம்.

சாகக் கொடுத்தாலும் போகக் கொடுக்கக்கூடாதென்பார்கள். அண்மையில் அரட்டை அரங்கம் சிறுவயதில் தொலைந்துபோன ஒரு சிறுமியை அவளின் குடும்பத்தாரோடு சேர்த்துவைத்த நிகழ்ச்சியைக் கண்டேன். அந்தக் குடும்பம் அவளை கட்டித் தழுவி கொண்டாடியது. அரட்டை அரங்கக் குழுவின் முகத்தில் ஒரு அசாதரணப் பெருமிதமும் மகிழ்ச்சியும். சொந்தக்காரர்களும் பக்கத்துவீட்டுக்காரர்கலும் சந்தோஷித்தனர், பார்வையாளர்களின் கண்களில் ஆனந்தத்துளிகள்.

மனம் திருந்தி வாழும் மனிதன் பொருட்டு கடவுளும் இத்தகைய மகிழ்ச்சிகொள்கிறார்.


நன்றி: தமிழோவியம்

Tuesday, January 16, 2007

இயேசு சொன்ன கதைகள் - 2

முகம் தெரியாத அன்னியருக்கு உதவுவது தெய்வீகமான அனுபவம். சகமனிதனுக்கு உதவுவது நம் கடமையே என்கிற போதும், இயல்பாகவே பலனை எதிர்பாராமல் நாம் எதையும் செய்ய விளைவதில்லை.

நான் சென்னை லயோலாவில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டுவிழாவில், ஒரு மாணவர் சிறப்பு பாராட்டை பெற்றார். அவர் செய்ததென்ன? இவர் சர்ச் பார்க் பள்ளியின் முன் பஸ்ஸுக்கு நின்றுகொண்டிருக்கும்போது அங்கே உடலெங்கும் சீழ்வடியும் புண்களோடு ஒருவர் அனாதையாகக் கிடந்தார். அவரைப் பார்த்து எல்லோரும் முகம் சுளித்துக்கொண்டு, எங்கே அவன் உடலில்லிருந்து சீழும், கிருமியும், வீச்சமும் தங்கள் ஆடைகளை ஒட்டிக்கொள்ளுமோ என ஒதுங்கி நின்றபோது இவன் துணிந்து தன் கடமையை செய்தான். அந்த மனிதரை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு ரிக்ஷாவில் வைத்து எடுத்துச் சென்று சேர்த்தான். இந்து நாளிதழில் இந்த செய்தி வந்தபோது கல்லூரியே பெருமை கொண்டது.

"அயலானை அன்பு செய்." இயேசு சொன்ன பொன்மொழிகளில் ஒன்று. ஆங்கில மொழிபெயர்ப்பில் Love your neighbour எனத் தரப்பட்டுள்ளது. தமிழில் அயலான் என்பது இன்னும் தொலைவில் உள்ளவரைக் குறிப்பதுபோலுள்ளது.

ஒருநாள் ஒரு சட்ட வல்லுனர் இயேசுவிடம் கேட்டார்,"அயலானை அன்புசெய் என்கிறீரே யார் என் அயலான்?(Who is my neighbour?)"

இயேசு ஒரு கதையைச் சொன்னார்.
"ஒருவன் எருசலேமிலிருந்து எரிக்கோவிற்கு பயணித்தான். அவனை கள்வர் சூழ்ந்தனர். அடித்து, குற்றுயிராய் அவனை விட்டுச் சென்றனர்.

தற்செயலாய் ஒரு சாமியார் அங்கே வந்தார், இவனைக் கண்டார், ஒதுங்கிச் சென்றார்.
மத குரு ஒருவர் வந்தார் அவரும் இவனைக் கண்டு ஒதுங்கி சென்றார்.
சமாரியன் ஒருவன் வந்தான். இவன்மேல் பரிவு கொண்டான். அவனது காயங்களுக்கு கட்டுப்போட்டு மருந்திட்டான். தன் கழுதையின் மேல் காயம்பட்டவனை ஏற்றி விடுதி ஒன்றிற்கு அழைத்து வந்து கவனித்தான். மறுநாள் விடுதிக் காப்பாளனிடம் கொஞ்சம் காசைத் தந்து 'இவனை கவனித்துக்கொள்; நீ அதிகமாய் இவன்பொருட்டு என்ன செலவளித்தாலும் நான் மீண்டும் வரும்போது திருப்பித் தருவேன்' என்றான்.

இந்த மூவரில் யார் கழ்வரால் தாக்கப்பட்டவனுக்கு நல்ல அயலானாய் செயல் பட்டார்?" எனக் கேட்டார் இயேசு.

நல்ல சமாரியன் கதை(The Good Samritan) என புகழ்பெற்ற இந்தக் கதை சொல்லும் உண்மையை விளக்கத்தேவையில்லை.

'பலனை எதிர்பாராதே' என கீதை சொல்வதும் இதைத்தானோ ?

நன்றி: தமிழோவியம்

Friday, January 12, 2007

இயேசு சொன்ன கதைகள் - 1

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்

இயேசு என்னும் வரலாற்று நாயகனை பல கோணங்களில் தரிசிக்கலாம். குருவாய், தியாகியாய், புரட்சிக்காரனாய், சீரமைப்பாளராய், மக்கள் நாயகனாய், கடவுளாய், அதிசயங்கள் புரிந்த ஒரு சாதரண மனிதனாய் இன்னும் பலவாய் காட்சிதருகிறார் இயேசு.

தெய்வீகக் கூறுகளை விலக்கிவிட்டு இயேசுவைப் பார்ப்பவர்கள் குறைவே. ஒரு போதகராக அவர் விட்டுச்சென்ற கருத்துக்கள் மத போதனைகளாக்கப்பட்டுவிட்ட நிலையில், அவரின் வாழ்வியல் கருத்துக்கள் பலரையும் சென்றடையவில்லை என்பது சற்றே சோகமான உண்மை. இந்தப் போதனைகள் எல்லோருக்கும் போய் சேர்ந்திருந்தால் இன்னும் சில காந்திகள் மலர்ந்திருப்பார்களோ என்னவோ?

இந்த தொடரின் மூலம் இயேசு சொன்ன சில உவமைகளை, உவமைக்கதைகளை சுவைக்கத் தருவதில் மகிழ்ச்சி.

ஒரு கருத்தை பக்கம் பக்கமாய் எழுதிவைப்பதைவிட, பலமணி நேரங்கள் விவாதிப்பதைவிட ஒரு சின்னக் கதையின் மூலம் எளிதாய் சொல்லிவிட முடியும். ஜென் கதைகளானாலும், பஞ்சதந்திரக் கதைகளானாலும், முல்லாவின் குறும்புக்கதைகளாயினும், தெனாலிராமனின் புத்திக் கதைகளாயினும் சில வரிகளுக்குள்ளேயே மாபெரும் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எளிய மனத்தோருக்கு வலிய கருத்துக்களை எடுத்துச் செல்ல ஏற்ற சாதனங்கள் கதைகள்.

இறை வார்த்தையை அல்லது நல்ல கருத்துக்களை கேட்பதுபற்றி இயேசு ஒரு கதை சொல்கிறார்.

விதைப்பவன் ஒருவன் விதைக்கச் செல்கிறான். அவன் விதைக்கும் விதைகளில் சில பாதையோரம் வீழ்ந்தன பறவைகள் அவற்றை தின்றுவிட்டன. சில பாறைகள் நிறைந்த நிலத்தின்மேல் விழுந்தன, அங்கே மண் அதிகம் இல்லாததால் அவை எளிதில் முளைவிட்டன ஆயினும் சூரியன் வந்ததும் வேரூன்றியில்லாததால் அவை சுட்டெரிக்கப்பட்டு உதிர்ந்தன. சில முட்புதர்களின் நடுவே வீழ்ந்தன. அவை வளர்ந்ததும் முட் புதர்களால் நெரிக்கப்பட்டு அழிந்தன. இன்னும் சில நல்ல நிலத்தில் விழுந்தன, பயிர்களாகி நூறு, அறுபது அல்லது முப்பது மடங்கு பலனளித்தன1.

இந்தக் கதையை சொல்லிவிட்டு இயேசு "கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.

மிகவும் எளிமையான ஒரு கதை. இதை இயேசுவே விளக்குகிறார்.

விதைப்பவன் விதைத்த விதைகள் இறைவார்த்தைகள். பாதையோரம் விழுந்த விதைகளை பறவைகள் வந்து தின்றதைப்போல சிலர் மனதில் விழும் வார்த்தைகளை சாத்தான் வந்து அள்ளிப்போகிறது. பாறை நிலத்தில் விழுந்தவையோ இறைவார்த்தைகளைக் கேட்டு தற்காலிகமாக மனமகிழ்ந்து செல்பவரைப்போல, அங்கே அந்த விதைகள் சொற்ப காலமே வாழ்கின்றன. முட்புதர்களில் வீழ்ந்த விதைகளைப்போல சிலர் மனதில் இறைவார்த்தைகள் முளைவிட்டு செடியாகின்றன ஆனால் கொஞ்ச நாட்களிலேயே பணம், சுகம் என உலகத் தேடல்கள் செடிகளை நெரிப்பதால் அவை பயிராவதில்லை. நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ கடவுளின் வார்த்தையை கேட்டு மனதில் சுமப்பவர்களைப்போல. பயிராகி பலனளிப்பவர்கள் இவர்களே.

கேட்பது அல்லது கற்பது பற்றிய எனக்குப் பிடித்த ஜென் கதை.

ஒரு குருவிடம் ஒருவன் போய் "எனக்கு உலகில் எல்லாம் தெரியும் உங்களுக்குத் தெரிந்ததையும் எனக்கு கற்றுத் தாருங்கள்", என்றான். குருவோ, "முதலில் தேனீர் அருந்துவோம் என்றார்". தேனீர் வந்ததும் கோப்பைகளை நிரப்ப ஆரம்பித்தார் குரு. கோப்பை நிறைந்த பின்னும் ஊற்றிக்கொண்டேயிருந்தார். வந்தவன் குழம்பினான். இன்னும் ஊற்றிக்கொண்டேயிருந்தார் குரு. வந்தவன்,"என்ன செய்கிறீர் அந்தக் கோப்பை நிறைந்திருக்கிறது இனியும் ஊற்றினால் கீழே கொட்டும் என்பது உமக்குத் தெரியாதா?" என்றான். குருவோ,"போய் உன்னை காலி செய்து கொண்டு வா. பிறகே என்னால் உன்னில் ஊற்ற இயலும்." என்றார்.

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்".

நன்றி:
தமிழோவியம்

Tuesday, December 26, 2006

(விண்) நட்சத்திரம்

விண்ணில் தோன்றியது வால் நட்சத்திரம்
மண்ணில் விண்ணவனே நட்சத்திரம் - மன்னன்
உறங்க இடமில்லா சத்திரம்
உலகில் இதுவன்றோ விசித்திரம்?
மாட்டுதொழுவம் மாளிகையானது
ஆடும் கோழியும் தோழர்களாயினர்
கந்தல் ஆடைக்கு கண்ணியம் வந்தது
கொசுவின் பாடலே தேவகானமாம்.

செவியுள்ளோர்க்கு விண் பாடல் கேட்டது
'விண்ணகத்தில் இறைவன் போற்றப் படுக
மண்ணகத்தில் நல்மனத்தோர் அமைதிபெறுக'
இதுவே இவர் பிறப்பின் தத்துவமானது.
இடையர்களுக்குத்தான் கிடைத்தது முதல் செய்தி
இறைவன் பிறந்துள்ளான் என்கிற புது செய்தி - இருள்
விலகிடும் என்பதே அந்நற்செய்தி.

ஏரோது அரசன் கொல்லத் தேடினான்
ஏழைமக்கள் காணத்தேடினர்
கிழக்கின் அரசர் மூவர் வந்தனர்
கிடையில் குழந்தையை வணங்கிநின்றனர்.

மாளிகை பலவும் உன் பேரில் இருக்குது - எங்கள்
மனங்கள் கூட வெறுமையாய் கிடக்குது
மாட்டுத் தொழுவமே போதுமென்றாலும்
அதைவிடக் கீழாய் பலர் வீடும் இருக்குது
இன்னும் ஒருமுறை இங்கே வந்திடு
குடிலோ, குடிசையோ எங்களில் தங்கிடு
அன்பே! அன்பு, அன்புதான் என்றிடு - எம்மில்
ஆலயம் வேண்டாம் அன்பே வேண்டிடு.


மீண்டும் ஒரு முறை இனிய கிறீஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

Thursday, November 23, 2006

பகுத்தறிவாளனுக்கான பதிவு

வலைப்பதிவுகள் பக்கம் வந்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது. யாரும் நம்மள மிஸ் பண்ணமாதிரி தெரியல. :)

வேலைப் பழு அதிகமாகிவிட்டதாலும், வீட்டில் புதிதாய் சன் டி.வி இணைப்பு வந்துள்ளதாலும் அலுவலகத்தில் தமிழ்மணத் திரட்டியை ப்ராக்ஸி தடுத்துவிட்டதாலும் ஒரு சிறிய இடைவெளி.
பகுத்தறிவாளன் எனும் நம்ம ஊர்க்காரர் ஒருவர் (இவுங்க நம்ம ஊர்லையும் இருக்காங்களா?) பைபிளிலிருந்து சிலக் கேள்விகளை முன்வைத்துள்ளார். அவருக்குப் பின்னூட்டம் இடும்போது பதிவாகவே போட்டுவிடலாம் என நினத்தேன். இதோ அந்தப் பதிவு.

பகுத்தறிவாளன். உங்கள் வாதங்களை படித்தேன். அவனே இவனே எனத் திட்டாமல் உங்கள் வாதங்களை நேர்மையாய் எடுத்துவைக்கிறீர்கள் அதற்கு வாழ்த்துக்கள்.

நீங்க கடவுள் மறுப்பளர் என்பதில் சந்தோஷம். கடவுள் மறுப்பும் ஒருவகை நம்பிக்கைதான். கடவுள் இல்லை என்கிற நம்பிக்கை. அது ஒரு நிலைப்பாடு. அதேபோல கடவுளை நம்புகிறவர்கள் கடவுள் இருக்கிறார் எனும் நிலைப்பாட்டில், நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

பைபிளை அல்ல எந்த ஒரு புனிதநூலையும், மத நூலையும் 'நம்பிக்கையோடு' படித்து பொருள் கொள்ளும்போதுதான் அர்த்தம் புலப்படும். கடவுள் இல்லை என நினைக்கும் ஒருவருக்கு கடவுள் பற்றிய புத்தகம் தாறுமாறானதாகவும், கட்டுக்கதைகளாகவும், ஏமாற்றுவேலையாகவும் மட்டுமே தெரியும். அடிப்படையில் நீங்கள் மறுப்புடன் படிக்கிறீர்கள். உங்கள் பார்வை குறைகண்டுபிடிப்பதற்கானது. எந்தவித விளக்கமும் உங்களை சமாதானப்படுத்தப் போவதில்லை எனும் நிலைப்பாடுடனேயே உங்களுக்கு விளக்கம் அளிக்கமுடியும்.

அதேசமயம் ஒரு நம்பிக்கையாளனால் எந்த ஒரு முட்டாள்தனமான வாசகத்துக்கும், கருத்துக்கும் மிகச் சிறந்ததாக(அவன் கருதும்) ஒரு விளக்கம் அளிக்கமுடியும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இதனால்தான் மதம் பற்றிய எந்த விவாதமும் ஒரு முடிவுக்கு வருவதில்லை. அதனால் விவாதங்களே கூடாதென்றில்லை.

முதலில் உங்களுக்கு ஒரு வருத்தமான சேதி. நீங்கள் கேட்டிருக்கும் எந்தக் கேள்வியும் புதிதாய் கேட்கப்பட்டவை அல்ல. கிறீத்துவத்தின் வரலாறு அத்தனைவிதமான எதிர்ப்புகளையும் கடந்து வந்திருக்கிறது, மற்ற எல்லா உலகளாவிய மதங்களையும்போலவே. உங்களின் பழையக் கேள்விகளுக்கு பழைய பதில்கள் ஏற்கனவே தரப்பட்டுள்ளன. இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டிய சில சிந்தனைகளை முன்வைக்கிறேன்.

இனி உங்கள் கேள்விகளுக்கான பதில்..

கிறித்துவர்கள் ஏன் விருத்தச் சேதனம் (circumcision) செய்துகொள்வதில்லை?
பழைய ஏற்பாட்டில் கடவுள் மக்களோடு பல உடன்படிக்கைகள் செய்துள்ளார் அதற்காக பல அடையாளங்களையும் நிறுவியிருக்கிறார்(என பைபிள் சொல்கிறது என்று படிக்கவும்). நோவாவோடு செய்த உடன்படிக்கையின் அடையாளமாய் வானவில் நிறுவப்பட்டது. ஆபிரகாமையும் அதன் சந்ததியையும் விருத்தச் சேதனம் செய்யச் சொல்கிறார்.

புதிய ஏற்பாட்டில் இயேசு வந்து ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அது பழைய உடன்படிக்கைகளுக்கேல்லாம் மேலானதாயிருக்கிறது. எனவே பழைய முறைகள் விடப்பட்டிருக்கின்றன.

முதல் கிறித்துவக் குழுமங்களை வழிகாட்டிய புனித பால் (சின்னப்பர்), பீட்டர் விருத்த சேதனத்தை ஒரு கட்டத்தில் மறுத்துள்ளார்கள். அதற்கான காரணங்களும் புதிய ஏற்பாட்டில் உள்ளன. நீங்கள் பைபிளை முழுவதாகப் படிப்பீர்கள் எனும் நம்பிக்கையில் அதை படித்து தெரிந்து கொள்ளும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

கிறீத்துவம் யூதர்களைவிட யூதரல்லாதவரிடம் எளிதில் விலைபோனது. பல பெரியவர்கள் (குழந்தைகளல்லாதவர்கள்) கிறீத்துவர்களானார்கள். அவர்களுக்கு விருத்த சேதனம் செய்வது கடினமாக இருந்தது போன்ற சில நடைமுரை பிரச்சனைகளை சரிசெய்யவும் இது விலக்கப்பட்டிருக்கலாம்.

ஏற்கனவே ஒருவர் அளித்திருக்கும் பதில் இங்கே.

இதுபோன்ற கேள்விகளை ASK.COM போன்ற தளங்களில் கேட்டால் இன்னும் விரிவாக முழுமையான பதில்கள் கிடைக்கும். இல்லை வலைப்பதிவில்தான் போட்டு கேட்பேன் என அடம் பிடித்தீர்களென்றால் தொடருங்கள். முடிந்தவரைக்கும் பதில் சொல்லலாம்.

உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதில் என்ன சங்கடம் என்றால் ஏதாவது கேள்விக்கு பதில் சொல்லவில்லையென்றால் அந்தக் கேள்வியில் இருப்பது ஒரு மாபெரும் உண்மையாகப் பார்க்கப்படும். 'ஆகா மடக்கிட்டான் பாருயா'ன்னு சிலர் சொல்லலாம்.

கேள்விகேட்க்க இத்தனை சிரமப்படுகிற நீங்கள் இணையத்தில் தேடினால் இன்னும் சிறப்பான பைபிளுக்கு எதிரான கேள்விகள் கிடைக்கும் (எளிதாய் பதியலாம்). இன்னும் கொஞ்சம் தேடினால் அதற்கான விடைகளும் கிடைக்கும்(கேள்விகளை பதிக்காமல் போகலாம்).

கேள்விகளை கேட்குமுன் சில கருத்துக்களை மனதில் கொள்ளவும் அல்லது மற்ற கேள்விகளுக்கான குறுகிய பதில்.

கிறுத்துவம் இயேசுவை கடவுளாகப் பார்க்கிறது தூதராக அல்ல. அவர் இறைதூதரோ, பூசாரியோ அல்ல. மெல்கிசதேக் ஒரு பூசாரி(high priest). மிகப்பெரியவர். நீங்க சொன்ன எபிரேயர் அதிகாரத்தை தொடர்ந்து படித்தால் புனித சின்னப்பர் மெல்கிசதேக்குக்கும் கிறீத்துவுக்கும் என்ன வேறுபாடு என்பதை நேரடியாக (உங்கள் கேள்விக்கான பதிலாகவே) எழுதியிருக்கிறார். தொடர்ந்து படியுங்கள்.

'தமத்திருத்துவம்' (The Holy Trinity) கிறீத்துவ கருத்தாக்கங்களில் ஒன்று அதாவது கடவுள் ஒருவரே ஆனால் மூவர். இது எப்டி இருக்கு?

ஒரே கடவுள் பிதா சுதன் தூய ஆவி எனும் மூன்று நிலைகளில் செயல்படும் ஒரே கடவுளை கிறீத்துவர்கள் நம்புகிறார்கள். எனவே சுதனாகிய இயேசு தந்தையாகிய கடவுளை குறிக்கும்போது தன்னையே குறிக்கிறார். தமத்திரித்துவம் என்பது ஒரு பெரிய கருத்தாக்கம். பக்கம் பக்கமாய் இதுபற்றி எழுதியிருக்கிறார்கள். (என்பதால் மட்டுமே அதுதான் உண்மை எனச் சொல்லவில்லை) .

மேலோட்டமாக வெறும் வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு ஆயிரம் கேள்வி கேட்கலாம்.

முன்பு சொன்னபடி, கண்ணதாசனின் வார்த்தையில், "நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா".

Friday, October 06, 2006

ஆதாம், ஏவள் மற்றும் சில குரங்குகள்

"மனிதன் எங்கிருந்து வந்தான்?" என்பது ஒரு அசாதரணக் கேள்வி. எல்லாக் காலத்திலுமே கேட்கப்பட்டுள்ள முக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று. இதன் மறுபக்கம் "மனிதன் எங்கே போகப் போகிறான்?" என்பது. இந்த இரண்டிற்கும் விடைகாண்பதற்கு அறிவியலும் ஆன்மீகமும் இரு வழிகளாய் திகழ்ந்திருக்கின்றன. திகழ்கின்றன.

இன்னும் முழுமையான விடைகள் கிடைக்காத பட்சத்தில் பல விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றதைக் காணலாம்.

ஆன்மீகப் பதில்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே எடுத்துக்கொள்ளப் படவேண்டும். நம்பிக்கை வைத்து எந்தக் கதையையும் உண்மை எனலாம். ஆனால் பரிணாமக் கொள்கை மற்றும் அது தொடர்ந்து/சார்ந்து வளர்ந்து வரும் அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் சில கருத்துக்களைத் தந்துள்ளது. தந்துகொண்டிருக்கிறது.

இது முழுமை பெற்ற அறிவியல் அல்ல என்பவர்களுக்கு ஆன்மீக ரீதியிலான கதைகள் அறிவியலே அல்ல என்பதைப் புரிந்துகொள்வதில் என்னக் கவலை எனத் தெரியவில்லை.

படைத்தலின் அறிவியலை (Creation Scince) சிலர் ஆராய்ந்து வருகின்றனர். இது எப்படி என்றால் கடவுள் உலகைப் படைத்தார் என்பதை அறிவியல் பூர்வமாக நிருபிக்கும் முயற்சி.

Intelligent Design என்று ஒரு கொள்கை அமெரிக்காவில் பிரபலம். அதாவது அறிவியல், உயிரினங்கள் தாமாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தன எனச்சொல்லுவதை மறுத்து கடவுள்தான் இந்த மாற்றத்தை நிகழ்த்தினார் எனச் சொல்வது. இயற்கை இத்தனை குழப்பமாக, முற்றும் அதனை அறிய முடியா வண்ணம் வடிவமைக்கப் பட்டிருப்பது ஏதோ ஒரு 'அறிவு'பூர்வமான மூலத்தினாலேயே. என்பது போன்ற வாதங்களை இவர்கள் வைக்கிறார்கள். Natural Theology என்பது இதன் முன்னோடி எனச் சொல்லலாம்.

பக்கம் பக்கமாய் எழுதப் பட்டிருக்கும் Intelligent Design மற்றும் Natural Theology புத்தகங்களில் அறிவியல் சான்றுகளை விட அனுமானங்களும், சாதுர்யமான ஒப்பீடுகளுமே தரப் பட்டுள்ளன.

ஆதாம் ஏவாளின் கதையும்கூட ஒரு ஒப்பீட்டுக் கதைதான். முதலில் ஒளிதான் உருவாகியிருக்கவேண்டும் என கணித்திருக்கிறார்கள். மனிதன் வாழத் தகுந்த சூழல் வந்தபின்னரே மனிதன் உருவாகியிருக்கக் கூடும் என்பதையும் உணர்ந்து கதை சொல்லப் பட்டிருக்கிறது.

இந்த 'ஒளி உண்டாகட்டும்' எனச் சொல்லி ஒளியை உருவாக்குவதுதான் Big Bang எனச் சொல்பவர்களும் உண்டு. காலத்துக்கேற்ப புனிதப் புத்தகங்களிலிருந்து பல்வேறு அர்த்தங்கள் விளைகின்றன, விளைவிக்கப் படுகின்றன. இதை மிகவும் உற்சாகமாய் செய்பவர்கள் கத்தோலிக்க திருச்சபையினர். அறிவியலை நிராகரிக்க முடியாதென்பதை உணர்ந்தே (அத்தகைய நிலையில் இன்றைய திருச்சபை இல்லை) இவர்கள் பைபிளின் கதைகளை அறிவியல் படுத்த முயல்கிறார்கள்.

ஆதாம் ஏவாள் கதைகள் அபிரகாமிய மதங்களின் மூலக் கதைகளே அல்ல என்பதும் அவை அந்தக் காலத்தில் பல்வேறு கலாச்சாரங்களில் வாய் வழி சொல்லப்பட்டு வந்த கதைகள் என்பதையும் ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. கத்தோலிக்க கிறித்துவமும் இதை ஒப்புக்கொண்டுள்ளது ஆனால் அவற்றின் உட்பொருட்கள் நம்பத்தகுந்தவையாக பொருள்கொள்ளப்படுகின்றன இன்றும்.

ஆதாம் ஏவாள் கதைகள் இப்போது பைபிளில் தரப்பட்டிருக்கும் வகையிலேயே பல ஓட்டைகளைக் கொண்டுள்ளன (குரான் எப்படித் தந்திருக்கிரது எனத் தெரியவில்லை). இதை தருமியும் பதித்துள்ளார்.

எனக்கு எப்போதுமே உலக துவக்கம்/ படைப்பு பற்றி இந்து மதம் என்ன சொல்லியிருக்கிறது என்பதை அறியும் ஆவல் உண்டு. இந்த முயற்சியில் நான் படித்த சில கதைகளுக்கும் ஆதாம் ஏவாள் கதைகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை. ஆன்மீகக் கதைகளுக்கு எப்பொழுதுமே நேரடிப் பொருள் தரப் படுவதில்லை. அதன் உட்பொருட்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

இந்த வார டைம் பத்திரிகை பரிணாம அறிவியலில் கண்டுள்ள தற்போதைய முன்னேற்றங்களை பட்டியலிட்டுள்ளது. இதுதான் கவர் ஸ்டோரி. பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது பரிணாம அறிவியல் என்பதில் சந்தேகமே வேண்டாம். மில்லியன் ஆண்டுகளாக நடைபெறும் நிகழ்வுகள் எந்தவித வெளிப்படையான ஆதாரங்களுமின்றி எங்கேயாவது புதைந்து கிடக்கும் சில படிமங்களைக் கொண்டு கண்டுபிடிப்பதென்பது நம்பமுடியாததாகத் தோன்றலாம் ஆனால் சாத்தியமாயிருக்கிறது. இயற்கை தன் பாதைகளை மூடி மறைத்திருக்கிறது, ஆனால் அங்காங்கே சில தடயங்களை விட்டுச் சென்றுள்ளது. நம் ஜீன்களிளுள்ள இயக்கமற்ற/பயனற்ற சில பகுதிகளை ஆராய்ந்தால் நம் பரிணாமப் பாதையில் தெளிவு பிறக்கும் என நம்ப்பப் படுகிறது.

மனிதன் மற்றும் குரங்குகள் ஒரே மூலத்திலிருந்த வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதில்லாமல் மனிதனும் குரங்குகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தனர் என்பதே தற்போதைய நம்பிக்கை.

மதங்கள் உருவாகி ஆயிரக் கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன. அவை தரும் பல கருத்துக்கள் அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்பவையாக இருந்திருக்கலாம். ஆனால் என்றும் அவைதான் (அப்படியே) உண்மை என நம்புவது கடினம்.

தலைமுறை தலைமுறையாய் நம்மில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதையே பரிணாம வளர்ச்சியின் ஆதாரமாய் எடுத்துக்கொள்ளலாம்.

அறிவியல் ஆன்மீகத்தை மறுக்கிறது என்பதைவிட, 'நாம் அறிந்திருக்கும்' ஆன்மீகத்தை அது மறுக்கிறது எனலாம். கடவுள் பற்றிய நம் தேடலை விரிவுபடுத்த அறிவியல் அழைக்கிறது எனலாம். இதுவரை மதங்கள் சொல்லியிருக்கும் கடவுளை விட இன்னும் பெரியதாய், ரசிக்கத்தக்கதாய் முற்றும் உணரமுடியாததாய் ஒரு சக்தி இருக்கிறது எனும் மாற்றுக் கொள்கையை வகுத்துக் கொள்ள அறிவியல் உதவுகிறது என்பதும் ஒரு மாற்றுப் பார்வையே. நான் பல பதிவுகளில் சொல்லியிருக்கும் ஒரு கருத்து இது.

இறைவனைத் தேடுவதே 'நம்பிக்கை', 'ஆன்மீகம்'. எனக்கு கடவுள் பற்றி எல்லாம் தெரியும் எனச் சொல்வது அவநம்பிக்கையாகப் படுகிறது. அப்படி ஒருவர் கடவுளைப் பற்றி முற்றிலும் தெரிந்துவைத்திருப்பர் என்றால் அவர் உலகின் எல்லாக் கேள்விகளுக்கும் நேரடியான அறிவுபூர்வமான விளக்கம் அளிக்கமுடியும். அப்படி ஒருவராலும் இயலாது என்பதைத்தான் இந்து மதம் 'மாயா' என்கிறது. நாம் இறைவனை முற்றிலும் அறியாவண்ணம் மாயா நம் கண்களை மறைக்கிறது. இதையும் அறிவியல்வழி பார்த்தோமானால் இயற்கையை முழுவதுமய் உணர்ந்துகொள்ள மனிதனால் முடியவில்லை. எப்போதும் சில இடைவெளிகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. பல சமூகக் கூறுகள் நம் சிந்தனையை குறுக்கிவிடுகின்றன. பல முன் தீர்மானங்களும் பதிக்கப்பட்ட சங்கதிகளும் நம் சிந்தனையை வழி நடத்துகின்றன.

எனவே அறிவியல்தரும் முடிவுகாள் பொய்யல்ல, அவை கடவுளை நிராகரிப்பவையல்ல மாறாக இன்னும் பெரிதாக்குபவை எனக் கொள்லலாம்.

கடவுள் பற்றிய நம் தேடலை பெரிதாக்கிக் கொள்வோம். சிந்தனை பெரிதாகும்போது வாழ்க்கை இனிதாகிறதே.

(ரெம்ப குழப்பமாயிருந்தா ஏதேனும் ஒருபகுதிய திரும்பப் படியுங்க. கொஞ்சம் அவசரத்துல எழுதிய பதிவு :) )

Wednesday, September 20, 2006

போப் Vs. இஸ்லாம்

மதம் பிடித்தவர்கள்
நாவினால் சுட்டா வடு

ஒரே குட்டை

மன்னிக்க வேண்டுகிறேன்


வழுக்கல்?

அமைதி வேண்டி போர்

இது, இல்லன்னா வாய்க்கு பூட்டு. எது வேணும்?

Friday, September 08, 2006

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


மகனை இழந்த வியாகுல மாதாவாய் - ஜென்மப்
பாவமற்ற அமல உற்பவியாய் - என்றும்

குணம்தரும் ஆரோக்ய அன்னையாய்

விண்ணாளும் அரசியாய்

உலகெலாம் போற்றும் வேளங்கண்ணியாய்

தேவனுக்கும் தெவையுள்ளோருக்கும் தாயாய்

முடிவில்லாத் துணை தரும் சதா
சகாயமாதாவாய்

முப்பொழுதும் கன்னியாய்

எல்லோர் குறையும் தீர்க்கும் அன்னை மரியே

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஜோவின் பதிவு.


திரையில் வந்த மாதா பாடல்கள்

மாதாவின் கோவிலில்

எனையாளும் மேரி மாதா

ஆதியே இன்ப ஜோதியே

வானமெனும் வீதியிலே

Tuesday, August 15, 2006

சுதந்திரம்

"எங்கே மனம் பயமற்றிருக்கிறதோ,
தலை நிமிர்த்தப்பட்டிருக்கிறதோ,
எங்கே அறிவு கட்டுப்பாடற்றுள்ளதோ*,
எங்கே உலகம் குறுகிய சுவர்களைக்கொண்டு துண்டாடப் படவில்லையோ,
எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழங்களிலிருந்து வருகின்றனவோ,
எங்கே அயராத வேட்கை தன் கரங்களை முழுமை நோக்கி நீட்டுகிறதோ,
எங்கே பகுத்தறிவு எனும் வெள்ளோடை,செத்த பழக்கங்களெனும் பாலைக்கு வழிதவறவில்லையோ,
எங்கே மனம், உம்மால், என்றும் பரந்துபடும், எண்ணங்களுக்கும் ஆக்கத்திற்கும்அழைத்துச்செல்லப்படுகிறதோ...
அந்த சுதந்திர சொர்க்கத்தில் இறைவா**, என் நாட்டை எழச்செய்"
---தாகூர்

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit; Where the mind is led forward by thee into ever-widening thought and action---
Into that heaven of freedom, my Father, let my country awake

Friday, August 04, 2006

அமைதி... அமைதி...

எளிமைக்குப் பெயர் போன புனிதர் அசிசியின் பிரன்சிஸ். இவரின் புனிதத்தன்மையால் இவரால் பறவைகளோடும் உரையாட முடிந்ததாம். ஸ்டிக்மாடிஸ்ட்(Stigmatist) அதாவது இயேசுவின் ஐந்து காயங்களை உடம்பில் பெற்றவர்.

தமிழாக்கம்

"இறைவா, என்னை உன் அமைதியின் கருவியாக மாற்று;
எங்கே வெறுப்புள்ளதோ அங்கே அன்பையும்;
எங்கே (உள்ளங்கள்) காயப்பட்டுள்ளதோ அங்கே மன்னிப்பையும்;
எங்கே சந்தேகமுள்ளதோ அங்கே இறைநம்பிக்கையையும்;
எங்கே மன உறுதியில்லையோ அங்கே தன்னம்பிக்கையையும்;
எங்கே இருளுள்ளதோ அங்கே ஒளியையும்;
எங்கே சோகமுள்ளதோ அங்கே மகிழ்ச்சியையும்
என்னை விதைக்கச்செய்யும்.
தெய்வீகத் தலைவனே,
ஆறுதல் அடைவதைவிட ஆறுதல் அளிப்பதையும்;
சகிக்கப்படுதலைவிடப் சகிப்பதையும்;
அன்பு செய்யப்படுவதைவிட அன்புசெய்வதையும்
நான் தேடுவேனாக;
ஏனெனில் வழங்கும்போதுதான் பெறுகிறோம்,
மன்னிக்கும்போதே மன்னிப்பு பெறுகிறோம்,
இறக்கும்போதே என்றென்றைக்குமாய் பிறக்கிறோம்.

ஆங்கிலத்தில்

Lord, make me an instrument of Thy peace;
where there is hatred, let me sow love;
where there is injury, pardon;
where there is doubt, faith;
where there is despair, hope;
where there is darkness, light;
and where there is sadness, joy.
O Divine Master,
grant that I may not so much seek to be consoled as to console;
to be understood, as to understand;
to be loved, as to love;
for it is in giving that we receive,
it is in pardoning that we are pardoned,
and it is in dying that we are born to Eternal Life.

Friday, July 21, 2006

சிதம்பரத்தில் சிறில் அலெக்ஸ்

எங்கு பார்த்தாலும் சிதம்பரதில் தமிழில் பாடுவது குறித்த சூடான விவாதங்கள். பதிவுகள் பல பல செய்திகளையும் கோணங்களையும் தந்தாலும் முகமூடியின் பதிவும், 100சில பின்னூட்டங்களும் பிரச்சனையை முழுமையாய் அலசியிருக்கின்றன.

உண்மையில் நம்(பதிவர்கள்) மத்தியிலிருக்கும் பிரிவினை மனப்பாங்குகளின் காரணத்தால் இந்த விஷயத்தைப் பற்றி எந்த கருத்தையும் வெளிப்படுத்த எனக்கு தயக்கமிருந்தது. இருப்பினும் சில பதிவுகளில் பின்னூட்டமிட நேர்ந்தது.

என் தயக்கத்தை உறுதி செய்யும் வண்ணம் முகமூடியின் பதிவில் ஜோவின் பின்னூட்டங்களுக்கு எதிர் பின்னூட்டமிட்ட ஒரு பெயரிலி நம்மை வம்புக்கிழுத்துள்ளார்.

இவரின் முதல் நோக்கமென்ன, கிறித்துவர்கள் இந்து பிரச்சனைகளை விவாதிக்கக் கூடாது என்பதே. உண்மையில் சிதம்பர பிரச்சனை ஒரு சமூக பிரச்சனையாக (திரிக்கப்பட்டு?) கையாளப்பட்டுவருகிறது. 'தமிழ்' பிரச்சனை எனத்தான் இது அறியப்படுகிறது. இருந்தாலும் ஜோ, சிறில் எல்லாம் மூடிக்கிட்டு இருக்கணும்.

முகமூடியின் பதிவில் நான் எந்த பின்னூட்டமும் இடாதபோது என்னை கிறித்துவ அடிப்படைவாதி என முத்திரை குத்தி வம்புக்கிழுத்த பெயரிலியை வன்மையாக கண்டிக்கிறேன்.

அவருக்குத்தான் அவர் பெயரிலி ஆனால் அவர் யாரென்பது அவரின் பின்னூட்ட்டங்களில் எளிதாய் தெரிகிறது.

ஜொவின் பின்னூட்டங்கள் நாகரீகமாய், பிரச்சனைபற்றி எல்லோருக்கும் எழும் சில கேள்விகளை மட்டுமே கேட்டிருந்தார் என்பதும் ஒரு போதும் அவர் யாரையும் இழிவாய் பேசவில்லை என்பதும் அவரை அந்தப்பதிவிலேயே பாராட்டியிருக்கும் மற்ற பதிவர்களின் (முகமூடி உட்பட) பின்னூட்டங்கள் சொல்லும்.

சிதம்பரம் பிரச்சனையில் என் கருத்து என்ன? எல்லா நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுக்குள் இயங்குகின்றன. கல்வி நிலையங்கள் முதல் நம் வீடுவரை எழுதப்படாத விதிகள் பல நியமத்திலுள்ளன. இவை அந்தந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எல்லொருக்கும் செம்மையாய் சென்றடைய உதவுகின்றன என்பதே உண்மை.

தீக்சிதர்களைப்போல நானும் உள்ளே சென்று ஓதுவேன் என இவர் கேட்பது மொழி பிரச்சனையாகத்தெரியவில்லை. வீம்பாகத்தான் தெரிகிறது. மொழி பிரச்சனை என்றால் இது தமிழில் வழிபாடு நடத்தாத, நடத்த அனுமதிக்காத எல்லா கோவில்களுக்கும் பொருந்துமே, ஏன் சிதம்பரத்தில் மட்டும் போராட்டம்?

முகமூடி கேட்பதுபோல் சர்ச்சில் ஃபாதருக்குப்பதில் ஒரு கிறித்துவரே போய் நாந்தான் பூசைவைப்பேன் எனக் கேட்பது முட்டாள்தனமில்லையா?

மதங்கள் என்பதே கடவுளைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுப்பாட்டு வளையம்தானே. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லையென்றால் அந்த மதத்தில் நாம் இல்லை என்றுதான் பொருள்.

தமிழ் வளர்ச்சி தேவைதான் ஆனா அதையே ரெம்ப அதிகமா எல்லா விஷயங்களிலும் புகுத்துவது ஏனோ நமக்கு தமிழ், தமிழர் பற்றிய தாழ்வு மனப்பன்மையக்காட்டுதோன்னு தோணுது.

எந்த கலாச்சாரமும் அழியும், புதுமைபெறும். இறப்பு எப்படி மனிதனுக்கு நிச்சயமோ அதுபோலத்தான், சில கலாச்சாரங்கள் சிதையும், மருவும், மாறும். இறப்பும், அழிவும் எத்தனை நல்லவிஷயங்கள் என்பது நடராசரின் பேரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

'சிவா', அழிக்கும் கடவுள். அவரின் பெயரின் அர்த்தம் 'மங்களம்'. அழிக்கும் கடவுளுக்கு மங்களமானவர் என எப்படிப் பெயர் வந்தது? பழையன அழியும்போதுதான் புதியன தோன்றும். அதுக்காக தமிழை அழிப்போம் எனச் சொல்லவில்லை, ஆனால் தமிழ் மெல்லச் சாகிறதென்றால் அதை நிம்மதியாகச் சாகவிடுவதே மேல் என நினைக்கிறேன்.

எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் வரவேற்க்கத்தக்கதே ஆனால் எல்லா சாதியினரும் எல்லா கோயிகளிலும் முதன்மையான பூசைகள் செய்யலாம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது. அது ஒருசாரருக்கு நன்மமசெய்கிறோம் எனநினைத்து மற்றவர்களின் உரிமைகலை பறிப்பதுபோலாகும்.

பல இந்து நண்பர்கள் கேட்கும் கேள்வி நியாயமாகப் படுகிறது. ஏன் இந்து மதம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது? மதம் அரசிலிருந்து விடுபடவேண்டியது அவசியம். உண்மையில் தங்கள் வழிபாட்டு முறைகாளை அரசாங்கம் கட்டுப்படுத்துவதை வேறெந்த மதமும் ஏற்றுக்கொள்ளுமா?

சரி விஷயத்துக்குவருவோம். நம் அனானியின் பின்னூட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்(சிரித்துக்கொண்டே). இதே அனானி தூண்டப்படாமலே பிற மதங்களைத் தாக்கியிருக்கிறார் தன் பின்னூட்டங்களில். ஆனால் மத்தவங்கள அடிப்படைவாதின்னு நினைத்தமாட்டிலே எழுதிட்டுப்போவாரு.

எனக்கு ஒரே கேள்வி... எப்படி நாம் இப்படி சிந்திக்க கத்துக்கொண்டோம்?
நான் சார்ந்த எதுவுமே கேள்விகளுக்கும், குறைகூறுதலுக்கும் அப்பாற்பட்டது எனநினைக்கிறோமே. ஏன்.. எப்படி? கேள்வி எனக்கும்தான்.

Friday, June 30, 2006

நட்சத்திரங்கள்

பெரும் கடல் அலை ஒன்று ஆயிரக்கணக்கில் நட்சத்திர மீன்களை கரையில் அடித்துப் போட்டுவிட்டுப் போகிறது. தரையில் நடக்க இயலாத நட்சத்திரமீன்கள் விரைவில் இறந்துபோகும் நிலையில், சிறுமி ஒருத்தி ஒவ்வொன்றாய் அந்த நடத்திர மீன்களை எடுத்து கடலில் போட்டுக்கொண்டிருக்கிறாள்.

இதப் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர்,"ஏம்மா, எல்லா மீன்களையும் உன்னால காப்பத்த முடியுமா? உன் முயற்சி வீண்தானே?" என்றார்.

அதற்கு அந்தப் பெண். "எல்லா மீன்களையும் பார்க்கும்போது என் முயற்சி வீண்தான். ஆனா இதோ இந்த மீனப் பொறுத்தவரைக்கும்...அது முழுவெற்றி. இல்லையா?" என்றாள்.

(The old man said," You cannot save them all. Does it
matter?", the girl replied,"To this fish it does."
)

- From the movie "The Holy Man"

பெரிதாய் சிந்திப்போம். சிறிதாய் செயல்படுவோம். எடுத்தவுடன் உலகை மாத்தமுடியுமா?

Friday, June 23, 2006

மதமாற்றமா? மனமாற்றமா?

மதமாற்றம் பற்றிய சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. சில பின்னூட்டவாதங்களையும் (பின்னூட்டம் + வாதம்) படிக்க நேர்ந்தது. இதைப் பற்றி சில எண்ணங்கள்.

ஒரு குட்டிக்கதை.

அழகான இளைஞியும் இளைஞனும் சந்தையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் வேறு யாருமில்லை.
அந்தப் பெண் இளைஞனிடம் "எனக்குப் பயமாயிருக்கிறது." என்றாள்.
இளைஞன் "என்ன பயம்?" என்றான். "நீ எனக்கு முத்தம் கொடுத்திருவியோன்னு பயமாயிருக்கு" என்றாள் பெண்.
"அதெப்படி முடியும் என் தலையில அரிசி மூட்ட இருக்குது, கையில ஆட்டை பிடிச்சுருக்கேன், இந்த இடுக்குல காய்கறி கூட வச்சுருக்கேன். நான் எப்படி ஒன்ன இப்ப முத்தம் கொடுக்கிறது?". இளைஞன் வெகுளியாய் கேட்டான்.
"அரிசி மூட்டைய இறக்கி வச்சுட்டு, ஆட்டை அந்த மரத்துல கட்டிபோட்டுட்டு, காய்கறிக் கூடைய அரிசிமூட்டை மேல வச்சுட்டு வந்து என்னை கட்டி பிடிச்சு முத்தும் தருவியோன்னு பயமாயிருக்கு" என்றாள் அந்தப் பெண்.




கருத்து : நாம் பயத்துல சொல்லும் விஷயங்கள் பல
நேரங்களில் நம் எதிரிக்கு சாதகமாய் அமைகின்றன அல்லது
நாம்தான்
நம்ம எதிரிகளுக்கு பல நேரங்களில் ஆலோசனைகளை தருகிறோம்.


'கட்டாய மதமாற்றம்' எனும் பதம் இப்போ பழக்கத்தில் வந்துள்ளது. மிஷனரிகள் எனப்படும் மதம் பரப்பும் கிறீத்துவ போதகர்கள் 'கட்டாயமாய்' மதம் மாற்றுவதாக பலர் நம்புகிறார்கள்.

உண்மையில் இது சாத்தியமா?

'கட்டாயம்' என்றால் என்ன? பலவந்தமாகவா? அது நிச்சயம் சாத்தியமில்லை. கிறித்துவர்கள் 2%மைனாரிட்டி என்பது ஒருபக்கமிருக்க, பலவந்தத்தம் செய்வதற்கு சரியான (அடிதடி) அரசியல் பின்னணி வேண்டும் என்பதும் அடிதடியில் இறங்கி கிறித்துவத்தில் மக்களை சேர்ப்பது, அதுவும் இந்தியா போன்ற சர்வதேச அரங்கில் எப்போதும் பேசப்படுகின்ற நாட்டில் செய்வது இன்றைய சூழலில் சாத்தியமில்லை. சுதந்திர இந்தியாவில் பலவந்தமாக யாரும் மதம் மாற்றப்பட்டதாக நான் இதுவரைக் கேள்விப் பட்டதில்லை.

பணம் தந்து மதம் மாற்றுகிறார்கள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு? ஒருவருக்கு ஒரு நாள் 1000 கொடுக்கலாம் ஆனா எல்லா நாளும் கொடுக்க முடியுமா? உண்மையில் மதம் மாறினால் காசு கிடைக்குமென்றால் இந்தியாவில், ஏழ்மை அதிகமிருக்கிறபடியால், கிறித்துவர்கள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கவேண்டுமென நினைக்கிறேன். அதுவுமில்லை. ஒரு மிதமான வளர்ச்சியையே கிறித்துவம் கொண்டுள்ளது, மற்ற சில மதங்களைவிட குறைவான வளர்ச்சியே இது.

கிறித்துவராகிவிட்டால் பணக்காரனாகிவிடலாம் என்கிறது யாரோ கனவிலிருந்து விழித்துவிட்டுச் சொன்னது. செயராமன் பதிவைப் படிக்கவும். (இவர் சொல்லும் சில விபரங்கள் சரியானதாக இல்லை என்றாலும்...)

இன்னுமொரு குற்றச்சாட்டு நன்மை செய்வதுபோல ஊருக்குள் வந்து மெதுவாக மதம் மாற்றுகிறார்கள் என்பது. இதற்கு எப்படி விளக்கம் சொல்வதென்று புரியவில்லை.

நல்லது செய்வதில் உள் அர்த்தம் கற்பித்துக்கொண்டு பலருக்கு கிடைக்கும் உதவியை தடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் எத்தனை கிறித்துவ கல்விக்கூடங்கள், சமூக சேவை நிறுவனங்கள், மருத்துவமனைகள் இருக்கின்றன, மதம் மாறினால்தான் சேர்த்துக்கொள்வோமென்கிறதாய் எந்த நிறுவனமும் கூறியதாயில்லையே. அப்படியே மக்கள் தங்களுக்கு நல்லது செய்பவர்கள் பின்னால் சென்றால் என்னதான் தவறு? அன்னை தெரசா எத்தனைபேரை 'கட்டாய' மதமாற்றம் செய்தார்? அவர் செய்யாத சேவையா?

மதமாற்றம் நடப்பதேயில்லை எனச் சொல்வதற்கில்லை. நிச்சயம் நடக்கிறது. ஒவ்வொரு வருடமும். ஏன் கிராமங்களுக்குப்போகவேண்டும்? , சென்னையிலேயே ஒன்றிரண்டுபேர் ஒவ்வொரு கோவிலிலும் (பொதுவாக) ஈஸ்ட்டர் திருநாளன்று மதம் மாறக் கண்டிருக்கிறேன். இவர்கள் எந்தவித கட்டாயத்திர்கு ஆளாக்கப்படுகிறாகள் என்பது அவர்களுக்கும் அவர்கள் கும்பிட்ட, கும்பிடப் போகின்ற கடவுள்களுக்குமே வெளிச்சம்.

என் கல்லூரித் தோழி, இந்து மதம் சார்ந்தவள், கிறித்துவப் பையனை காதலித்தாள், மணமுடித்தாள். அவள் கணவனைவிட இயேசுவை பெரிதாய் நினைக்க ஆரம்பித்துவிட்டாள். நான் எடுத்துச் சொல்லியும் அவளுக்கு தன் தெய்வங்களை விடவும் இயேசுவே பெரிதாய் தோன்றினார்.

உண்மையில் அவளுக்கு என்ன நிகழ்ந்தது? தன் மதம் பற்றிய, அதன் அதிசயிக்கத்தக்க தத்துவ குணாதிசயங்கள் பற்றிய அறிவே இல்லாதிருந்தாள். நம்மில் எத்தனைபேருக்கு இந்துமதம் சொல்லும் தத்துவ இறையியல் பற்றித் தெரியும்? காப்பியங்களையே முழுமையாகத் தெரியாதவர்கள் எத்தனைபேர்.

எதையுமே எடுத்துச் சொல்லும்போது அதற்கு அதிக மதிப்பு இருக்கிறது அல்லது அதிக மதிப்பு இருப்பது போலத் தோன்றுகிறது. அதனால்தான் நல்ல பொருட்களைக்கூட கூவி விக்கவேண்டியுள்ளது. 'கட்டாயம்' என்பதை விட இந்த கூவி விற்கும் தன்மைதான் கிறித்துவ மத மாற்றத்தின் அடிப்படை வழியாக இருக்கிறது. இதற்கு ஜனநாயகத்தில் இடமுண்டு.

கட்டாய மதமாற்றம் செய்பவர்கள் எனப் பார்த்தால் அதை செய்பவர்கள் இரண்டுபேர். நம் தாய் தந்தை. தத்துவார்த்தமாக சிந்தித்தால் இது புரியும். பிறந்து ஒன்றுமறியா குழந்தைக்கு இதுதான் கடவுள், இவன் நம்ம மதம், இது நம்ம சாதின்னு பல வழிகள்ள எண்ணங்களை திணிக்கிறோம், அதை பின்பற்றச்சொல்லி கட்டாயப்படுத்துகிறோம். நாம் நல்லதே நினைத்து இதைச் செய்தாலும் இது ஒரு திணிப்புதான் என்பது உண்மை.

மதமாற்றம் எல்லா மதங்களும் செய்திருக்கின்றன. துவக்கத்திலுருந்தே எந்த மதமும் இப்போது இருக்கும் நிலையில் இருந்ததில்லை. கொஞ்சம் வரலாற்றை புரட்டினால் 'கட்டாய' மதமாற்றம் இல்லாமல் எந்தமதமும் இருக்கவில்லை என உணரலாம்.

மதம் மாறாதே என ஒருவரை கட்டாயப்படுத்துவதற்கும், மதம் மாறு என கட்டாயப் படுத்துவதற்கும் யாருக்கும் உரிமையில்லை.

எனக்குத் தெரிந்தவகையில் கத்தோலிக்க குருக்களும் கன்னியர்களும் மதமாற்றம் செய்ய சுய உந்துதல் உடையவர்களாகத் தெரியவில்லை. பலர் சமூக/ கல்வி நிறுவனங்களில் நமக்கு என்ன பதவி கிடைக்குமெனும் ஏக்கத்திலேயே காலம் தள்ளுகின்றனர். போய் மற்ற மதத்தினருக்கு இயேசுவை அறிவி எனச்சொன்னால் து.கா.து.கான்னு ஓட்டம்பிடிப்பவர்கள் பலர். அநேகம் பாதிரியார்களுக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையே கிடையாதென்பதுபோலத் தெரியும். இவர்கள் போய் மதம் மாற்றுகிறார்கள் என்றால் நம்பமுடியவில்லை.

போப் 'அறுவடை' எனச் சொல்கிறாரே? அறுவடை என்பது இயேசு பயன் படுத்திய பதம். அதைத்தான் இவரும் பயன்படுத்துகிறார். "அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு" இது இயேசு சொன்னது. இதில் எந்தவித தவறும் உள்ளதாகத் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் அதிகம் கூவி வில்லுங்களளெனச் சொல்லுகிறார் அவ்வளவுதான். எல்லோரையும் போட்டுத்தாக்குங்க எனச் சொல்லவில்லை.

இந்தக் கூவி விற்கும் போது பல நேரங்கலில் அடுத்தவர் மனம் புண்படும்படி அவர்கள் விற்பதை (அல்லது வைத்திருப்பதை) தாழ்த்திப் பேசுகீறார்கள் என்பது கண்டிக்கப்படவேண்டியதே. இதைக் கண்டிக்க யாருக்கும் உரிமையுள்ளது. அதேபோல கூவி விற்பவர்களை அடுத்தவர் மட்டம் தட்டலாம்.

தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் நடக்கும்போது, "நீ என் கட்சியில்ல. இங்க வந்து ஓட்டுக்கேட்கக்கூடாது" என யாரையும் உங்களால் தடுக்கமுடியுமா? அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை என நினைக்கிறேன்..

கொஞ்சம் தாறுமாறாகத்தான் இந்தப் பதிவு வந்துள்ளது. தோன்றிய எண்ணங்களை அப்படியே பதித்தேன்.

முடிவாக...

  • கட்டாய மதமாற்றம் என்பது இந்தக் காலத்தில் சாத்தியமில்லை.
  • மதமாற்றம் எல்லா மதங்களிலும் நடைபெற்றுள்ளன; இதில் பல கட்டாய மதமாற்றங்களும்.
  • நம் மதம் பற்றிய அறிவைப் பெற நாம் முயல வெண்டியது அவசியம்.
  • மதம் மாறு எனக் கட்டாயப் படுத்துவதற்கும் மதம் மாறாதே எனக் கட்டாயப் படுத்துவதற்கும் வித்தியாசமில்லை.
  • தன் கடவுள் யார் என்பதை தனி மனிதந்தான் நிர்னயிக்கவேண்டும்.
"ஒருவன் தன் கடவுளை பக்தியோடு வணங்க முடியாவிட்டால் எந்தக்
கடவுளையும் பக்தியோடு வணங்கமுடியாது." - இராமகிருஷ்ண பரமஹம்சர். இதுதான் மதமாற்றம் பற்றிய என் நிலைப்பாடு.

Friday, June 09, 2006

நிர்வாணா

ஒருவன் காட்டுவழியே நடக்கும்போது ஒரு காட்சியைக் கண்டான்.

புலி ஒன்று கால் முறிந்து வேட்டையாடமுடியாமல் கிடந்தது. ஆனால் ஆச்சர்யப்படும்படி ஒரு நரி அந்தப் புலிக்கு உணவு கொண்டுவந்து தந்தது.

'ஆகா கடவுளின் செயல்கள் வியக்கத்தக்கவை' என நினைத்தான் அந்த மனிதன். 'நானும் இந்தப் புலிபோல இங்கேயே படுத்திருந்தால் கடவுள் எனக்கும் இதுபோல உணவு தந்து காப்பாற்றுவார்' எனச் சொல்லி அந்த இடத்திலேயே படுத்துவிட்டான்.

சில நாட்கள் ஆயின யாரும் வரவில்லை. பசியால் வாடினான். இன்னும் சில நாட்கள் பசி மயக்கத்தில் கழிந்தன. இறக்கும் நிலையில் இறைவனை வேண்டினான். 'ஏன் கடவுளே? அந்தப் புலிக்குக் காட்டும் இரக்கம் எனக்கு கிடையாதா?', என்றான். கடவுள் அவன் முன்னே தோன்றினார்,'மகனே அந்தக் காட்சி உனக்கு கிடைத்தது அந்தப் புலியைப் பின்பற்ற அல்ல அந்த நரியைப் பின்பற்ற' என்றார்.

Friday, June 02, 2006

என்ன'டா' வின்சி கோட்?

முதலில், பரவலாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் டா வின்சி கோட் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டிப்பாக கண்டிக்கிறேன். கருத்து சுதந்திரம் என்ற அடிப்படடயில் அல்ல, அப்படி ஒன்றும் பெரிய கருத்தை டா வின்சி கோட் சொல்லவில்லை, ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை மக்கள் பலர் பார்க்கமுடியாமல் போகுமே என்கிற வருத்தத்தில்தான். (அதையும் பாஸ்டன் பாலா வேண்டாமென்கிறார்).

திருட்டு வி சி டி வியாபாரிகள் சங்கம் சார்பில் கலைஞருக்கு நன்றி.

பல பதிவுகளில் இந்தத் தடைக்கான எதிர்வினைகளை காணமுடிந்தது. பலருக்கும் ஏன் கிறீத்துவர்கள் இந்தப் படத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்கான மேலோட்டமான காரணங்களே தெரிந்துள்ளன அவற்றில் சில.

1. இயேசு திருமணமானவர் என நாவல் கூறுகிறது.
2. அவரின் வழித்தோன்றல்கள் இன்னும் இருக்கிறார்கள் என்கிறது
3. ஒப்பஸ் டெயி (Work of God) கத்தோலிக்க இயக்கத்தை வில்லத்தனமான இயக்கமாக காண்பிக்கிறது.
4. கிறித்துவ சாமியார் ஒருவர் கொலை செய்வதாய் சொல்கிறது
5. இயேசு கடவுள் இல்லை என்றும் அவரது கடவுள் தன்மையை ரோமன் பேரரசர் காண்ஸ்டாடைன்தான் நிறுவினார் என்கிறது நாவல்.
6. உலக மதங்கள் எல்லாமே மனிதனின் கற்பனையில் உருவானவை என்கிறது நாவல்.

இவையே மேலோட்டமான சில காரணங்கள். சில நேரம் இதைப் படித்தால் பலருக்கும் அதனாலென்ன திருமணம் செய்வது குழந்தை பெறுவதும் பாவமா? என்றெல்லாம் கேட்கத்தோன்றும்.

இயேசு திருமணமானவர் என்பதை ஏற்றுக்கொள்வது அவரின் கடவுள் தன்மையை பாதிக்கிறது. யூத வழியில் வந்த இயேசு தானே கடவுளின் மகன், மீட்பர் என்கிறார். யூத கடவுளுக்கு திருமணமாகியிருக்கவில்லை. திருமணம் உலக வாழ்வின் முழுமையை வெளிப்படுத்துகிறது. திருமணம் ஆகாத ஆன்மீகவாதிகளுக்கு ஊரில் இருக்கும் மவுசு உங்களுக்குத் தெரிந்ததே. இயேசு திருமண பந்தத்தில் ஈடுபட்டார் என்பது அவரும் நம்மைப்போல் முழுமையாக வெறும் மனிதன் எனக் கூறுவது போலாகிறது.

இது கிறித்துவ நம்பிக்கையின் அடி வேரில் கோடாரி வைக்கிறது. இரண்டாயிரமாண்டு வரலாற்றையும் கோடிக்கணக்கானோரின் நம்பிக்கையையும் சிதறடிக்கிறது, கேலி செய்கிறது.

இயேசுவுக்கு திருமணமானதாக எந்த நற்செய்தியுமே(Gospel) கூறவில்லை. நற்செய்தி என்பது மத்தேயு, மாற்கு, லூக் மற்றும் ஜாண் எழுதிய இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளின் நேரடி அல்லது அண்மைக்கால குறிப்புக்கள், புத்தகங்கள். இவைதான் புதிய ஏற்பாட்டின், பைபிளின், கிறித்துவ நம்பிக்கையின் அடித்தளங்கள். இயேசு திருமணமானவர் என்பது இந்த நற்செய்திகள் திருத்தப்பட்டன அல்லது உண்மையில்லாதன எனபது போலாகும். நான்கு வேதங்கலும் பொய் சொல்கின்றன எனச் சொல்வதோ அல்லது கீதை வெறும் கதை என்பதோ குர் ஆன் கடவுள் தந்ததல்ல என்பதோ எவ்வளவு வலிக்குமோ அவ்வளவு வீரியமானது இந்தக் குற்றச்சாட்டு.

ஓப்பஸ் டெயி ஒரு கான்சர்வேட்டிவ் கத்தோலிக்க குழுமம். நம்மூரில் அலகு குத்துவதையும் தீக்குள் இறங்குவதையும் ஆன்மீக வெளிப்பாடாய் காட்டுவது போல ஒப்பஸ் டெயி சில தொன்மையான உடல் வலி மூலம் இறைவனைக் காணும் வழியை பின்பற்றுகிறது. இது இவர்களில் வெகு சிலரே பழகும் ஒரு முறை. மற்றபடி ஓப்பஸ் டெயி எல்லா நிலையிலும் எப்போதும் இறைவனைக் காணத் தூண்டும் ஒரு நிறுவனம்.

வெளிப்படையாகவே நாவல் இயேசுவின் தெய்வத்தன்மை மனிதனால் 4ஆம் நூற்றாண்டில் ஒரு ஓட்டெடுப்பில் உருவாக்கப்பட்டது என்கிறது. இதைவிட பெரிய காரணம் தேவையில்லை என்னைக்கேட்டால். இதைப் பற்றிய விளக்கங்கள் ஆங்கிலத்தில் http://www.y-zine.com/monalisa2.htm.

பலரும் கவனிக்க மறந்த அல்லது வசதியாக மறைத்துவிட்ட செய்தி என்னவென்றால் நாவலில் ஒரு பகுதியில் உலகின் எல்லா மதங்களுமே மனிதன் நிறுவியவைதான், காலத்தினால் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டவைதான் என சொல்லப்படுகிறது. கிறித்துவத்தை மட்டும் டான் பிரவுன் தாக்கவில்லை. அவருக்கு எந்தக் கடவுள் எப்படிப் போனால் என்ன நாவல் விற்று காசு கிடைத்தால் போதும்.

சரி நாவல் எப்படி இருந்தது? உண்மையில் இந்த நாவல் மிக வேகமாக நகரும் அருமையான த்ரில்லர். நம்மூரில் துப்பறியும் சாம்புவையே விழுந்து விழுந்து படிக்கிறோம் இது சாம்புவை டீ சமயத்தில் ஸ்னாக் போல சாப்பிட்டு ஏப்பம் விடும்.

Sidney Sheldon in fast forward. இதுதான் என் கருத்து. ஆனாலும் திரும்பத் திரும்ப குறியீடுகளை அவிழ்ப்பதும் உடைப்பதும் கடைசியில் புளித்துவிடுகிறது. அதுவும் என்னைப்போல பாத்ரூமில் பகுதி பகுதியாய் பதினைந்து நாள் படித்தால் புளிப்பு அதிகமாகிறது.

அதிவேக த்ரில்லருக்கான எல்லா தகுதியும் நாவலுக்கு இருக்கின்றன. அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பு இருந்துகொண்டேயிருக்கிறது.

இந்தியாவில் மட்டுமாதடை? இல்லை பல நாடுகள் தடை செய்திருக்கின்றன. அமெரிக்க பிரிட்டன் போன்றவற்றை கிறித்துவ நாடு என்று சொல்லமுடியாது. அப்படி அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளவில்லை. மெலும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக 'western thought'ன் பிறப்பிடமாக ஜனநாயகத்தின் காவலர்கலாக தங்களை காட்டிக்கொள்ளும் இவர்கள் படைப்புக்களுக்கு தடை போடுவது அரிது.

இந்திய கிறீத்தவர்கள் ஏன் தடை கோருகிறார்கள? பொதுவாக மேற் கூறிய காரணங்களுக்காக. உண்மையில் இயேசு மனிதர்தான் கடவுளே இல்லை என்பதை எந்தக் கிறீத்தவனாலும் தாங்கிக்கொள்ள முடியாது. யாராலும் இப்படி தங்கள் கடவுளை, இல்லை பொய் என்பதை தாங்கிக்கொள்ள முடியாதுதான். இல்லை என் கடவுளை மறுப்பவனுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்குது என வெகுசிலராலேயே ஏற்றுக்கொள்ள முடிகிறது.

டா வின்சி கோட் கற்பனை கதை என்பதில் ஐயமில்லை. அதில் வரும் இயேசு பற்றிய பல கருத்துக்களும் Legends எனப்படும் சில நிகழ்வுகளின் அடிப்படையிலான (கட்டுக்)கதைகள் மற்றும் சில Conspiracy Theoryகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை பல வரலாற்று ஆதாரங்களுடன் பலர் நிருபிக்கிறார்கள். (பார்க்க பாஸ்டன் பாலவின் பதிவு)

கீதை எனப் படப்பெயர் வைப்பதையே நம்மவர்கள் பலர் எதிர்க்கிறார்கள் எனும்போது இது போல ஒரு படத்தை நம்மவர்கள் அனுமதிப்பார்களா? கருத்து ரீதியில் எல்லோருமே இந்தப்படத்தை எதிர்க்கவேண்டும் என நினைக்கிறேன். ஒரு மத நம்பிக்கையை, கடவுளை அவமதிப்பது கடவுள் நம்பிக்கை கொண்ட எல்லோரும் கவனிக்கவேண்டிய ஒன்று.

நாளைக்கே டான் பிரவுன் இந்து அல்லது முஸ்லிம் மதக் குறியீடுகள் பத்தி நாவல் எழுதலாம். ருஷ்டி போல புகழின் உச்சியை உடனே அடைய எளிய வழி வேறென்ன?

(யாரையும் குத்திக் காட்டவோ தர்க்கம் செய்யவோ இதை எழுதவில்லை - டிஸ்க்ளெய்மர் இல்லைன்னா இப்போல்லாம் சர்வைவ் பண்ண முடியாது போலிருக்கே)

Friday, March 31, 2006

கடவுள் 100 கி.மீ

மதங்கள் கடவுளைக் காட்டும் ஒரு பெயர்ப் பலகையே. இதை ஒரு பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். பதிவில் இடவேண்டும் எனத் தோன்றியது.

ஒரு ஊருக்குப் போகிறோம், சென்னை என வைத்துக்கொள்வோம். வழியில் சென்னை 100 கி.மீ என ஒரு பெயர்ப்பலகை வருகிறது அதுவே சென்னை என்றால் எப்படி?

மதங்களும் கடவுள் எனும் இலக்கை அடைய வழிகாட்டும் பெயர்ப் பலகைகளே. அதையே பிடித்துக்கொண்டு நிற்பது கடவுள் நோக்கிய நம் பயணம் முடிவு பெறாமல் போவதற்க்கு வழிவகுக்கும்.

மதங்களைத் தாண்டிய, தனிமனித கடவுள் அனுபவம்தான் முழுமையான கடவுள் அனுபவமாகமுடியும். இதைத்தான் சித்தர்கள் சொல்லியிருக்கவேண்டும்.

நட்டகல்லை தெய்வமென்று
நாலுபுஷ்பம் சாத்தியே

சுற்றிவந்து முணுமுணென்று
சொல்லும் மந்திரம் ஏனடா(ஏதடா?)
நட்டகல்லும் பேசுமோ

நாதன் 'உள்'ளிருக்கையில்
சுட்ட சட்டி தத்துவம்
கறிச்சுவை அறியுமோ.

பராசக்தி வசனத்தில் கேட்ட பாடல். கல்லை வணங்குவதை ஒரு உருவகமாக எடுத்துக்கொள்ளவேன்டும். அதை ஒரு மதம் சார்ந்த வழக்கமாக எடுத்துக்கொள்வது குறுகிய மனப்பாங்கையே காட்டும்.

நட்டகல் என்பது வெறும் போதனைகளும் மந்திரங்களும், சடங்குகளும், பூசைகளும், தொழுகையுமே ஆன்மீகம் என நினக்கும் மனப்பாங்கை குறிக்கிறது.

மதங்கள் தரும் வெறும் வெளி அடையாளங்களை கடைபிடித்துவிட்டு எனக்கும் கடவுளைத் தெரியும் நானும் அவரும் அப்பா பிள்ளை என்பது பெயர்ப்பலகையை பிடித்துக்கொண்டு நான் சென்னை வந்துவிட்டேன் என்பதற்குச் சமம்.

கடவுளைத் தேடுங்கள். மனித உறவுகளில், இயற்கையின் அளவற்ற வனப்பில், பகிர்வில், மன்னிப்பில், இம்மையில், உண்மையில், உங்களில் தேடுங்கள்.

மதங்கள் வழி காட்டட்டும், பயணம் உங்களதாய் இருக்கட்டும்.


சிறில் அலெக்ஸ்