.

Friday, June 30, 2006

நட்சத்திரங்கள்

பெரும் கடல் அலை ஒன்று ஆயிரக்கணக்கில் நட்சத்திர மீன்களை கரையில் அடித்துப் போட்டுவிட்டுப் போகிறது. தரையில் நடக்க இயலாத நட்சத்திரமீன்கள் விரைவில் இறந்துபோகும் நிலையில், சிறுமி ஒருத்தி ஒவ்வொன்றாய் அந்த நடத்திர மீன்களை எடுத்து கடலில் போட்டுக்கொண்டிருக்கிறாள்.

இதப் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர்,"ஏம்மா, எல்லா மீன்களையும் உன்னால காப்பத்த முடியுமா? உன் முயற்சி வீண்தானே?" என்றார்.

அதற்கு அந்தப் பெண். "எல்லா மீன்களையும் பார்க்கும்போது என் முயற்சி வீண்தான். ஆனா இதோ இந்த மீனப் பொறுத்தவரைக்கும்...அது முழுவெற்றி. இல்லையா?" என்றாள்.

(The old man said," You cannot save them all. Does it
matter?", the girl replied,"To this fish it does."
)

- From the movie "The Holy Man"

பெரிதாய் சிந்திப்போம். சிறிதாய் செயல்படுவோம். எடுத்தவுடன் உலகை மாத்தமுடியுமா?

Thursday, June 29, 2006

பாட்டா இண்டிக்கா


இந்தப்படத்துக்கு நான் வச்ச தலைப்பு
Bata Indica... இது எப்டி..கீது

Wednesday, June 28, 2006

ஆ..ஆ..ஆ அச்ச்ச்சூசூசூ...

எய்ட்ஸுக்கெல்லாம் மருந்து கண்டுபிடித்துள்ளார்கள் இன்னும் இந்த சாதாரண சளிக்கு இன்னும் மருந்து இல்லை. அதென்ன 'சாதாரண சளி'? அதாங்க Common cold.

கொஞ்ச நாளாய் பாடாய் படுத்தி எடுத்துவிட்ட சளியில் ஒரு கையில் நாப்கின் வைத்துக்கொண்டு இன்னொரு கையில் தட்டச்சியதில் வலதுகை நடுவிரலில் இரண்டு ரேகைகள் அழிந்துள்ளன. இதனால் என் தலையெழுத்து மாறியிருக்குமா என ஜோசியருக்கு ஈ மெயில் அனுப்புமுன் அவர் 'உங்களுக்கு இந்த சமயத்தில் 'சளி' முத்திப்போக வாய்ப்பிருக்கிறது' எனச் சொன்னது நியாபகம் வந்தது.

இதெல்லாம் weather.com பாத்து சரியா சொல்கிற ஆள் ஜோசியத்தில் 'கோட்டை' விட்டுறார். அந்தக் கட்டம் கட்டமா போடுவாங்களே அந்தக் 'கோட்டைத்' தான் விட்டுட்டார்.

போன் போட்டு விஷயத்தச் சொல்லி, "சளிக்கு என்ன பரிகாரம்?", கேட்டதும் அவங்க அப்பாகிட்ட குடுத்துட்டார்.

'ஜோ' திலகம். முன்னால சோதிடத்திலகம்னு பேரு இப்ப சந்திரமுகி பாத்ததுலேந்து 'ஜோதிடம்' சுருங்கி 'ஜோ' ஆயிடுச்சு. "அது வந்து தம்பி என் பேரு கணே'சன்'." வேண்டுமென்றே 'சன்'னை அழுத்திச் சொல்வார்,"சன்... சூரியன். சூரியன்...சூர்யா. பேர் கூடப் பொருந்திடிருக்கு பாத்தியா?" இளமைத் துடிப்போட சொல்வார். இவரரிடம் நல்ல நேரம் பார்த்து என்னெல்லாமோ செஞ்சிருக்கேன். தெருமுனையில் திரும்பினதும் தலையில் அடித்துக்கொள்வேன்.

"ஜோ மாமா சவுக்கியமா?"

"சவுக்கியம்டா."

"இப்ப எழரை நாளா.."

"தெரியும்டா. ஏழரைன்னு எனக்கே சொல்றியா. அன்னைக்கே உங்கப்பங்கிட்ட அடிச்சு சொன்னேன் நீ எங்கயோ போயிருவன்னு. இன்னைக்கு அமெரிக்காவுல குப்ப கொட்டுற. சனிக்கு என்ன பெரிய பரிகாரம். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் போய் சனிபகவானுக்கு நல்லெண்ணண தீபம் ஏத்த வேண்டியதுதான்".

"ஐயோ ஜோ மாமா சனி இல்ல சளி." எப்போதும் வரும் தும்மல் இப்ப வந்தா இவரு ஈசியா புரிஞ்சுக்கூவாரோ? கஷ்ட்டப்பட்டு தும்மிப் பார்த்தேன், பலனில்லை. "அச்சு", செயற்கையா ஒன்னு எதுக்கும் இருக்கட்டுமேன்னு போட்டு வைத்தேன்.

"சளியா அது நம்ம உள்துறை விவகாரம். ஏண்டீ...",ஐயையோ ஒரு சாதாரண சளிக்கு இத்தனை பாடா. "எப்ப பாத்தாலும் சீரியல். இங்கவாயேன் இந்த..இவனுக்கு சளியாம். அந்தக் கஷாயத்துக்கு பக்குவம் சொல்லு ஓடிவா."

மாமி டி விய போன் பக்கமா திருப்பி வச்சிருப்பாங்கபோல,"காய்ச்சலா?தலைவலியா? மூக்கடைப்பா?" டிவில கேட்டதுக்கு இயல்பாகவே,"ஆமாய்யா ஆமா." சொல்லிவைத்தேன்.

"என்ன பிராப்ளம்பா உனக்கு..", ஜோசியர் அம்மா.

"பயங்கர சளி. ", கஷாயத்துக்கு பக்குவம் சொல்லித் தந்தாங்க, குறிச்சு வச்சுகிட்டேன்.

"டேய். உன் வீட்டுல சன் டி வி இருக்குதே, செல்வி பாக்குறியா?"

"ஆமா பாப்பேன்"

"நேத்து எப்பிசோட்ல..."

"வேண்டாம்...", சினிமாவுல ஸ்லோ மோஷன்ல 'நோ...............'ன்னு கத்துறமாதிரி சொன்னேன்.
"உங்களுக்கு நேத்து வந்தது எனக்கு இன்னைக்குத்தான் வரும். கதைய சொல்லிராதிங்க."

"ம்ம் சரிடா பொழச்சுப் போ. உடம்ப பாத்துக்க. இந்தா உன் கிளாஸ் மேட்கிட்ட குடுக்கிறேன்." சந்திரன், ஜோ மாமாவின் மூன்றாவது பையன். என்கூட எல் கே ஜி லேர்ந்து படிச்சான். 'என் பையன் சாதகப் படி எங்கயோ போயிருவான்னாரு ஜோ மாமா. சொன்னதுபோல எட்டு படிக்கும்போது வீட்டவிட்டு ஓடிப் போய் ஒரு வருஷம் தேடி 'எங்கேயோ போயி' கண்டுபிடிச்சாங்க. இப்ப மெடிக்கல் காலேஜ்ல மாமா க்ளையண்ட் ரெக்கமண்டேசன்ல படிக்கிறான்.

"சொல்லுடா. என்ன ஏதாவது விஷேஷமா?"

"இல்லடா கொஞ்ச நாளா சளி. ஆபீஸ் போகாம வீட்டுல இருந்தது போர் அடிச்சுது. சரி உங்க வீட்டுக்கு சும்மா ஒரு கால் போட்டேன்".

"சளியா?" அட இவனுக்கும் ஏதாவது தோணிடுச்சா? மெதுவாகச் சொன்னான்,"ஒரு சின்ன பெக் பிராண்டிய லேசா சூடான தண்ணியில ஊத்தி அடிச்சுட்டு தூங்கினா போதும்." டாஸ்மார்க் கடைக்கு ப்ரிஸ்க்க்ரிப்சன் எழுதித் தரும் ஒரே டாக்டர் இவனாத்தான் இருக்கணும். இப்பத் தெரியுது ஏன் டாக்டர் கையெழுத்து ஏன் மோசமா இருக்குன்னு.

"ரெம்ப தாங்ஸ்டா. ட்ரை பண்ணுறேன்." கொஞ்சம் பேசிவிட்டு போனை வைத்ததும்,'இனி சனியே வந்தாலும் இந்த நம்பருக்கு போன்போடக்கூடாதுன்னு நினை...ச்ச்ச்சு... அப்படா இன்னுமொரு வானவில் தும்மல்.

பி.கு. நாலு நாளா வீட்டுல நிஜமாவே சளியோட படுத்துட்டேன். நாளைக்கு கட்டாயம் அபீஸ் போகணும். இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்...ஒரு கையில இவ்வளவுதான் அடிக்க முடிஞ்சுது. இராகவனை கிண்டல் செஞ்சது எனக்கே வந்து முடிஞ்சுடுச்சு.

... கூத்தாட்டுவானாகி...

சிவந்தமண் துவங்கி சிக்காகோ வரை (தமிழோவியத்தில் சிறப்பாசிரியராக முன்னுரைத்தது)

அலைகள் பாறைகள் மணல் மேடுகள். என் முதல் பதிவுத் தொகுப்பை படித்தவர்களுக்குத் தெரியும் நான் ஒரு அங்கீகரிக்கப்பட்டு, மூன்றுமுறை வடிகட்டப்பட்டு, ஐ எஸ் ஐ முத்திரை குத்தப் பட்ட மீனவ கிராமத்தான். உலகின் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத மூலையில், வெளி உலகைவிட்டே ஒதுங்கி, தெற்கே முடிவில்லா கடல் நோகி வாழும் சில மனிதர்கள் மத்தியில் பிறந்தேன் வளர்ந்தேன்.

பாரதி ராஜா தன் 'இனிய தமிழ் மக்களுக்கு' அறிமுகப் படுத்திவைத்த முட்டத்தின் ஒரு சிறுபகுதிதான் 'சிவந்தமண்'. 16 கி.மி தொலைவிலுள்ள நாகர்கோவில் போய்வருவதே எங்களுக்கு ஒர் செல்லச் சிற்றுலா. பஸ் ஏறி பயணிப்பது ஒரு பரவச அனுபவம். சைக்கிள் வைத்திருப்பது பெரிய விஷயம். ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் நடந்தே சென்று நல்ல நீரில் குளிப்பதும், துணிதுவைப்பதும். சிவந்தமண்ணில் ஒரு கடைகூட அப்போது இருக்கவில்லை. கால் சிவக்க, செம்மண் காட்டு வழி நடந்தே உலகை எட்டுவோம். செம்மண் அகழிகளால் பிரிக்கப்பட்ட ஒரு குட்டித்தீவு அந்த 'சிவந்தமண்'.

நாகர்கோவிலில் 'நல்ல' பள்ளிக்கூடங்கள் இருந்தன. கார்மல் ஒரு பேர்போன பள்ளிக்கூடம். குறிப்பிடத் தகும்படி நான் படித்த முதல் பள்ளிக்கூடம். 6 முதல் 9பது வரை. கிராமங்களைவிட்டு வெளியே செல்லச்செல்ல நம்மிடமிருக்கும் கிராமத்தான் நம்மை வீடு மெதுவாக வெளியேறுவான். நம் பார்வை பரவலாகிறது. மாதாகோயில் கெழக்காலே மணல்மேடு மேக்காலே என இருக்கும் நம் ஊரைவிடவும் 'உலகம்' பெருசு எனப் புரிகிறது. நம்ம சிலுவை, சின்னப்பன், லூர்து, லூக்காசை தவிர்த்து ராம், ரஹீம் எல்லாம் இருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

10ஆம் வகுப்பு முடித்ததும் வாழ்க்கையில் பெரிய திருப்பம். 'சாமியார்' (பாதிரியார்)ஆகவேண்டும் எனச் சொல்லி வட ஆர்காட்டில் திருப்பத்தூரரிலிருக்கும் 'டான் போஸ்கோ' நிறுவனங்களை நிறுவி கண்காணிக்கும் சலேசிய சபை குருத்துவப் பள்ளியில் சேர்ந்தேன். இளைஞர்களை தங்கள் சேவையின் மையமாய் வைத்து செயல்படுகிறார்கள் சலேசியர்கள். சென்னையில் சில 'அன்பில்லங்களில்' குப்பைக் காகிதம் சேர்த்து பிழைக்கும் மாணவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும், மேல்தட்டு மாணவர்கள் படிக்கும் எக்மோர் டான் போஸ்கோவை நிர்வகிப்பவர்களும் இவர்கள் தான்.

டான் போஸ்கோவில் என்னிடம் மீதி ஒட்டிக்கொண்டிருந்த கிராமத்தானையும் கழட்டிவிட்டேன். கவிதை, கதை, காமெடி, நடிப்பு என இரண்டு வருடங்களில் புதுமையான அனுபவமாயிருந்தது பள்ளிப்படிப்பு. 'தன்னம்பிக்கை' எனும் மந்திரம் கற்றேன். 10ஆம் வகுப்புவரை தமிழில் படித்துவிட்டு 11, 12 ஆங்கில வழிப்பாடம். அதிலும் ஜெயித்தேன். பள்ளியில் மூன்றாவதாக தேர்ந்தேன். குறுகிய காலத்தில் செம்மையாக ஆங்கிலம் படிக்க, அந்த 30 நாட்கல் புத்தகம் தவிர, ஒரு வழி கண்டுபிடித்தேன். நாம் தமிழில் நன்றாக அறிந்த விஷயம் ஏதாவது ஆங்கிலத்தில் இருக்கிறதா எனத் தேடினேன். பைபிள் கிடைத்தது. இப்படித்தான் ஆங்கிலம் கற்றேன். 10ஆம் வகுப்பில் டீச்சர் தந்த ஆங்கில இலக்கணப் பாடங்கள் உதவின.

+2 முடித்து இரண்டு வருடம் தொடர்ந்து பாதிரியார் படிப்பு. திடீரென மனமாற்றம். செமினேரி விட்டு வெளியேறினேன். இது என் வாழ்க்கையில் சுகமான ஒரு தோல்வியாக அமைந்தது.

1993 சென்னை வந்து என் மைத்துனரின் மிலிட்டரி ஹோட்டலில் தங்கி பில் போட்டுக் கொண்டே கணிணி படிப்பும். சர்ச் பார்க்குக்கு நேர் எதிராய் மாடியில் இருந்தது அந்த ஹோட்டல். கிராமம், செமினரி என சிறு குட்டையிலிருந்த மீனைத்தூக்கி காவிரி(கூவம் என்றும் சொல்லலாம்) ஆற்றில் விட்டதுபோல வாழ்க்கை ஓடியது. இந்த நாட்கள் அதிகம் தனிமையில் கழிந்தன. இதுபோல ஹோட்டல்களில், புகையும் அழுக்கும் படிந்த அறைகளில் தங்கிக்கொண்டு, கூரையில்லாத கழிவறையில் கழித்து, குளித்துக்கொண்டு வாழும் அனுபவம் எல்லொருக்கும் வாய்க்கவேண்டுமென நினைக்கிறேன்..வாழ்த்துகிறேன். எங்கேயும், எதையும் சாதிக்கமுடியும் எனும் நம்பிக்கையைத் தந்தன இந்த நாட்கள்.

1993 சென்னை லொயோலாவில் சூர்யாவுக்கு ஜூனியராக வணிகவியல் பிரிவில் இடம் கிடைத்தது. இங்கும் ஒளிர வாய்ப்புக் கிடைக்குமா என ஒன்றரை வருடம் காத்திருப்பு. பின்னர் 'லொயோல டைம்ஸ்' எனும் ஆங்கில வாரப் பத்திரிகை கல்லூரியில் துவங்கப்பட்டது அதன் தலமை எடிட்டாராகும் வாய்ப்பு வந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸில் எங்கள் குழுவை வைத்து கலந்தாலாய்வு நடத்தி படத்தோடு கட்டுரை வந்தபோது அந்த முட்டத்து கிராமவாசி என்னைவிட்டு வெகுதூரம் போயிருந்தான்.

மூன்றாம் வருடம் ஐக்கஃப்(AICUF) எனும் ஒரு மாணவர் இயக்கத்தின் ஆங்கிலப் பிரிவுக்கு தலமை பொறுப்பு. அதில் பெரிதாய் ஒன்றும் சாதிக்கவில்லை என்றாலும் முதன்முறை ஒரு பெரிய உலகளவிலான அரசியல் இயக்கத்தின் அறிமுகம் கிடைத்தது. திபெத் மாணவர்கள் சங்கமும் ஐக்கஃபும் சேர்ந்து திபெத் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினோம். மேடையில் பல ஜாம்பவான்களோடு சேர்த்து எனக்கும் மரியாதை கிடைத்தது. சாயுங்கால செய்தித்தாளின் என் பெயரை கடித்துக் குதறி ஒரு செய்திக் குறிப்பும் வந்திருந்தது.

லொயோலா போன்ற கல்லூரியில் மேல்தட்டு கீழ்தட்டு நடுத்தட்டு என்று தெளிவாக மாணவர்களை அடையாளம் காணமுடியும். நம்ம எல்லாருக்கும் பொதுத்தட்டு.

இன்னும் இரண்டு வருடம் லிபாவில்(LIBA) மெலாண்மை. முதல் முதலாய் பெண்களோடு படித்த அனுபவம். இனிய தோழிகளின் பழக்கம் இன்னும் தொடர்கிறது. தோழர்கள்? சொல்லவே வேண்டாம். ஒரு தோழியின் வீட்டுக்கு வாராவாராம் 'விடாது கறுப்பு' பார்க்கப் போவோம். இன்னொருத்தியின் கைனட்டிக் ஹோண்டாவில் சம்மர் ப்ராஜெக்ட். தோழியின் டால்ஃபின் காரை எடுத்து முதன் முதலில் இரண்டாம் கீயரிலேயே ஓட்டிக் கொண்டிருந்தது, முப்பதுபேராய் 'While you were Sleeping' எனும் மெல்லிய காதல் படத்துக்குப் போயிருந்து கத்தி கலாட்டா செய்து அங்கிருந்த தீவிர 'பீட்டர்களை' எரிச்சலூட்டியது, தி. நகர் அருணாவில் கூடியது, நள்ளிரவில் அடையார் பீச்சில் போலீஸ் துரத்த,"மச்சான் ஏ.சீடா"(Asst. Commissioner)எனக் கத்திக்கொண்டே ஆளுக்கொரு திசைநோக்கி ஓடியது என நினைவுகள் பல. இவற்றிற்கு மத்தியில் படிப்பும்.

கல்லூரி முடித்ததும் மென்பொருள் வித்தகர் வேலை கிடைக்குமா எனத் தேடினேன், மென்பொருள் விற்பனர் வேலைதான் கிடைத்தது. பல்லைக் கடித்துக்கொண்டு கிடைத்த வேலையை செய்யவேண்டியதாயிற்று. சில வருடங்கள் விற்பனராய் வேலை. கடினமான வருடங்கள் அவை. ஞாயிறு எப்போது வரும் எனும் ஏக்கத்திலேயே வார நாட்கள் கழிந்தன. விருப்பமில்லாத ஒரு வேலையை செய்வது எத்தனை கடினமான சுமை?

ஒருபோதும் வெளிநாடு போய் பணம் சேர்க்க வேண்டுமென்றோ பெரிய பணக்காரனாகவேண்டுமென்றோ நான் நினைத்ததில்லை. நானும் என் நண்பனும் சொல்லிக்கொள்வோம், '12 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தால் போதும். கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்' என்று. வாழ்க்கையில் விதி விளையாடியது, நண்பர்கள், உறவினர், தாய், தந்தை என சந்தோஷமாக வாழ்ந்திருந்தேன். மென்பொருள் படிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினேன். சிறிது நாட்களிலேயே அமெரிக்காவிற்கு அனுப்பப் பட்டேன்.

சின்ன வயதில் சிவந்தமண்ணில் விளையாடிக்கொண்டிருக்கும்போது சில நேரங்களில் திருவனந்தபுரம் நோக்கிப் பறக்கும் விமானங்களை," ஐ ஏரோப்ளேன்" என, அரைக்கால்சட்டை நழுவுவதயும் மறந்து துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறோம். முதன் முதலில் விமானத்தில் ஏறிய போது ஏனோ ஜீன்சை மேலே இழுத்து விட்டுக்கொள்ளத் தோன்றியது.

சிக்காகோ வந்திறங்கினேன். உலகம் ரெம்ப பெருசு என அந்த 18 மணி நேர பயணத்தில் புரிந்தது.

நாட்கள் ஏனோ நமக்காய் காத்திருப்பதில்லை. ஒருநாள் இந்தப் பெண் பிடித்திருக்கிறதா எனும் மின்னஞல் புகைப்படத்தோடு வந்தது. சிக்காகோவில் இருந்துகொண்டே சென்னையில் பெண் பார்க்கும், திருமணத்துக்கு கூட நேரமில்லாத பல மென்பொருள் வித்தகர்களில் நானும் ஒருவன். திருமணம் இனிய அனுபவம். தந்தையானது அதனினும் இனிய அனுபவம்.

மனைவி பிள்ளை என மீண்டும் சிக்காகோ பிரவேசம்.

என் மனைவியின் உந்துததால்தான் எழுத ஆரம்பித்தேன். அவர்தான் என் முதல் ரசிகை. என் முதல் விமர்சகி.

தொலைந்துபோன அந்த முட்டத்து மீனவ கிராமத்தானை தேடிக் கண்டுபிடித்து, அலைகள் பாறைகள் மணல்மேடுகள் எழுதினேன். திரு. செயமோகனின் பாராட்டும், தினமலரின் குட்டிக் கட்டத்தில் அங்கீகாரமும் கிடைத்தன.

இன்று ஒரு சிறப்பு ஆசிரியராய் தமிழோவியத்தில் எழுதும்போது எங்க ஊரு பாட்டுத்தான் நியாபகம்வருது.'தாஸ் தாஸ், சின்னப்ப தாஸ் தாஸ்... பாஸ் பாஸ் நீ இப்ப பாஸ் பாஸ்'.

நன்றி!!! என் மனைவி ஷோபனாவுக்கு, தேன்கூட்டுத் தோழர்களுக்கு, தமிழோவிய நண்பர்களுக்கு, வலைப்பதிவர் வட்டத்திற்கு, வாசக அன்பர்களுக்கு.

காட்டில் பூத்த மலர்களை காட்டாறு எங்கெல்லாமோ அடித்துச் செல்வதைப்போல வாழ்க்கை நம்மை நடத்திச் செல்கிறது. ஓஷோ சொல்வதைப்போல 'நீந்தத் தேவையில்லை, மிதந்தாலே போதும்'.

Tuesday, June 27, 2006

கிளிப்பேச்சு கேட்க வா(ங்கோ)

சிக்காகோவில் அந்துமதியும் லென்ஸ்மாமியும்

(போனவார தமிழோவியத்தில் சிறப்பாசிரியராய் எழுதியது)

"காது அடைச்சிருக்கு, நீங்க பேசினதே கேட்கல மாமி." அந்துமதி பக்கத்து சீட்டிலிருந்த லென்ஸ்மாமியிடம் சொல்ல, "இல்ல இன்னும் இருபது நிமிஷத்துல சிக்காகோ போயிரலாம்னு சொன்னேன்" .

"ஆமா. ஒஹேர் இன்டர்னேஷனல். அமெரிக்காவிலேயே பிசியான ஏர்போர்ட். தெரியுமோ? அட்லாண்டாவுக்கும் இதுக்கும் வருஷா வருஷம் போட்டி."

" 'ஒஹேர்' என்ன பேர் அது? ஏதாவது அர்த்தம் இருக்கும். இல்ல?"

"'எல்லாத்தையும் விட மேலானது'ன்னு அர்த்தம். ஐரிஷ்"

"எப்படீடி அந்துமதி இப்படி அவிழ்த்து விடற? சதா உன்ன மாதிரி என்சைகக்ளோப்பீடியாவை படிச்சா நான்கூட வாசகி கேள்விக்கு பதிலெழுதலாம் போல."

"தொழில் இரகசியங்களை இந்த மாதிரி பொது இடத்துல சத்தமா சொல்லாதீங்க மாமி."

"ஆமா இந்த சிப்பந்தி கேட்டுட்டு ஒனக்கு போஸ்ட்கார்ட்ல கேள்வி அனுப்பாமப் போகப்போறாங்களாக்கும்?"

"சரி. கேமரா எல்லாம் ரெடியா?"

"ம். டிஜட்டல் காமெராதானே. பாட்டரி ஃபுல்லி சார்ஜ்ட்". அந்துமதி சப்தமாய் சிரித்தாள்.

"என்ன சிரிப்பு?"

"இல்ல இந்த டிஜிட்டல் காமெராவை நான் வாங்கித் தந்ததும் இதுல பிலிம் போட முயற்சி செய்தீங்களே ..."

"பிறக்கும்போதே எல்லாருக்கும் எல்லாம் தெரியுமா என்ன. சரி... நான் கொஞ்சம் மக்குத்தான் ஒத்துக்கிறேன்". சிப்பந்திப் பெண் வந்து சீட் பெல்ட் போட்டிருப்பதை உறுதி செய்துவிட்டுச் சென்றாள்.

"ஏண்டீ மதி இந்த உலக்கைப்பிள்ளை ஏர்போர்ட்டில நிப்பார்ல? எங்கிருந்து பிடிச்ச இவர?"

"இணையத்துலதான். ஒரு வலைப்பதிவாளர். என் ரசிகர்."

"ஓ இன்னுமொரு ஜொள்ளுப்பார்ட்டி. எப்படி பதிவெல்லாம் கலக்குவாரா?"

"எவளுக்குத் தெரியும் அதெல்லாம் படிக்கறதேயில்ல."

"சரி. நம்ம கார்ட்டூன் மூஞ்ச வச்சி எப்படி அடையாளம் கண்டுபிடிப்பாரு?"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
கையில் அந்துமதியின் கார்ட்டூன் முகத்தை கணிணி பதிவெடுத்து ஒட்டிய அட்டையோடு ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
"Mr. உலக்கைப்பிள்ளை?"

"ஓ. அந்துமதி. நேரிலே உங்களை பார்க்க சந்தோஷம். This is Lensmaami i guess."

"ஆமா. உங்களை பார்த்ததிலே மகிழ்ச்சி"

"Welcome to Chicago"

"உலக்கைப்பிள்ளை, உங்களை உலக்கைன்னு கூப்பிடலாம்ல?" உ. பி தலையசைத்தார்."லென்ஸ்மாமிக்கு நம்மாட்கள் ஆங்கிலம் பேசினா அலர்ஜி".

"சாரி சாரி ஐ மீன் மன்னிக்கவும் மாமி. உங்களையெல்லாம் நேரில பார்ப்பேன்னு நினைக்கவேயில்ல. சாரு மெயில் பண்ணினதும் சந்தோஷமாயிட்டேன். பயணம் எப்படி போச்சு?"

"பரவாயில்ல. கொஞ்சம் குளிச்சு ரெஸ்ட் எடுத்தா தேவலாம்."

"இங்கிருந்து வீடு அரைமணி நேரம் வாங்க, கார்ல பேசிக்கலாமே."

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டொயொட்டா கேம்ரி அமெரிக்காவில் 'தேசி' என செல்லமாக அழைக்கப்படும் இந்தியர்களின் பிரதான வாகனங்களில் ஒன்று கேம்ரி, சரி மத்த பிராதான வாகனங்கள் என்னண்றீங்களா அதுவும் கேம்ரிதான் வேற வேற வருஷ மாடல்கள். கூடவே கரோலா, சிவிக் எல்லம் சேத்துக்கலாம்.

உலக்கைப்பிள்ளை காரை ஹைவேயில் செலுத்தினார். "இவ்வளவு ஸ்பீடா போறீங்களே ஆபத்தில்ல?" லென்ஸ்மாமி கேள்விகளைதொடுக்க ஆரம்பித்தாள்.

"55மைல் இது கம்மி வேகம்தான். 75 முதல் 95, 100 வரைக்கும் ஓட்டூவாங்க. பொதுவா எல்லோரும் ரூல்ஸ்படி ஓட்டுறதால பிரச்சனையில்ல. ரோடும், காரும் ஸ்பீடுக்காக வடிவமச்சிருக்காங்க."

"இதென்ன தலைக்கு மேல ஹைவேக்கு குறுக்க கட்டிவச்சுருக்கான்?"


"அது ஒயாசிஸ் மாமி."

"என்ன கத வுட்றீங்க. ஒயாசிஸ் பாலைவனச் சோலையில்ல?"

"ஆமா. தூரப் பயணங்கள்ள ஹைவேலிருந்து வெளியேறிப் போய் பொருட்கள் வாங்கமுடியாதுல்ல அதான் இப்படி ஹைவேக்கு மேலயே கட்டி வச்சுருக்காங்க."

"நம்ம ஊரு பரோட்டா கடை மாதிரின்னு சொல்லுங்க"

"அதேதான் அது ரோட்டுக்கு சைடுல இருக்கும் இது தலைக்கு மேல பாலம் மாதிரி. வெறும் சாப்பாடு மட்டுமில்லாம மற்ற சில பொருட்களும் கிடைக்கும்."

"ஸ்டார் பக்ஸ்ல ஒரு காப்பச்சீனோ வாங்கிட்டுப் போலாமே?" மதுமிதா கேட்டாள்.

"ஏண்டி இப்படி மாறிட்ட. ஊருல காப்பி டீயே குடிக்க மாட்ட. பித்தமுன்னு யுத்தம் செய்வ, ஸ்டார் பக்ஸ்னா பித்தமெல்லாம் சுத்தமாச்சா? போயி அவனுக்கு கொஞ்சம் 'BUCKS' அளந்துட்டு வரலாம் வாங்க"

எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்க வண்டி ஒயாசிஸ் நோக்கி நகர்ந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நேப்பர்வில், அமெரிக்காவில் முதன்மையான சில பள்ளிக்கூடங்களை கொண்ட இடம். சிக்காகோவிலிருந்து சுமார் 30மைல் மேற்கே. இந்தியர்கள் பலர் வசிக்குமிடம். அமெரிக்காவிலேயே வாழ்வதற்கு மூன்றாவது சிறந்த இடமாம். உலக்கைப்பிள்ளை அங்கேதான் தங்கியிருந்தார்.

வீடு வந்ததும் ஷவரில் குளியல் போட்டுவிட்டு எல்லோரும் வெளியே போக ரெடி.
"உலக்கை. இப்போ எங்கப் போறோம்?"

"இங்க அரோரால வெங்கடேஸ்வரா கோவில் ஒன்னு இருக்கு. ரெம்ப அழகான கோயில்."

"ம்..www.balaji.org பாத்துருக்கேன். ஏதாவது கிளப்புக்கு கூட்டிட்டு போவீங்கன்னு நெனச்சேன். இங்கேயும் கோவிலா? லென்ஸ்மாமி ஏதாச்சும் சொன்னாளா?"

"இல்ல அந்துமதி, கோவிலுக்கு போயிட்டு பக்கத்திலேயே ஹாலிவுட்டுன்னு ஒரு காசினோ இருக்கு. அங்கே போய் சூதாடிட்டு வரலாம்"

"இப்பத்தான் நம்ம வழிக்கு வர்றீங்க"

"ஸ்வாமி நாராயணா கோயில்?" லென்ஸ்மாமி கேட்டாள்.

"போலாமே. மதி அந்தக் கோவில் நீங்க கட்டாயம் பாக்கணும். இங்க அரோராரலதான் இருக்கு. ரெம்ப அழகான கோவில். அலுவலக கட்டிடம் கேரளா ஸ்டைல் மர வேலைப்பாடோடையும், கோவில் முழுதும் க்ரானைட்ல அழகான வேலைப்பாட்டொட கட்டியிருக்காங்க."

"'ஸ்வாமி நாராயணா' கேள்விப் பட்டமாதிரி இருக்கே."

"BAPSன்னு ஒரு அமைப்பு. ரெம்ப நல்ல சமூக சேவையெல்லாம் செய்றாங்க.http://www.swaminarayan.org/ இவங்க லண்டன் கோவில் ரெம்ப பிரசித்தம்"

"சரி அப்ப அதையும் பாத்திரலாமே".

"லெமாண்ட்ல ஒரே இடத்துல ரெண்டு கோயில்கள் இருக்கு."

"இஸ்க்கான்?" மதி கேட்டாள்.

"ஆமா இஸ்கான் கோவில் ஒண்ணு டவ்ண் டவுன் பக்கம் இருக்கு."

"மொத்ததுல சிக்காகோவ்ல 'தேசிகள்' நிறைய."

"ஆமா. இங்க திவான் தெருவில முழுதும் இந்திய அல்லது பாக்கிஸ்த்தானிய கடைகள்தான் இருக்கும். அங்கபோனா நம்ம பாண்டிபஜார் நியாபகம் வரும். கிட்டத்தட்ட இந்தியாவில் கிடைக்கும் எல்லா பொருட்களுமே இங்க கிடைக்கும். அதுவும் மத்த லோக்கல் இந்தியக் கடைகளை விட கொஞ்சம் சீப்பா."

"சுதந்திர தின கொண்டாட்டம் இங்க நடக்கும்னு கேள்வி பட்டிருக்கேன்"

"ஆமா இந்தியர்களும் பாக்கிஸ்தானிகளும் போட்டி போட்டு கொண்டாடுவாங்க. காந்தி, ஜின்னா பேருல கடைங்களும் தெருக்களும் இங்க இருக்கு."

"மளிக ஜாமானெல்லாம் நீங்க தனியா போய் வாங்கிக்கங்க இப்ப கோவிலுக்குப் போகலாம்.".
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோவில்களில் பூஜைய விட போட்டோ பிடிப்பதில் லென்ஸ்மாமி பிசி. அந்துமதி ஒரு ஓரத்தில் உட்கார்ந்து அமைதியை ரசித்தாள். உலக்கைப்பிள்ளை இரண்டு அமெரிக்கர்களுக்கு கோவிலை விளக்கிக்கொண்டிருந்தான். பாலாஜி கோவிலில் சாப்பிட்டுவிட்டு (ஆமா அருமையான இட்லி சாம்பார், புளியோதரை வடை தயிர்சாதமெல்லாம் கிடைக்கும்).

காசினோ போய் மாமி ஸ்லாட்மஷினில் தஞ்சமடைந்தாள். மதியும் உலக்கையும் ரூலேயில் நியூமெராலஜியை பரிட்சித்துக்கொண்டிருந்தனர்.

"அந்துமதி மணி என்ன பாத்தீங்களா?"

"11:30"

"இல்ல அதிகாலை ஒரு மணி. நீங்க வாட்ச்ச அட்ஜஸ்ட் செய்யல. ஜெட் லாக்னால உங்களுக்கு தூக்கமும் வரல. அதிகாலை ஒருமணி. நாளைக்கு சிக்காகோ டவுண்டவுன் போகணும்ல"

"நாளைக்கில்ல, இண்ணைக்கு"

லென்ஸ்மாமியை கண்டுபிடிப்பது அவளை இழுத்துவருவதைவிட எளிதாய் இருந்தது. வீடு வந்து சாப்பிட்டுவிட்டு (மாமிக்கு இந்திய நேரப்படி பசித்தது) தூங்கும்போது மணி அதிகாலை 4.00
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பதினொரு மணிக்கு எழுந்து. குளித்து சீரியல் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது மணி 12:30 ஆகியிருந்தது.

"இந்தமாதிரி Suburb", மாமியப் பார்த்து,"புறநகர்லருந்து சிக்காகோ Downtown போகணும்னா லோக்கல் ரயில்ல போறது நல்லது. முக்கியமா ரெண்டு மூணுபேர் போகும்போது அப்படி செய்யலாம். கூட்டமா போகும்போது கார்ல போய் பார்க்கிங் செய்யுறது நல்லது. டவுண்டவ்ன் ஏரியாக்கள்ள பார்க்கிங் அநியாய விலை.

எப்பவுமே புதுசா ஒரு சிட்டி பார்க்கப் போகும்போது மொதல்ல ஒரு பஸ் டூர் அடிக்கிறது நல்லது. அதனால நமக்கு என்ன பாக்கலாம் என்ன வேண்டாம்னு ஒரு ஐடியா கிடைக்கும் மட்டுமல்லாம எல்லத்தையும் ஒரு லுக் விட்டமாதிரியும் இருக்கும்." உலக்கைப்பிள்ளை விளக்க ஆரம்பித்தார்.

"ம் நல்ல ஐடியா. ஆனா உங்களுக்கு புதுசில்லையே?" மதி பாராட்டினாள்.

"ஏய் அந்தா தூரத்துல பெரிய பிள்டிங்கெல்லாம் தெரியுதே..",லென்ஸ்மாமி.

"அதான் டவ்ன்டவுன். அந்த கறுப்பா உயரமான பிள்டிங்தான்...", உலக்கைப்பிள்ளை

"சியர்ஸ் டவர். உலகத்திலேயே மூணாவது உயரமான கட்டிடம். அமெரிக்காவிலேயே முதல்" அந்துமதி அறிவித்தாள்

மாமி சிரித்துக்கொண்டே, "ம்ம்ம் நடமாடும் என்சைக்ளோப்பீடியா",

"முதல்ல சியர்ஸ் போகலாம். சிக்காகோ வந்துட்டு சியர்ஸ் ஸ்கை டெக் (Sky Deck)
போகலன்னா எப்பவுமே அது குறையாத்தான் இருக்கும். அது பெரிய அனுபவம்னு சொல்லமுடியாது ஆனா சியர்ஸ் டவர் மேல போனோம்னு ஒரு பேரு அவ்வளவுதான். கிட்டத்தட்ட 15 லட்சம்பேரு வருசா வருசம் வர்றாங்க"

டிக்கட் வாங்கி உள்ளே போனா சிக்காகோ பத்தி குறும்படம் ஒன்னு, பாத்துட்டு லிஃட்ல படுவேகமா ஸ்கை டெக்குக்குப் போய் மேலிருந்து கீழே பொம்மைகள் போல இயங்கும் உலகத்தப் பார்த்துட்டு இறங்கியாச்சு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நடந்துகொண்டே...
"அடுத்தது 'மில்லேனியம் பார்க்' . மூணு உலகப் புகழ்பெற்ற ஆர்டிஸ்ட் திறமைய காமிச்சுருக்காங்க. இங்கிருந்து நடந்தே போகலாம்."

"அதுல அனிஷ் கப்பூர்னு ஒரு இந்தியரும் சரியா?"

"ஆமா மதி. அவரு ஒரு உலோக முட்டைய வடிவமச்சிருக்காரு. அந்த உலோக முட்டையில சிக்காகோவின் உயர்ந்த கோபுரங்களின் பிம்பம் ஓவியமா தெரியும். இந்த பார்க்கோட வடிவமைப்பே ரெம்ப மார்டனா தெரியும். கொஞ்ச தூரம்தான் நடந்தே போகலாம்".

"மதி அங்க பாரேன் எவ்ளோ பெரிய முட்ட?" பின்னால் கொஞ்சம் தள்ளி வந்துகொண்டிருந்த லென்ஸ்மாமி குரல் கொடுத்தாள்.

"அதோ இங்கிருந்தே தெரியுதே."

வேகமாக நடந்து மில்லேனியம் பார்க் சென்றனர்.

"பசிக்குதே." லென்ஸ் மாமி முகம் சுளித்தாள்.

உலக்கைப் பிள்ளை மணி பார்த்தார் 3மணி. "சரி...வாங்க போய் கொட்டிக்கலாம். ஒரு விஷயம். ஒரு இடத்த சுத்தி பார்க்க போகும்போது டைம் ரெம்ப முக்கியம். அதனால அதிகமா டைம் எடுக்கிற ரெஸ்டரண்டுக்குப் போய் காத்திருக்காம. ஃபாஸ்ட் ஃபுட் போறதே நல்லது.

"ம்ம் அதுவும் சரிதான். மெக் டானல்ட்ஸ்லேயே சாப்பிடலாம்." மதி ஆமோதித்தாள்.

"சரி வெஜொட்டேரியன்?" மாமி கேட்க,"கிடைக்கும். வாங்க" என்றார் உலக்கை.
சாப்பிட்டதும் 'நேவி பியர்' போக ஒரு டாக்சி பிடித்து வந்து சேர்ந்தனர்.

"என்னப்பா இது? ஏறினதும் இறக்கிவிட்டிட்டு 9 டாலர் வாங்கிட்டுப் போறான்?. நம்ம ஊருல 405 ரூபாய்க்கு சென்னை டு கன்னியாகுமரி போயிடலாமே."

"மதி பாத்தீங்களா இங்க வந்ததுமே லென்ஸ்மாமிக்கு 45ஆம் வாய்ப்பாடு ஈசியா தெரிஞ்சுடுச்சு." மதி சிரிக்க மாமி முறைத்தாள்.

"நேவி பியர் சிக்காகோவில இன்னொரு பெயர்போன இடம்."

"ஏன் பெயர் போன இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு வர்றீங்க. பெயர் இருக்கிற இடமா எதுவும் தெரியாதா?"

மாமியின் கடியை ரசித்துக்கொண்டே தொடர்ந்தார் உலக்கைப்பிள்ளை.

"இங்கே ஐ-மேக்ஸ் தியேட்டர் இருக்கு, ஜயண்ட் வீல், விர்ச்சுவல் ரியாலிட்டி ஷோ எல்லாம் இருக்கு. இங்கிருந்து சின்ன சொகுசு கப்பல்ல கொஞ்சதூரம் லேக் மிச்சிகன்ல க்ரூஸ் போயிட்டு சிக்காவோவின் இரவழக தண்ணிலிருந்தே ரசிக்கலாம். அதுக்கும் டிக்கட் வாங்கிருக்கேன். அதுல இன்னுமொரு சஸ்பன்ஸ் இருக்கு அத அப்புறமா சொல்றேன்"

நேவி பியர் நுழைவு வாயிலருகே வந்தனர்.

"இது எங்கேயோ பாத்திருக்கேனே?" அங்கே பெஞ்சில் பெட்டியோடு அமர்ந்திருந்த ஆளைக் காட்டி மதி கேட்டாள்.

"ஓ...இது ஃபாரஸ்ட் கம்ப் ஹீரோ போல செட் அப். இந்த உணவகத்துக்கு அந்த படத்துல வரக்கூடிய Bubba Gump ரெஸ்டாரண்டுன்னு பேரு. பொதுவா சம்மர் டைம்ல இந்த ஃபாரஸ்ட் கம்ப் இங்க உக்கார்ந்திருப்பார்"

"வாங்க அந்த ஜையண்ட் வீல் போயிட்டு உள்ளே ஐ-மேக்ஸ்ல படம் பாக்கலாம்." அந்துமதி அழைத்தாள்.

ஐ-மேக்ஸின் 60x80 அடி திரையில் முப்பரிமாணப் படம் பார்க்கும்போது லென்ஸ்மாமிக்கு மெய் சிலிர்த்தது.

"டிவிக்கு ரெம்ப பக்கத்துல போய் நின்னு பாத்தா ஐமாக்ஸ் மாதிரி இருக்காது?"

"அப்படி ஐ-மேக்ஸ் பாத்தா ஐ-லாஸ் ஆயிரும். ஏற்கனவே சோடாப் புட்டி"

வெளியே வந்ததும் பாப்கார்ன் வாங்கி விட்டு அங்கே நடக்கும் கோமாளிகளின் வித்தைகளை கண்டு களித்தனர்.

லென்ஸ்மாமி பஞ்சுமிட்டாய் வேண்டுமென அடம் பிடித்து வாங்கிக் கொண்டாள்.

"இது குழந்தைகளுக்கான இலவச க்ளவுன் ஷோ. இதில்லாம பெரிய சர்க்கஸ்கூட நடக்கும். நம்ம கப்பலுக்கு நேரமாச்சு போலாமா?"

பியர் நோக்கி நடந்தனர். லென்ஸ்மாமி வழிநெடுக சின்ன சின்ன கடைகள் இருப்பதை நோட்டமிட்டுக்கொண்டே நடந்தாள்.

மதியும் உலக்கையும் கப்பலில் ஏறும் இடத்துக்கு வந்தனர். லென்ஸ் மாமியக் காணோம்.
"எங்க போனாங்க இந்த மாமி." மதிக்கு எரிச்சல்,"போட்டோ எடுக்கிறேன் பேர்வளின்னு வாய் பாத்துட்டே கோட்டைய விடுறதுதான் இவங்க வேலை".

"ஐயையோ இன்னும் 2 நிமிஷத்துல கப்பல் கிளம்பிடும். என்ன செய்யலாம்?" டிக்கட்டை காற்றில் ஆட்டிய படியே கைப்பிள்ளை கவலையுடன் கேட்டான். 120 டாலரின் மதிப்பு... 45ஆம் வாய்ப்பாடு மனதுக்குள் ஓடியது.

"வாங்க நாம போகலாம். மாமி இங்கயே இருக்கட்டும்."

உலக்கைப்பில்ளை தயங்கினார்."வாங்க போகலாம்." கையை பிடித்து இழுத்தாள்.

இரண்டுபேரும் கடைசி பயணிகளாக கப்பல் ஏறினர். ஒரு குலுக்கோடு கப்பல் பயணித்தது.
கொஞ்சம் தொலைவிலிருந்து அதுவும் குட்டிக் கடல் போல விரிந்து கிடக்கும் ஏரிமேல் பயணித்துக்கொண்டு சிக்காகோவின் ஸ்கை லைனை ரசிப்பது தனி அனுபவம்.

"மதி. பாவம் மாமி. எங்க இருப்பாங்க?"

"அவங்ககிட்ட இண்டர்நேஷனல் க்ரெடிட் கார்ட் இருக்கு. இந்த மதிரி தனியா போன அனுபவம் நிரைய இருக்கு உங்க கைபேசி நம்பர் இருக்கு இதுக்கு மேல என்ன வேணும்?"
சொல்லி முடிக்கவும் உலக்கைப் பிள்ளையின் MP3 கைபேசியில் வசீகராவின் துவக்க புல்லாங்குழலிசை ஒலித்தது.

"மாமி?"

"ஆமா சாமி. நைசா கழட்டி உட்டுட்டு ஜோடியா கப்பல்ல பயணமா?"

"அப்படியில்லீங்க.."

"ம்ம் வழியாதீங்க...பரவாயில்ல நான் இங்க உங்களுக்கு வெயிட் பண்றேன்."
உலக்கைப் பிள்ளை நிம்மதியானார்.

தமிழ்நாடு, இலக்கியம், வலைப்பதிவு, திராவிடம், ஆரியம், அடுக்குமாடி, நீர், நையகரா, வயகரா, கட்டடவியல், சர்தார்ஜோக் என உரையாடி முடியும்போது இருண்டுவிட்டிருந்தது.

"கப்பல் கரைக்கு வந்துடுச்சா?" மதி கேட்டாள்.

"இல்ல கரைக்குப் பக்கத்துல நிக்குது. இப்பத்தான் நான் சொன்ன சர்ப்ரைஸ் மேட்டர் வரப்போகுது."

"என்ன.." மதி கேட்குமுன் வானை நோக்கி ஒரு ஒளிக்கீற்று பறந்து வெடித்து ஒளிக் கோலமிட்டது. "ஓ வாணவேடிக்கை. இந்த இரவுக்கு அருமையான ஒரு முடிவு இதுதான்."
பல வண்னங்களில் வானில் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன வாணங்கள்.

"ஒண்ணு கவனிச்சீங்களா?"

"என்ன."

"வாணங்கள் வெடிப்பதும் ஒளிர்வதும் இசையோட ஒருங்கிணைக்கப் பட்டிருக்கு."

"ஆமா கவனிச்சேன். ஒரு ஒளி நாடியம் போல இருக்கு. நல்ல அனுபவம் உலக்கைப்பிள்ள. ரெம்ப தாங்ஸ்."

கப்பல் கரைக்கு வந்ததும் மாமியைத் தேடினர்.

"அந்த ரெஸ்டாரண்ட்ல ஒரு இந்திய பெண்..?"

"ஆமா.. மாமியேதான்"

காரில் ஏறி $20 பார்க்கிங் கட்டிவிட்டு ஹைவேயை எட்டும்போது மணி இரவு 10 ஆகியிருந்தது.

"மாமி. நாங்க கப்பல்ல இருந்தப்ப என்ன செஞ்சீங்க?"

"இங்க ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி ஷோ ஒண்ணு இருக்கு. ராக்கட்ல சிக்காகோவ சுத்தி வர்ற மாதிரி அமைச்சிருக்காங்க. இடையே மழைத்தூறல், ராக்கட் வெடிக்கிற மாதிரியெல்லாம் இருந்துச்சு. என்ன முயற்சி செய்தாலும் அது செயற்கைன்ற எண்ணம் சீக்கிரம் மறந்துபோகுது. உண்மையிலேயே பறக்குற மாதிரி அனுபவம்."

"அப்புறம்."

"அப்புறம் நடந்ததச் சொன்னா நீ பொறாமப் படமாட்டியே?"

"ம் அப்படி என்னது?"

"ஒரு வெள்ளக்காரன் என்னைப் பார்த்து சைட் அடிச்சிட்டிருந்தான். Would you like a drink?னு கேட்டான் 'Dinner?' அப்படீன்னேன் விளையாட்டா. ஓக்கே சொல்லிட்டான்."

"ஜப்பான்ல அந்த சுமோ வீரர்கூடப் போயி நூடல்னு நெனச்சி பாம்பத்தின்ன மாதிரி இங்க ஒண்ணுமில்லையே?" மாமி செல்லமாய் முறைத்தாள்.

"ஒரு வழியா டவ்ன் டவுன் பாத்தாச்சு. ஒரு குட்டி டேட்டிங்கும் ஆயாச்சு." மாமி சலித்துக்கொண்டாள்.

"இல்ல இன்னும் நிறைய இருக்கு பாக்க. இங்க உள்ள உலகப் புகழ் ஃபீல்ட் மியூசியம் , ஷெட் அக்குயேரியம் , ஹான்காக் கோளரங்கம் இதெல்லாம் கட்டாயம் பார்க்கவேணாமா?" உலக்கைப்பிள்ளை கேட்டார்.

"நாளைக்கு தமிழ் சங்க மீட்டிங் இருக்குதே." அந்துமதி சொன்னாள், "அடுத்தநாள் கிளம்பி எல்.ஏ"

"ஆமா மறந்தே போயிட்டேன்."

"திரும்ப வரும்போது ஒருநாள் கிடைக்குதே அப்ப பார்க்கலாம். சரி இங்க ஒரு நாள் ட்ரிப் வரும்போது என்ன பார்க்கலாம்?"

"கட்டாயம் சியர்ஸ் டவர்ஸ். கூட்டம் அதிகமாயிருந்தா அவாய்ட் பண்றது நல்லது. நேரே ஒரு குட்டி நடை போட்டு மில்லேனியம் பார்க். அங்கிருந்து கார்ல அல்லது டாக்சில நேவி பியர். நேவி பியர்லிருந்து சிக்காகோ ரிவர்ல ஒரு குட்டி போட் டூர். சிக்காகோவின் கட்டிடக்கலை பற்றி விளக்கும் டூர். பட்ஜட் அதிகமாயிருந்தா மதியும் நானும் போன க்ருயிஸ் போயிட்டு ஃபயர்வொர்க்ஸோட முடிக்கலாம். இல்ல ஐ-மேக்ஸ், ஜயண்ட் வீல்னு சிம்பிளா முடிக்கலாம்."

"அப்ப மியூசியமெல்லாம்?"

"அது இன்னொரு பக்கம் இருக்கு. ஒவ்வொண்ணும் குறைந்தபட்சம் அரை நாளாவது எடுக்கும். அதுக்கேத்தாப்ல ப்ளான் பண்ணணும். சிட்டி பாஸ் வாங்கிகிட்டு இங்க யார் வீட்டுலயாவது டேரா போட்டுட்டு நிதானமாவும் சிக்காகோவ பாக்கலாம்."

"பாத்தியா போற போக்குல நம்மளத் தாக்கிட்டாரு. உலக்கை.", மாமி சிரித்துக்கொண்டே சொன்னாள்.

"ஆனா எப்ப வந்தாலும் ஒரு அரை மணிநேரம் இன்டர்நெட்டில் மேஞ்சு ஃபயர்நொர்க்ஸ் இருக்கா, சர்க்கஸ் ஏதாவது ஓடுதா, ஐ-மாக்ஸ்ல என்ன படங்களிருக்குன்ற மாதிரி விபரங்கள் எடுத்துக்கிறது நல்லது. எந்த இடத்துக்குப் போனாலும் இது உதவும்."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`
நேப்பர்வில் வந்து இண்டியன் ஹார்வஸ்ட் உணவகத்தில் சாப்பாடு.

"ஆமா அதென்ன பேரு உலக்கைப்பிள்ளைன்னு?"அந்துமதி கேட்டாள்

"நான் சொல்றேன்", மாமி முந்தினாள்,"உங்கபேரு கைப்புள்ள உங்கப்பா பேரு உலகநாதன்.. 'உல' இனிஷியல். சரியா?"

"ஐயோ மாமி கடிக்காதீங்க. 'உலக்கைப்பிள்ளை' என் புனை பெயர். இணையத்துல புனை பெயர்ல எழுதுனா என்ன வேணா எழுதலாமே? உங்க கார்ட்டூன் மூஞ்சி மாதிரிதான் இதுவும்."

"அப்ப உங்க உண்மையான பேரு?"

"சிறில் அலெக்ஸ்".




Monday, June 26, 2006

புதுப்பேட்டை

'விளிம்பு மனிதர்களை' படம்பிடிப்பதில் செல்வராகவன் திறமைசாலி. ஒன்று சமுதாயத்தின் விளிம்பில் அல்லது உணர்ச்சிகளின் விளிம்பில் இவரது படைப்புக்கள் திரை உலா வரும். புதுப்பேட்டையும் அப்படி ஒரு முயற்சியே.

சேரியிலிருந்து பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் கொக்கி குமாரின் வாழ்க்கை ஏதோ சாக்கடையில் சிறுவர்கள் விட்ட காகிதக் கப்பல் போல பயணிக்கிறது. அவன் எண்ணிப்பார்த்திராத பரிமாணங்களில் ஒவ்வொரு நாளும் புலருகிறது. பிச்சைக்காரனாகி, அடியாளாகி, தாதாவாகி, கணவனாகி, தந்தையாகி ... என பல திருப்பங்கள். சாக்கடையில் சில அழுகாத பழங்களும், சற்றுமுன் வீசப்பட்ட பூக்களும் இருக்குமென்றாலும், நாற்றமே அதிகம்.

தமிழ் திரையுலகின் தொழில்நுட்பத்திறனுக்கு மற்றுமொரு உதாரணம் இந்தப்படம். இயற்கையான சூழலில் ஒவ்வொரு காட்சியும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது அலறிக்கொண்டு வரும் பாடல்கள் விதிவிலக்கு.

ஸ்னேகாவின் பாத்திரம் கனமான 'விலைமாது' பாத்திரம். அழகாய் செய்திருக்கிறார். சோனியா அகர்வால் வழக்கம்போல முகத்தசைகளுக்கு அதிகம் வேலையில்லாமல் செய்திருக்கிறார். இரு நாயகிகளும் நாயகனை எதிரெதிர் வழியில் நடத்துகிறார்கள். ஒருத்தி நாயகனுள்ளிருக்கும் நல்லவனை நாட, இன்னொருத்தி கெட்டவனை உசுப்புகிறாள்.

தனுஷின் நடிப்பில் புதிதாய் எதுவுமே தெரியவில்லை. நீளமான படம் என்பதால் சில நேரங்களில் இவரின் மாற்றமில்லாத (Monotonous) உச்சரிப்பு எரிச்சலூட்டுகிறது. இன்னும் சில ஒத்த கததபாத்திரங்களின் உச்சரிப்பும் ஒரேபோலிருப்பாதால் தவறு செல்வராகவனுடையது எனத் தெரிகிறது.

கொடூரமான காட்சிகள் சில தவிர்க்கமுடியாமல் சேர்க்கப்பட்டுள்ளன. சில உண்மைகள் பொதுவாய் கசக்கத்தான்செய்கின்றன.

குடும்பத்தோடு...? கொஞ்சம் கடினம்தான். நிச்சயமாக செல்வராகவனின் நோக்கம் குடும்பப்படமல்ல.

கமல் பாடியிருக்கும் பாடல் பிரமாதம். யுவன் இசை முத்துக்குமார் வரிகள் இதம் சேர்க்கின்றன. காமெரா மேனை படத்தில் காணவில்லை அத்தனை இயல்பான ஒளிப்பதிவு.

ரவுடி, ரவுடிகள், அரசியல், அரசியல்வாதிகள் என குறுகிய வட்டதில் படம் சுழல்வதாலும் கொஞ்சம் நீளமானதாலும் சில நேரம் அயற்சியடைய வைக்கிறது.

'சென்னையில் இதுபோல மனிதர்களுண்டா?' என பலரையும் வியக்கவைக்கும். இதுவே இந்தப்படத்தின் சாதனையும், சவாலும்.

Sunday, June 25, 2006

வெறுப்பு

என் சதையைக் கிழிக்கும் சாட்டையடி சத்தத்தில்
என் காதுகள் செவிடாயின...
'கட்டவிழ்' எனும் என் கூக்குரல் எனக்கே கேட்கவில்லை.
பலகாலம் பலபேரை அடித்துக்கொண்டிருக்கிறான்
இவன் காதிலா நம் முனகல்கள் விழும்?

என் உடல் துளைக்கும் தோட்டாக்களை விடவும்
அவன் இதயம் கடினமானது

என் இரத்த மை கொண்டு
என் உடலிலேயே எழுதுகிறான்
"நீ ஈனன் என்று".

என் உடல் உழுது,
இரத்தமிறைத்து
இவன் விதைத்துச்செல்லும் தோட்டாக்கள்
விருட்சமாகும்போது,
இப்போது இயலாமல் நான் விடும்
என் மூச்சுக் காற்று
கவசமணிந்த இவன் நெஞ்சைத் துளைக்கும்,

அப்போது இவன் முனகல் கேட்காதபடி
என் புலன்கள் மரத்துப் போயிருக்கும்.

Saturday, June 24, 2006

6...6...6

சமுத்ரா அழைத்ததன் பேரில்..


1.தேவர் மகன்
2. விருமாண்டி
3. அன்பே சிவம்
4.
மகாநதி
5.
நாயகன்
6.
அவ்வை ஷண்முகி

1.
Godfather-I
2.
Godfather - II
3. Mississippi Burning
4.
Rainman
5. Wizard of Oz
6.
Sound of Music

1.
முட்டம்
2. சிக்காகோ
3.
சென்னை
4. திருப்பத்தூர்
5.
லாஸ்வேகாஸ்
6.
வாஷிங்டன் டி சி

1.
SNL
2.
60 minutes
3.
Friends
4.
Everybody Loves Raymond
5.
Seinfeld
6.
America's funniest videos

1.
சிட்னி ஷெல்டன்
2.
மைக்கிள் க்ரைட்டன்
3.
அய்ன் ராண்ட்
4.
டான் பிரவுன்
5.
ஜான் க்ரிஷம்
6. ராபின் குக்

1. செமினரி சேர்ந்த நாள்
2. செமினரியிலிருந்து வெளியேறிய நாள்
3. முதல்முறை விமானத்தில் பறந்த நாள்
4. திருமண நாள்
5. என் மகன் பிறந்த நாள்
6. முதல் கார் வாங்கிய நாள்

1. கார்மல் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
2. டான் போஸ்கோ, திருப்பத்தூர் (வ. ஆ)
3. லொயோலா கல்லூரி,சென்னை
4. லிபா, சென்னை
5. தூய இதய மேல் நிலைப்பள்ளி, கடியப்பட்டினம்
6. அரசு துவக்கப்பள்ளி, மணவாளக்குறிச்சி

1.
ஏ. ஆர். ரஹ்மான்
2. இளைய ராஜா
3. யுவன்
4.
எம்.எஸ்.வி
5. கே.வி.மகாதேவன்
6. வித்யாசாகர்

1.
Yanni
2.
Yenya
3.
Kenny G
4.
The Royal Philharmonic Orchestra
5.
Santana
6.
Secret Garden

1.
the eagles
2.
michael jackson
3.
bee gees
4.
carpenters
5.
abba
6.
eric clapton

1.
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
2.
உனக்கென்ன மேலே நின்றாய்
3.
இசைத்தமிழ் நீ செய்த அருட்சாதனை
4.
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
5.
நாளை இந்த வேளை பார்த்து
6.
என் வானிலே

1. ஏ. எம். ராஜா
2. எஸ்.பி.பி
3. ஏசுதாஸ்
4. டி.எம்.எஸ்
5. பி.பி.எஸ்
6. கிஷோர் குமார்

அட.. இன்னும் மனம் ஆறல... பிடித்தது எத்தனையோ. அதுவும் வாழ்க்கைய ரசிச்சு வாழும்போது பிடித்தவை வெறும் ஆறா?

அடுத்தது எந்த ஆறுபேர அழைக்கலாம்...? புதியவர்கள் ஆறுபேரை அழைக்கலாம்.

1. http://faheemapoems.blogspot.com/ - பாஹீமா
2. http://enkirukalgal.blogspot.com/ - கிறுக்கல்
3. http://ilango2006.blogspot.com/ - இளங்கோ
4. http://maatttu.blogspot.com/ - மாற்று
5. http://oorvalam.blogspot.com/ - ஊர்வலம்
6. http://teenagecollegelife.blogspot.com/ - 18 வயதில்

Friday, June 23, 2006

மதமாற்றமா? மனமாற்றமா?

மதமாற்றம் பற்றிய சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. சில பின்னூட்டவாதங்களையும் (பின்னூட்டம் + வாதம்) படிக்க நேர்ந்தது. இதைப் பற்றி சில எண்ணங்கள்.

ஒரு குட்டிக்கதை.

அழகான இளைஞியும் இளைஞனும் சந்தையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் வேறு யாருமில்லை.
அந்தப் பெண் இளைஞனிடம் "எனக்குப் பயமாயிருக்கிறது." என்றாள்.
இளைஞன் "என்ன பயம்?" என்றான். "நீ எனக்கு முத்தம் கொடுத்திருவியோன்னு பயமாயிருக்கு" என்றாள் பெண்.
"அதெப்படி முடியும் என் தலையில அரிசி மூட்ட இருக்குது, கையில ஆட்டை பிடிச்சுருக்கேன், இந்த இடுக்குல காய்கறி கூட வச்சுருக்கேன். நான் எப்படி ஒன்ன இப்ப முத்தம் கொடுக்கிறது?". இளைஞன் வெகுளியாய் கேட்டான்.
"அரிசி மூட்டைய இறக்கி வச்சுட்டு, ஆட்டை அந்த மரத்துல கட்டிபோட்டுட்டு, காய்கறிக் கூடைய அரிசிமூட்டை மேல வச்சுட்டு வந்து என்னை கட்டி பிடிச்சு முத்தும் தருவியோன்னு பயமாயிருக்கு" என்றாள் அந்தப் பெண்.




கருத்து : நாம் பயத்துல சொல்லும் விஷயங்கள் பல
நேரங்களில் நம் எதிரிக்கு சாதகமாய் அமைகின்றன அல்லது
நாம்தான்
நம்ம எதிரிகளுக்கு பல நேரங்களில் ஆலோசனைகளை தருகிறோம்.


'கட்டாய மதமாற்றம்' எனும் பதம் இப்போ பழக்கத்தில் வந்துள்ளது. மிஷனரிகள் எனப்படும் மதம் பரப்பும் கிறீத்துவ போதகர்கள் 'கட்டாயமாய்' மதம் மாற்றுவதாக பலர் நம்புகிறார்கள்.

உண்மையில் இது சாத்தியமா?

'கட்டாயம்' என்றால் என்ன? பலவந்தமாகவா? அது நிச்சயம் சாத்தியமில்லை. கிறித்துவர்கள் 2%மைனாரிட்டி என்பது ஒருபக்கமிருக்க, பலவந்தத்தம் செய்வதற்கு சரியான (அடிதடி) அரசியல் பின்னணி வேண்டும் என்பதும் அடிதடியில் இறங்கி கிறித்துவத்தில் மக்களை சேர்ப்பது, அதுவும் இந்தியா போன்ற சர்வதேச அரங்கில் எப்போதும் பேசப்படுகின்ற நாட்டில் செய்வது இன்றைய சூழலில் சாத்தியமில்லை. சுதந்திர இந்தியாவில் பலவந்தமாக யாரும் மதம் மாற்றப்பட்டதாக நான் இதுவரைக் கேள்விப் பட்டதில்லை.

பணம் தந்து மதம் மாற்றுகிறார்கள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு? ஒருவருக்கு ஒரு நாள் 1000 கொடுக்கலாம் ஆனா எல்லா நாளும் கொடுக்க முடியுமா? உண்மையில் மதம் மாறினால் காசு கிடைக்குமென்றால் இந்தியாவில், ஏழ்மை அதிகமிருக்கிறபடியால், கிறித்துவர்கள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கவேண்டுமென நினைக்கிறேன். அதுவுமில்லை. ஒரு மிதமான வளர்ச்சியையே கிறித்துவம் கொண்டுள்ளது, மற்ற சில மதங்களைவிட குறைவான வளர்ச்சியே இது.

கிறித்துவராகிவிட்டால் பணக்காரனாகிவிடலாம் என்கிறது யாரோ கனவிலிருந்து விழித்துவிட்டுச் சொன்னது. செயராமன் பதிவைப் படிக்கவும். (இவர் சொல்லும் சில விபரங்கள் சரியானதாக இல்லை என்றாலும்...)

இன்னுமொரு குற்றச்சாட்டு நன்மை செய்வதுபோல ஊருக்குள் வந்து மெதுவாக மதம் மாற்றுகிறார்கள் என்பது. இதற்கு எப்படி விளக்கம் சொல்வதென்று புரியவில்லை.

நல்லது செய்வதில் உள் அர்த்தம் கற்பித்துக்கொண்டு பலருக்கு கிடைக்கும் உதவியை தடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் எத்தனை கிறித்துவ கல்விக்கூடங்கள், சமூக சேவை நிறுவனங்கள், மருத்துவமனைகள் இருக்கின்றன, மதம் மாறினால்தான் சேர்த்துக்கொள்வோமென்கிறதாய் எந்த நிறுவனமும் கூறியதாயில்லையே. அப்படியே மக்கள் தங்களுக்கு நல்லது செய்பவர்கள் பின்னால் சென்றால் என்னதான் தவறு? அன்னை தெரசா எத்தனைபேரை 'கட்டாய' மதமாற்றம் செய்தார்? அவர் செய்யாத சேவையா?

மதமாற்றம் நடப்பதேயில்லை எனச் சொல்வதற்கில்லை. நிச்சயம் நடக்கிறது. ஒவ்வொரு வருடமும். ஏன் கிராமங்களுக்குப்போகவேண்டும்? , சென்னையிலேயே ஒன்றிரண்டுபேர் ஒவ்வொரு கோவிலிலும் (பொதுவாக) ஈஸ்ட்டர் திருநாளன்று மதம் மாறக் கண்டிருக்கிறேன். இவர்கள் எந்தவித கட்டாயத்திர்கு ஆளாக்கப்படுகிறாகள் என்பது அவர்களுக்கும் அவர்கள் கும்பிட்ட, கும்பிடப் போகின்ற கடவுள்களுக்குமே வெளிச்சம்.

என் கல்லூரித் தோழி, இந்து மதம் சார்ந்தவள், கிறித்துவப் பையனை காதலித்தாள், மணமுடித்தாள். அவள் கணவனைவிட இயேசுவை பெரிதாய் நினைக்க ஆரம்பித்துவிட்டாள். நான் எடுத்துச் சொல்லியும் அவளுக்கு தன் தெய்வங்களை விடவும் இயேசுவே பெரிதாய் தோன்றினார்.

உண்மையில் அவளுக்கு என்ன நிகழ்ந்தது? தன் மதம் பற்றிய, அதன் அதிசயிக்கத்தக்க தத்துவ குணாதிசயங்கள் பற்றிய அறிவே இல்லாதிருந்தாள். நம்மில் எத்தனைபேருக்கு இந்துமதம் சொல்லும் தத்துவ இறையியல் பற்றித் தெரியும்? காப்பியங்களையே முழுமையாகத் தெரியாதவர்கள் எத்தனைபேர்.

எதையுமே எடுத்துச் சொல்லும்போது அதற்கு அதிக மதிப்பு இருக்கிறது அல்லது அதிக மதிப்பு இருப்பது போலத் தோன்றுகிறது. அதனால்தான் நல்ல பொருட்களைக்கூட கூவி விக்கவேண்டியுள்ளது. 'கட்டாயம்' என்பதை விட இந்த கூவி விற்கும் தன்மைதான் கிறித்துவ மத மாற்றத்தின் அடிப்படை வழியாக இருக்கிறது. இதற்கு ஜனநாயகத்தில் இடமுண்டு.

கட்டாய மதமாற்றம் செய்பவர்கள் எனப் பார்த்தால் அதை செய்பவர்கள் இரண்டுபேர். நம் தாய் தந்தை. தத்துவார்த்தமாக சிந்தித்தால் இது புரியும். பிறந்து ஒன்றுமறியா குழந்தைக்கு இதுதான் கடவுள், இவன் நம்ம மதம், இது நம்ம சாதின்னு பல வழிகள்ள எண்ணங்களை திணிக்கிறோம், அதை பின்பற்றச்சொல்லி கட்டாயப்படுத்துகிறோம். நாம் நல்லதே நினைத்து இதைச் செய்தாலும் இது ஒரு திணிப்புதான் என்பது உண்மை.

மதமாற்றம் எல்லா மதங்களும் செய்திருக்கின்றன. துவக்கத்திலுருந்தே எந்த மதமும் இப்போது இருக்கும் நிலையில் இருந்ததில்லை. கொஞ்சம் வரலாற்றை புரட்டினால் 'கட்டாய' மதமாற்றம் இல்லாமல் எந்தமதமும் இருக்கவில்லை என உணரலாம்.

மதம் மாறாதே என ஒருவரை கட்டாயப்படுத்துவதற்கும், மதம் மாறு என கட்டாயப் படுத்துவதற்கும் யாருக்கும் உரிமையில்லை.

எனக்குத் தெரிந்தவகையில் கத்தோலிக்க குருக்களும் கன்னியர்களும் மதமாற்றம் செய்ய சுய உந்துதல் உடையவர்களாகத் தெரியவில்லை. பலர் சமூக/ கல்வி நிறுவனங்களில் நமக்கு என்ன பதவி கிடைக்குமெனும் ஏக்கத்திலேயே காலம் தள்ளுகின்றனர். போய் மற்ற மதத்தினருக்கு இயேசுவை அறிவி எனச்சொன்னால் து.கா.து.கான்னு ஓட்டம்பிடிப்பவர்கள் பலர். அநேகம் பாதிரியார்களுக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையே கிடையாதென்பதுபோலத் தெரியும். இவர்கள் போய் மதம் மாற்றுகிறார்கள் என்றால் நம்பமுடியவில்லை.

போப் 'அறுவடை' எனச் சொல்கிறாரே? அறுவடை என்பது இயேசு பயன் படுத்திய பதம். அதைத்தான் இவரும் பயன்படுத்துகிறார். "அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு" இது இயேசு சொன்னது. இதில் எந்தவித தவறும் உள்ளதாகத் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் அதிகம் கூவி வில்லுங்களளெனச் சொல்லுகிறார் அவ்வளவுதான். எல்லோரையும் போட்டுத்தாக்குங்க எனச் சொல்லவில்லை.

இந்தக் கூவி விற்கும் போது பல நேரங்கலில் அடுத்தவர் மனம் புண்படும்படி அவர்கள் விற்பதை (அல்லது வைத்திருப்பதை) தாழ்த்திப் பேசுகீறார்கள் என்பது கண்டிக்கப்படவேண்டியதே. இதைக் கண்டிக்க யாருக்கும் உரிமையுள்ளது. அதேபோல கூவி விற்பவர்களை அடுத்தவர் மட்டம் தட்டலாம்.

தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் நடக்கும்போது, "நீ என் கட்சியில்ல. இங்க வந்து ஓட்டுக்கேட்கக்கூடாது" என யாரையும் உங்களால் தடுக்கமுடியுமா? அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை என நினைக்கிறேன்..

கொஞ்சம் தாறுமாறாகத்தான் இந்தப் பதிவு வந்துள்ளது. தோன்றிய எண்ணங்களை அப்படியே பதித்தேன்.

முடிவாக...

  • கட்டாய மதமாற்றம் என்பது இந்தக் காலத்தில் சாத்தியமில்லை.
  • மதமாற்றம் எல்லா மதங்களிலும் நடைபெற்றுள்ளன; இதில் பல கட்டாய மதமாற்றங்களும்.
  • நம் மதம் பற்றிய அறிவைப் பெற நாம் முயல வெண்டியது அவசியம்.
  • மதம் மாறு எனக் கட்டாயப் படுத்துவதற்கும் மதம் மாறாதே எனக் கட்டாயப் படுத்துவதற்கும் வித்தியாசமில்லை.
  • தன் கடவுள் யார் என்பதை தனி மனிதந்தான் நிர்னயிக்கவேண்டும்.
"ஒருவன் தன் கடவுளை பக்தியோடு வணங்க முடியாவிட்டால் எந்தக்
கடவுளையும் பக்தியோடு வணங்கமுடியாது." - இராமகிருஷ்ண பரமஹம்சர். இதுதான் மதமாற்றம் பற்றிய என் நிலைப்பாடு.

பாஷா இந்தியா - வெற்றிபெற்ற தமிழ் பதிவுகள்

பாஷா இந்தியா நடத்திய இந்திய மொழியிலான வலைப்பதிவுகளுக்கான போட்டியில் வெற்றிபெற்ற தமிழ் பதிவுகள்.


சிறந்த தமிழ் பதிவு (Best Tamil Blog) எண்ணங்கள்
சிறந்த பொழுதுபோக்குப் பதிவு (Best in Entertainment
Category)
சினிமா பாடல்கள்

சிறந்த அரசியல் பதிவு(Political) உள்ளல்

விளையாட்டு(Sports) சதுரங்கம்

தொழில் நுட்பம்(Technology) தமிழ்மணம்

எனக்கு முந்தின பறவை (Early Bird) எனப்படும் முந்திரிக் கொட்டைங்களுக்கான பரிசு கிடைத்துள்ளது. நாந்தான் 10வது பறவை.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.





Wednesday, June 21, 2006

தமிழோவியத்தில்..

இந்த வார தமிழோவியத்தில் சிறப்பாசிரியராய் நான் எழுதிய கட்டுரைகளின் அறிமுகம்

சிவந்தமண் துவங்கி சிக்காகோ வரை: சுய தம்பட்டத்தின் உச்சக் கட்டம் இந்த கட்டுரை எனினும் ஒரு எளிய கிராமத்தில் பிறந்து வளரும் ஒருவரின் வாழ்க்கை எங்கெல்லாம் பயணிக்கிறதென்பதை சொல்கிறது இது.

"நான் ஒரு அங்கீகரிக்கப்பட்டு, மூன்றுமுறை வடிகட்டப்பட்டு, ஐ
எஸ் ஐ முத்திரை குத்தப் பட்ட மீனவ கிராமத்தான். உலகின் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத மூலையில், வெளி உலகைவிட்டே ஒதுங்கி, தெற்கே முடிவில்லா கடல் நோகி வாழும் சில மனிதர்கள் மத்தியில் பிறந்தேன் வளர்ந்தேன். "

"செம்மண் அகழிகளால் பிரிக்கப்பட்ட ஒரு
குட்டித்தீவு அந்தச் 'சிவந்தமண்'."

"1993 சென்னை லொயோலாவில் சூர்யாவுக்கு ஜூனியராக வணிகவியல்
பிரிவில் இடம் கிடைத்தது."

"சிக்காகோ வந்திறங்கினேன். உலகம் ரெம்ப பெருசு என அந்த 18 மணி
நேர பயணத்தில் புரிந்தது."

எந்தையும் நானும்: தந்தையர் தினம் பற்றிய பதிவு. என் தந்தையையும் என்னையும் முன்வைத்து. ஆமாங்க நானும் ஒரு தந்தைதான்.

"இந்தியாவில் பல தந்தைகள் ஸ்மார்டை விடவும் கடினமான
நிலமைகளில் தங்கள் குடும்பங்களை வழிநடத்துகிறார்கள் அல்லது வழி நடத்த
உதவுகிறார்கள். வருடத்துக்கு இரண்டுமுறை தந்தையர் தினம் கொண்டாடலாம் நாம், தப்பில்லை"

"'தான்' என்னும் எண்ணம், (அகந்தை அல்ல), அவரிடம் அதிகமாகவே இருந்தது."

"'கட்டி வச்சு தோலை உரிப்பேன்' என்பது எனக்கு வெறும் வார்த்தைகளல்ல, அனுபவம்."


கத்தோலிக்கம் ஒரு மேலோட்டம்: கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு மற்றும் நம்பிக்கைகளைப் பற்றியது. முற்றிலும் தகவல்களாகவே அமைந்துள்ளது இந்த காட்டுரை.

"கி.பி 110 ஆன்டியொக்கின் பிஷப் இக்னேஷியச் முதன்முறை 'கத்தோலிக்க
திருச்சபை' எனும் பெயரை பயன்படுத்துகிறார், பெயர் நிலைக்கிறது. வரலாறு பல
போராட்டங்களுடன் தொடர்கிறது."

"1517ல் மார்டின் லூத்தர்(அமெரிக்கர் அல்ல) கத்தோலிக்க திருச்சபை
காணிக்கைக்கு/காசுக்கு ஆன்மீக பரிகாரங்களை(Indulgance) வழங்குவதை எதிர்க்கிறார்.
1582 போப் கிரகொரி தற்கால காலண்டரை அறிவிக்கிறார்."

"கலை, இலக்கிய, அறிவியல் படைப்புக்கள் எல்லாமே திருச்சபையின்
அனுமதியுடனேயே வெளியிடப்பட்டன. "

"சரி கிறிஸ்த்துமஸுக்கு லீவ் கிடைக்கும் ஆனா ஈஸ்டருக்கு?
யோசியுங்க."

"இரண்டாயிரம் ஆண்டுகளாக பல குறைகளை நிவர்த்திசெய்தும்,
சிலநேரங்களில் மூடிமறைத்தும் பல தடைகளையும் தாண்டி இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பிரமாண்டமான, உலகளவிலான ஒரு ஆன்மீக அமைப்பாக கத்தோலிக்க திருச்சபை வளர்ந்திருக்கிறது
என்பதை மறுக்கமுடியாது."

சிக்காகோவில் அந்துமதியும் லென்ஸ்மாமியும்: சிரிப்போடு சேர்ந்து சில தகவல்களும் உண்டு. சிக்காகோவில் என்னென்ன பார்க்கலாம் என்பது பற்றிய கட்டுரை.

"எப்படீடி அந்துமதி இப்படி அவிழ்த்து விடற? சதா உன்ன மாதிரி
என்சைகக்ளோப்பீடியாவை படிச்சா நான்கூட வாசகி கேள்விக்கு பதிலெழுதலாம் போல."

"சரி. நம்ம கார்ட்டூன் மூஞ்ச வச்சி எப்படி அடையாளம் கண்டுபிடிப்பாரு?"

"மளிக ஜாமானெல்லாம் நீங்க தனியா போய் வாங்கிக்கங்க இப்ப கோவிலுக்குப்
போகலாம்.".

"முதல்ல சியர்ஸ் போகலாம். சிக்காகோ வந்துட்டு சியர்ஸ் ஸ்கை டெக் (Sky Deck)
போகலன்னா எப்பவுமே அது குறையாத்தான் இருக்கும். அது பெரிய அனுபவம்னு சொல்லமுடியாது
ஆனா சியர்ஸ் டவர் மேல போனோம்னு ஒரு பேரு அவ்வளவுதான். கிட்டத்தட்ட 15 லட்சம்பேரு வருசா வருசம் வர்றாங்க"

"ஏன் பெயர் போன இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு வர்றீங்க. பெயர் இருக்கிற இடமா
எதுவும் தெரியாதா?"

படித்துவிட்டு பின்னூட்டம் அங்கேயும் இடலாம் இங்கேயும் இடலாம்.

Tuesday, June 20, 2006

இந்த யானைக்கு ஆடத் தெரியும்.

அமெரிக்க வார இதழ் 'டைம்'ல் இந்த வாரம் இந்தியாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சிபற்றி கட்டுரைகள் வந்துள்ளன. என்னை கவர்ந்த சில வரிகள்.

  • In ways big and small, Indians are changing the world.
  • (India) the second most populous nation in the world, and projected to be by 2015 the most populous...
  • Writers like to attach catchy tags to nations, which is why you have read plenty about the rise of Asian tigers and the Chinese dragon. Now here comes the elephant.
  • India's economy is growing more than 8% a year, and the country is modernizing so fast that old friends are bewildered by the changes that occurred between visits.
  • During the cold war, relations between New Delhi and Washington were frosty at best, as India cozied up to the Soviet Union and successive U.S. Administrations armed and supported India's regional rival, Pakistan.
  • Making friends with India is a good way for the U.S. to hedge its Asia bet.
  • Prosperity and progress haven't touched many of the nearly 650,000 villages where more than two-thirds of India's population lives.
  • Backbreaking, empty-stomach poverty, which China has been tackling successfully for decades, is still all too common in India. Education for women--the key driver of China's rise to become the workshop of the world--lags terribly in India.
  • The nation (India) has more people with HIV/AIDS than any other in the world, but until recently the Indian government was in a disgraceful state of denial about the epidemic.


  • Transportation networks and electrical grids, which are crucial to industrial development and job creation, are so dilapidated that it will take many years to modernize them.
  • China's key economic reforms took shape in the late 1970s, India's not until the early 1990s. But India is younger and freer than China.
  • Many of its companies are already innovative world beaters. India is playing catch-up, for sure, but it has the skills, the people and the sort of hustle and dynamism that Americans respect, to do so.
  • It deserves the new notice it has got in the U.S. We're all about to discover: this elephant can dance.

வார்ப்புருமாற்றம்

எத்தனை நாள்தான் பாஸ்ட்டன் பாலாவின் டெம்ப்ளேட்டையே பார்த்து ஜொள் விட்டுக்கொண்டிருப்பது, நாமும் கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போமே என என் வார்ப்புருவை கொஞ்சம் மாற்றியமைத்துள்ளேன்.

'என்னதான் டெம்ப்ளேட் மாத்தினாலும் அதே பழைய பாணி பதிவுகள்தானே?'
என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. உங்கள் மைக்கை மியூட் செய்யவும்


தலைப்பிலிருந்த தப்பை திருத்திய பொன்ஸுக்கு நன்றி. 'வாற்ப்புரு' இல்லை 'வார்ப்புரு'

'The-MIZ' ஓவியம்

தலைப்ப ஒரு சேரப் படியுங்க... ஆமா, தமிழோவியம்தான்.

கடந்த நாலரை வருஷமா இண்டர்நெட்டுல உலவகிட்டுத் திரியுற ஒரு வார இதழ்.

'ஒரு' வார இதழ்னா அப்ப மத்த வாரம் வராதான்னு கடிக்காதீங்க, இது வாரா வாரம் வர்ற வார இதழ். அப்படீன்னா இந்த வாரமும் வந்திருக்குமே. போய் பாருங்க. சிறப்பு ஆசிரியர் ஒருத்தர் எழுதியிருக்கார்.


Monday, June 19, 2006

ஏழை நாடு - PG18


"என்னப்பா அங்க கூட்டம்?"


"பாவம் கீழே காசு விழுந்துச்சுபோல தேடிக்கிட்டிருக்கு"



"ஐயோ பாவம் துணி வாங்க கூட காசில்ல."



"ஆன ஷூ நல்லாருக்கு பாரேன்".

நியூ யார்க், டைம் ஸ்கொயரில் எடுத்த படங்கள்.

நேரம் நல்லாருக்கு

Friday, June 09, 2006

அறிவிருக்கா?

பொதுவாக பள்ளி கல்லூரியில் விளையாட்டுகளில் ஈடுபாடுள்ளவர்கள் படிப்பில் சிறப்பதில்லை. பல நேரங்களில் ஆசிரியர்கள் இவர்களை சிறுமைப் படுத்துவதை பார்க்கலாம். ஏனோ ஸ்போர்ட்ஸ் என்றால் மூளைக்கு வேலைஇல்லை எனும் நினைப்பே இதற்கு காரணம்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு வினாடிக்கும் மிகக்குறைவான மணித்துளியில் எத்தனை தகவல்களை ஆராய்ந்து இவர்கள் முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது என எண்ணத்தோன்றுகிறது. இப்படி அதிவேகமுடிவுகளை எடுக்கும் இவர்களின் மூளை எவ்வளவு கூர்மையானதயிருக்கும்? நாம் ஏனோ படிப்பறிவுதான் பெரியது என நினைக்கிறோம்.

ஈக்குயேடர் போலந்தை 2-0 என வென்றுள்ளது. துவக்கத்தில் சில நிமிடங்கள் போலந்து வேகம் காட்டியது ஆனால் போலந்தின் தடுப்பாட்டம் தப்பாட்டமானதால் ஈக்குயேடர் 2 கோல்கள் அடிக்க முடிந்தது.

போலந்து இரு முறை பந்தை கோல் போஸ்ட்டில் அடித்து வாய்ப்பை நழுவவிட்டது.

நிர்வாணா

ஒருவன் காட்டுவழியே நடக்கும்போது ஒரு காட்சியைக் கண்டான்.

புலி ஒன்று கால் முறிந்து வேட்டையாடமுடியாமல் கிடந்தது. ஆனால் ஆச்சர்யப்படும்படி ஒரு நரி அந்தப் புலிக்கு உணவு கொண்டுவந்து தந்தது.

'ஆகா கடவுளின் செயல்கள் வியக்கத்தக்கவை' என நினைத்தான் அந்த மனிதன். 'நானும் இந்தப் புலிபோல இங்கேயே படுத்திருந்தால் கடவுள் எனக்கும் இதுபோல உணவு தந்து காப்பாற்றுவார்' எனச் சொல்லி அந்த இடத்திலேயே படுத்துவிட்டான்.

சில நாட்கள் ஆயின யாரும் வரவில்லை. பசியால் வாடினான். இன்னும் சில நாட்கள் பசி மயக்கத்தில் கழிந்தன. இறக்கும் நிலையில் இறைவனை வேண்டினான். 'ஏன் கடவுளே? அந்தப் புலிக்குக் காட்டும் இரக்கம் எனக்கு கிடையாதா?', என்றான். கடவுள் அவன் முன்னே தோன்றினார்,'மகனே அந்தக் காட்சி உனக்கு கிடைத்தது அந்தப் புலியைப் பின்பற்ற அல்ல அந்த நரியைப் பின்பற்ற' என்றார்.

Friday, June 02, 2006

என்ன'டா' வின்சி கோட்?

முதலில், பரவலாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் டா வின்சி கோட் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டிப்பாக கண்டிக்கிறேன். கருத்து சுதந்திரம் என்ற அடிப்படடயில் அல்ல, அப்படி ஒன்றும் பெரிய கருத்தை டா வின்சி கோட் சொல்லவில்லை, ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை மக்கள் பலர் பார்க்கமுடியாமல் போகுமே என்கிற வருத்தத்தில்தான். (அதையும் பாஸ்டன் பாலா வேண்டாமென்கிறார்).

திருட்டு வி சி டி வியாபாரிகள் சங்கம் சார்பில் கலைஞருக்கு நன்றி.

பல பதிவுகளில் இந்தத் தடைக்கான எதிர்வினைகளை காணமுடிந்தது. பலருக்கும் ஏன் கிறீத்துவர்கள் இந்தப் படத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்கான மேலோட்டமான காரணங்களே தெரிந்துள்ளன அவற்றில் சில.

1. இயேசு திருமணமானவர் என நாவல் கூறுகிறது.
2. அவரின் வழித்தோன்றல்கள் இன்னும் இருக்கிறார்கள் என்கிறது
3. ஒப்பஸ் டெயி (Work of God) கத்தோலிக்க இயக்கத்தை வில்லத்தனமான இயக்கமாக காண்பிக்கிறது.
4. கிறித்துவ சாமியார் ஒருவர் கொலை செய்வதாய் சொல்கிறது
5. இயேசு கடவுள் இல்லை என்றும் அவரது கடவுள் தன்மையை ரோமன் பேரரசர் காண்ஸ்டாடைன்தான் நிறுவினார் என்கிறது நாவல்.
6. உலக மதங்கள் எல்லாமே மனிதனின் கற்பனையில் உருவானவை என்கிறது நாவல்.

இவையே மேலோட்டமான சில காரணங்கள். சில நேரம் இதைப் படித்தால் பலருக்கும் அதனாலென்ன திருமணம் செய்வது குழந்தை பெறுவதும் பாவமா? என்றெல்லாம் கேட்கத்தோன்றும்.

இயேசு திருமணமானவர் என்பதை ஏற்றுக்கொள்வது அவரின் கடவுள் தன்மையை பாதிக்கிறது. யூத வழியில் வந்த இயேசு தானே கடவுளின் மகன், மீட்பர் என்கிறார். யூத கடவுளுக்கு திருமணமாகியிருக்கவில்லை. திருமணம் உலக வாழ்வின் முழுமையை வெளிப்படுத்துகிறது. திருமணம் ஆகாத ஆன்மீகவாதிகளுக்கு ஊரில் இருக்கும் மவுசு உங்களுக்குத் தெரிந்ததே. இயேசு திருமண பந்தத்தில் ஈடுபட்டார் என்பது அவரும் நம்மைப்போல் முழுமையாக வெறும் மனிதன் எனக் கூறுவது போலாகிறது.

இது கிறித்துவ நம்பிக்கையின் அடி வேரில் கோடாரி வைக்கிறது. இரண்டாயிரமாண்டு வரலாற்றையும் கோடிக்கணக்கானோரின் நம்பிக்கையையும் சிதறடிக்கிறது, கேலி செய்கிறது.

இயேசுவுக்கு திருமணமானதாக எந்த நற்செய்தியுமே(Gospel) கூறவில்லை. நற்செய்தி என்பது மத்தேயு, மாற்கு, லூக் மற்றும் ஜாண் எழுதிய இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளின் நேரடி அல்லது அண்மைக்கால குறிப்புக்கள், புத்தகங்கள். இவைதான் புதிய ஏற்பாட்டின், பைபிளின், கிறித்துவ நம்பிக்கையின் அடித்தளங்கள். இயேசு திருமணமானவர் என்பது இந்த நற்செய்திகள் திருத்தப்பட்டன அல்லது உண்மையில்லாதன எனபது போலாகும். நான்கு வேதங்கலும் பொய் சொல்கின்றன எனச் சொல்வதோ அல்லது கீதை வெறும் கதை என்பதோ குர் ஆன் கடவுள் தந்ததல்ல என்பதோ எவ்வளவு வலிக்குமோ அவ்வளவு வீரியமானது இந்தக் குற்றச்சாட்டு.

ஓப்பஸ் டெயி ஒரு கான்சர்வேட்டிவ் கத்தோலிக்க குழுமம். நம்மூரில் அலகு குத்துவதையும் தீக்குள் இறங்குவதையும் ஆன்மீக வெளிப்பாடாய் காட்டுவது போல ஒப்பஸ் டெயி சில தொன்மையான உடல் வலி மூலம் இறைவனைக் காணும் வழியை பின்பற்றுகிறது. இது இவர்களில் வெகு சிலரே பழகும் ஒரு முறை. மற்றபடி ஓப்பஸ் டெயி எல்லா நிலையிலும் எப்போதும் இறைவனைக் காணத் தூண்டும் ஒரு நிறுவனம்.

வெளிப்படையாகவே நாவல் இயேசுவின் தெய்வத்தன்மை மனிதனால் 4ஆம் நூற்றாண்டில் ஒரு ஓட்டெடுப்பில் உருவாக்கப்பட்டது என்கிறது. இதைவிட பெரிய காரணம் தேவையில்லை என்னைக்கேட்டால். இதைப் பற்றிய விளக்கங்கள் ஆங்கிலத்தில் http://www.y-zine.com/monalisa2.htm.

பலரும் கவனிக்க மறந்த அல்லது வசதியாக மறைத்துவிட்ட செய்தி என்னவென்றால் நாவலில் ஒரு பகுதியில் உலகின் எல்லா மதங்களுமே மனிதன் நிறுவியவைதான், காலத்தினால் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டவைதான் என சொல்லப்படுகிறது. கிறித்துவத்தை மட்டும் டான் பிரவுன் தாக்கவில்லை. அவருக்கு எந்தக் கடவுள் எப்படிப் போனால் என்ன நாவல் விற்று காசு கிடைத்தால் போதும்.

சரி நாவல் எப்படி இருந்தது? உண்மையில் இந்த நாவல் மிக வேகமாக நகரும் அருமையான த்ரில்லர். நம்மூரில் துப்பறியும் சாம்புவையே விழுந்து விழுந்து படிக்கிறோம் இது சாம்புவை டீ சமயத்தில் ஸ்னாக் போல சாப்பிட்டு ஏப்பம் விடும்.

Sidney Sheldon in fast forward. இதுதான் என் கருத்து. ஆனாலும் திரும்பத் திரும்ப குறியீடுகளை அவிழ்ப்பதும் உடைப்பதும் கடைசியில் புளித்துவிடுகிறது. அதுவும் என்னைப்போல பாத்ரூமில் பகுதி பகுதியாய் பதினைந்து நாள் படித்தால் புளிப்பு அதிகமாகிறது.

அதிவேக த்ரில்லருக்கான எல்லா தகுதியும் நாவலுக்கு இருக்கின்றன. அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பு இருந்துகொண்டேயிருக்கிறது.

இந்தியாவில் மட்டுமாதடை? இல்லை பல நாடுகள் தடை செய்திருக்கின்றன. அமெரிக்க பிரிட்டன் போன்றவற்றை கிறித்துவ நாடு என்று சொல்லமுடியாது. அப்படி அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளவில்லை. மெலும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக 'western thought'ன் பிறப்பிடமாக ஜனநாயகத்தின் காவலர்கலாக தங்களை காட்டிக்கொள்ளும் இவர்கள் படைப்புக்களுக்கு தடை போடுவது அரிது.

இந்திய கிறீத்தவர்கள் ஏன் தடை கோருகிறார்கள? பொதுவாக மேற் கூறிய காரணங்களுக்காக. உண்மையில் இயேசு மனிதர்தான் கடவுளே இல்லை என்பதை எந்தக் கிறீத்தவனாலும் தாங்கிக்கொள்ள முடியாது. யாராலும் இப்படி தங்கள் கடவுளை, இல்லை பொய் என்பதை தாங்கிக்கொள்ள முடியாதுதான். இல்லை என் கடவுளை மறுப்பவனுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்குது என வெகுசிலராலேயே ஏற்றுக்கொள்ள முடிகிறது.

டா வின்சி கோட் கற்பனை கதை என்பதில் ஐயமில்லை. அதில் வரும் இயேசு பற்றிய பல கருத்துக்களும் Legends எனப்படும் சில நிகழ்வுகளின் அடிப்படையிலான (கட்டுக்)கதைகள் மற்றும் சில Conspiracy Theoryகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை பல வரலாற்று ஆதாரங்களுடன் பலர் நிருபிக்கிறார்கள். (பார்க்க பாஸ்டன் பாலவின் பதிவு)

கீதை எனப் படப்பெயர் வைப்பதையே நம்மவர்கள் பலர் எதிர்க்கிறார்கள் எனும்போது இது போல ஒரு படத்தை நம்மவர்கள் அனுமதிப்பார்களா? கருத்து ரீதியில் எல்லோருமே இந்தப்படத்தை எதிர்க்கவேண்டும் என நினைக்கிறேன். ஒரு மத நம்பிக்கையை, கடவுளை அவமதிப்பது கடவுள் நம்பிக்கை கொண்ட எல்லோரும் கவனிக்கவேண்டிய ஒன்று.

நாளைக்கே டான் பிரவுன் இந்து அல்லது முஸ்லிம் மதக் குறியீடுகள் பத்தி நாவல் எழுதலாம். ருஷ்டி போல புகழின் உச்சியை உடனே அடைய எளிய வழி வேறென்ன?

(யாரையும் குத்திக் காட்டவோ தர்க்கம் செய்யவோ இதை எழுதவில்லை - டிஸ்க்ளெய்மர் இல்லைன்னா இப்போல்லாம் சர்வைவ் பண்ண முடியாது போலிருக்கே)

Thursday, June 01, 2006

கொக்கி

கரண் ஹீரோவாய் நடித்து வந்திருக்கும் படம் கொக்கி. எந்தக் கரண்? "செக் மேட்டுன்னு சொன்னேன் சார்" என வி.பி கமலை மிரட்டுனாரே அந்தக் கரண்.
ஆன்டி ஹீரோ கேள்விபட்டிருக்கோம் இவர் ஆர்டினரி ஹீரோ. படத்தில் 'பக்கி'மாதிரி காட்சியளிக்கிறார்.

கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு பிழைக்க வரும் ஒரு சாதாரண இளைஞன் வாழ்க்கை பட்டணத்தில் சின்னாபின்னமாக்கப்படும் கதை. இப்பத்தானே இப்படி ஒரு படம் பார்த்தோம் என்பவர்களுக்கு குறிச்சொல் 'ட்ரீட்மெண்ட்'. கதை சொல்லும் விதமும் காட்சியமைப்பும் படத்தை வித்தியாசப்படுத்துகின்றன.

யதார்த்தமாய் காட்சியமைப்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. மாடியிலிருந்து நூறு படிகளில் இறங்கிவரும் வில்லன், எந்திரத்துப்பாக்கியில் சுட்டுத்தள்ளும் ஹீரோ, சாவுப்படுக்கையில் சத்தியம் வாங்கும் அம்மா எல்லாம் இல்லாமல் படம் கிட்டத்தட்ட கலைப் படம் போலவே ஓடுகிறது.

ஆரம்பத்திலேயே ஒரு குழந்தையை பலி கொடுக்கும் பூஜை, சோதிடத்தால் ஏமாந்தவர்களின் கதை பற்றிய செய்தித் தாள் தொகுப்பு என ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

சோதிடர் சொல்வதை கேட்டு காலம் சமயம் பார்த்தே எதையும் செய்யும் வில்லன் காலையில் சவரம் செய்யவரும் ஹீரோ முகத்தில் முழிக்க, அன்று எல்லாமே வெற்றி. இவனை தினமும் பார்த்தால் ஜெயம் என சோதிடர் சொல்ல, ஹீரோவை வெளிநாடு செல்லவிடாமல் தடுத்து தன்னோடு இருக்கச்சொல்கிறார். வேலை செய்துதான் சம்பாதிப்பேன் என்கிறார் ஹீரோ. 'சனி' துவங்குகிறது கொக்கி எனப்படும் கொக்கிச்சாமிக்கு.

கடுமையாக முயற்சி செய்து காட்சிகளை எளிமையாய் அமைத்துள்ளார் டைரக்டர். யதார்த்தமான நடிப்பில் எல்லோரும் மின்னுகிறார்கள் வில்லன் தவிர. சாமியில் நடித்தமாதிரியே இன்னும் நடிக்கிறார். 'ரேஷன் கார்டு கிழிஞ்சிடுச்சி'ன்னு பஞ்டையலாக் வேற.

மலேசியா வாசுதேவன் குறைந்த காட்சிகளிலேயே வந்தாலும் அருமையாய் நடித்துள்ளார். சோதிடராய் வரும் மாணிக்க விநாயகம் கலக்கல்.

கரண் நடிக்கவேயில்லை அப்படியே அந்த இறுக்கமான கிராமத்தானாகவே மாறியிருக்கிறார்.

தினாவின் ரீசைக்கிள்ட் பாடல்கள் கதையின் வேகத்தை குறைக்கிறது. பாடல்கள் இல்லையென்றால் கலைப்படம்போலாகியிருக்கலாம்.

அதிகம் பேசாமலே இருக்கும் ஹீரோ கடைசியில் பேசும் வசனம் மனதில் நிற்கிறது.

ஜீவனின் ஒளிப்பதிவு ஜீவன் சேர்க்கிறது.

பிரபு சாலமன் இயக்கத்தில் கொக்கி உங்களை கவர்ந்திழுக்கலாம்.

சிறில் அலெக்ஸ்