Sunday, February 11, 2007
ஸ்ரீசாந்த் அடிக்காத சிக்சர்
இப்படி ஒரு மேட்ச்சை தோற்பது நம்ம மக்களுக்குத்தான் சாத்தியம். கமண்ட்ரி மட்டும் இல்லாமல் போயிருந்தால் மிட் நைட் மசாலாவுக்கு மாறியிருப்பொம். அதுவும் சிவராமகிரிஷ்ணன், பந்தை சுழற்றுவதைவிட நாக்கை நன்றாகவே சுழற்றுகிறார்.
இரண்டு ஓவர்களே இருக்கும் நிலையில் ஒரு கமெண்ட் விட்டார். "இனி (விளையாட்டின்) எல்லா முடிவுகளும் சாத்தியம். 1. இலங்கை ஜெயிப்பது 2. இந்தியா ஜெயிப்பது. 3. சமமாவது" (All results are possible now. Srilanka may win, India may win or it may be a tie). இந்த சாத்தியங்கள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே இல்லையா? விளையாட்டில் இது மூன்றைத் தவிர வேறென்ன சாத்தியங்கள்? மழை வராததைச் சொல்லுகிறாரோ என்னவோ.
இன்னுமொன்று எல்லா வர்ணணையாளர்களும் போதுவாக பயன்படுத்துவது, "Every run counts from now on", அப்ப இதுக்கு முன்னால எடுத்த ரன் எல்லாம் எச்சில் போட்டு அழிச்சிருவாங்களா?
நம்ம வர்ணணையாளர்கள் செய்யும் இன்னொரு காமெடி என்னண்ணா ஒவ்வொரு ஷாட்டும் பேட்ஸ்மேனும், ஒவ்வொரு பாலையும் அந்த பௌலரும் ஏதோ பயங்கரமா ப்ளான் பண்ணி ஆடுற மாதிரி சொல்றது. உதாரணத்துக்கு ஒரு தடிமனான வெளிப்புற விளிம்பு ஆகுதுன்னு வையுங்க. (திரும்ப படிச்சுப் பாருங்க புரியும்). என்ன அழகா அத அடிச்சார்னு சொல்வாங்க. (Thick outside edge). உண்மையில் பேட்ஸ்மேன் தடுமாறியிருப்பார். பாதி ஓடுனதுக்கப்புறம்தான் பந்து எங்க போனதுன்னு அவருக்கே தெரியும் ஆனா 'என்ன அழகா பந்த திசைதிருப்பி வழிகாட்டினார்'னு வர்ணிப்பாங்க.
அப்பீலுக்கு அவுட் குடுத்தா கட்டம் போட்டு காட்டி அவுட் இல்லன்னு நம்பவைப்பாங்க குடுக்கலேன்னா அவுட்டுன்னு நம்பவைப்பாங்க.
தேவையில்லாம அம்புக்குறியும் வட்டமும் போட்டு ஃபீல்ட் பொசிசன் சொல்லுவாங்க.
இதுகளக் கேட்டு கேட்டு கமெண்ட்ரிக்கு கமெண்ட் அடிச்சிட்டு எப்படியும் கெலிச்சுடலாம்னு இருக்கும்போது...
பேசாம ஒரிஜினல் ப்ளான்படி கேசினோவுக்கே போயிருந்திருக்கலாம். அங்கேயாவது The house always winsனு நமக்குத் தெரியும்.
இதுல புதுசா பவர்ப்ளே(Powerplay)ன்னு ஒண்ணு. நானும் ஏதோ பந்த சும்மா தூக்கிபோட்டு பேட்ஸ்மேன் four, sixனு அடிச்சுத் தள்றதுதான் 'பவர்' ப்ளேன்னு நெனச்சேன். அம்பயர் பெருசா வட்டம் போடும்போதே எனக்குத் தோணியிருக்கணும் அதுல ஒண்ணூமிலேன்னு.
இலங்கை வேகப் பந்து வீச்சாளர் ஒருத்தர் மாங்கா அடிக்கிறமாதிரி போடுறாரு. தலையெல்லாம் டை அடிச்சுகிட்டு வந்தாரே அவர்தான். இவருடைய ஆர்ம் அக்சன் பத்தி யாரும் கமெண்ட் அடிக்கல. ஏன்னா கை வளஞ்சிருக்குன்னு சொல்லி இலங்கைகாரங்க தப்பிச்சுக்குவாங்கன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குதுபோல.
கடேசி பந்து கொஞ்சம் wide ஆகப் போச்சுதாம். ஸ்ரீசாந்த் அம்பையர்கிட்ட 'அம்மா காக்கா சாக்லேட்ட தூக்கிட்டுபோச்சுன்னு' சொல்ற கொழந்த மாதிரி கேக்கிறாரு. அம்பையருக்கு அவசரமா சூசூ போகணுமோ அல்லது இவன் எங்க சிக்ஸ் அடிக்கப் போறான்னு நெனச்சாரோ என்னவோ போடா ஜோட்டான்னுட்டாரு (ஸ்பெல்லிங் கரெக்டா?)
ஸ்ரீசாந்த் அடிக்காமல்போன அந்த சிக்சரால் ஒரு இரவின் விழிப்பு வீணாப் போச்சு. இலங்கை டீம் தளராமல் விளையாடினர். They deserve it man! (or woman!).
Thursday, November 30, 2006
டிசம்பர்-தேன்கூடு போட்டி தலைப்பு
அரசியல் குறும்பு
ப்ளூட்டோ திடீர்னு கோள் இல்லன்னு சொல்றது
அறிவியல் குறும்பு
கைப்புள்ள சீறி எழுந்தா
கிராமத்துக் குறும்பு
விவேக் விசிலடிச்சா
சிட்டிக் குறும்பு
ஆபீசில் பிற பாலிடம் சில்மிஷக் குறும்பு
ஸ்கூலில் ப்ரின்ஸ்பாலிடம் சின்னவயசுக் குறும்பு
கவுண்டமணி ஒதச்சா கர்வக் குறும்பு
செந்தில் ஒதச்சா காமெடிக் குறும்பு
காதலி லேட்டா வந்தா காதல் குறும்பு
காதலன் லேட்டா வந்தா குறும்பில்ல குமுறு
வெள்ளை சட்டை பாத்து கக்கா போவது
குழந்தைக் குறும்பு
வெள்ளை சுவத்தோரம் கண்டதும் போவது
பெரியவர் குறும்பு
விசிலோ, கண்ணோ அடிப்பது
வாலிபக் குறும்பு
விட்டா ஆளையே அடிப்பது
வயோதிகக் குறும்பு
மீள்பதிவு, தனிமனிதத் தாக்குதல்
வலைப்பதிவர் குறும்பு
படித்துவிட்டு சும்மா போவது
வாசகர் குறும்பு.
இந்த மாத தலைப்பு 'குறும்பு'. சும்மா கலாட்டாவா எழுதுங்க.
நகைச்சுவை படைப்புகள் வருவதென்பதே மிகக் குறைவாக இருக்கும் இந்த காலத்தில் குறும்பு என்ற இந்த தலைப்பை மையமாக வைத்து ஜாலியான படைப்புகளை எழுதி மகிழ்வியுங்களேன்.
பிற தலைப்புக்களை தந்திருந்த நண்பர்களுக்கு நன்றி.
போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.phpபடைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - டிசம்பர் 20, 2006டிசம்பர் 21 முதல் வாக்கெடுப்புகள் நடைபெறும்.
Friday, November 10, 2006
இ.இ.ஆ முதல் பரிசு எனக்கே எனக்கே
நடுவராய் மு. மேத்தா அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது எனக்கு தலைகால் புரியாத சந்தோஷமாயிருக்குதுங்க. ரெம்ப எளிமையான ஒரு கருத்த வச்சு எளிமையா எழுதின கவிதை. பொதுவா கவிதைன்னா நமக்கு அவ்வளவு தன் நம்பிக்கை கிடையாது. இனிமேல் முயல நம்பிக்கை வந்திருக்கு.
கொஞ்ச வருஷத்துக்கு முன்னால என் மீனவ உறவினர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஆகாயம் ஒரு திடமான இடமென பேசினனர். அவருக்கு என்ன சொல்லி புரியவைப்பது? சில உண்மைகள் சிலருக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை என விட்டுவிட்டேன். Ignorance is bliss. அறியாமை ஆனந்தமானது. உண்மை, உண்மை.
அந்த உரையாடலின் ஆதாரத்தில் பிறந்த இந்தக் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.
நம்ம வ. வா தமிழ் சங்கத்தாருக்கும் ஊக்குவித்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
'இன்னும் இருக்கிறது ஆகாயம்'
'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.
சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு ஆனால்
தெய்வமாயில்லை.
பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.
மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும் சுவர்க்கமுமில்லை.
ஆகாயம் ஒரு மாயை.
மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
Thursday, November 02, 2006
சொர்க்கம் இலவசம்
நாயர்கடைக்கே கூகிள் மேப்பில் வழிதேடி, அதை செல்போனில் இறக்கி, உலகளாவிய சுட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (அதான் ஜிபிஎஸ்), போய் ஹோம் டெலிவரி ஆர்டர் செய்துவிட்டு வர்றமாதிரி காலம் மாறியிருக்கு.
பூமியில மட்டுந்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்ன? சுவர்க்கமும் மின்னணு எந்திரமயமாகியிருந்தது. ஏக்கர் கணக்கில் மெயின்ஃப்ரேம்களை நிர்மாணித்திருந்தனர். பாவக்கணக்கு புண்ணியக் கணக்கு என மெயின்ப்ஃரேம்கள் எப்பவுமே கூட்டல் கழித்தல் மட்டுமே போட்டுக்கோண்டிருந்தன. ஓயாது டெலிஃபோன் மணி அடிக்கும் வேண்டுதல்களுக்கான கால் செண்டரும், வி எம் எஸ் (விதி மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) நிர்வகிக்கும் குழுவும் தனித்தனியே செயல்பட்டுக்கொண்டிருந்தன.
கடவுளர்களால் ஒருவரோடு ஒருவர் பேசாமலேயே கருத்துப் பரிமாற முடியுமென்றாலும் யார் யாரோடு பேசுகிறார்கள் என கண்டுபிடிக்க இயலாமல் போனதால் செல்ஃபோன் இண்டர்நெட்ட் என தொலைத்தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.
சுவர்க்கம்னு ஒத்தையா சொல்றதவிட சுவர்க்கங்கள்னு சொல்றதுதான் சரி. மதங்கள் ஒவ்வொன்றுக்குமாய் பல சுவர்க்கங்கள் இருக்கின்றன. சுவர்க்கங்களுக்கிடையே அடிக்கடி பேச்சுவார்த்தைகளும் கூட்டு முயற்சிகளும் பிரச்சனைகளைதல்களும் நடைபெறும்.
பீட்டர் கிறித்துவ மோட்சத்தின் வாசலை நிர்வகிப்பவர். யாருக்கு மோட்சம் அளிப்பது யாரை லூசிபரிடம் அனுப்புவது என்பதை அவர்தான் நிர்ணயிப்பார்.
இந்துமதத்தின் எமலோக எம்ப்ளாயீஸ் எல்லோருக்கும் பரிட்சயமானவர்கள்.
அன்று காலையில் மோட்சத்திலிருக்கும் புனித பீட்டருக்கு எமலோகத்தின் சி. குப்தனிடமிருந்து செ. போனில் தொ. பேசி அழைப்பு வந்திருந்தது.
"ஹலோ பீட்டர் ஹியர். ஹூ இஸ் தெயர்?", பீட்டர் சித்ரகுப்தன் எனத் தெரிந்தும் தன் வழக்கமான பாணியில் பேச ஆரம்பித்தார். அவர் பெயர் ராசி அப்படி.
"யோவ் பீட்டரு. பேருக்கேத்தாப்ல ஏன்யா காலையிலேயே பீட்டருடுற. நான் சித்ரகுப்தன் பேசுரேன்யா. உங்க செல்போன்ல என்ஃபோட்டோ வந்திருக்கணுமே. ரம்பா 25000 வருட ஜூபிளி பார்ட்டில எடுத்த ஃபோட்டோ. எப்படி? சிரிச்சுக்கிட்டேயிருப்பேனே? காலெர் ஐ.டி எல்லாம் உங்க மோட்சத்துல இல்லியா?"
"சித்ரகுப்தன்! நீங்களா? கண்ணாடி போடல அதான்...? என்ன காலையிலேயே எதாவது டேட்டா ப்ராப்ளமா?"
"டேட்டா ப்ராப்ளமெல்லாம் பாக்கத்தெரியாதா எனக்கு? எத்தன வருஷமா பாக்குறேன்? உம்ம வயசக் காட்டியும் என் அனுபவம் எவ்வளவு அதிகம்னு கணக்குப் போடவே நாலு நாள் ஆகும்."
"சரிதான்.. சொல்லுங்க என்ன விஷயம்.?"
"நேத்து எம்.டி மீட்டிங் வச்சாரு.."
"எம்.டியா?"
"ஆமா இப்ப நாங்க எம Daர்மர எம் டின்னு தான் கூப்புடுறோம்."
"சரி என்ன மீட்டிங்?"
"வரவர பாவிங்க எண்ணிக்க அதிகமாயிடுச்சு. போனவாரம் 'பாவி20000', மெயின்ஃப்ரேம் க்ராஷ் ஆயிடுச்சு."
"ஹெவன் டுடேல சேதி பாத்தேன். நல்லவேள நாங்க பாவிகள் 30000க்கு அப்கிரேட் பண்ணிட்டோம்."
"நாங்க கொஞ்சம் பழசுதான் அத சொல்லிக் காமிக்கதீங்க பீட்டர்."
"ஐயையோ அப்படி இல்லீங்க.."
"பரவாயில்ல. சமாளிக்காதீங்க. அப்கிரேட் பண்ணுங்கோ, அப்கிரேட் பண்ணுங்க்கோன்னு கைலாசம் முதல் பாற்கடல் வரை எல்லா மீட்டிங்லேயும் பவர்பாயிண்ட் போட்டு சொல்லியாச்சு. எல்லாரும் பட்ஜட் கணக்கு சொல்றாங்களே தவிற யாரும் கேட்கிறதாயில்ல?"
"ஏழுமைலையான்கூடவா?"
"குபேரன் இண்ட்ரஸ்ட் ரேட்டை அதிகமாக்கினதுலேந்து அவருக்கு கொஞ்சம் தட்டுப்பாடாயிடுச்சு, ஏண்டா கடன வாங்கினோம்னு நொந்துக்கிறாரு."
"எம் டி மீட்டிங்ல என்ன நடந்துச்சு சொல்லுங்க?"
"நீங்க எங்க சொல்ல விடுறீங்க? அதாவது பாவிகள் எண்ணிக்கை அதிகமானதால நரகத்துல கூட்டம் அதிகமாகவும் சொர்க்கம் காலியாகவும் இருக்குது."
"இங்க மட்டும் என்ன வாழுது?"
"முழுசா கேளுங்க பீட்டர். எம் டி சொர்கத்துக்கு அதிகமா ஆள் சேர்க்க என்ன வழின்னு கேக்கிறாரு? "
"அத்தனபேரு இருக்காங்களே நீங்க ஏன் இதப்பத்தி வொரி பண்ணிக்கிறீங்க?"
"பீட்டர்ஜி அடிக்கடி நீங்க இப்டி வெறுப்பேத்துறீங்க. கணினி மயமாக்கல் வந்தபிறகு எவனுக்கு எப்ப வேலபோகும்னு தெரியல. அதனால இந்த பிரச்சனைக்கு ஒரு ஐடியாவ தந்தா எம் டி கிட்ட நல்ல பேர் கிடைக்குமேன்னு பாக்குறேன். எங்க டேட்டா எண்ட்ரி டீம் சார்புல இந்த ஐடியாவ எப்படியாவது தரணும்னு முடிவு பண்ணியிருக்கோம். "
"டேட்டா எண்ட்ரிக்கு டிமாண்ட் எப்பவுமே இருக்குமே?"
"போங்க பீட்டர். நரகத்துக்கு ஆஃப் ஷோர் பண்ணப் போறாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுது."
"அடப் பாவமே! நல்லவங்களுக்கு காலமில்ல பாருங்க."
"என்ன ஜோக்கா?"
"இல்லங்க நிஜமாவே. நரகத்துக்கு பாவக்கணக்க ஆஃப்ஷோர் பண்றதால ஃப்ராடு அதிகமாகுமே?"
"அங்கயும் கூட்டம் அதிகமாயிடுச்சே அதனால அவங்க ஃப்ராடு செஞ்சாவாவது சொர்க்கத்துக்கு ஆள் வருவாங்கண்ணு நினைக்கிறாங்களாம்."
"இந்த ஐடியா நல்லாயிருக்கே."
"நான் ஐடியா கேட்டா நீங்க நம்ம வேல போற ஐடியாவ சொல்றீங்களே பீட்டர்."
"ஐடியாவா? எங்கிட்டையா? எங்களுக்கும் உங்க பிரச்சனதான். போன மீட்டிங்ல பிதா சுதன் பரிசுத்த ஆவீன்னு மூணுபேரும் மாறி மாறி கேள்வி கேட்டு தொலச்சிட்டாங்க. இதுல மூணுபேரும் ஒரே ஆளுங்கிறது வேற. யாரோ ஒருத்தன் நான் கேட்ல தூங்குரதாவும் அதனால குழப்பம் நடக்குதுன்னும் ஸ்பாம் மெயிலலடிச்சுட்டான். நான் என்ன செய்ய? வர வர ஃபாதர், பிஷப் கூட பரலோகம் வரமாட்டேங்கிறாங்க."
"அட நம்ம பேரக் கெடுக்கிறதே இந்த சாமியாருங்கதானே. கம்ப்யூட்டருக்கு வைரஸ் மாதிரி நம்ம மதங்களுக்கு இந்த சாமியாருங்க. உள்ள இருந்துகிட்டே அழிச்சிடுறானுவ."
"அங்க முகமதுவும் இதத்தான் சொல்றாரு. ஜிகாதுன்னு இவர் ஒண்ணச் சொல்ல அவுங்க அத வச்சுகிட்டு போடுற ஆட்டத்துல அங்கயும் கூட்டம் கொறஞ்சு போயிடுச்சாம்."
"நாங்க தளர்த்தாத சட்டமில்ல கோடுக்காத சலுக இல்ல இருந்தாலும் கூட்டம் வரவே மாட்டேங்குது பீட்டர். இப்ப பாருங்க முன்னாலெல்லாம் பெருநாள் திருநாள்னா கோயிலுக்குப் போகணும்னு இருந்துச்சு. இப்ப? கோவிலுக்குப் போனாதான் பக்தியான்னு கேக்குறாங்க. சரி கோயிலுக்கு போகாத, நல்லவனா இருன்னா கேக்குறானா?"
"சண்டே சர்ச்சுக்குப் போன்னு சட்டம் போட்டாலும் எங்க பசங்க வீட்ல சப்த சுரங்கள் பாத்துட்டு உக்காந்துர்றாங்க."
"நாங்ககூட ஸ்பெசல் இபஃக்ட்ல சீரியல் வழியாத்தான் மக்களப் போய் சேரமுடியுது. இருந்தலும் நீங்க கிரிஸ்டியன். மதத்த மார்கெட் பண்றதுல ஒங்கள விட்டா வேற யாரு இருக்க முடியும் சொல்லுங்க? சும்மா கடவுள் ஒரு விசிட் அடிச்சத வச்சே ஒரு டைட்டிலப் போட்டு மதத்த உருவாக்கி பெரிய மதமாக்கிட்டீங்க. இன்னைக்கும் மூல முடுக்கெல்லாம் ஒளிஞ்சிருக்குறவனயெல்லாம் பிடுச்சு தண்ணி தெளிச்சு மாத்திர்றீங்க. உங்களுக்கில்லாத ஐடியாவா? ப்ளீஸ் பீட்டர் ஒரே ஒரு ஐடியா. எனக்காக இல்லீன்னாலும் என் டேட்டா ப்ராசசிங் டீம் மக்காளுக்காகவாவது ஒரு ஐடியா குடுங்க பீட்டர்."
பீட்டர் வெண்ணிற தாடியை தடவிக் கொடுத்தபடியே யோசிக்க ஆரம்பித்தார்.
"என்ன பீட்டர்ஜீ. அமைதியாகிட்டீங்க."
"யோசிக்கிறேன் சித்ரகுப்த்தன்."
"சரி யோசிச்சு சொல்லுங்க."
"ஆமா. யோசிச்சு சாயங்காலத்துக்குள்ள மெயில் போடுறேன்."
"மெயிலா? வேணாம் பீட்டர். எங்க ஆபீஸ்லமெயில ஓப்பன் பண்ணி படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த நாரதர் டீம் இருக்குதே அவர் 'கலகம்' னு ஒரு ஸ்பைவேரத் தட்டி உட இப்ப மெயில் அனுப்பவே தயக்கமாயிருக்கு. இப்பவே ஒரு ஐடியா குடுத்தீங்கன்னா...?"
"சட்டுன்னு ஒரு ஐடியா தோணுது..."
"சொல்லுங்க பீட்டர்..."
........
சாயுங்காலம் எமதர்மனின் சபையில் நடந்த மீட்டிங்கில் சித்ரகுப்தன் பீட்டர் தந்த ஐடியாவை விவரித்துக்கொண்டிருந்தார்.
"இலவசத்தப்போல ஒரு மார்க்கெட்டிங் டேக்னிக்கே இல்ல. அதனால ஒரு ஆத்மா மோட்சம் வந்தா இன்னொருவருக்கு மோட்சம் இலவசம்னு அறிவிப்போம்."
Tuesday, September 19, 2006
இன்னும் இருக்கிறது ஆகாயம்

'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.
சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு ஆனால்
தெய்வமாயில்லை.
பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.
மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும் சுவர்க்கமுமில்லை.
ஆகாயம் ஒரு மாயை.
மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
சிறில் அலெக்ஸ்
சுசிலாவைக் கேளுங்கள்...