.

Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Wednesday, January 25, 2006

ஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்

உலகமே அறிந்திராத ஒரு கிராமம். மக்களெல்லாம் அவருண்டு அவர் வேலையுண்டுன்னு சந்தோஷமா வாழ்ந்து வந்தாங்க.

அந்த கிராமத்துல ஒரு பெரியவர்,"இப்பிடி ஒலகமே தெரியாம இருந்தா எப்டி? இந்த ஊரவிட்டு வெளியேறி ஒலகம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வரலாமே" அப்படீன்னு, ஊருல எல்லருட்டயும் சொல்லிட்டு கிளம்பிட்டார்யா கிளம்பிட்டாரு.

அவரு போயி அஞ்சு வருஷமாச்சு, ஆறுவருஷமாச்சு, எட்டுவருஷமாச்சு. எல்லாருமே அவரப்பத்தி மறந்தே போயிட்டாங்க.

ஒரு நாள் ஊரவிட்டு போன மனுஷன் திரும்பி வந்தாரு. ஊரே கூடி அவர வரவேற்குது. கிட்டத்தட்ட ஊர்த்திருவிழா மாதிரியே, கொண்டாடமும் கும்மாளமும். சிறுசு பொடிசு முதல்கொண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சி.

ஒருவாரம் கழிச்சி கொண்டாட்டமெல்லம் முடிஞ்சபின்னால ஊரே பெரியவர் வீட்டுல கூடியாச்சு.

எல்லாரும் அவர்கிட்ட,"பெரியவரே எங்கெல்லாம் போனீரு என்னெல்லாம் பாத்தீரு. நம்மள விட்டா மனுஷங்க இருகாய்ங்களா?"ன்னு ஒரே கேள்வி.

அந்தப்பெரியவருக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவர் அனுபவிச்சிட்டு வந்ததையெல்லாம் எப்படி இவங்களுக்கு சொல்றது. "அதெல்லாம் எப்படி சொல்ல முடியும்.
எதன்னு சொல்றது.
என் அனுபவத்த சொல்ல வார்த்தையே இல்ல."ன்னு சொல்லி நழுவப்பாத்தாரு. மக்கள் விடவேயில்ல.

அவங்க தொந்தரவு தாங்காம, இவரு தன் பயண அனுபவங்கள எழுதி, சில படங்களையும் வரஞ்சி ஒரு பொத்தகமா குடுத்தாரு.

ஒவ்வொரு வாரமும் ஊருக்குப் பொதுவா அந்த புத்தகத்திலேர்ந்து ஒரு பக்கம் அல்லது ஒரு கதை வாசிச்சு எல்லாரும் கேட்டாங்க.

கொஞ்ச நாள்ல அந்த பெரியவர் எறந்து போக. இந்த புத்தகம் வாசிக்கிற பழக்கம் தொடர்ந்தது. பல வருசங்கள் போனபிறகும். இந்தப்பழக்கம் தொடர்ந்தது. இப்போ இந்த புத்தகத்துல பலர் தேர்ந்துட்டாங்க. பலர் மனப்பாடமா வச்சிருந்தாங்க. சிலபேர், இதுல விடுபட்டுபோன இன்னும் பத்து கதைய நாங்க கேட்டிருக்கோம், இந்த புக்குல அத சேக்கணும்னாங்க. இதுல சண்ட வந்து ஊரே ரெண்டுபட்டுபோச்சு.

புதுசா சேத்த பத்து கதைகளோட இன்னொரு புத்தகம் உருவாச்சு.

காலம் கடந்து போகப் போக பெரியவர் அடக்கம் பண்ணுன கல்லறை கோவிலா மாறிச்சு. வெறும் கதைகள் இருந்த புத்தகத்த படிச்சு பல புதிய கருத்துக்கள் உருவாச்சு. இந்த புத்தகத்துல சொல்லியிருக்கது வெறும் கதையில்ல எல்லாம் தீர்க்கதரிசனம்ணு ஆயிடிச்சு. அந்த புத்தகத்த விவரிச்சு பல புத்த்கங்கள் வந்துச்சு, பல வாதங்களும் அடிதடிகளும் பிரிவினைகளும் வந்துடுச்சு.

பல வருஷங்களுக்கப்புறம் ஒருநாள் அந்தப்பெரியவர் ஆவி அந்த ஊர்ல தோணுச்சி. எல்லாரும் பயபக்தியோட அவரப் பாத்து கும்பிட்டுட்டே நின்னாங்க.

அந்த ஆவி அவங்களப் பாத்து கேட்டுச்சி. "மடப்பசங்களா. நான் அனுபவிச்சத படிச்சி நீங்க என்னடாபண்ணுறீங்க? நீங்களா போயி அந்த அனுபவத்த பெறணும்னு ஏன் தொணல ஒங்களுக்கு", அப்பட்டின்னு. எல்லோருக்கும் அப்பத்தான் புரிஞ்சது அவங்க நம்பிக்கிட்டிருகிறதும், அலசிக்கிட்டிருக்கிறதும் யாரோ ஒருவருடைய அனுபவம் என்று.

கடவுளைப் பற்றிய நம் அறிதல் மற்றும் உணர்வுகளை ஏன் யாரோ அனுபவித்த மதக்கோட்பாடுகளிலிருந்து பெறவேண்டும். நீங்கள் கடவுளைத் தனியாக தேடி, அனுபவித்திருக்கிறீர்களா?

மதங்கள் நமக்கு போதிப்பதெல்லாம் யாரோ பெற்றுக்கொண்ட கடவுள் அனுபவத்தின் கதைகளில்லையா?

சமுதாயாயம், கட்டுப்பாடுகள், வரைமுறைகள்னு நம்மை கட்டிப்போடும் பலவும் இந்த மாதிரி யாரோ சொன்ன, அனுபவித்த, கருத்துக்கள்தானே. நமக்கென்று சிந்தனைகளும் நம்பிக்கைகளும் தெவையில்லையா?

உங்கள் நம்பிக்கைகளை சோதித்துப்பாருங்கள். தேடலை துவங்குங்கள், தொடருங்கள். அப்பத்தான் நம் வாழ்க்கை முழுமையாகிறது.

செம ஹெவி ஸ்டஃப்மா... ஐயோ..


பின்குறிப்பு: இந்தக் கதை ஆந்தனி டி மெலோ எழுதிய ஒரு புத்தகத்திலிருக்கிறது. இவரது புத்தகங்கள் தமிழில் படிக்கக் கிடைக்கின்றன. கிறித்துவ பாதிரியாராக இருந்தாலும் இவர் தனது நம்பிக்கைகளை கேள்விகேட்கத் தயங்கவில்லை. கத்தோலிக்க திருச்சபை இவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. சின்ன சின்ன கதைகளைத்திரட்டி அதிலிருந்து பெரிய பெரிய தத்துவங்களை விளக்குகிறார்.
'பறவையின் பாடல்' இவரது புத்தகங்களில் ஒன்று.

இப்போதான் www.alibris.com ல் சில புத்தகங்கள் ஆர்டர் பண்ணினேன்.
Key word Anthony De Mello.

சிறில் அலெக்ஸ்