.

Wednesday, January 31, 2007

தேன்200:உடன்பிறப்பே...

கடிதம்

உடன்பிறப்பே,
இது எனது 200வது பதிவு. இப்போதுதான் 100போட்டு ஆடிக்கொண்டிருந்தேன் அதற்குள் 200 எகிறிவிட்டதை நினைக்க நினைக்க இருநூறு திருக்குறள்களை மனப்பாடம் செய்துவிட்ட பெருமை தோன்றுகிறது.

வலைப்பதிவராய் வெற்றிபெற்றிருக்கும் சிலரில் இந்த சிறிலும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

நீ இன்றி இது சாத்தியமா? எண்ணிப்பார். உனது (பின்)ஊட்டங்களை அள்ளித் தந்து என்னை மேலும் மேலும் எழுதச் செய்து உன்னையே நீ சோதனைக்குள்ளாக்கிகொள்ளும் அந்த துயரத்தை எண்ணிப்பார். இரவுபகலாய் விழித்திருந்து (பகலில் விழித்திருப்பது எனக்கு கஷ்டம்) நான் எழுதிய இந்தப் பதிவுகளை அன்றே நீ படிக்காதிருந்தால் இன்று 200 போட்டிருப்பேனா எண்ணிப்பார்.

தமிழா விழித்தெழு. கீபோர்ட்மேல் நீ தூங்கி விழுந்து www.xxxxxxxxxxxxxxxxx என கணினியில் தெரியுது பார். 'தவறான' தளத்துக்குச் செல்வதற்குமுன் விழித்தெழு.

உடன்பிறப்பே. என் பதிவுகளை படித்ததோடல்லாமல் சில நேரங்களில் நான் போட்டியில் வென்று ஈ புத்தகப் பரிசுகளை வாங்கவும் உதவினாய். உண்மையில் அவை 'ஈ' புத்தகங்களே. படிக்க நேரம் ஒதுக்காமல் ஈ ஆடிக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் தேனைப் படித்த நீ ஒரு தேனீ.

சில நேரங்களில் நான் தவறிழைத்தபோது எனை தட்டிக்கேட்டாயே உன் நேர்மையை பாராட்டுகிறேன். இடித்துரைப்பதே நட்பு. இடியாய் உரைப்பது இணைய நட்பு என்பதை செவ்வனே உணர்த்தினாய்.

காமெடி செய்தால் :) எனவும் கவலையைச் சொன்னால் :( எனவும் உன் முகபாவங்களைக் காட்டி மகிழ்வித்தாயே மறக்க முடியுமா? சிறிய புன்னகை செய்துவிட்டு LOL எனப் புழுகினாயே (புகழ்ந்தாயே) மறக்க முடியுமா? பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கே பின்னூட்டமிட்டாயே மறக்கமுடியுமா? என் பதிவுகளுக்கு இணைப்பைத் தந்தாயே மறக்கமுடியுமா? அல்ஸ்தைமர் வந்தபோதும் இந்த அன்பை மறவேன் மறவேன் எனச் சொல்லிக் கொள்கிறேன்.

இனிவரும் காலம் இனியகாலமாய் அமையட்டும். தொடர்ந்து தேனைப் பருகிவந்தால் உடல் நலம் கூடும் என்பது உனக்குத் தெரியாதா? (கூடவே லெமன் ஜூஸ் சேத்துகிட்டா இன்னும் நல்லது)

நான் 300 பதிவைத் தாண்டும்போதாவது நீ பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியிருப்பாய் என நம்புகிறேன். பதிவுகளைப் படித்து யாரும் திருந்துவதில்லை என்பதையும் நானே பதித்திருக்கிறேனே என எண்ணி வருந்துகிறேன்.

என்னை வாழ்த்திய நீ வாழ்க.
உன் குலம் வாழ்க.
உன் பதிவுகளில் பின்னூட்டம் செழிக்கட்டும்
உன் ஹிட் கவுண்டர் எகிறட்டும்
இணையம் இனியம் ஆகட்டும்
என்னை திட்டினாலும்
பின்னூட்ட எண்ணிக்கையை
உயர்த்தினாயே,
உடன்பிறப்பே!
'வரப்புயர' என்றாளே என் பாட்டி
நான் சொல்கிறேன்
மவுஸ் உயர
கீ போர்ட் உயர
மானிட்டர் உயர
என உயர உயர நீ நீடூழி வாழ்க.


(டிஸ்கி: யார் மனதும் புண்பட்டிருந்தால் மருத்துவரைப் பார்க்கவும்)

சீரியசா...
பதிவுலகில் என்னை அங்கீகரித்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. வரும் பதிவுகளில் இந்த இருநூறு தந்த அனுபவங்களைப் பற்றி, நண்பர்களைப் பர்றி பகிர இருக்கிறேன். அவர்களும் தேனைப் பற்றி எழுத இருக்கிறார்கள். உங்கள் விமர்சனங்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி cvalex at yahoo dot com

சிறப்பு நன்றி












நன்றி! நன்றி! நன்றி!

Monday, January 29, 2007

ஒரு சிந்தசைசரும் மகாகவியும்

பாரதி, இந்தப் பெயரே கவிதையாய் ஒலிக்கிறது. பாரதியின் வார்த்தை வார்ப்புகளை வாசிக்கும்போது இயல்பாய்த் தோன்றும் உணர்வுகளை தவிர்க்க இயலுவதில்லை.

ஸ்ரீகாந்த் தேவராஜன் என்பவரின் இனிய இசையில் பாரதி பாடல்களை கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது.

எஸ்.பி. பி, சுஜாதா, ஸ்ரீனிவாஸ், ஹரீஷ் ராகவேந்த்ரா போன்றவர்களின் இனய குரலில் மெல்லிய மெட்டுக்கள் மனதை வருடுகின்றன. மெல்லிசையில், மேற்கும் கிழக்கும் சந்திக்கும் பாடல்களாய் இவை அமைந்துள்ளன.

சின்னஞ்சிறு கிளியே - எஸ். பி. பாலசுப்ரமணியம்
காக்கைச் சிறகினிலே - சுஜாதா
மோகத்தை கொன்றுவிடு - ராஜா கோவிந்தராஜா (குரல் எஸ்.பி.பியின் குரலை ஒத்துள்ளது)
நல்லதோர் வீணை செய்தே - ஸ்ரீனிவாசஸ்
தீராத விளையாட்டுப்பிள்ளை - எஸ். பி. பி
வாழ்க தமிழ் - ஹரீஷ் ராகவேந்த்ரா

பாடல்களை இங்கே கேட்கலாம். பதிவிறக்கலாம், இலவசமாக.

ஸ்ரீகாந்த் இசையில் H1bees எனும் தொகுப்பு பிரபலமானது.
தற்போது "பாடல்" எனும் குறுந்தட்டு வெளியிடப்பட்டுள்ளது.
"பாடல்" வாங்க, முன்னோட்டமிட க்ளிக்குங்கள்.

ஸ்ரீகாந்த் அவர்களின் வலைத்தளம்.

இயேசு சொன்ன கதைகள் - 3

மருத்துவன் நோயுற்றவனுக்கேயன்றி நலமாயுள்ளவனுக்கல்ல." இயேசு தன்னைப்பற்றி கூறிய உவமை இது."பாவிகளை மீட்கவே வந்தேன்." என்பது அவரது பொன்மொழி. கடவுள் பாவிகளையே தேடுகிறார், நீதிமான்களையல்ல என வெளிப்படையாகச் சொன்னவர் இயேசு.

பாவி ஒருவனின் மனதிருத்தம் எத்தகையது?

"உங்களில் யார் ஒருவன் தன் நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போக, தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு தொலைந்த ஆட்டை தேடிப்போகாமைலிருப்பான்? அதை அவன் கண்டதும் குதூகுலத்துடன் தன் தோள்களில் போட்டுக்கொள்வான். வீட்டுக்கு வந்ததும் தன் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,"என்னோடு கொண்டாடுங்கள், தொலைந்துபோன என் ஆட்டை கண்டெடுத்தேன்" என்பான். விண்ணுலகம், மனம் திருந்திய ஒரு பாவியின் நிமித்தம் அடையும் மகிழ்ச்சி, தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பற்றிய மகிழ்ச்சியைவிட அதிகமானது"

இயேசு தன்னை 'நல்ல மேய்ப்பன்' என்று சொல்வது இதனால்தான். இயேசுவை மேய்ப்பனாக சித்தரிக்கும் படங்கள் இந்தக்கருத்தையே சொல்கின்றன.

மேய்ப்பன் கதைக்குத் தொடர்ச்சியாக இன்னுமொரு கதை சொல்கிறார் இயேசு,"எந்தப் பெண் தன் பத்து வெள்ளிக்காசுகளில் ஒன்று காணாமல் போக, விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதை தேடாமலிருப்பாள்? அவள் அதை கண்டபோது அவள் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,"என்னோடு மகிழுங்கள், நான் தொலைத்ததை கண்டெடுத்தேன்" என்பாள். மனம் திருந்தும் பாவியை முன்னிட்டு கடவுளின் தூதர்கள் மகிழ்வார்கள்" என்றார்.

ஒரு வெள்ளிக் காசு ஒரு நாள் ஊதியத்துக்கு சமமானதாம்.

சாகக் கொடுத்தாலும் போகக் கொடுக்கக்கூடாதென்பார்கள். அண்மையில் அரட்டை அரங்கம் சிறுவயதில் தொலைந்துபோன ஒரு சிறுமியை அவளின் குடும்பத்தாரோடு சேர்த்துவைத்த நிகழ்ச்சியைக் கண்டேன். அந்தக் குடும்பம் அவளை கட்டித் தழுவி கொண்டாடியது. அரட்டை அரங்கக் குழுவின் முகத்தில் ஒரு அசாதரணப் பெருமிதமும் மகிழ்ச்சியும். சொந்தக்காரர்களும் பக்கத்துவீட்டுக்காரர்கலும் சந்தோஷித்தனர், பார்வையாளர்களின் கண்களில் ஆனந்தத்துளிகள்.

மனம் திருந்தி வாழும் மனிதன் பொருட்டு கடவுளும் இத்தகைய மகிழ்ச்சிகொள்கிறார்.


நன்றி: தமிழோவியம்

Saturday, January 27, 2007

ஆத்தா நான் பீட்டாவுக்கு மாறிட்டேன்...

வயல் வரப்புல அரைக்கால் சட்டை போட்ட ஹீரோ கையில் ஒரே ஒரு சிலேட் மட்டும் உள்ளடக்கிய மஞ்சள் பையை உயர்த்தி சுத்தியபடியே ஓடி வருகிறார்..

போங்கையா பீட்டாவுக்கு மாறிட்டதச் சொல்ல ஏன் இந்த பில்ட் அப்.

சிலர் அதிக பதிவுகள் இருந்தால் மாறுவது கடினம் என்றிருந்தார்கள். என் பதிவுகளில் தேனில் மட்டும் 197 பதிவுகள் இருந்தன (ஆமமங்க விரைவில் டபுள் செஞ்சுரி) இன்னும் பல பதிவுகளையும் சேர்த்தால் எண்ணிக்கை 300 நெருங்கும். ஆனாலும் என்னால் எளிதில், 10 நிமிடங்களுக்குள்ளாகவே மாற முடிந்தது.

நான் ஏற்கனவே வைத்திருந்த பீட்டா கணக்கிற்கு மாறியதால் எளிதாயிருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

முயன்று பாருங்கள்.

முதலில் ஒரு பீட்டா(புதிய) ப்ளாகர் கணக்கை துவங்குங்கள். சோதனை வலைப்பதிவொன்றை துவங்குங்கள். சோதனைப் பதிவிடுங்கள். லாக் அவுட் செய்து வெளியேறுங்க்கள்.

பின்னர் Blogger.com ன் முகப்பில் Switch now எனும் பொத்தானை அழுத்தி கணக்கை மாற்றிக்கொள்ளவும்.

இருந்தாலும் 'விதியாகப் பட்டது வலியது... அதை யாராலும் மாற்ற இயலாது'.

Friday, January 26, 2007

இந்தவாரம் வலைப்பூவில் சம்பாதித்தது

கெட்டபெயர் - 10 முறை

நல்லபெயர் - 5 முறை

பின்னூட்டங்கள் - ஏதோ சில

அனானியின் அட்டகாசம் - 6 முறை

நண்பர்களின் அறிவுரை - 4

பகைவர்களின் புகழுரை - 0

காசு பணம் - $0.000000000000000000000

வயித்தெரிச்சல் தீர ஆன்டாசிட் செலவு - $2

யாரும் கணக்கு கேட்காமலே வந்து தாங்கள் சம்பாதித்ததை (மட்டுமே!?) சொல்லி வயித்தெரிச்சலை கிளப்பும் பதிவர்(களு)க்கு சமர்ப்பணம்.

இந்த வருமானத்துக்கு தவறாமல் வரி கட்டுங்கள். நீங்கள் வாட்டின்கீழ் (Vat) வருகிறீர்களா எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

:)

ஒவர் டு பெனாத்தல் சுரேஷ். இதப்பத்தி ஃப்ளாஷ் பதிவொண்ணு போடுங்க.

Thursday, January 25, 2007

ஊனம்

மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.
காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய் ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடு செல்ல.

"சார். நல்லா இருக்கியளா?"

குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.

"டேய் ராசையா எப்டி இருக்க?" வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில் தட்டியபடியே, "என்னடே இங்க? துபாய்க்கு எதாவது போறியா?"

"என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்."

"அமெரிக்காவுக்கா? ரெம்ப சந்தோஷம்டே. வேலைக்காபோறான்?

"ஆமா."

"ஒங்கப்பன் எப்டி இருக்கான்?"

"அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்."

"அப்டியா? ஊருக்கு வந்து வருசக்கணக்காவுது. பரவாயில்லியேடே என்ன நியாபகம் வச்சிருக்கியே. தண்ணி பாட்டில் வாங்கவந்தியோ?"

"ஆமா. தம்பி அங்க வரிசைல நிக்கான்."

"அப்ப போ தம்பி. பாப்போம்."

வந்தவன் திரும்பி நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் ஏட்டு. பைக்கின் சப்தம் கேட்டு திரும்பி தனிச்சையாய் சப் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு சல்யூட்வைத்தார்.

"யார் சார் அது?" சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"சார். இவன் எங்க ஊரு நாசுவனோடப் பையன் சார்."

"நாசுவன்னா?"

"முடிவெட்றவர். நாவிதர்."

"ஓ. இங்க என்ன பண்றான்?"

"இவன் தம்பி, கடைசில உள்ளவன் அமெரிக்கா போறானாம். வழியனுப்ப வந்திருக்கான். நம்ம பையன்கூட படிச்ச பய."

"பரவாயில்லியே."

"காலகாலமா எங்க ஊர்ல இவங்கதான் முடிவெட்றது சாவுக்கு சேதி சொல்றதெல்லாமே. இப்ப எல்லா மாறிப்போச்சு"

"ம்ம்ம்"

"இந்தா போறானே ராசையா. இவன் இப்ப பஸ் ஸ்டாண்ட்ல சலூன் வச்சிருக்கான்."

"இப்படி ஒரு பையன் அமெரிக்கா போறது பெரிய விஷயந்தான்."

"என்ன சார் சொல்ல இவனுங்க ரிசர்வேஷன்ல சர்ர்ருன்னு மேல வந்துற்றானுவ. நம்ம புள்ளைக கஷ்ட்டப்படுதுங்க."

"காலேஜ்ல சேர்றதுக்குத்தானே இட ஒதுக்கீடு அங்க படிக்கிறது அவனவன் தெறம சார். இப்ப ஒங்க பையன, ஒங்க சாதி ஐ.ஜி கிட்ட சொல்லி ரெக்கமண்டேசனோட காலேஜ்ல சேத்தீங்க. இந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா. அதுக்கப்புறம் ஒங்க பையனமாதிரி படிப்ப பாதியிலே நிறுத்துறதும் முழுசா முடிச்சு வேலைக்குப் போறதும் அரசாங்கமா வந்து செய்யுது?"

"சரிதான் ஆனாலும் தெறமயில்லாட்டியும் இவங்களுக்கு வேல கெடைக்குதே சார்."

"இந்தப் பையன் அமெரிக்கா போறான் சார். அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லதான் ரிசர்வேஷன் உண்டு வேலைக்கில்ல. இவன்கிட்ட திறமயில்லன்னு எப்டி சொல்வீங்க?"

".........."

"நாளைக்கும் ஏர்போர்ட் வந்துருங்க." பைக்கை கிளப்பினார் சப் இன்ஸ்பெக்டர்.

ஏட்டு, தறுதலையாய் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகனை நினைத்துக்கொண்டே, தூரத்தில் தன் கால் ஊனமுற்ற தம்பியின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ராசையா நுழைவாயிலை கடப்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.


============================================================================
இந்தவாரத் தமிழோவியத்தில் வந்த கதை

தமிழோவியம் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்ற இருக்கிறேன்.
வாய்ப்பளித்த தமிழோவியம் குழுவிற்கு நன்றி.

இன்று இனிதே ஆரம்பம்

தமிழ் சங்கத்தின் சார்பில் திருக்குறள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கதையைக் கொண்டு விளக்கும் முயற்சியை இன்று ஆரம்பித்துள்ளோம். உங்கள் பேராதரவைத் தாருங்கள்.

இலவச விளம்பபரங்களுக்கு யாரையும் 'அணுகத்' தேவையில்லை.

வாசிக்க : அகர முதல...

தீபாவளி ஜப்பானியத் திருவிழாவா?

மேலே தெரியலியா கீழே முயலுங்கள்

ஜப்பானியத் தீபாவளி

Wednesday, January 24, 2007

வலைப்பதிவுகளைப் படித்தால் இந்த மாற்றம் வருமா?

இந்த வார தமிழோவியத்தில் திருமலைக்கொழுந்து என்பவர் எழுதியிருக்கும் கட்டுரை. படித்துவிட்டு மேலுள்ள கேள்வியை அசைபோடுங்கள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருக்கிறது கம்பன் கழகம். இந்த கழகத்தின் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழதிய கம்பராமாயணம் பற்றி பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களின் நூல்களைப் படித்து கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் மு.ஏகாம்பரம் என்ற ஆயுள் தண்டனைக் கைதி மனம் உருகி கம்பன் கழகத்திற்கு நான்கு பக்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். (கடிதத்தை படம்பிடித்து போட்டிருக்கிறார்)

சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளை சமூகம் ரவுடிகளாகவும், சமூக விரோதிகளாகவும் தான் பார்த்து வருகிறது. ஆனால் அவர்களும் சாதாரண மனிதர்களின் மன உணர்வோடு தான் சிறை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆயுள்தண்டனை பெற்று சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் ஏகாம்பரம் நாளிதழ்களில் வரும் நூல் விமர்சனத்தில் கம்பன் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட ராமன் தரிசனம் நூலினை பற்றி படித்து விட்டு அந்த நூல்களை கேட்டு கம்பன் கழகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தைக் கண்ட கம்பன் கழக பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணராஜா கம்பனின் வாழ்வியல் நெறிகள், இராமனைச் தரிசிப்போம், சரணடைவோம் போன்ற நூல்களை அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நூல்களை படித்து விட்டுத் தான் மனம் உருக கடிதம் எழுதியிருக்கிறார். சிறையில் இருந்தாலும் அஞ்சல் வழியாக தமிழ் இலக்கியம் இளங்கலை பட்டம் இறுதியாண்டு பயின்று வருவதாகவும் இக்கைதி தெரிவித்து இருக்கிறார்.

சிறை வாழ்க்கை வாழும் எங்களுக்கு ராமாயணமும், மகாபராதமும் தான் விருப்பமான காவியங்கள். சிறை வாழ்வுக்கும் இராமாயணத்திற்கும் ஒரு வகையில் தொடர்பு உண்டு என்று தான் ஆயூட் தண்டனை பெற்றவர்கள் நம்புகிறார்கள். நம்புகின்றோம். இராமனின் கானக வாசம் 14 ஆண்டுகள். மகாபாரதத்திலே பாண்டவர்களின் கானக வாசமும் 14 ஆண்டுகள். இந்தியாவில் ஆயூட் தண்டனை சிறைவாச காலமும் 14 ஆண்டுகளே. சர்வ வல்லமை பெற்ற கடவுளர்களே மானிட அவதாரம் எடுத்து பூமியில் பிறக்கும் போது பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் எவ்வளவு? எத்தகையது என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது எங்களின் இந்த சிறை வாசம் தூசுக்கு சமமானது. ஆறுதலும், தேறுதலும் அவற்றை படிக்கும் பொழுது எங்களுக்கு ஏற்படுகிறது.

பாரத கதாபாத்திரப் படைப்புகளை விட இராமாயண பாத்திரப்படைப்புகள் அதிலும் குறிப்பாகத் தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கண்ணோட்டத்தில் மிகவும் உன்னதமான நிலையிலும், முறையிலும் காட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். மகன், மாணவன், கணவன், சகோதரன், சான்றோன், நண்பன், மாவீரன், மன்னிக்கும் மாதவன் என பல்வேறு முகங்களாய் வரிந்து காவிய முழுவதும் இராமன் காட்சி தருகிறார். கம்பனின் தத்துவக் கருத்துக்களும், உவமைகளும் அற்புதமாக பொருந்தவாக அமைந்துள்ளது என கைதி ஏகாம்பரம் கடிதம் எழுதியிருக்கிறார். பொதுவாக நூல்களை படிப்பவர்கள் இப்படி ஆழமாக கடிதம் எழுதியதில்லை. ஒரு சிறைச்சாலையில் இருக்கும் ஒரு ஆயுள்தண்டனை கைதியை ராமாயணமும், மகாபாரதமும் இந்த விதத்தில் பாதித்திருப்பதை ஆச்சர்யமாகவே பார்ப்பதாக சொல்லும் ராஜபாளையம் கம்பன் கழக பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணராஜா இக்கைதியின் கடிதம் குறித்து சொல்லும் பொழுது.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இந்த உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் நெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ராமபாதையை இயற்றினார். அவரது எண்ணத்தை, லட்சியத்தை நிறைவேற்றத் தான் ராஜபாளையத்தில் கம்பன் கழகத்தை ஆரம்பித்தோம். இந்த கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் கம்பனுக்கு விழா எடுத்து வருகிறோம். அதே சமயத்தில் கம்பனைப் பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி வைத்து மாணவ, மாணவிகளிடையே கம்பனின் பெருமையை சென்றடைய வைத்து வருகிறோம். இப்படி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள், பின்னால் பெரிய உயர் பதவிகளில் சென்றதை கடிதங்கள் வாயிலாக அறிந்து வருகிறோம். மக்களிடையே கம்பனை பற்றிய விழுப்புணர்ச்சியை உருவாக்க ஆண்டு தோறும் பல நூல்களை வெளியிட்டும் வருகிறோம். இந்த நேரத்தில் ஒரு சிறையில் இருக்கும் ஒரு ஆயூள் தண்டனைக் கைதி எங்களின் நூல்களை கேட்டுப் பெற்று, படித்து கடிதம் எழுதியதை பார்த்து உண்மையில் நாங்கள் பெருமை அடைகிறோம். எங்களது பணி சிறைச்சாலைக்கு உள்ளேயும் சென்றிருக்கிறது.

சிறு வயதிலேயே இந்த நூல்களை எல்லாம் நாங்கள் படித்திருந்தால், இன்று சிறைச்சாலைக்கே வந்திருக்க மாட்டோம் என அவர்கள் கடிதம் எழுதுகிற பொழுது அவர்களை சிறு வயதில் வழி நடத்த சரியான ஆட்கள் இல்லை என நினைக்கத் தோன்றுகிறது. மன ஓட்டம், சிந்தனை வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டோமே, எப்படி வெற்றி அடைவது என்ற ஆதங்கம் தான் அந்தக் கைதிக்கு இந்த மாதிரியான நூல்களை படிக்க ஆதாரமாக இருந்திருக்கும். இந்த மாதிரியான மனிதர்கள் தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் பொழுது நிச்சயமாக நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் என்கிறார்.

நன்றி: தமிழோவியம், திருமலைக்கொழுந்து.

Monday, January 22, 2007

குமுதம் வேண்டாம் குழந்தை சாமியாவது வெளியிடுவாரா?

என்சைக்ளோப்பீடியாவை புரட்டிக்கொண்டிருந்தார் எழுத்தாளர் ஜா. சுதா. தன் மனைவி சுதாவின் பெயரில் எழுதுபவர். அறிவியல் இலக்கியம் ஆன்மீகம் அரசியல் என இவர் கால்பதிக்காத இடமேயில்லை.

டெலிஃபோன் மணி சிரித்தது.

"ஹலோ".

"அப்பா நாந்தான்." அமெரிக்காவிலிருந்து அவர் மகன் பேசினான்.

"சொல்லுடா எப்படியிருக்க?"

"நல்லாருக்கேன்பா."

"நேத்துதானே பேசின?"

"இல்லப்பா அவ உங்கள பாக்கணுங்கிறாப்பா?"

"அவன்னா?"

"தெரியாததுபோல கேக்குறீங்களே?"

"ஓ அவளா?"

"சரி வரச்சொல்லு."

"இந்த வீக் எண்ட் சென்னை வர்றோம்."

"பர்மிஷன் வாங்காமலே ப்ளான் போட்டாச்சா?"

"ம்ம்"

அந்த வீக் எண்ட். தன் மகன் ஒரு ஜப்பானியப் பெண்ணோடு வருவதைக் கண்டு வியந்து நிற்கிறார். ஜா. சுதா.

"டேய் இவளா அவ?"

"ஆமா. பேரு டோக்கியோனா"

"ஷங்கர் படத்துல வர்ற விளையாட்டோட பேர்போல இருக்குது?"

"அது டிக்கிலோனாப்பா"

"இவங்க எந்த ஊர்?"

"ஜப்பான்ல ஒரு குக்கிராமம். என் கூட படிக்கிறா"

"டேய் ஏண்டா போயும் போயும் ஒரு ஜப்பான்காரிய.. நம்ம ஊர்க்காரி யாரையாவது..."

"அப்பா.. நான் சின்ன வயசுல வாட்ச் கேட்டேன் ஜப்பான் வாட்ச் வாங்கித் தந்தீங்க... வெளையாட பொம்ம கேட்டேன் ஜப்பான் எலக்ட்ரானிக்ஸ் பொம்ம வாங்கித்தந்தீங்க... நம்ம வீட்ல டிவி வீடியோ கார் எல்லாம் ஜப்பான் மேக்கா இருக்கும்போது பொண்ணு ஜப்பான் பொண்ணா இருக்கக்கூடாதா?"

"அதில்லடா நாம என்ன.."

"சாதீன்னு கேக்கறீங்களா? வெளிநாட்டுக்காறங்க என்ன சாதின்னு நமக்குத் தெரியாதேப்பா. சாதி அமைப்பும் நம்மூருக் காரங்களுக்குத்தானே. வெளிநாட்டுக்காரங்களுக்கில்லையே?"

"ம்ம்ம் நீ சொல்றதும் பாயிண்ட்தான்?"

"நம்ம ஊர்ல டாய்லட் கழுவுறவரோட பொண்ண எனக்கு கட்டி வப்பீங்களா?"

"என்னடா சொல்ற?"

"ஆமா டோக்கியோனாவோட அப்பா ஜப்பான்ல..."

ஜா. சுதா மூர்ச்சையாகிறார்.

மருத்துவமனையில் விழித்தெழும்போது டோக்கியோனாவின் கண்ணீர் அவரது கால்களை நனைத்துக் கொண்டிருந்தது.

"டேய் நாம அமெரிக்கவுக்கே போயிடலாம். அங்க நைட் ஷியாமளன், ஸ்பீல்பர்க் போல யாருக்காவது ஸ்க்ரீன்ப்ளே எழுதி பொழச்சுக்கலாமா பாரு."

"நெனப்பப் பாரு" மகன் கோபமாய் பார்க்க மீண்டும் ஒரு குறுகிய மூர்ச்சை நிலைக்குப் போனார் ஜா. சுதா.

(டிஸ்கி: யார் மனதையும் புண்படுத்த அல்ல. ஜாலியா! கதா பாத்திரங்கள் அனைத்தும் ஷங்கர் படத்தில் வருவது போன்ற கற்பனைகளே)

Thursday, January 18, 2007

நடையிழந்த கால்கள்தன்னில்...

'நடையிழந்த கால்கள்தன்னில் நளினத்தை பார்க்கிறேன்'. டி. ராஜேந்தரின் இந்த வரிகளை நியாபகப் படுத்தியது (நடன)இயக்குநர் லாறன்ஸ் இராகவேந்திரா தந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி. ஊனமுற்றவர்கள் ஆடிய நடன நிகழ்ச்சி. ஊனம் உடலிலேதான் மனதிலல்ல என ஒவ்வொரு அசைவிலும் காண்பித்தனர். 'காலுக்கு செருப்பில்லை எனக் கவலைப்பட்டேன் காலில்லாதவனைக் காணும்வரை' என்பதுபோல, இத்தனை குறைகளுக்கு மத்தியுலும் வென்றுகாட்டும் இவர்கள்தான் இன்றைய தலைமுறைக்கு ஊக்கமருந்து.

ஊனம் தெரியும்படியாய் உடையணிந்திருந்ததை என் மனைவி சுட்டிக் காட்டினார். ஒருவகையில் அதுதான் அவர்கள் தரும் செய்தி. கீழ்நிலைகளிலிருந்து வெற்றிபெறுபவர்கள் தங்கள் பின்புலங்க்களை வெளிப்படுத்துவதே ஒரு புரட்சிகரமான வெளிப்பாடுதான். இதை எல்லோரும் செய்வதன்மூலமே கீழே இருக்கும் யாரும் என்றைக்கும் கீழே இருக்கப் பிறந்தவர்கள் அல்ல என்பது எல்லோருக்கும் உறைக்கும்.

முழுக்கால்சட்டை போடுவது கிறீத்துவக் கலாச்சாரமா? சேலை உடுத்துவது இந்து கலாச்சாரமா? (வாட் ய சில்லி கொஸ்டின்) இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தால் பொங்கல் தமிழர் திருநாளா இல்லையான்னு கண்டுபிடிச்சிரலாம்னு நினைக்கிறேன். கலாச்சாரக் கூறுகளை எடுத்தாழ்வது அந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமை. இவற்றை விலக்கிவைக்கக் கூட உரிமை இருக்கிறது. இந்துப் பண்டிகையை கிறீத்துவர்கள் கொண்டாடும்போது அதில் இந்துமதக் கூறுகளை அகற்றிவிட்டே அதை கொண்டாடுகிறார்கள். 'கலாச்சார உள்வாங்கல்' எனவே இதை வகைப் படுத்தலாம்.

சாதி அமைப்பை கிறீத்துவர்கள் பின்பற்றுவதும் ஒரு கலாச்சார தாக்கமே. இதை இந்துப் பழக்கம் என உரிமைகொண்டாட யாரும் முன்வரமாட்டார்கள் என நினைக்கிறேன்.
லாரன்ஸ் இராகவேந்திரா கிறீத்துவரா இந்துவா? (அவரையே கேழுங்க)

இன்னொரு நிகழ்ச்சியில் மதுரைப்புயல் வடிவேலு தன் மாமியார் ஊரை சுறிக்காண்பித்தார். மண்ணின் மணம் வீசிய நிகழ்ச்சி.

வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகளிர் கூட்டத்தோடு தரையில் அமர்ந்து அவர்கள் வைத்திருந்த மீனை சுவைத்தார். அந்தம்மா பசங்க வெளிநாட்ல படிக்குதாம். இட ஒதுக்கீடுக்காக சண்டைபோட்டுக்கொள்பவர்களுக்கு ஒரு தெளிவான பாடம்.

வெட்டிமன்றம் 'வாழ்க்கைக்கு மிகவும் உதவுவது....' எனும் தொடரில்(Series) இந்தமுறை 'படிப்பறிவா? பட்டறிவா?' என காமெடி செய்தனர். ரசிக்கும்படியாகவே இருந்தது. வழக்கம்போல ராஜா அணி தோல்வியைத் தழுவியது.

நடிகர், நடிகைகளின் பேட்டிகள் சலிப்படையச் செய்கின்றன. ஓவர் டோஸ் என்றே சொல்லவேண்டும்.

சரி நீ பொங்கல் கொண்டாடினியா?

என் மனைவி வைத்த சர்க்கரைப் பொங்கலை நான் சாப்பிடவில்லை. அவரே அதை சாப்பிடல. ஏன்னா அது சரியா வரல. ஆனா வெண்பொங்கலை வயிறு(பாதி கேஸில்) நிரம்ப கொட்டிக்கொண்டேன்.

பக்கத்து வீட்டுக்கும் தூங்கிக்கொண்டிருந்த என் மகனுக்கும் கேட்காதபடி மெதுவாக 'பொங்கலோ பொங்கல்' சொல்லிவிட்டு என் மனைவி பொங்கிய பொங்கல். கடல்கடந்து பொருள்தேடும் மக்களின் பேரிழப்பு கலாச்சாரம்தான். இதில் கொடுமை என்னண்ணா இந்த இழப்பை பலரும் உணர்வதே இல்லை.

என் பக்கத்து வீட்ல கலை கிரிஷ்னு தம்பதிங்க இருக்காங்க. ரெண்டுபேரும் அமெரிக்காவிலேயே பிறந்துவளந்த மாதிரி நடந்துக்கிறாங்க. அவரு ஐயாராம் கலை கொஞ்சம் தாழ்ந்த சாதியாம். ஆனா பாத்தா எந்த வித்தியாசமும் தெரியல. இவங்க அமெரிக்க வாழ்க்கையோட ஐக்கியமாயிட்டதால இங்க கோவில்ல வேலை செய்ய வாய்ப்பிருந்தும் க்ரிஷோட அப்பாவ கூட்டிட்டுவரலியாம். அவங்க அப்பாவுக்கு ஒரு எழுத்தாளர் பால்ய ஸ்னேகிதராம்.

Tuesday, January 16, 2007

இயேசு சொன்ன கதைகள் - 2

முகம் தெரியாத அன்னியருக்கு உதவுவது தெய்வீகமான அனுபவம். சகமனிதனுக்கு உதவுவது நம் கடமையே என்கிற போதும், இயல்பாகவே பலனை எதிர்பாராமல் நாம் எதையும் செய்ய விளைவதில்லை.

நான் சென்னை லயோலாவில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டுவிழாவில், ஒரு மாணவர் சிறப்பு பாராட்டை பெற்றார். அவர் செய்ததென்ன? இவர் சர்ச் பார்க் பள்ளியின் முன் பஸ்ஸுக்கு நின்றுகொண்டிருக்கும்போது அங்கே உடலெங்கும் சீழ்வடியும் புண்களோடு ஒருவர் அனாதையாகக் கிடந்தார். அவரைப் பார்த்து எல்லோரும் முகம் சுளித்துக்கொண்டு, எங்கே அவன் உடலில்லிருந்து சீழும், கிருமியும், வீச்சமும் தங்கள் ஆடைகளை ஒட்டிக்கொள்ளுமோ என ஒதுங்கி நின்றபோது இவன் துணிந்து தன் கடமையை செய்தான். அந்த மனிதரை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு ரிக்ஷாவில் வைத்து எடுத்துச் சென்று சேர்த்தான். இந்து நாளிதழில் இந்த செய்தி வந்தபோது கல்லூரியே பெருமை கொண்டது.

"அயலானை அன்பு செய்." இயேசு சொன்ன பொன்மொழிகளில் ஒன்று. ஆங்கில மொழிபெயர்ப்பில் Love your neighbour எனத் தரப்பட்டுள்ளது. தமிழில் அயலான் என்பது இன்னும் தொலைவில் உள்ளவரைக் குறிப்பதுபோலுள்ளது.

ஒருநாள் ஒரு சட்ட வல்லுனர் இயேசுவிடம் கேட்டார்,"அயலானை அன்புசெய் என்கிறீரே யார் என் அயலான்?(Who is my neighbour?)"

இயேசு ஒரு கதையைச் சொன்னார்.
"ஒருவன் எருசலேமிலிருந்து எரிக்கோவிற்கு பயணித்தான். அவனை கள்வர் சூழ்ந்தனர். அடித்து, குற்றுயிராய் அவனை விட்டுச் சென்றனர்.

தற்செயலாய் ஒரு சாமியார் அங்கே வந்தார், இவனைக் கண்டார், ஒதுங்கிச் சென்றார்.
மத குரு ஒருவர் வந்தார் அவரும் இவனைக் கண்டு ஒதுங்கி சென்றார்.
சமாரியன் ஒருவன் வந்தான். இவன்மேல் பரிவு கொண்டான். அவனது காயங்களுக்கு கட்டுப்போட்டு மருந்திட்டான். தன் கழுதையின் மேல் காயம்பட்டவனை ஏற்றி விடுதி ஒன்றிற்கு அழைத்து வந்து கவனித்தான். மறுநாள் விடுதிக் காப்பாளனிடம் கொஞ்சம் காசைத் தந்து 'இவனை கவனித்துக்கொள்; நீ அதிகமாய் இவன்பொருட்டு என்ன செலவளித்தாலும் நான் மீண்டும் வரும்போது திருப்பித் தருவேன்' என்றான்.

இந்த மூவரில் யார் கழ்வரால் தாக்கப்பட்டவனுக்கு நல்ல அயலானாய் செயல் பட்டார்?" எனக் கேட்டார் இயேசு.

நல்ல சமாரியன் கதை(The Good Samritan) என புகழ்பெற்ற இந்தக் கதை சொல்லும் உண்மையை விளக்கத்தேவையில்லை.

'பலனை எதிர்பாராதே' என கீதை சொல்வதும் இதைத்தானோ ?

நன்றி: தமிழோவியம்

Friday, January 12, 2007

இயேசு சொன்ன கதைகள் - 1

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்

இயேசு என்னும் வரலாற்று நாயகனை பல கோணங்களில் தரிசிக்கலாம். குருவாய், தியாகியாய், புரட்சிக்காரனாய், சீரமைப்பாளராய், மக்கள் நாயகனாய், கடவுளாய், அதிசயங்கள் புரிந்த ஒரு சாதரண மனிதனாய் இன்னும் பலவாய் காட்சிதருகிறார் இயேசு.

தெய்வீகக் கூறுகளை விலக்கிவிட்டு இயேசுவைப் பார்ப்பவர்கள் குறைவே. ஒரு போதகராக அவர் விட்டுச்சென்ற கருத்துக்கள் மத போதனைகளாக்கப்பட்டுவிட்ட நிலையில், அவரின் வாழ்வியல் கருத்துக்கள் பலரையும் சென்றடையவில்லை என்பது சற்றே சோகமான உண்மை. இந்தப் போதனைகள் எல்லோருக்கும் போய் சேர்ந்திருந்தால் இன்னும் சில காந்திகள் மலர்ந்திருப்பார்களோ என்னவோ?

இந்த தொடரின் மூலம் இயேசு சொன்ன சில உவமைகளை, உவமைக்கதைகளை சுவைக்கத் தருவதில் மகிழ்ச்சி.

ஒரு கருத்தை பக்கம் பக்கமாய் எழுதிவைப்பதைவிட, பலமணி நேரங்கள் விவாதிப்பதைவிட ஒரு சின்னக் கதையின் மூலம் எளிதாய் சொல்லிவிட முடியும். ஜென் கதைகளானாலும், பஞ்சதந்திரக் கதைகளானாலும், முல்லாவின் குறும்புக்கதைகளாயினும், தெனாலிராமனின் புத்திக் கதைகளாயினும் சில வரிகளுக்குள்ளேயே மாபெரும் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எளிய மனத்தோருக்கு வலிய கருத்துக்களை எடுத்துச் செல்ல ஏற்ற சாதனங்கள் கதைகள்.

இறை வார்த்தையை அல்லது நல்ல கருத்துக்களை கேட்பதுபற்றி இயேசு ஒரு கதை சொல்கிறார்.

விதைப்பவன் ஒருவன் விதைக்கச் செல்கிறான். அவன் விதைக்கும் விதைகளில் சில பாதையோரம் வீழ்ந்தன பறவைகள் அவற்றை தின்றுவிட்டன. சில பாறைகள் நிறைந்த நிலத்தின்மேல் விழுந்தன, அங்கே மண் அதிகம் இல்லாததால் அவை எளிதில் முளைவிட்டன ஆயினும் சூரியன் வந்ததும் வேரூன்றியில்லாததால் அவை சுட்டெரிக்கப்பட்டு உதிர்ந்தன. சில முட்புதர்களின் நடுவே வீழ்ந்தன. அவை வளர்ந்ததும் முட் புதர்களால் நெரிக்கப்பட்டு அழிந்தன. இன்னும் சில நல்ல நிலத்தில் விழுந்தன, பயிர்களாகி நூறு, அறுபது அல்லது முப்பது மடங்கு பலனளித்தன1.

இந்தக் கதையை சொல்லிவிட்டு இயேசு "கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.

மிகவும் எளிமையான ஒரு கதை. இதை இயேசுவே விளக்குகிறார்.

விதைப்பவன் விதைத்த விதைகள் இறைவார்த்தைகள். பாதையோரம் விழுந்த விதைகளை பறவைகள் வந்து தின்றதைப்போல சிலர் மனதில் விழும் வார்த்தைகளை சாத்தான் வந்து அள்ளிப்போகிறது. பாறை நிலத்தில் விழுந்தவையோ இறைவார்த்தைகளைக் கேட்டு தற்காலிகமாக மனமகிழ்ந்து செல்பவரைப்போல, அங்கே அந்த விதைகள் சொற்ப காலமே வாழ்கின்றன. முட்புதர்களில் வீழ்ந்த விதைகளைப்போல சிலர் மனதில் இறைவார்த்தைகள் முளைவிட்டு செடியாகின்றன ஆனால் கொஞ்ச நாட்களிலேயே பணம், சுகம் என உலகத் தேடல்கள் செடிகளை நெரிப்பதால் அவை பயிராவதில்லை. நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ கடவுளின் வார்த்தையை கேட்டு மனதில் சுமப்பவர்களைப்போல. பயிராகி பலனளிப்பவர்கள் இவர்களே.

கேட்பது அல்லது கற்பது பற்றிய எனக்குப் பிடித்த ஜென் கதை.

ஒரு குருவிடம் ஒருவன் போய் "எனக்கு உலகில் எல்லாம் தெரியும் உங்களுக்குத் தெரிந்ததையும் எனக்கு கற்றுத் தாருங்கள்", என்றான். குருவோ, "முதலில் தேனீர் அருந்துவோம் என்றார்". தேனீர் வந்ததும் கோப்பைகளை நிரப்ப ஆரம்பித்தார் குரு. கோப்பை நிறைந்த பின்னும் ஊற்றிக்கொண்டேயிருந்தார். வந்தவன் குழம்பினான். இன்னும் ஊற்றிக்கொண்டேயிருந்தார் குரு. வந்தவன்,"என்ன செய்கிறீர் அந்தக் கோப்பை நிறைந்திருக்கிறது இனியும் ஊற்றினால் கீழே கொட்டும் என்பது உமக்குத் தெரியாதா?" என்றான். குருவோ,"போய் உன்னை காலி செய்து கொண்டு வா. பிறகே என்னால் உன்னில் ஊற்ற இயலும்." என்றார்.

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்".

நன்றி:
தமிழோவியம்

Tuesday, January 09, 2007

கில்லி 365

கில்லி துவங்கி வருடம் ஒன்றாகிறதாம். (ஒன்றுதான?)

கில்லி அருமையான முயற்சி. புதுமையானதும்கூட. கில்லியின் பரிந்துரைகள் பல சுவாரஸ்யமானவை.

இப்பெல்லாம் சீரியசா ஒரு பதிவப் போட்டா கில்லி பரிந்துரைக்குமான்னு யோசிப்பேன். பின்னூட்டங்களை விடவும் கில்லி பரிந்துரையோ பூங்காவில் தேர்ந்தெடுப்போ பெரிய பரிசாய் எண்ணப்படும் என்றே நினைக்கிறேன்.

பரிந்துரைகளின் எண்ணிக்கைகள் வரவர குறைந்து போகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இதை சரி செய்தால் மேலும் எங்காளால் பலன் பெறமுடியும்.

இன்னுமொரு குழு வலைப்பதிவுக்கு நேரடி சம்பந்தமில்லாததாயினும் தனது 5 வருட சேவையை பெருமிதத்துடன் நிறைவு செய்திருக்கிறது. தமிழோவியம் ஐந்து வருடம் இணையத்தில் சேவை புரிந்துள்ளது என்பதை நம்பவே முடியவில்லை. வாழ்த்துக்கள்.

தமிழோவியம் பல பதிவர்களுக்கும் பதிவுகளைத் தாண்டி எழுத வாய்ப்பளித்துள்ளது. இதில் நானும் ஒருவன் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும்.

கில்லி போன்றதொரு சேவையை பதிவர்களே தங்களுக்காக செய்துகொள்ளும் வசதி தேன்கூட்டின் பெட்டகத்தில் உள்ளது. இது வந்த புதிதில் பலரும் ஆர்வமாய் பயன்படுத்துவார்கள் என நினைத்தேன். பெட்டகத்தை ஒரு பரிந்துரை தளமாகவே பயன்படுத்த இயலும் என்பதையும் பெட்டகம் பற்றிய என் பதிவில் சொல்லியிருந்தேன். பதிவுகளில் நடக்கும் சண்டைகளை கவனிக்கும் அளவுக்கு நாம் புதிய முயற்சிகளை வரவேற்காமல் விட்டுவிடுகிறோமோ என வருத்தமே மிஞ்சுகிறது.

Friday, January 05, 2007

3000

ஈராக் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 3000த்தை எட்டியது

என்னவிலை அழிவே?

3000?

'மாஸ்டர்' ப்ளான்?

அ'பாரம்'



தோட்டக்காரன்.

நன்றி : http://www.cagle.com/

Wednesday, January 03, 2007

வெயில் - நிழலல்ல நிஜம்

சன் டி.வி டாப் 10 ஸ்டைல்ல, 'வேண்டிய அளவுக்கு 'வெயில்' படம் பற்றி பதிவர்கள் அலசிவிட்டதால' எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவு.

வெயில், சில கசப்பான நிஜங்களை வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ஆவணப் படம்போலவே, நிஜத்துக்கு வெகு அருகாமையில் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. தமிழ் திரைப்படங்கள் அசட்டுத்தனங்களை களைந்துவிட்டு உருப்படும் எனும் நம்பிக்கையை தரும் மற்றொரு படம் இது.

வெயில், படத்தில் முக்கிய கதாபாத்திரமாய் வருகிறது. ஒரேமுறை தோன்றினாலும் கதையின் அடித்தளமே நாயகன் வாழ்வில் ஒருநாள் சுள்ளென சுட்ட வெயில்தான்.
கண்டிப்பான தந்தை, கட் அடித்துவிட்டு சினிமாபோன மகனை அம்மணமாக வெயிலில் கட்டிப்போடுகிறார். அந்த சுட்டெரிக்கும் வெயிலில் அவனும், அவன் சுயமரியாதையும் பொசுக்கப்படுகின்றன. வீட்டைவிட்டு வெளியேறுகிறான். வாழ்க்கை வெறும் ஏமாற்றங்களையே தருகிறது. அந்த ஒருநாள் வெயிலுக்குப் பின் இவன் வாழ்க்கையில் எங்கும் இருளே படர்கிறது.

பாத்திரங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதுபோல படம் எடுக்கவேண்டும் என பாலு மகேந்திரா ஒரு பேட்டியில் சொன்னார். அவரேகூட சில பொன் மேனி உருகல்களோடுதான் படம் எடுத்திருக்கிறார். வெயில், கிராமத்து வீதிகளில் விதி ஆடும் பம்பர விளையாட்டுக்களை நேரடியாய் பதித்ததுபோல எடுக்கப்பட்டுள்ளது.

உறவுகளின் பரிமாணங்களை முகபாவத்திலேயும் குறைந்தபட்ச வசனத்திலேயும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். வெறும் குடும்ப உறவுகளை மட்டுமல்லாது கிராமத்தின் பல முகங்களையும் கதையில் இணைத்திருப்பதும் சிறப்பு.

பாத்திரங்களாய் வாழ்ந்திருக்கிறார்கள் நடிகர்கள். 'போட்டுரலாம்' 'தூக்கிரலாம்; எனும் வில்லன்களின் உரையாடல்களை தவிர்த்துப் பார்த்தால் படம் நம்ம மாமூல் தமிழ் படங்களை துவைத்துப் போட்டிருக்கிறது.

வீட்டை விட்டு ஓடிப்போகும் பல சிறுவர்கள்பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.

ஊரில் என் பக்கத்து வீட்டில் என் வயதில் ஒரு நண்பன் இருந்தான். 6 அல்லது 7வது படிக்கும்போது கொஞ்சம் காசை எடுத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடினான். சில நாட்களுக்குப்பின் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்துவரப்பட்டான். அன்றிலிருந்து அவன் வாழ்க்கை தலைகீழானது. படிப்பு நின்றது. சின்னச் சின்ன வேலைகள் செய்தான். டிரைவர் ஆனான். அவனை நல்லவன் என ஊரே அடையாளம் காண்டபோது ஒரு சாலை விபத்தில் இறந்துபோனான்.

கோயமுத்தூரில் இருந்த நாட்களில் அங்கிருக்கும் சிறுவர்களுக்கான சிறைச்சாலை ஒன்றை ஞாயிறுதோறும் பார்வையிடும் பாக்கியம் கிடைத்தது. அங்கிருந்த சிறுவர்களில் அதிகம்பேர் வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள். அவர்களே தங்களை 'சந்தேகக் கேஸ்' 'கிரிமினல் கேஸ்' என பகுத்துக் கொள்வதுண்டு. இப்படி ஓடி வரும் சிறுவர்கள் வாழ்க்கை பல நேரங்களில் வெற்றிகரமாக அமைவதில்லை. இதில் வெற்றி பெறும் சிலரும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

குழந்தைகளை வளர்ப்பதற்கு இதுதான் சிறந்த வழி என ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே வீட்டில் வளரும் குழந்தைகள் ஒரே மாதிரியாக வளர்வதில்லை என்பதும் இதற்குச் சான்று. குழந்தைகளை தண்டிப்பது மிகவும் கவனத்துடன் செய்யப்படவேண்டிய ஒன்று என்பதை இந்தப் படத்தின் மூலமோ இன்னும் செய்தித் தாள்களில் படிக்கும் பல செய்திகள் மூலமோ இல்லை ஒரு சிறுவர் சிறைச்சாலையை போய் பார்த்தோ தெரிந்துகொள்ளலாம். சும்மா எடுத்தேன் அடித்தேன் என இருப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இன்றைய தலைமுறையில் அதீத தண்டனைகள் அதிகமில்லை எனவே நினைக்கிறேன். நான் பட்ட அடி என் பிள்ளைங்க படவேண்டாம் எனும் எண்ணம் இதற்கு காரணமாயிருக்கலாம்.

படம் முடிந்ததும் ஒரு கேள்வி தோன்றியது. ஒருவேளை அன்று வெயில் குறைவாயிருந்திருந்தால்?


கூகிளிய பிற விமர்சனங்கள்
தம்பி
சாரல்
விழியன்
யாழ்

Tuesday, January 02, 2007

(EX) நட்சத்திரம்

நட்சத்திர வாரம் இனிதே நிறைவுற்றது. வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுவிற்கு நன்றி. வாசித்து ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி.

நண்பர்களின் பேராதரவுடன் சென்ற வாரம் எனக்கு மிக முக்கியமான வாரமாய் அமைந்தது. இன்னும் நிறைய எழுத நினைத்திருந்தபோதும் விழாக்காலத்தில் எழுத நேரமின்மையின் காரணமாய் இயலாமல் போனது. (தப்பிச்சிட்டீங்க!)

போன வாரம் போட்ட பல பதிவுகள் 5 நட்சத்திரப் பதிவுகளாய் வாக்களிக்கப்பட்டிருந்தன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து வந்த பொடிச்சிக்கு வாழ்த்துக்கள்.

நட்சத்திரப் பதிவுகளை மீண்டும் வாசிக்க...

e-த்திச் சூடி
Sad'AM' News
2007 தமிழ் திரைப்படங்கள் முன்னோட்டம்
சுட்டமீனும் சுறாபுட்டும்
நாவல் எழுதுறேங்க....
(மூள) நட்சத்திரம்
(சிரி) நட்சத்திரம்
(விண்) நட்சத்திரம்
(வாள்) நட்சத்திரம்
(வால்) நட்சத்திரம்

இனி பதிவுகள் குறைவாகவே தர இருக்கின்றேன். "கிறிஸ்த்துமஸ் அதுவுமா லாப்டாப்பும் கையுமா கெடக்குறீங்கன்னு" வாங்கின திட்டுல சூடு சொரண எல்லாம் எடை போட்டு பாத்தாச்சு.

குழு பதிவுகளில் தொடரந்து பதிக்க எண்ணம். தமிழோவியத்தில் ஒரு சின்ன தொடர் விரைவில் ஆரம்பம். மொத்தத்தில் ஒரு எழுத்தாளன் கொஞ்சம் ஓய்வெடுக்கப் போகிறான். (ஹையோ ஹையோ (அ) ஹையா ஹையா).

போன வாரம் நம்ம நிலமை...


Monday, January 01, 2007

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இணைய நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ்