.

Monday, January 29, 2007

இயேசு சொன்ன கதைகள் - 3

மருத்துவன் நோயுற்றவனுக்கேயன்றி நலமாயுள்ளவனுக்கல்ல." இயேசு தன்னைப்பற்றி கூறிய உவமை இது."பாவிகளை மீட்கவே வந்தேன்." என்பது அவரது பொன்மொழி. கடவுள் பாவிகளையே தேடுகிறார், நீதிமான்களையல்ல என வெளிப்படையாகச் சொன்னவர் இயேசு.

பாவி ஒருவனின் மனதிருத்தம் எத்தகையது?

"உங்களில் யார் ஒருவன் தன் நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போக, தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு தொலைந்த ஆட்டை தேடிப்போகாமைலிருப்பான்? அதை அவன் கண்டதும் குதூகுலத்துடன் தன் தோள்களில் போட்டுக்கொள்வான். வீட்டுக்கு வந்ததும் தன் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,"என்னோடு கொண்டாடுங்கள், தொலைந்துபோன என் ஆட்டை கண்டெடுத்தேன்" என்பான். விண்ணுலகம், மனம் திருந்திய ஒரு பாவியின் நிமித்தம் அடையும் மகிழ்ச்சி, தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பற்றிய மகிழ்ச்சியைவிட அதிகமானது"

இயேசு தன்னை 'நல்ல மேய்ப்பன்' என்று சொல்வது இதனால்தான். இயேசுவை மேய்ப்பனாக சித்தரிக்கும் படங்கள் இந்தக்கருத்தையே சொல்கின்றன.

மேய்ப்பன் கதைக்குத் தொடர்ச்சியாக இன்னுமொரு கதை சொல்கிறார் இயேசு,"எந்தப் பெண் தன் பத்து வெள்ளிக்காசுகளில் ஒன்று காணாமல் போக, விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதை தேடாமலிருப்பாள்? அவள் அதை கண்டபோது அவள் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,"என்னோடு மகிழுங்கள், நான் தொலைத்ததை கண்டெடுத்தேன்" என்பாள். மனம் திருந்தும் பாவியை முன்னிட்டு கடவுளின் தூதர்கள் மகிழ்வார்கள்" என்றார்.

ஒரு வெள்ளிக் காசு ஒரு நாள் ஊதியத்துக்கு சமமானதாம்.

சாகக் கொடுத்தாலும் போகக் கொடுக்கக்கூடாதென்பார்கள். அண்மையில் அரட்டை அரங்கம் சிறுவயதில் தொலைந்துபோன ஒரு சிறுமியை அவளின் குடும்பத்தாரோடு சேர்த்துவைத்த நிகழ்ச்சியைக் கண்டேன். அந்தக் குடும்பம் அவளை கட்டித் தழுவி கொண்டாடியது. அரட்டை அரங்கக் குழுவின் முகத்தில் ஒரு அசாதரணப் பெருமிதமும் மகிழ்ச்சியும். சொந்தக்காரர்களும் பக்கத்துவீட்டுக்காரர்கலும் சந்தோஷித்தனர், பார்வையாளர்களின் கண்களில் ஆனந்தத்துளிகள்.

மனம் திருந்தி வாழும் மனிதன் பொருட்டு கடவுளும் இத்தகைய மகிழ்ச்சிகொள்கிறார்.


நன்றி: தமிழோவியம்

No comments:

சிறில் அலெக்ஸ்