.

Sunday, June 25, 2006

வெறுப்பு

என் சதையைக் கிழிக்கும் சாட்டையடி சத்தத்தில்
என் காதுகள் செவிடாயின...
'கட்டவிழ்' எனும் என் கூக்குரல் எனக்கே கேட்கவில்லை.
பலகாலம் பலபேரை அடித்துக்கொண்டிருக்கிறான்
இவன் காதிலா நம் முனகல்கள் விழும்?

என் உடல் துளைக்கும் தோட்டாக்களை விடவும்
அவன் இதயம் கடினமானது

என் இரத்த மை கொண்டு
என் உடலிலேயே எழுதுகிறான்
"நீ ஈனன் என்று".

என் உடல் உழுது,
இரத்தமிறைத்து
இவன் விதைத்துச்செல்லும் தோட்டாக்கள்
விருட்சமாகும்போது,
இப்போது இயலாமல் நான் விடும்
என் மூச்சுக் காற்று
கவசமணிந்த இவன் நெஞ்சைத் துளைக்கும்,

அப்போது இவன் முனகல் கேட்காதபடி
என் புலன்கள் மரத்துப் போயிருக்கும்.

No comments:

சிறில் அலெக்ஸ்