.

Sunday, February 11, 2007

தேன்கூடு கல்யாண்

எத்தனையோ மனநிலைகளில் பல பதிவுகளும் இட்டிருக்கிறேன் இப்படி சோகத்தோடு எதையும் எழுதியதில்லை. ஒரு இளைஞன், அதுவும் சாதிக்கப் பிறந்த, சாதித்துக் காட்டிய, பிறர் சாதிக்க வழிவகுத்த ஒரு இளைஞன் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார்.

தேன் உண்ணத் தந்துவிட்டு
தேனீக்கள் பறந்துவிடும்

மழைநீரைப் பொழிந்துவிட்டு
மேகங்கள் கலையும்

பாதைக்கு வழிகாட்டி
பகலவனும் மறையும்

சுடர் ஏற்றி வைத்தவர்
சுடராகி நிற்கிறார்

இணையம் தந்த இனிய நண்பர்.

இனி எங்கே தேடுவது
இந்த ராஜாத் தேனீயை

தனக்குச் சாவில்லை
எனும்
கர்வத்தில்தான் கடவுள்
மரணத்தை அளிக்கிறான்போலும்.

கொல்லக் கிறுக்கர்கள் ஆயிரம் இருக்க
கொண்டுபோனதேன் எங்கள் நண்பரை?
செல்லாக் காசுகள் தெருவெங்கும் கிடக்க
தங்கக் காசுகள் மறைவதும் ஏன்?

இணைய நட்பை பிரிவதிலேயே
இத்தனை சோகமென்றால்
இனிய தந்தையை
வாழ்க்கைத் துணையை பிரிவதென்பது?

சொல்ல வார்த்தையில்லை.
என் கண்ணீருக்குத் தடைபோடவே
இந்தக் கவிதை.

மனம் கேட்கலைங்க. இந்த இளம் வயதில் இந்த சாதனையாளரை மரணம் கவ்விக்கொண்டது மாபெரும் சோகம். என்னோடு குறுகிய காலம் மின்னஞ்சல் தொடர்புவைத்திருந்தார். ஒருபோதும் தேன்கூட்டை உருவாக்கியவர், நிர்வகிப்பவர் என்கிற கர்வம் துளியும் தென்பட்டதில்லை அவரது வார்த்தைகளில். அவரின் கருத்துக்களையும் ஒரு suggestionஆக வைப்பாரே தவிர திணிப்பதில்லை. நான், என் கொள்கை என ஈகோவில் ஆடிக்கொண்டிருக்கும் பல இணைய ஆளுமைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்டவர்.

ஐயோ கொடுமைங்க.

கடவுளை நம்புறவங்க வேண்டிக்கங்க, நம்பாதவங்க அடுத்தவங்க நம்புகிற கடவுளிடம் வேண்டிக்குங்க, இறந்தவருக்காகவும் அவரை நம்பி இருந்தவர்களுக்காகவும்.

1.ரியாத் தமிழ்ச்சங்கம்
2.சந்திரமதி கந்தசாமி
3.துளசிகோபால்
4.நாமக்கல் சிபி
5.தமிழ்மணம்
6.சிந்தாநதி
7.முத்தமிழ்மன்றம்
8. மா. சிவகுமார்
9. யெஸ். பாலபாரதி

13 comments:

VSK said...

திரு. கல்யாண் அவர்கலின்ன் அகால மரணம் தாங்கொணா சோகம்!

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
:(((((((((((

துளசி கோபால் said...

//கொல்லக் கிறுக்கர்கள் ஆயிரம் இருக்க
கொண்டுபோனதேன் எங்கள் நண்பரை?
செல்லாக் காசுகள் தெருவெங்கும் கிடக்க
தங்கக் காசுகள் மறைவதும் ஏன்//

இது முற்றிலும் உண்மை.

வருந்துகின்றேன்.

ஜோ/Joe said...

எனக்கும் அவருக்கும் நேரடித் தொடர்பு இருந்ததில்லை. ஆனால் நீங்களெல்லாம் எழுதுவதை படிக்கும் போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

கலங்கிய விழிகளுடன்,
ஜோ

சிறில் அலெக்ஸ் said...

SK
//என்ன சொல்வதென்றே தெரியவில்லை.//
ஆமாங்க.

பதிவ திரும்பப் படிக்கும்போது அழுதேவிட்டேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இணைய நட்பை பிரிவதிலேயே
இத்தனை சோகமென்றால்
இனிய தந்தையை
வாழ்க்கைத் துணையை பிரிவதென்பது?//
:(( சோகம். இப்படிபட்ட நேரத்தில் கடவுள் மீது கோபம் வருவதை தடுக்கமுடிவதில்லை.

SurveySan said...

சாகரன் கல்யாண் யாரென்று personalஆ தெரியாது.

28 வயதில் இவ்வளவு விஷயங்கள் சாதித்திருக்கும் ஆற்றல் வியக்க வைத்தது.

தேன்கூட்டை கட்டி விட்டு நாமெல்லாம் தேன் பருக வகை செய்தவர் என்பது இன்று தான் தெரியும்.

சில விஷயங்கள் ஏன் நடக்கிறது என்பது அவ்வளவு எளிதில் புரியமாட்டேங்குது.

நடப்பவை யாவும் நன்மைக்கே என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

அவர் குடும்பத்துக்கு நம்மால் இயன்றதை செய்ய எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.

அவர் அமைத்த தேன்கூட்டை நாமெல்லாம் நல்ல விதத்தில் பயன் படுத்தி, நல்ல விதமாக முன்னேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிறில் அலெக்ஸ் said...

//அவர் குடும்பத்துக்கு நம்மால் இயன்றதை செய்ய எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.

அவர் அமைத்த தேன்கூட்டை நாமெல்லாம் நல்ல விதத்தில் பயன் படுத்தி, நல்ல விதமாக முன்னேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.//

நிஜமா செய்யணும்.

சிறில் அலெக்ஸ் said...

//சோகம். இப்படிபட்ட நேரத்தில் கடவுள் மீது கோபம் வருவதை தடுக்கமுடிவதில்லை.//

உண்மைங்க...

சிறில் அலெக்ஸ் said...

ஜோ,
இணையத்தில் சந்தித்த மக்களைப் பிரிவதே இப்படீன்னா.. அவங்க குடும்பத்தாரின் சோகம்? நினைக்கவே கஷ்டமாயிருக்குதுங்க.

கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபடவேண்டிய நேரம் இது.

பரஞ்சோதி said...

சிரில்,

கல்யாணுக்கு எப்படி அஞ்சலி செலுத்துவது என்றே புரியலை, இது ஒரு கனவாக அமையக்கூடாதான்னு இறைவனை வேண்டுகிறேன்.

கால தேவனின் காலில் விழுந்து கேட்டுக்கிறேன், இரண்டு நாள் பின்னால் போ, கல்யாணை காப்பாற்றி விடுவோம்.

கண்களில் வரும் கண்ணீரை கவிதையாக்க முடியலையே

அவருடன் பழகிய நாட்கள், தொலைபேசியில் பேசிய இனிய அனுபவங்கள் எல்லாம் எப்படி எழுதுவது என்று தெரியலை.

சென்னையில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் கட்டாயம் அவரது இறுதி சடங்குகளில் பங்கேற்க கேட்டுக்கிறேன், இது தான் நாம் அவர் செய்த தமிழ்ச்சேவைக்கு நாம் செய்யும் சிறிய நன்றிக்கடன்.

வாழும் விவேகானந்தராக அவரை கருதுனேன், அவரையும் இறைவன் தன்னுடம் அழைத்துக் கொண்டான்.

சிறில் அலெக்ஸ் said...

சோகத்தை பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றி

Anonymous said...

கல்யாணின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சியில் அவரது பணி குறிப்பிடத்தகுந்தது.
அவரைப் பறிகொடுத்துவிட்டுத் துயரத்தில் இருக்கும் அவரது மனைவி, பிள்ளை, தாயார், குடும்பத்தவருக்கும், நண்பர்களுக்கும் என் ஆறுதல்கள்.

Jeevan said...

சாகரனுக்கான சுவிஸ் வானோலி அஞ்சலி இங்கே.....
http://ajeevan.blogspot.com/
or
http://radio.ajeevan.com/

சிறில் அலெக்ஸ்