.

Sunday, February 18, 2007

Gas chambers அல்லது அரவிந்தன் நீலகண்டனுக்கான பின்னூட்டம்

கிறீத்துவ வழிபாட்டு முறைகளில் என்னைக் கவர்ந்த ஒன்று சிலுவைப்பாதை. இயேசுவை தீர்ப்பிடுதல் துவங்கி அவரை கல்லறையில் அடக்கம் செய்தல் வரை நிகழும் நிகழ்வுகளாக மொத்தம் 14 நிலைகள் வகுக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் ஒரு தியானமும் செபமும் செய்யப்படும்.

இயேசு ஒரு மனிதன் என்றே வைத்துக்கொள்வோம், அவரின் அகால மரணத்தை அசைபோடுவதென்பது அதுவும் ஆன்மீகப் பழக்கமாக செய்வதென்பது எனக்குள் பல சிந்தனைகளைத் தூண்டியிருக்கிறது ஆனால் ஒருபோதும் வெறுப்பைத் தூண்டியதில்லை. சாதாரணமாக ஒரு கல்லறையைக் கடந்துபோகும்போதே வாழ்க்கையைப் பற்றி அலசத்தூண்டப் படும் என்னால் சிலுவைப்பாதைகளை விரும்பாமல் இருக்க இயலவில்லை

பொதுவாக சிலுவைப்பாதைகள் எழுதி வாசிக்கப்படுகின்றன. கிறீத்துவ புத்தகக் கடைகளில் நிச்சயம் கிடைக்கும் அதை வாங்கிப் படித்தால் உங்களுக்கு சிலுவைப் பாதைகள் நடக்கும்போது கிறீத்துவர்கள் என்ன தியானிக்கிறார்கள் என்பது புலப்படும்.

சிறிய உதாரணம். முதல் நிலையில் (ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறது இது) இயேசு தீர்ப்பிடப் படுகிறார். இயேசு, தான் இறைமகன் என்கிறார், யூதர்கள் தேடிக்கொண்டிருந்த மீட்பர் நான் என்கிறார். இதனால் யூதர்களின் ஆதிக்க சக்திகளும் அவர்கள் பின்னிருந்த மக்களும் இயேசுவை சிலுவையில் அறையும்படி கையளிக்கின்றனர். ரோம ஆளுனன் போஞ்சியஸ் பைலட் (பிலாத்து) இவரிடம் நான் எந்தக் குறையையும் காணவில்லை என்கிறான்.

பிலாத்து ஆளுனன். நீதிவழங்குபவன். அரசின் சட்டங்கள் எதையும் இயேசு மீறாதபோது தாண்டனை வழங்கத் தயங்கினான்.

யூதர்கள் இவன் இரத்தப் பழி எங்கல் மேல் விழட்டும் எனச் சொல்கிறார்கள். பின்பு பிலாத்து இயேசுவை சிலுவைமரணத்துக்கு தீர்ப்பிடுகிறார்.

இந்த நிலை சிலுவைப்பதையில் எப்படி இருக்கும்.

'இயேசு நாதர் பாடுபட்ட முதலாம் ஸ்தலம்: இயேசுவை தீர்ப்பிடுகிறார்கள்' என்பார் நடத்துனர். மக்கள் எல்லோரும் 'திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றிஅறிந்த தோத்திரம் செய்கீறோம். ஏனெனில் அந்த பாரமான சிலுவையைக் கொண்டு உலகை மீட்டு ரட்சித்தீர்.' என பதிலளிப்பார்கள்.

அப்புறமா ஒரு சின்ன தியானம். தியானிக்க ஒரு கருத்து சொல்லப்படும் இது 100க்கு 99 முறை 'இந்த முதலாம் நிலையில் நாம் யாரையெல்லாம் தீர்ப்பிட்டிருக்கிறோம், அநியாயமாய் குற்றம் சாட்டியிருக்கிறோம் என எண்ணிப்பார்த்து வருந்துவோம்' என்பதுபோலத்ததன் இருக்கும். மீதம் ஒரு முறை ஒரு மாற்றுச் சிந்தனையாக இதுபோன்ற சிந்தனை ஏதாவது சொல்லப்படும்.

இதுபோல 14 தலங்களும் சுயபரிசோதனைக்கான உந்துதல்களே தவிர அரவிந்தன் நீலகண்டன் சொல்வதைப்போல வெறுப்பை விதைக்க அல்ல.

சரி சிலுவைப்பதை பற்றிய பெரிய புரிதலை அவரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. எனவே தொடர்புள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்.

மெல்கிப்சன் எடுத்த இயேசுவின் பாடுகள் (Passion of Christ) என்கிற படம் யூதர்களுக்கு எதிரான படம் என்கிறார். இதை க்ரஃபிக்ஸ் கலக்கல் எனவும் சொல்லிவிடுகிறார். இந்தப்படம் இயேசுவின் கடைசிப்பயணமான சிலுவைப் பயணத்தை விவரிக்கிறது.

சிலுவை மரணம் என்பது அப்போது மிகக் கொடிய தண்டனை. இயேசுவை கட்டிவைத்து சாட்டையால் அடிக்கின்றனர் பின்னர் தோளில் சிலுவையை சுமக்கச்சொல்லி கொல்கத்தா எனும் மலைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே சிலுவையில் அறைகின்றனர். இயேசு மரிக்கிறார்.

மேல்சொன்ன இந்த வரிகளைப் படிக்கும்போது உள்ளுக்குள் ஒரு காட்சிபோல (Visualization) தோன்றியிருக்கும். நானும் இயேசு சிலுவையில் தொங்குவதாக வடிக்கப்பட்டிருக்கும் சிருபங்கள் பலதையும் பார்த்திருக்கிறேன். அத்தனை கோரமானதாக அவை இருப்பதில்லை. பொதுவாக பார்த்தால் ஓரளவு பரிதாபம் வரும். இப்படி இயேசு தொங்கும் சிலுவைகள் ஒரு அடையாளமாகத்தான் அப்படி வைக்கப்படுகின்றனவே தவிர அவையே தத்ரூப மறுவடிப்புக்கள் அல்ல.

உண்மையில் சிலுவைப்பயணம் எப்படி இருந்திருக்கும்? தசைகள் கிழிய சாட்டையடிபட்டு, தெருத்தெருவாக விழுந்து எழுந்து, ஒரு ஆளைத் தாங்கும் பலம் கொண்ட மரங்கள் இரண்டினால் செய்யப்பட்ட சிலுவையை அடிபட்டத் தோளில் தசைகள் நையச் சுமந்து, தலையில் முள்ளினால் ஆக்கப்பட்டு இறுக்க பிணைக்கப்பட்ட முடியை, முகமெங்கும் இரத்தம் வழியத் தாங்கிக்கொண்டு, முள்குத்தினாலே இரத்தம் வழிந்தோடும் கைகளிலும் காலிலும் உலோக ஆணியால் துளைக்கப்பட்டு இறந்துபோன ஒருவரின் உடல் நம் கோவில் சிலுவையில் தொங்கும் உடல்போலவா இருக்கும்?

அது வேலிமீது விழுந்த துணிபோலக் கிழிந்திருக்கும். தசைகள் கிழிந்து தொங்கியிருக்கும், இரத்தம் வழிந்தோடும் புண்களும், ஆடையையும் தோலையும் இரத்தப் பிசினால் ஒன்றாக ஒட்டிவைக்கும் புண்களுமாய் இருந்திருக்கும். எச்சில் துப்பல்களும் ஏளனப் பேச்சுக்களும் நிறைந்த பயணமாயிருந்திருக்கும். உருக்குலைந்து போயிருக்கும் அந்த உடல்.

மெல் கிப்சனின் திரைப்படம் இந்த உண்மையைத்தான் எடுத்துரைக்கிறது.

என் அப்பா படத்தை பார்க்க இயலாமல் பாதியிலே வந்துவிட்டார். ஏன் எனக் கேட்டேன். 'இப்படியெல்லாம் நடந்திருக்குமா?' எனச் சொன்னார். நான் சொன்னேன்,"அப்புறம்? சிலுவை மரணம்னா சும்மாவா." இன்றைக்கு ஒரு திருடனை ஊரில் பிடித்துவைத்தால் என்ன செய்கிறோம்? எல்லாருமா செர்ந்து இரத்தம் வரும்வரைக்கும் அடிக்கிறோம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர். சமத்துவம், சகோதரத்துவம், மக்களாட்சி, நீதிமன்ரம் எனும் இன்றைய நிலமைகள் எல்லாம் துவக்கநிலைகளில் இருந்த காலங்களில் ஒருவனுக்கு சிலுவை மரணம் தருகிறார்கள் என்றால் சும்மா அழைத்துச் சென்று. வாங்க, இந்த சிலுவையில் படுங்க உங்களை அறைகிறோம் எனவா சொல்வார்கள்?

பைபிளில் சொல்லப்படாத எதுவும் 'இயேசுவின் பாடுகளில்' சொல்லப்படவில்லை என்பது நானறிந்தவரையில் உண்மை. அதுபோல யூதர்களுக்கு எதிராக பைபிளில் இல்லாத எதையும் மெல் கிப்சன் படத்தில் சொல்லவில்லை.

அப்ப பைபிள் யூதர்களுக்கு எதிரானதா? இயெசுவின் போதனைகள் மதத்தின் பெயரால் சட்டதிட்டங்கலைப் போட்டுக்கொண்டு தங்களைத் தாமே உயர்த்திக்கொண்டும், சடங்குகளின் பெயரில் மக்களை ஏமாற்றிக்கொண்டுமிருந்த மதக்குருக்களின் இருப்பை கேள்வி கேட்டது. அவர் இவர்களை 'விரியன் பாம்புக் குட்டிகளே', 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்' எனத் திட்டினார். ஒரு கட்டத்தில் கோவிலில் வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களை கயிறால் கட்டிய சாட்டையால் 'என் தந்தையின் இல்லத்தை வியாபாரக்கூடாரமாக்காதீர்கள்' எனக் கூறி விரட்டியடிக்கிறார்.

வெறும் சட்ங்குகளை வலியுறுத்தவில்லை இயேசு. புதிய மனித மனித உறவு மனித இறை உறவுக்கான போதனைகளை, படிப்பினைகளை உருவாக்கினார் இயேசு. பத்துக் கட்டளைகளையும் 'எல்லாவற்றிற்கும் மேலாக இறறவனன நேசி. தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசி' எனும் இரண்டு கட்டலலகளுக்குள் அடக்கினார் இயேசு. இதுதான் இயேசுவின் போதனையின சாரம்.

நோன்பிருக்கிறேன் என முகத்தை வாட்டமாக வைத்துக்கொண்டு வெளி அடையாளமாக கிழிந்த ஆடைகளை அணிந்துகொண்டும் திரிபவர்களை வெளிவேடக்காரர்கள் என்றார். நோன்பிருக்கும்போது அறையில் தனித்திருந்து இறைவனை வேண்டுதல் போதுமானது என்றார் இயேசு. வெளி அடையாளம் எதுவுமே தேவையில்லை என்றவர். இதெல்லாம் யூத 'ஆச்சார்யார்களுக்கு' ஆட்டத்தைத் தந்தது. இதுபோன்ற ஆட்டம்கண்டு அழிக்கத் துணிபவர்களை எல்லா கலாச்சாரங்களிலும் காண முடிகிறது. இப்படி யூத மதத்தின் அதிகார வர்கத்தில் இருந்துகொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்த யூத 'ஆச்சாரியார்களை'க் கேள்விகேட்டார் இயேசு அவர்களின் தூண்டுதலாலும் முழுமுயற்சியாலும் கொல்லப்பட்டார் இயேசு.

அரவிந்தன் ஒரு பைபிள் வாசகத்தை கையாளுகிறார்.

//நாடகங்களில் ரோமானிய அதிபன் போண்டியஸ் பைலேட் ஏசுவை கொல்ல மிகவும் தயங்குவான். யூதர்களும் அதன் ஆச்சாரியர்களும் அவனை கட்டாயப்படுத்துவர். அதன் விளைவாகவே அவன் அவனுக்கு இஷ்டமில்லாது இந்த அப்பாவியின் இரத்தத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதைக் காட்ட கை கழுவுவான். யூதர்களோ இந்த கொலைக்கான பழி எங்கள் மீதும் எங்கள் சந்ததியினர் மீதும் விழட்டும் என குரலெழுப்புவர். இது மத்தேயு எழுதியதாகக் கூறப்படும் 'பரிசுத்த நற்செய்தி 'யிலிருந்து (மத்தேயு-27:25). பின்னர் சிலுவைபாடுகள் தொடங்கும்.//

அரவிந்தன் இதை யூதர்கள் மீது விழுந்த இரத்த சாபம் என்கிறார். மீண்டும் வசனத்தை படியுங்கள். இது சாபமா? யார் பேசுவதுபோல அமைந்துள்ளது இது. இயேசுவோ அவரது சீடர்களோ சொல்வதைப்போலவா இல்லை யூதர்கள் சொல்வதுபோலவா?

தாங்களே தங்களை சபித்துக்கொண்டார்கள் என்கிறாரா அரவிந்தன்?

பைபிளில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இயேசு மரணத்தின் முன்பு சிலுவையிலிருந்த 'இவர்கள் செய்வதென்ன என்பதை உணராமல் செய்கிரார்கள் இவர்களை மன்னியும்' என வேண்டிக்கொள்வதாகச் சொல்கிறது பைபிள். இதன் உள் அர்த்தத்தத உணர்ந்து நடப்பவந்தான் உண்மையான கிறீத்துவன், மனிதன். இதை செய்யாத எவனுமே பாவி எனவும் நீங்கள் குற்றம் சாட்டியிருக்கும் அதே கத்தோலிக்க கிறீத்துவ சபை எனக்குச் சொல்லித் தந்திருக்கிறது.

மிச'நரி'கள் என நீங்கள் எல்லாம் சதா திட்டிக்கொண்டிருக்கும் கிறீத்துவ சாமியார்களைப்பற்றி என்ன குற்றச்சாட்டுக்களை வைக்கிறீர்களோ அத்தனையும் உங்களுக்கு எவ்வளவு பொருந்துகிறது என சுயசோதனை செய்யுங்கள் நண்பரே.

ஹிட்லர் காலத்தில் நடந்தது என்ன?

போப்தான் ஹிட்லரைத் தூண்டி விட்டார் என்பதுபோல அரவிந்தன் பேசுகிறார். ஆனால் அவரின் முந்தையக் கட்டுரை ஒன்றில் (ரெம்ப முந்தையது அல்ல 2 கட்டுரைக்கு முன்னால்) இவர் ஹிட்லரைப் பற்றிய குஜராத் பாடபுத்தகத்தில் இருப்பதைச் சொல்லும்போது ஹிட்லர் தன் மக்களின் பொருளாதார பலகீனத்தை பயன்படுத்திக் கொண்டார் என்பதை அவரே மேற்கோள் காட்டுகிறார். உண்மையும் அதுவே. யூதர்கள் தங்களுக்கே உரிய (நல்ல) குணமான வியாபாரத் திறமையைக் கொண்டு செல்வச் செழிப்பில் வாழ்ந்துவந்தனர். இதுகுறித்து எழுந்த 'அரசியல் சிந்தனையில் உதித்ததுதான் நாஜியிசம். இது கட்டுரையில் எங்கும் காணப்படவில்லை. நாஜியின் அடையாளமாக ஹிட்லர் தேர்ந்தெடுத்தது சிலுவையா அல்லது வேறெதுவுமா என்பது அரவிந்தன் நீலகண்டனுக்குத் தெரியாமலில்லை.

ஹிட்லர்காலத்தில் கத்தோலிக்க திருச்சபை செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது திருச்சபை. தப்பே செய்யலேன்னா எதுக்கு மன்னிப்பு? கத்தோலிக்க திருச்சபை செய்த தவறு என எல்லோரும் குறிப்பிடுவது திருச்சபை ஹிட்லரைக் கண்டுகொள்ளாமல் இருந்ததைத்தான். திருச்சபை யூதர்களுக்கெதிராக ஹிட்லரைத் தூண்டிவிட்டது என்பது யூதர்கள்கூட சொல்லாத கதை. ஹிட்லரின் உண்மை முகம் தெரிய வந்ததும் அவனை விட்டு விலகி நின்றது கத்தோலிக்கம். கத்தோலிக்கம் ஹிட்லர் காலத்து செயல்களுக்காக (சயலின்மைக்காக) மன்னிப்பபக் கோரவில்லை மாறாக தன் பெயரில் நிகழ்த்தப்பட்ட அனைத்து தவறுகளுக்ககவும்.

"It is appropriate that, as the Second Millennium of Christianity draws to a close, the Church should become more fully conscious of the sinfulness of her children, recalling all those times in history when they departed from the spirit of Christ and his Gospel and, instead of offering to the world the witness of a life inspired by the values of faith, indulged in ways of thinking and acting which were truly forms of counter-witness and scandal".

இதைப்போல ஒரு மன்னிப்பை. பகிரங்கமாகத் தன் தவறை ஒப்புக்கொண்டு வரலாற்றில் தன் பெயரில் நடந்த கொடுமமகளை நினைந்து கணக்கெடுத்து வெளிக்கொண்டுவரும் மற்றொரு மதத்தை அரவிந்தன் நீலகண்டன் சொல்வாரா?

பின்சாஸ் லபைட் எனப்படும் யூத மதகுரு தனது புத்தகத்தில் கத்தோலிக்க திருச்சபை போப் 12ஆம் பயஸ்'ன் கீழ் கிட்டத்தட்ட 8,60,000 யூதர்களின் உயிரைக் காப்பாற்றியிருப்பதாக எழுதியிருக்கிறார்.

//The Israeli consul, Pinchas E. Lapide, in his book, Three Popes and the Jews (New York: Hawthorn Books, Inc., 1967) critically examines Pope Pius XII. According to his research, the Catholic Church under Pius XII was instrumental in saving 860,000 Jews from Nazi death camps (p. 214).//

பயஸ் குரல் விடுத்திருந்தால் மேலும் பலரை காப்பாற்றியிருக்க இயலுமா? மேல்கூறிய யூதர் கூறுகிறார் ஹிட்லரின் concentration campல் இருந்த மக்கள்கூட போப் ஹிட்லருக்கு எதிராகப் பேசுவதை விரும்பவில்லை என்று. ஏன்? அது மேலும் பல கிறீத்துவர்களையும் கிறீத்துவ குருக்களையும் ஹிட்லர் கொல்ல வழிவகுத்திருக்கும்?

அப்ப ஹிட்லர் கிறீத்தவர்களையே கொன்றிருக்கிறானா? ஆமாங்க ஆமா. அரவிந்தனுக்குத் தெரிந்தும் இதை மறைத்திருப்பர் அல்லது எப்படி சிலர் ஹோலொகஸ்ட் என்பதே இல்லை என மறுப்பார்களோ அதுபோல மறுக்கலாம்(அவ்வளவு தூரம் சிந்திக்கத் தெரியாதவரல்ல என் நண்பர்). யூதர்களுக்கு உதவிய லட்சக்கணக்கான கிறீத்துவர்களை சிறையில் அடைத்தான் ஹிட்லர். அவர்களில் பலர் இறக்கவும் செய்தனர். இப்படி ஹிட்லரை எதிர்த்து உயிர்விட்டவர்களை புனிதர்கள் என அறிவித்திருக்கிறது திருச்சபை. ஹிட்லரை அல்ல.

டிசம்பர் 23, 1940 டைம் பத்திரிகை ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் கருத்தத வெளியிட்டது,
Being a lover of freedom, when the revolution came in Germany, I looked to the universities to defend it, knowing that they had always boasted of their devotion to the cause of truth; but, no, the universities immediately were silenced. Then I looked to the great editors of the newspapers whose flaming editorials in days gone by had proclaimed their love of freedom; but they, like the universities, were silenced in a few short weeks...

Only the Church stood squarely across the path of Hitler's campaign for suppressing truth. I never had any special interest in the Church before, but now I feel a great affection and admiration because the Church alone has had the courage and persistence to stand for intellectual truth and moral freedom. I am forced thus to confess that what I once despised I now praise unreservedly.

இதைச் சொன்னவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அதனாலென்ன? இவர் நீங்க நினைப்பதுபோல கிறீத்துவர் அல்லர். இவர் ஒரு யூத வம்சாவளியில் வந்த ஜெர்மெனிக்காரர்.

Dec, 23 1940 Time மற்றுமொருமுறை கத்தோலிக்க ப்ராட்டஸ்டாண்ட் 200,000 கிறீத்துவர்கள் எப்படி யூதர்களுக்கு உதவியதால் ஹிட்லரால் சிறையிலடைக்கப் பட்டார்கள் எனச் சொல்கிறது. அதே பதிப்பில் பக்கம் 40ல் மூனிக்(Munich) ஆர்ச் பிஷப் பூசையின்போது ஜெர்மனிய கிரீத்துவ மக்களுக்குச் சொன்ன போதனையை குறிப்பிடுகிறது.

"Let us not forget that we were saved not by German blood but by the blood of Christ!" நாம் நாஜி ரத்தத்தால் அல்ல இயேசுவின் ரத்தத்தாலேயே மீட்கப்பட்டோம் எனப் பொருள். பின்னர் இவரைக் கொல்ல நாஜிகள் செய்த முயற்சியிலிருந்து தப்பினார்.

போப் பயஸ் முழுவதுமாக அமைதிகாக்கவில்லை.

According to The New York Times editorial on December 25, 1941 (Late Day edition, p. 24):

The voice of Pius XII is a lonely voice in the silence and darkness enveloping Europe this Christmas... he is about the only ruler left on the Continent of Europe who dares to raise his voice at all... the Pope put himself squarely against Hitlerism... he left no doubt that the Nazi aims are also irreconcilable with his own conception of a Christian peace.

Also The New York Times editorial on December 25, 1942 (Late Day edition, p. 16) states:This Christmas more than ever he is a lonely voice crying out of the silence of a continent... Pope Pius expresses as passionately as any leader on our side the war aims of the struggle for freedom when he says that those who aim at building a new world must fight for free choice of government and religious order. They must refuse that the state should make of individuals a herd of whom the state disposes as if they were lifeless things.

கத்தோலிக்க திருச்சபை தன் நடுநிலமையை தக்கவைத்துக்கொண்டு யூதர்களுக்கு எத்தனை உதவிகளை மறைமுகமாகச் செய்ய இயலுமோ அதைச் செய்துகொண்டிருந்தது என்பதே உண்மை.

போப் பயசின் முயற்சிகளையும், இரண்டாம் உலகப் போரின்போது செய்த தொண்டுகளையும் முன்வைத்து ரோமின் ராபை 1944 கத்தோலிக்கராக மதம் மாறியதாகச் சொல்கிறது வரலாறு.

முடிவாக...

நண்பர் திரு அவர்கள் கீதையைக் குறைவாக எழுதிய பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தில் "மத புத்தகங்களைப் படித்து நல்லகாரியங்களைச் செய்பவனும் இருக்கிறான் கெட்டதைப் பிடித்துக்கொண்டு அல்லாடுகிறவனும் இருக்கிறான்" எனச் சொன்னேன். இது பைபிளுக்கும் பொருந்தும்.

பைபிளின் பெயரால் கிறீத்துவின் பெயரால் பல கொடுமைகள் நடந்துள்ளன. அன்று இயேசு எதை எதிர்த்தாரோ அதாகவே கிறீத்துவம் பல கட்டங்களில் வாழ்ந்து வந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. இவற்றை ஒரு முழு வரலாற்றுப் பார்வையில் கத்தோலிக்க கிறீத்துவம் இந்த தவறுகளை நிகழ்த்திய காலங்களையும் அப்போது இருந்த நியாயங்களளயும் சீர்தூக்கிப் பபர்த்தோமானால் இராமன் பின்னாலிருந்து அம்பு எய்ததன் தர்மம் எப்படி தர்மமோ அதுபோலவே இதுவும் எனப் புரியும். சில கொடுமைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதில் ஐயமில்லை.

கத்தோலிக்கம் ஒரு காலகட்டத்தில் உலகின் பல வலுவாய்ந்த அரசர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருந்தது. பல அரசியல் முடிவுகளையும் எடுத்துவந்த ஒரு அமைப்பாக இருந்தது. இந்த கால கட்டங்களில் பல அரசியல் தவறுகளையும் செய்துள்ளது.

வரலாற்றைக்கொண்டே நம் எதிர்காலத்தை முடிவு செய்வோமென்றால் நாமெல்லாம் ஆடையின்றித் திரியவேண்டியதுதான் போலும்.

திருச்சபை தன்னை திருத்திக்கொள்ள தன் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட பல தவறுகளையும் தேடிப்பிடித்து ஆராய்ந்து தவறுகளை தவிர்க்க தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறது. இதுபோன்றதொரு முயற்சி எத்தனை மதங்களில் சாத்தியம்?

இந்து மதம் கிறீத்துவத்தால் அழிக்கப்பட்டுவிடுமோ எனும் அரவிந்தனின் போன்றோரின் பயம் ஓரளவுக்கு நியாயமானது. ஆனால் இதை எதிர்கொள்ள இவர்கள் எடுத்துக்கொள்ளும் முயர்சிகள் மிசனரிகளின் முயற்சிகளைவிட வருந்தத்தக்கதாகவே தெரிகிறது.

கிறீத்துவத்தையும் இஸ்லாமையும் குறைசொல்ல எடுத்துக்கொள்ளும் முயற்சிகளில் சமபங்கு முயற்சியையாவது தன் மக்களை ஒன்றுபடுத்துவதிலும், இந்துமதத்தின் தத்துவக் கூறுகளை விளக்குவதிலும் தூக்கி நிறுத்துவதிலும் செயல் படுத்தலாம். நடராஜரின் Cosmic dance போன்ற கருத்துக்களள இந்துமதம் உண்மையில் எப்படிச் சொல்லியுள்ளது என்பதுபோன்ற கட்டுரைகளை வரையலாம். சாதியை ஒழிக்கவேண்டும் எனும் உயரிய கருத்தைச் சொல்லும் (தீவிர) இந்து நீங்கள். சாதியை தூக்கிப்பிடித்தவரைச் சாடினீர்கள். இதை எப்படிச் செய்யப்போகிறோம் எனச் சொல்லலாம். இன்னும் எத்தனையோ வழிகளில் உங்கள் பிரச்சாரங்களைச் செய்யலாம். கிறீத்துவம் போர்களாலும் ஏமாற்று வேலைகளாலும் வளர்க்கப்பட்டிருந்தாலும் அது அழியாமல் நிலைத்திருப்பதற்கான ஒரே காரணம் அதன் அடிப்படியில் அமமந்திருக்கும் கிறீத்துவின் போதனைகள், மற்றும் இந்தப் போதனைகளை தொடர்ந்து போதிக்கும் கட்டுக்கோப்பு. இந்தக் கட்டுக்கோப்பை உருவாக்காதவரை அரைகுறை இந்துக்கள் மதம் மாறிக்கொண்டேதான் இருப்பார்கள்.

நூற்றுக்கணக்கான வருடங்களாயிருந்த இஸ்லாமியரின் ஆட்சியில், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இல்லாத மதவாதா தேசியம் இன்றைக்கு மக்களாட்சியில் தென்படுகிறதென்பது வருந்தத்தக்கதே.

தன் மதத்தை பலரும் குறை சொல்லும்போது அடுத்தமதமும் இப்படிக் குறைகளள செய்திருக்கிறது என்ச் சொல்வதன்மூலம் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கிறீர்கள் இல்லையா?

'புற்றில் வாழ் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்..' எனும் திருவாசகப் பாடல் ஈசனை நம்பாதவர்களை மூடர்கள் எனப் பழிக்கிறது. இந்தத் திருவாசகம் இசையை கத்தோலிக்க திருச்சபை வெளியிடுகிறது. (தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது). எதற்காக? நல்லிணக்கம் வரவேண்டும் என்பதற்கான முயற்சிகளில்லையா இவை?.

அந்தப் பாடலில் ஈசனைப் புகழ அன்றி மற்றவரை இகழ அவர் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ள எத்தனை புத்தகங்கள் நாம் படிக்கவேண்டும்? 'முருகா உன்னையல்லால் வேறு தெய்வமில்லை...' எனப்பாடினால் அவர் தெய்வ நிந்தனையாளரா?

நீங்கள் இந்து மதம் பற்றி எழுதும் கட்டுரைகளை தவறாது படித்து பயன்பெறும் வாசகன். இரசிகன் எனவே சொல்லுவேன். ஆனால் வரலாற்றை ஒருபக்கமாகப் பார்த்து பதிவிடுவதற்குப்பதிலாய், அதுவும் சில கடுமையான வார்த்தைகளோடு, இந்துமதத்தைப் பற்றிய புதைந்துகிடக்கும் உண்மைகளை, அவை எனக்குத் தெரிந்த அளவுக்குக் கூடத் தெரியாமல் இருக்கிற இந்துக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

பிரிந்துகிடக்க ஏராளம் காரணங்கள் இருக்கின்றன ஆனால் சேர்ந்திருக்க நாம் மனிதர்கள் எனும் ஒரே காரணம்தான் இருக்கின்றது.

இனியும் இதுபோல எழுதிக்கொண்டிருக்கப்போவதில்லை(கைவலிக்குது :) ). இதுபோன்ற விஷயங்களை எழுதுவதில் எனக்கு அதிகம் விருப்பமில்லை. கடவுள், ஒரு தனிமனித அனுபவமாயிருக்க வேண்டும். மதங்கள் வழிகாட்டிகளே தவிர அவையே நம் பயணத்தின் இலக்கு அல்ல. எல்லா மதங்களின் வரலாறுகளும் இரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை உங்களைப்போலவே நானும் உணர்ந்திருக்கிறேன்.

எதை நீ கொண்டுவந்தாய் இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய் வீணாவதற்கு?

இது நம் மத அடையாளங்களுக்கும் பொருந்தும். என்னை வழிநடத்தும் தத்துவங்களில் இதுவும் ஒன்று. (Thanks to De Melo: you know what I mean).

(அவசரமாய் எழுதியது பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்; யார் மனதையும் புண்படுத்த அல்ல சில சிந்தனைகளைத் தூண்டவே இந்தப் பதிவு. நானும் அரவிந்த நீலகண்டனும் சண்டைக்காரர்கள் என நினைத்து நண்பரை கேலிசெய்தோ தனிப்பட்டமுறையில் தாக்கி எதையும் எழுதினால் அதை வெளியிடப் போவதில்லை. நல்ல கருத்துக்களை மட்டும் முன்வைக்கவும். முன்வைக்கலன்னாலும் பரவாயில்ல.)

தன் நண்பருக்காக உயிரை விடுவதைவிட மேலான அன்பு எதுவுமில்லை - இயேசு

24 comments:

Radha Sriram said...

cyril,

nothing related to this post....did you get the news about samjautha express bombing....."satrumun' la yaarum ezudalaiyee??

சிறில் அலெக்ஸ் said...

நன்றி ராதா. போட்டுவிட்டேன்.

Leo Suresh said...

சிறில் அலெக்ஸ்,
நன்றாக எழுதியுள்ளீர்கள், இங்கு துபாயில் passion of christ பார்த்தபொழுது என் மனைவி அழுகை நிறுத்தவில்லை, அவர் மட்டும் இல்லை தியேட்டரில் 90 சதம் அழுகை தான் அதில் எல்லா மதத்தினரும் இருந்தார்கள்.
லியோ சுரேஷ்

Anonymous said...

//கிறீத்துவம் போர்களாலும் ஏமாற்று வேலைகளாலும் வளர்க்கப்பட்டிருந்தாலும் அது அழியாமல் நிலைத்திருப்பதற்கான ஒரே காரணம் அதன் அடிப்படியில் அமமந்திருக்கும் கிறீத்துவின் போதனைகள், மற்றும் இந்தப் போதனைகளை தொடர்ந்து போதிக்கும் கட்டுக்கோப்பு. இந்தக் கட்டுக்கோப்பை உருவாக்காதவரை அரைகுறை இந்துக்கள் மதம் மாறிக்கொண்டேதான் இருப்பார்கள்.//

சத்தியமான வார்த்தைகள் சிறில்.

அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள சிறில்,

போப் ஹிட்லரை ஆதரித்தார் என்பதற்கு இருக்கும் ஆவணங்கள் ஏராளம். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய கடிதத்தினை மீண்டும் ஒருமுறை நன்றாக படிக்கவும். கத்தோலிக்க சபையே ஹிட்லரின் அரசினை ஆதரிக்கும் முதல் முக்கிய சர்வதேச சக்தியாக விளங்கியது என்பதனை அறியலாம். ஹிட்லரின் 'போப்' குறித்து நீங்கள் கூறிய அதே விஷயங்களின் மறுபக்கத்தை விளக்கமாக காட்டி ஒரு தனிபதிவே இடவேண்டிய கசப்பான கட்டாயத்துக்கு என்னை வைத்துவிட்டீர்கள். கிறிஸ்தவத்தின் யூத எதிர்ப்பு உள்ளார்ந்தது. யூதர்கள் தங்களையே சபித்துக்கொள்ளவில்லை. மிகச்சரியாக எந்த வாசகத்தை யூதர்கள் சொன்னதாக சொன்னால் அவர்களை தலைமுறை தலைமுறையாக கொடுமைக்கு ஆளாக்க முடியுமோ அந்த வாசகத்தை சொல்ல வைக்கப்பட்டார்கள்-கிறிஸ்தவ விவிலியத்தின் கற்பனையில்-. ஹிட்லரின் பல இன-வேறுபடுத்தும் சட்டங்கள் கத்தோலிக்க சபையினால் முதன்முதலாக கொண்டுவரப்பட்டவை என்பதனை நீங்கள் அறிவீர்கள்தானே. ஹிட்லர் ஆட்சி அதிகாரத்தை அன்றைய சூழலில் நிலவிய நிச்சயமற்ற தன்மையைக் கொண்டு பிடித்தான் என்பது உண்மைதான். ஆனால் அவன் 60 இலட்சம் யூதர்களை கொல்ல அதற்கு பெரும்பாலும் அமைதி காத்த அன்றைய சமுதாயத்தின் நிலையை உருவாக்கியது கிறிஸ்தவத்தின் யூத-வெறுப்பியலே ஆகும். ஒரு வாழும் மதத்தின் மதநூலை 'பழைய ஏற்பாடு' என்று சொல்வதிலேயே ஒரு அகம்பாவம் உங்களுக்கு தெரியவில்லையா சிறில்? இத்தகைய ஆதிக்க சொல்லாடல்களை கிறிஸ்தவம் எப்போதுமே உருவாக்கி வந்துள்ளது. நால்வர் எழுதியதாக சொல்லப்படும் ஏசு காதைகளில் சித்தரிக்கப்படும் யூத ஆச்சாரியர்களின் சித்திரமே மிகவும் எதிர்மறையானது மட்டுமல்ல, யூத வரலாற்றறிஞர்களை கேட்டால் விளக்குவார்கள் வரலாற்று ஆதாரமற்றதும் கூட. ஆனால் இதில் எல்லாம் எனக்கு என்ன ஆர்வம்? என் வீட்டில் வாசல் ஏறி கொடுக்கப்படுகிற துண்டு பிரசுரங்கள் 'கர்த்தராகிய ஒரே தேவனை விசுவசித்தாலே நீயும் உன் வீட்டாரும் ரட்சிக்கப்படுவீர்கள்' என்கிறது. அத்துடன் ஏசு கருணை தயாபரன் என்கிறது. உலகில் அன்பையும் அமைதியையும் பரப்பிய ஒரே தேவன் அவரே என்கிறது. தெருவில் கொடுக்கப்படும் பிரசுரம் விக்கிரக ஆராதனை விபச்சாரத்தை போன்ற பாவம் என்கிறது. நான் கிறிஸ்தவ வீடேறி 'ஏசுவை கும்பிடுவது பேயை கும்பிடுவதாக்கும்' என பிரசுரம் கொடுக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு பதிலடியை குறைந்தபட்சம் என் கையில் 'உன் அப்பா அம்மா சாமி கும்பிடுகிற விதம் விபச்சாரத்தை போன்ற பாவம்' எனும் கருத்து பட பிரசுரம் கொடுப்பவனிடம் கொடுக்க வேண்டுமா இல்லையா? எனவே கிறிஸ்தவத்தின் வரலாற்றினை படிக்க வேண்டியுள்ளது. உங்கள் 'பழைய' ஏற்பாடு உண்மையில் பழையது அல்ல என்று தெரிகிறது. உங்கள் 'புதிய' ஏற்பாட்டில் இறைவாக்கினர் ஏசு குறித்து அளித்ததாக கூறப்படும் முன்னறிவிப்புக்கள் சரியான வியாக்கியானங்கள் அல்ல என யூதர்கள் கருதுவது தெரிகிறது. ஏசுவின் வரலாற்று தன்மையே பிரச்சனையான விஷயம் என்பது தெரிகிறது. ஐரோப்பாவில் சாதியத்தை உருவாக்கியதில் கிறிஸ்தவத்தின் பங்கு புரிகிறது. ஐரோப்பா வாழ கண்டம் கண்டமாக இனங்களை கருவறுத்ததில் கிறிஸ்தவ இறையியல் முக்கிய பங்கு வகித்தது தெரிகிறது. எனவே நாளைக்கு ஒரு கிறிஸ்தவ பிரச்சாரகன் ஒரு அப்பாவி இந்துவிடம் 'ஏசுதான் உண்மையான ஜீவனுள்ள ஒரே தேவன் அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்தான் உனக்கு விடுதலை' என கூறும் போது அந்த அப்பாவி இந்து மறுகேள்வி கேட்க வேண்டிய கேள்விகளை அவனுக்கு கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. அப்பாவி இந்துவுக்கு கழிவறையும் அதே அவசிய தேவை என்பதும் எங்களுக்கு தெரிகிறது. எனவேதான் சேவாபாரதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கழிவறை கட்டுவதில் முனைப்பாக இருக்கிறது கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரங்களை எதிர்கொள்வது போலவே. சுகாதாரக்கேடு பரவக்கூடாது பாருங்கள்.

அரவிந்தன் நீலகண்டன்

சிறில் அலெக்ஸ் said...

//போப் ஹிட்லரை ஆதரித்தார் என்பதற்கு இருக்கும் ஆவணங்கள் ஏராளம்.//

போப் ஹிட்லரை யூதர்களைக் கொல்லத் தூண்டினார் என்பதற்கும், Holocaust ஐ ஆதரித்தார் என்பதற்குமா? அல்லது ஹிட்லரின் சுய ரூபம் வெளியே தெரிவதற்கு முன் ஆதரித்ததா?

//கிறிஸ்தவத்தின் யூத எதிர்ப்பு உள்ளார்ந்தது.//

இதை 100% மறுக்கிறேன். இன்றைக்கு இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்கள், அல்லது அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்கர்கள் (நான் சில வருடங்கள் இங்கே கோயில் போயிருக்கிறேன்) சிலுவைப் பாதையின் போதோ அல்லது வேற்ந்த வழி பாட்டின் போதோ யூதர்கலைப் பற்றி பேசுவதே இல்லை.

அப்ப ஜெர்மெனியில் என்ன நடந்தது?. அங்கே நடந்தது கலாச்சார மோதல். அது ஒரு சமூக நிகழ்வு. இதற்கு எத்தனைச் சாயம் பூச முடியுமோ அத்தனைச் சாயம் பூசி வைத்துவிடப்பட்டிருக்கிறது.

ஹிட்லர் எத்தனை பேச்சுக்களில் இயேசுவுக்காக இதைச் செய்கிறோம் எனச் சொல்லியிருக்கிறார்.

கிறீத்துவம் அதன் இயற்கையான மரணத்தை அடையும் நேரம் வந்துவிட்டது எனச் சொல்கிறார் ஹிட்லர்.

//மிகச்சரியாக எந்த வாசகத்தை யூதர்கள் சொன்னதாக சொன்னால் அவர்களை தலைமுறை தலைமுறையாக கொடுமைக்கு ஆளாக்க முடியுமோ அந்த வாசகத்தை சொல்ல வைக்கப்பட்டார்கள்-கிறிஸ்தவ விவிலியத்தின் கற்பனையில்-. //

விவில்யம் கற்பனை என யாராலும் உறுதியாகச் சொல்ல இயலாது என்பதால் அது உண்மை என நம்ப எனக்கு வாய்ப்பிருக்கிறது. அது உண்மையாயிருக்கும் பட்சத்தில்?
உங்கள் வாதம் செல்லாததாய் மட்டுமல்ல அபாண்டமாய் போய்விடும்.

//ஆனால் அவன் 60 இலட்சம் யூதர்களை கொல்ல அதற்கு பெரும்பாலும் அமைதி காத்த அன்றைய சமுதாயத்தின் நிலையை உருவாக்கியது கிறிஸ்தவத்தின் யூத-வெறுப்பியலே ஆகும். //
இதத்தான் நானும் சொல்றேன்.. 'அமைதிகாத்த சமுதாயம்', இது ஒரு சமூக நிகழ்வு.
ஹிட்லர் தன்னைக் கடுவுளாக நினைத்திருப்பானே தவிற இயேசுவையா? இதே அமைதி காத்த கிறீத்துவ சமூகம் லட்சக்கணக்கில் யூதர்களை காப்பாற்றியது என்பதை ஒரு வரியிலேனும் நீங்கள் சொல்லியிருக்கவேண்டும்.

//ஒரு வாழும் மதத்தின் மதநூலை 'பழைய ஏற்பாடு' என்று சொல்வதிலேயே ஒரு அகம்பாவம் உங்களுக்கு தெரியவில்லையா சிறில்? //

அரவிந்தன் இது இயேசுவே சொன்னது. அதாவது புதிய சட்டங்களை, உடன்படிக்கையை(Testament)உருவாக்க வந்தார் என. இதற்கு அர்த்தத்தை பதிவில் சொல்ல முயன்றிருக்கிறேன்.

//நால்வர் எழுதியதாக சொல்லப்படும் ஏசு காதைகளில் சித்தரிக்கப்படும் யூத ஆச்சாரியர்களின் சித்திரமே மிகவும் எதிர்மறையானது மட்டுமல்ல, யூத வரலாற்றறிஞர்களை கேட்டால் விளக்குவார்கள் வரலாற்று ஆதாரமற்றதும் கூட. //

இயேசு கற்பனை என்பதுபோலத்தான் இதுவும். முழுமையாக நம்மால் அறுதியிட்டுக் கூற முடியாத உண்மைகள். வரலாறு இரண்டு பக்கங்களும் எழுதப்பட்டிருந்தால் இது இன்னும் கடினமாயிருக்கும்.

உங்கள் தெய்வங்களை பேய் என்று சொல்பவனை எதிர்கொள்ள டேய் உந்தெய்வமும் பேய்தாண்டா எனச் சொல்வீங்களா? அல்லது எந்தெய்வாம் வாழும் தெய்வம் அது சிலைஇல்லை எனச் சொல்லித் தருவீங்களா? எது சிறந்ததாயிருக்கும்?

ஒருவன் சொன்னமாத்திரத்திலேயே தன் கடவுளை தூக்கி எறிந்துவிட்டு ஓடுறவன் எப்படிப் பட்ட பக்திமான். சரி அவன் எளியவனாக இருப்பதால் ஓடுறான்னா அவனை இந்து மத ஆன்மீகத்தில் உறுதிபடுத்த முயலுங்கள். அதுதான் சரியான பலன் அளிக்கும். நான் இதைச் சொன்னால் நீங்க ஒண்ணு மிச'நரி'கள எதிர்க்கொறோம்னு சொல்லிட்டு இன்னொண்டு கழிவற காடுறத சொல்றீங்க.

சரி விடுங்க.
ஆர். எஸ். எஸ் மீது அவ்வளவு நன்மதிப்பும் நம்பிக்கையும் வச்சிருக்கீங்க. ஏன், எதனால எபதுபற்றியெல்லாம் எங்களுக்குச்சொல்லுங்க. இதக் கேட்க ஆவலாயிருக்கிறோம். குறைந்த பட்சம் இவர்கள் பற்றிய பயமாவது பலருக்கும் போகலாம் இல்லையா?

உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். அதனால்தானோ என்னவோ சில விஷயங்களில் நீங்க மிகவும் சிரத்தை எடுத்துகிட்ட மற்றதை விடுவதில் எனக்க்கு உடன்பாடில்லை.

We become what we read.னு சொல்லுவாங்க. நிறைய படிக்கிறீங்க. இன்னும் சொல்லித்தாங்க.

ஜோ/Joe said...

நண்பர் அரவிந்த நீலகண்டன் ஆர்.எஸ்.எஸ் சொல்லிக் கொடுத்ததை அப்படியே நம்புவதை சற்று விலக்கி, வருகின்ற தவக்காலத்தில் வெள்ளியன்று நாகர்கோவிலில் ஏதாவது ஒரு கத்தோலிக்க்க ஆலயத்தில் சிலுவைப்பாதையில் கலந்து கொண்டு அங்கு என்ன சிந்தனை கொடுக்கப்படுகிறது என்பதை நேரிடையாக அறிந்து கொண்டால் நலமாக இருக்கும் (இதையும் மதமாற்றும் சதி என்று ஜல்லி அடிக்க வேண்டாமே)

Anonymous said...

சிறில் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். அரவிந்தன் போன்ற படிப்பாளிகள் தங்கள் அறிவை பயன்ற்ற முறையில் வீண்டித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. நல்ல ஆராய்ச்சி கொண்ட நண்பர் யாருக்காக இங்கே பிற மதங்களைத் தாக்கி எழுதி வருகிறார். இவர் தாக்குமளவுக்கு அந்த மதத்தவர்கள் மத வெறுப்புக் கொண்டு குறைந்த பட்சம் வலைப்பதிவுகளில் எழுதுவதாகத் தெரியவில்லை. இல்லாத எதிரியிடம் சண்டை போடுவது போல ஒரு செயல் செய்யாமல் இந்து மதம் பற்றி தான் அறிந்ததை இந்துக்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல முறையில் விளக்கிச் சொல்ல்லாம் அவர்.

சாதிக்கு எதிரானவர் என்று ஒருமுறை அவர் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.அதை சமூகத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர என்னென்ன செய்யலாம் என்று சொல்லலாமே.

Unknown said...

Alex, I am supporting for your thought,

/கட்டுக்கோப்பை உருவாக்காதவரை அரைகுறை இந்துக்கள் மதம் மாறிக்கொண்டேதான் இருப்பார்கள்./
this is right punch

ஜடாயு said...

சிறில்,

மிக அழகாக, நிதானம் தவறாத, பக்குவமான மொழியில் விளக்கம் அளித்திருக்கிறீர்கள். அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஒரு ஆளுமைக்கு சரிசமமான பதில். பாராட்டுக்கள்.

இறுதியில் நீங்கள் இந்து தத்துவங்களை பலரும் புரிந்து கொள்ளுமாறு பரப்புங்கள் என்று அரவிந்தனிடம் சொல்லியிருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி. "If you are not with me, you are against me" என்ற போக்கிலிருந்து மாறுபட்ட அந்த சிந்தனைப் போக்கு வளரட்டும்!

ஆனாலும், passion of christ படத்தின் அதீத வன்முறைக் காட்சிகளும், ரத்தமும் எந்த வித 'ஆன்மீக' பொருளும் இல்லாதவையாகவே எனக்குப் படுகின்றன. மன வலிமை குன்றியவர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தும் ஒரு சமய தந்திரம் இது என்று தான் இதை நான் கருதுகிறேன். அரவிந்தன் பதிவின் பின்னூட்டத்திலுல் இதையே கூறியுள்ளேன்.

ஏசுவின் சிலுவைப் பாடை இப்படி ஒரு மைய நிகழ்வாகக் கருதும் இறையியல் பற்றியே ஆன்மிக ரீதியான விமரிசனம் உள்ளது. எனது பழைய பதிவு ஒன்றில் இருந்து ஒரு பகுதி :

இது தொடர்பாக சுவாமி ரங்க நாதானந்தா “நாங்கள் போற்றும் ஏசு” (“The Christ We adore”, Swami Ranganathananda, Sri Ramakrishna Math) என்னும் நூலில் கூறுகிறார் :

“தெய்வ அவதாரங்களில் ஒருவர் என்று இந்துக்கள் கண்டுணர்ந்து போற்றத் தகுந்த பல அம்சங்கள் ஏசு கிறிஸ்துவின் வாழ்விலும், உபதேசங்களிலும் உள்ளன. அவரது வாழ்வு இனிமையும், மென்மையும், துயரமும், சோகமும் இழைந்து ஆன்மீகத்தால் நிரம்பியது. ஆனால், இந்துக்களாகிய நமக்கு அவரது முடிவு என்பது ஒரு சோகம், அவ்வளவு தான். ஆன்மிகம் ததும்பும் அழகுணர்ச்சி எதுவும் அதில் இல்லை. நமது தெய்வ அவதாரங்களான ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் இவர்களது வாழ்க்கை முடிவுகளும் பெரும் சோகம் ததும்பியதாகவே இருந்தன. ஆனால் அந்த முடிவுகள் மீது நாம் சமயத்தைக் கட்டமைக்கவில்லை. இந்த மரணங்களை இயற்கை நியதியாக ஏற்றுக்கொண்டு அவர்களது வாழ்வின் அற்புதமான தருணங்களின் மீதே நம் சமயம் கட்டப் பட்டிருக்கிறது. ஏசு என்பவர் சிலுவையில் அறையப் படாமலே இருந்தாலும், அவரது வாழ்வும், உபதேசமும் இந்துக்களுக்குப் பிரியமானதாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கும், மேற்குலகிற்கும், இந்த சிலுவையில் அறைதல் என்ற துன்பியல் நிகழ்வு இல்லாமல், “ரத்தம் தோய்ந்த” தியாகம் இல்லாமல், ஏசுவின் வாழ்க்கை சாதாரணமானதாகவும், சக்தியற்றதாகவுமே தோற்றமளிக்கிறது. கிரேக்க துன்பியல் காவியங்களின் மரபில் தோய்ந்த மேற்குலகம் கிறிஸ்தவத்திற்கு இந்தத் தன்மை அளித்தது போலும்! ஆனால் இந்து மனத்திற்கோ வாழ்வு முழுவதும், உலகம் முழுவதுமே பிரபஞ்ச வடிவிலான இறைவனின் தெய்வ லீலை என்பதாகவே தோன்றுகிறது”.

சிறில் அலெக்ஸ் said...

ஜடாயு,
உங்களுக்கு மாலை கொஞ்சம் விரிவாக பதிலளிக்கிறேன்.

பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

ஜடாயு,
உங்களின் நேர்மையான வாழ்த்துக்களுடன் கூடிய பின்னூட்டத்துக்கு நன்றி.

//ஆனாலும், passion of christ படத்தின் அதீத வன்முறைக் காட்சிகளும், ரத்தமும் எந்த வித 'ஆன்மீக' பொருளும் இல்லாதவையாகவே எனக்குப் படுகின்றன. மன வலிமை குன்றியவர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தும் ஒரு சமய தந்திரம் இது என்று தான் இதை நான் கருதுகிறேன். அரவிந்தன் பதிவின் பின்னூட்டத்திலுல் இதையே கூறியுள்ளேன். //

படம் சிலுவை மரணத்தின் கொடிய முகத்தை எடுத்துக் காட்டுகிறது என்றே சொல்வேன். பதிவில் சொன்னதைப்போல, எளிதான மரணமாக அது இருந்திருக்காது என்பதைத்தான் படம் சொல்கிறது.

இப்ப கிருஷ்ணரின், இராமரின் போர் வெற்றிகளை படமாகக் காண்பிப்பது எப்படி சமய தந்திரம் ஆகாதோ அதுபோலத்தான் இது. அதாவது ஏற்கனவே நம்பப்பட்ட ஒன்றின் நிஜத்தைத்தான் படம் சொல்கிறது ஏதோ கற்பனையை அல்ல.

இயேசுவின் மரணம் ஏன் முக்கியம் வாய்ந்தது? முதல்ல அது உயிர்ப்புக்கு வழி வகுத்தது. உயிர்ப்பில்லைன்னா இயேசுவின் இறைத்தன்மை முழுமையாக வெளிவந்திருக்காது எனலாம். இயேசுவின் இறைத்தன்மை வெளிவரலன்னா கிறீத்துவம் இல்லை கிறீத்துவம் இல்லைன்னா இயேசுவை இத்தனை பேர் (இந்துக்கள் உட்பட) தெரிந்து வைத்திருக்கையலாது. So, there is no Jesus to adore.

இன்னொரு முக்கியத்துவம் இயேசு மனிதரின் பாவங்களுக்காக பலியானார், எப்படி ஒரு ஆட்டை பலி கொடுப்பது (இந்தியாவிலும் பெயர்போன பழக்கம்) நம் பாவங்களுக்கு ஈடான ஒரு தியாகமாக அமையுதோ (அல்லது கடவுளை சந்தோஷப் படுத்துதோ) அதுபோல இயேசு பலியாக்கப்பட்டார் என்பது நம்பிக்கை. 'இறைவனின் செம்மரியே'என்பதுபோலெல்லாம் கேட்டிருப்பீங்க.

ஆக இயேசுவின் இறப்பில் ஆன்மீகம் இல்லை என்பது சரியானதாகத் தெரியல. அரவிந்தன், மதமாற்ற பிரச்சாரங்களுக்கு பாடுகளின் காட்சிகளை பயன்படுத்துறதா சொல்றாரு. ஆன்மீகமில்லாமலா?

இயேசு எனக்காக உயிர் நீத்தார் எனும் இறையியல் கூர்றில் எனக்கு பல கேள்விகள் உள்ளன. இதைகுறீத்த பல வியாக்க்கியானங்களும் இருக்கலாம் ஆனால் அவற்றை எனக்கு யாரும் முழுதாகச் சொன்னதில்லை. நானும் வேண்டிப் படித்ததில்லை. ஆனால் அவரின் இறப்பு ஆன்மீக அனுபவமா என்றால் ஆம்.

ஆன்மீகம் என்பது என்ன மனிதனுக்கும் இறைவனுக்குமான உறவு. மரணத்தை நினைத்தால் உறவு வலுப்படுமா இல்லையா அதுவும் இறந்தவர் நமக்காக இறந்தார் எனும் நம்பிக்கையில்.

இதுபோல இன்னும் சொல்லிட்டே போகலாம்.

//ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கும், மேற்குலகிற்கும், இந்த சிலுவையில் அறைதல் என்ற துன்பியல் நிகழ்வு இல்லாமல், “ரத்தம் தோய்ந்த” தியாகம் இல்லாமல், ஏசுவின் வாழ்க்கை சாதாரணமானதாகவும், சக்தியற்றதாகவுமே தோற்றமளிக்கிறது. //

இதற்கு கொஞ்சம் பதில் மேலே சோல்லியிருக்கேன். இயேசுவின் இரத்தம் இல்லைன்னா என்கிறதுக்கு பேச்சே இல்ல ஏன்னா அவர் ஏற்கனவே சிந்திட்டார். இல்லையா. ஆக அப்படி ஒரு தியாகம் செய்யாத இயேசு என்கிற கேள்விக்கு இடமில்லை.

இன்னொன்று இயேசுவின் பாடுகளை, மரணத்தை மட்டும் வைத்து கிறீத்துவம் உருவாக்கப் படவில்லை. அவரது போதனைகள்தான் முன்நிறுத்தப்பட்டன(at least in its purest form). இன்றைக்கும் குறிப்பிட்ட நாட்களைத்தவிர மற்றநாட்களில் பாடுகளை நினைவு கூரவில்லை (இறப்பை நினைவு கூறுகிறார்கள்).


//கிரேக்க துன்பியல் காவியங்களின் மரபில் தோய்ந்த மேற்குலகம் கிறிஸ்தவத்திற்கு இந்தத் தன்மை அளித்தது போலும்!

ஆனால் இந்து மனத்திற்கோ வாழ்வு முழுவதும், உலகம் முழுவதுமே பிரபஞ்ச வடிவிலான இறைவனின் தெய்வ லீலை என்பதாகவே தோன்றுகிறது”.
//
இது நிச்சயம் ஒரு இந்து பார்வை. ரெம்ப பரந்த பார்வை.

ஆனா இது இயேசுவையும் நம்மையும் 'இறைவனின் லீலைக்குட்பட்ட' (oft. quoted பொம்மலாட்ட பொம்மைகள்) சாமான்யர்கள் (சமமாக) ஆக்கிவிடுகிறது. ஆனா இயேசு தெய்வம் என நம்பப்படுகிறார்?

ஜடாயு said...

சிறில், உங்கள் விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி.

// இப்ப கிருஷ்ணரின், இராமரின் போர் வெற்றிகளை படமாகக் காண்பிப்பது எப்படி சமய தந்திரம் ஆகாதோ அதுபோலத்தான் இது.//

ரக்தபீஜனின் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் பிறக்கும் அரக்கர்கள் - அவர்கள் அத்தனை பேரையும் வாய்திறந்து முழுங்கும் அன்னை காளி .. இதெல்லாம் மனித யுத்தத்தில் சாத்தியப் படுமா?

அதனால் இந்து புராணங்களில் வரும் போர்கள் எல்லாமே குறியீடுகள் என்ற கருத்து அதன் அடிப்படையிலேயே உள்ளது. அவை மிகவும் அமானுடமானவை என்பதே இதற்குக் காரணம்.

ராமாயணம், மகாபாரதம் என்ற இதிகாசங்கள் கண்டிப்பாக வரலாற்று சம்பங்கள் ஊடாக எழுந்தவை தான். ஆனால் சமய நோக்கில் இந்துக்கள் அவற்றில் பொதுந்துள்ள ஆன்மிகக் குறியீடுகளைத் தான் போற்றுகிறார்களே அன்றி வரலாற்றுக் கதாபாத்திரங்களை அல்ல.

// இன்னொரு முக்கியத்துவம் இயேசு மனிதரின் பாவங்களுக்காக பலியானார், //
// ஆக இயேசுவின் இறப்பில் ஆன்மீகம் இல்லை என்பது சரியானதாகத் தெரியல. அரவிந்தன், மதமாற்ற பிரச்சாரங்களுக்கு பாடுகளின் காட்சிகளை பயன்படுத்துறதா சொல்றாரு. ஆன்மீகமில்லாமலா? //

இது வரலாற்றில் நடந்த ஒரு மரணம் என்பதாகப் பாவிக்கும் போது, அதற்கு ஒரு குழுவைக் குற்றவாளியாக்கும்போது, அங்கே ஆன்மிகம் இல்லை என்று தான் அரவிந்தன் சொல்வதாக நினைக்கிறேன்.

பாரதி ஏசுவைப் பற்றி எழுதிய ஒரே ஒரு பாட்டில் இதை எப்படி ஆன்மிகப் பார்வையில் பார்க்கலாம் என்று ஒரு கோணம் உள்ளது -

அன்பு காண் மரியா மக்தலேநா
ஆவி காணுதிர் ஏசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளில் நல்லுயிர் தோன்றும்!
...
உண்மையென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவம் கொண்டடித்தால்
வண்மைப் பேருயிர் ஏசி கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்!


இதில் பாருங்கள் பாரதி ஏசுவின் சிலுவையை எப்படி காண்கிறார் என்று. இயல்பாகவே அவர் மனதில் ஊறியிருந்த இந்து ஆன்மிகம் "வரலாற்று மரணம்" என்று நம்பப் படுவதை ஒரு குறியீட்டு தத்துவமாக மாற்றி விட்டது. இல்லையா?

அடுத்த வரியில் சொல்வது இன்னும் அழகானது -
பெண்மை காண் மரியா மக்தலேநா
பேணும் நல்லறம் ஏசு கிறிஸ்து
!!

இது பற்றி எனது பழைய திண்ணைக் கட்டுரை -
டாவின்சி கோட்... டான் பிரவுன்... பாரதி!

இந்தக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள்.

bala said...

Dear Cyril,
It is true that today ccatholics American Catholics especially do not nurse ante semitic feelings against Jews. But ,in Europe, catholics generally have always had esp in the olden days ,rabid anti jewish feelings.
No one captured this hatred more eloquently than Shakespeare.Please read Shakespeare's Merchant of Venice.In the brilliant portrayal of Shylock's character,Shakespeare reveals the deep vengeful feelings that Shylock (a jew)nurses against christians,because of this hatred.
When asked as to why Shylock insisted on the pound of flesh even though he was offered much more than what was due to him, Shylock replies thus;

"You (Christians) have mocked at my Nation,thwarted my bargains,heated my enemies and cooled my frieds.what for?
That I am a jew? Hath not a jew hands,organs,senses,dimensions,passions,affections,emotions like a Christian?If you poison us do we not die?If you tickle us do we not laugh?Heated and cooled by the same summer and winter as a christian is?Subject to the same diseases and cured by the same means as a christian is?The villainy you teach me I shall execute;it shall go hard but I will better the instruction"
Shakespeare brought this hatred against jews some what brutally out into the open.No point in denying this.
In a way the so called Dravidian creamy layer OBCs of Tamil Nadu are behaving like the erstwhile Catholics of Europe only; always taking steps to strangle the so called brahmins.

Bala

சிறில் அலெக்ஸ் said...

Bala,
Thanks for the comments. I love the story of Merchant of Venice.

I agree with you that in Europe the hatred existed. I have not denied it in my post. I have agreed to it in my comments. But it was purely an economical/cultural clash that was given a Christian meaning.

It was nice of you to compare it with the struggle against Bhramins and the Dravidians.

Do you think the clash is religious. it is 100% social. Exactly what happened between the jews in some European countries and the Christians in those areas.

To say that Christian theology advocates hatred against jews is utter nonsense. But then Arvind did not say that, I guess.

Thanks for the comment.

bala said...

//To say that Christian theology advocates hatred against jews is utter nonsense. But then Arvind did not say that, I guess.//

Dear Cyril,
Correct.Arvindan did not say that;nor did I say.But economics/social is all bullshit.Because even in Europe jews were a small minority, economically were reasonably well off but never powerful.But the christian powermongers(they were in power any way),spread a falsehood that the jews were looting the native christians.Thats why the parallel is striking in that the creamy layer OBCs who have always been in power in TN (for centuries) spreading a canard that the brahmims had been looting the native dravidians and that the brahmins are not natives.The villainy, as Shakespeare describes, is similar in character.
No one said the Bible preached hatred per se.

Bala

சிறில் அலெக்ஸ் said...

//But economics/social is all bullshit.//
Bullshit has another name.. cow dung (just a joke :)))

//Because even in Europe jews were a small minority, economically were reasonably well off but never powerful//
Did you read the article by Arvindhan on the Gujarat Text book?
He states clearly from the text book that Hitler made use of the economic weakness of the people of Germany.

Even today, the Jews are a minority in the world but are very much in control of the whole world. A quality I admire.
But do you see them doing it? Do they get involved directly? Only in Israel they do get involved directly. Otherwise its all done behind the scene.

Comming back to tha parallel to the Brahmins here... They are constantly being accused of playing behind the scenes on politics, media, leagal system etc.

It may be a fact or may not be.. but we cannot deny that the 'perception' strongly exists, and drives to the divide, hatered.

I see similarities between this and what happend against Jews.

Hitler also made use of the Christian identity. But he himself denied Christianity and said it should find its natural death. He never cared for Christ or Christianity. He was a hateful, pshyco leader.

bala said...

//the economic weakness of the people of Germany//

This is correct. The German economy suffered a mortal blow because of WW I. Hitler cleverly used the minority status of Jews to adavantage and spread hatred thru falsehood,just like EVRamasamy did in TN and till date the creamy layer OBCs are doing the same.Infact quite unlike in Europe where the Jews were relatively well off in the sense that quite a few of them owned businesses industry etc,the brahmins were never in power nor economically well off compared to the landed so called OBCs who owned almost all businesses in TN (Later years some exceptions like TVS came into existence)

Bala

சிறில் அலெக்ஸ் said...

ஜடாயு,
இராமாயணம் மகாபாரதம் கதைகள்தான் என்பதை எல்லா இந்துக்களும் உணர்ந்து வைத்திருக்கிறார்கள் என நம்புகிறீர்களா? ரெம்ப யோசிக்கவேண்டிய விஷயம். எனக்கு பல எண்ணங்கள் தோன்றுது ஆனா எழுத வரல. (Nothing negative though)

//இது வரலாற்றில் நடந்த ஒரு மரணம் என்பதாகப் பாவிக்கும் போது, அதற்கு ஒரு குழுவைக் குற்றவாளியாக்கும்போது, அங்கே ஆன்மிகம் இல்லை என்று தான் அரவிந்தன் சொல்வதாக நினைக்கிறேன்.//

ஜடாயு,
இதற்கும் பதிவில் பதிலளித்துள்ளேன். நான் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் புனித வார தியானங்களில் பங்குபெற்றுள்ளேன் (இயேசுவின் மரணத்தை நினைவுகூறும் நாட்கள்) ஆனால் இயேசுவின் தியாகம்தான் முன்னிற்குமே தவிர "அதற்கு ஒரு குழுவைக் குற்றவாளியாக்கும்" எந்தவிதமான முயற்சியும் நடைபெறுவதில்லை.

ஏன், நான் செமினரியில் சாமியார் ஆவதற்குப் படிக்கச் சென்றேன். அங்கே கூட ஒரு நாளேனும் யூத அல்லது எந்த மதத்தைப் பற்றியேனும் வெறுப்பு என்பது கற்பிக்கப்படவில்லை. (நண்பர் ஒருவர் சொன்னது போல Should I take your word for it எனக் கேட்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்).

சொல்லப்போனால் இயேசு சிந்திய இரத்தத்துக்கும் 'நம்' பாவங்களே காரணம் என்பதுதான் நம்பிக்கை. இயேசுவின் மரணம் ஒரு அரசியல் மரணமாகப் பார்க்கப்படுவதில்லை அது ஒரு ஆன்மீக மரணமாகப் பார்க்கப்படுவதாலேயே இது சாத்தியமாகிறது.

பாரதி சொல்வைதைப் போன்ற குறியீடுகள் பலவும் கிரீத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் அதுவே போதுமானதாகத் தெரியவில்லை குறிப்பாக இயேசுவின் மரணம் "வரலாற்று மரணமாக" "ஆன்மீகத் தன்மையுடையதாக" "பழைய ஏற்பாட்டிலிருந்தே அறிவிக்கப்பட்டதாக" இறப்பின்மூல இயேசுவின் மனிதத் தன்மையைய்யும் உயிர்ப்பில் அவரின் தெய்வத் தன்மையய்யும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதால்.

நீங்கள் சொல்லும் கருத்தையே திரும்ப யோசித்துப் பாருங்கள்.. காப்பிய நிகழ்வுகளிலிருந்து குறியீடுகளைப் பெறுவதுதான் சிறப்பு. ஆனால் வரலாற்று மரணத்திலிருந்து வெறும் குறியீடுகளைப் பெறுவது மட்டும் போதாது.

மேலும் குறியீடுகள் வெவ்வேறு மனிதருக்கு வெவ்வேறாகத் தோன்றலாம்.
இத்தகையப் பன்முகம் இந்துமதத்தின் அடிப்படை(அழகும் கூட) ஆனால் கிறீத்துவம் அப்படி இல்லை. கட்டுக்கோப்பு கிறீத்துவத்தின் அடிப்படைத் தேவை.

இன்றைக்கு இந்துமதத்தை விரும்பிப் பழகுபவர்கள், தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் இந்துமதத்தின் பன்முகத் தன்மையை அல்லாமல் அதன் குறிப்பிட்ட கிளைகளுக்குள்ளான கட்டுப்பாடிலேயே இயங்குகிறார்கள். (எல்லாரும் எனச் சொல்லவில்லை). அவர்கள் ஒரு காப்பிய நிகழ்வுக்கு எடுத்துக்கொள்ளும் குறியீடு மற்றவர்கள் எடுக்கும் குறியீட்டுக்கு வேறுபடலாம். பன்முகத் தன்மையில் இயங்கும் 'ஒரு' என்பது ஒரு ideal விஷயம். இது இந்து மதத்தின் கோட்பாடாக இருந்தபோதும் இது இன்றைக்கு நடைமுறையில் முழுவதுமாக சாத்தியமாகவில்லை.

சரி மேலும் மேலும் இதைக் குறித்தே பேசுவதை விட.. உங்கள் கருத்தை நான் முழுமையாக மறுதலிக்கவில்லை எனச் சொல்லலாம்.

இயேசுவின் மரணம் ஒரு நிகழ்வு என வைக்கையில் அதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.
1. அரசியல் மரணமாக
2. ஆன்மீக மரணமாக (இது சாத்தியமே இல்லை என்பதில் எனக்கு உடன்பாடில்லை)

அரசியல் மரணமாகப் பார்ப்பவர்கள் யூத வெறுப்பை வளர்க்கலாம். ஆன்மிக மரணமாகப் பார்ப்பவர்கள் யூத வெறுப்பை வளர்ப்பதில்லை. பொதுவாக திருச்சபை ஆன்மீகப் பார்வையிலேயே இயங்குகிறது. வெகு சில காலகட்டங்களில் அரசியல் பார்வைகளில் இயங்கியிருக்கிறது. இது ஒட்டுமொத்த திருச்சபை என்பதை விட திருச்சபையின் சில அங்கங்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால் திருச்சபையின் யூத எதிர்ப்பு எனச் சொல்லப்படுவது உலகளாவியதாக இல்லை.

I am really happy that we are discussing these things, with a satisfyingly great level of respect and dignity.

Don't we wish we could all do it and more often.

நான் அடிக்கடி சொல்றதப் போல எனக்குப் பொதுவா ஆன்மிகத்தப் பத்தி எழுதப் பிடிக்கும் ஆனா ஒரு மதத்தப் பத்தி நிறைவாகவோ குறைவாகவோ எழுதுவதென்பது பிடிக்காத ஒன்று. அது தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

ஆனாலும் நான் ஏன் பதிலளிக்கிறேன் என்றால் சில நேரங்களில் தவறான புரிதல்களுடன் அடுத்தவர்களின் நம்பிக்கையின் சாரம் என்ன என்பதைப் புரியாமல் செயல்படுகிறோம்.

சாமி ஆடுகிறவர்களைப் பற்றி, சாமிக்கு சாராயம் வைப்பவர்களைப்பற்றி, கோயிலில் முழங்காலில் நடப்பவர்களைப்பற்றி, மொட்டை போட்டுக்கொள்பவர்கள் பற்றிய முழுப் புரிதலும் இல்லாமல் நாம் அவங்கள critisize செய்றதுபோலத்தான் இதுவும்.

சின்ன வயதிலேர்ந்தே நம் சிந்தனைகளுக்கு கடிவாளம் போட்டுட்டாங்க, மதமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடிவாளாங்களை கொஞம் விலக்கிப் பார்ப்பதென்பது முழுப்பார்வையல்ல ஒரு முழு அனுபவத்துக்கு கடிவாளங்களை கழட்டி போட்டுட்டுத்தான் பாக்கணும்.

(தவறான உவமையாயிருந்தா மன்னிக்கவும்).

Anyway, your questions (aal comeents) have raised a great deal of thoughts in me about both our religions. And thank you for that. Thank you, all of you.

Unknown said...

//நானும் அரவிந்த நீலகண்டனும் சண்டைக்காரர்கள் என நினைத்து நண்பரை கேலிசெய்தோ தனிப்பட்டமுறையில் தாக்கி எதையும் எழுதினால் அதை வெளியிடப் போவதில்லை. நல்ல கருத்துக்களை மட்டும் முன்வைக்கவும்.//
இதைப் போன்ற பண்பாடுகளை எல்லோரும் செயல்படுத்தினால், தமிழிணையம் எல்லோருக்கும் சுகமான அனுபவமாய் இருக்கும்.

அந்தப் படத்தை நானும் என் கிறித்துவ நண்பரும் பார்த்தோம். கிறித்துவ நண்பர், 'இவ்வளவு நடந்திருக்குமா' என்று என்னிடம் கேட்டார். 'சிலுவையை சுமக்கு முன், இவ்வளவு அடித்து கொடுமைப்படுத்தாமல் இருந்திருந்தாலும், அவ்வளவு பெரிய சிலுவையை சுமந்ததாலும், சுமக்க முடியாமல் திணறும்பேது பெற்ற அடிகளினாலும் அதைவிடக் கூடுதலாக குருதி கொட்டியிருக்குமென்று' நான் சொன்னது நினைவுக்கு வருகிறது.

ஜடாயு said...

// ஏன், நான் செமினரியில் சாமியார் ஆவதற்குப் படிக்கச் சென்றேன். அங்கே கூட ஒரு நாளேனும் யூத அல்லது எந்த மதத்தைப் பற்றியேனும் வெறுப்பு என்பது கற்பிக்கப்படவில்லை. //

சிறில், இப்படியே எல்லா செமினரிகளிலும் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன், விழைகிறேன்.

// இத்தகையப் பன்முகம் இந்துமதத்தின் அடிப்படை(அழகும் கூட) ஆனால் கிறீத்துவம் அப்படி இல்லை. கட்டுக்கோப்பு கிறீத்துவத்தின் அடிப்படைத் தேவை. //

கட்டுக்கோப்பு போன்ற விஷயங்கள் ஆன்மிக, சமய நோக்கில் அர்த்தமற்றவை. சமூக, அரசியல் நோக்கில் தான் அவற்றுக்குப் பொருள் உள்ளது, தேவைப்படவும் செய்கிறது, இல்லையா?

இந்துமதத்துக்கும் இந்த வகையிலான கட்டுக் கோப்பு அடிப்படைத் தேவை என்பதை ஒத்துக் கொள்வீர்கள் தானே? இந்தக் கட்டுக்கோப்பு இந்து மதத்தின் அழகிய, பன்முக ஆன்மிகத்தின் அடித்தளத்தையும் குலைக்காமல் இருக்க வேண்டும். இதைத் தான் இந்து இயக்கங்கள் செய்கின்றன, அரவிந்தன் சொல்கிறார், நான் சொல்கிறேன்!

இப்போது இந்து இயக்கங்களை மதவாதம், பாசிசம் என்பதெல்லாம் சொல்வது தவறு என்று உணர்வீர்கள் என்று நினைக்கிறேன்.

// ஏனென்றால் திருச்சபையின் யூத எதிர்ப்பு எனச் சொல்லப்படுவது உலகளாவியதாக இல்லை. //

உண்மை, ஒத்துக் கொள்கிறேன்.

// I am really happy that we are discussing these things, with a satisfyingly great level of respect and dignity. //

ஆம், இது தான் தேவை. மோதல் அல்ல, சம்வாதம் (சம் + வாதம், அதாவது நன்மை பயக்கும் வாதம்).

// சின்ன வயதிலேர்ந்தே நம் சிந்தனைகளுக்கு கடிவாளம் போட்டுட்டாங்க, மதமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடிவாளாங்களை கொஞம் விலக்கிப் பார்ப்பதென்பது முழுப்பார்வையல்ல ஒரு முழு அனுபவத்துக்கு கடிவாளங்களை கழட்டி போட்டுட்டுத்தான் பாக்கணும். //

சரியான உவமை தான். புத்தகங்கள் எல்லாம் வழிகாட்டிக் கற்கள், அவற்றைத் தூக்கிச் சுமக்கக் கூடாது என்று எங்கோ படித்த ஞாபகம்.

// Anyway, your questions (aal comeents) have raised a great deal of thoughts in me about both our religions. And thank you for that. //

மிக்க நன்றி சிறில் அவர்களே.

சிறில் அலெக்ஸ் said...

//இதைப் போன்ற பண்பாடுகளை எல்லோரும் செயல்படுத்தினால், தமிழிணையம் எல்லோருக்கும் சுகமான அனுபவமாய் இருக்கும்.//

நன்றி சுல்தான்,
இதில எனக்குப் பதிலளித்தவர்களின் பங்கும் முக்கியமாக இருக்கிறது.

கொஞ்சம் பொறுமையா யோசித்தோம்ணாபோதும் சொல்லப்போனா சரியான வார்த்தைகளை சரியா பயன்படுத்தினாலே போதும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

சிறில் அலெக்ஸ் said...

//கட்டுக்கோப்பு போன்ற விஷயங்கள் ஆன்மிக, சமய நோக்கில் அர்த்தமற்றவை.//

அருமையான பாயிண்ட். என்னுடைய நம்பிக்கையும் அதுதான் Spirituality is an individual's quest for god. சந்தேகமே இல்ல. ஆனா மதங்கள் இதற்கு உதவலாம்.

இந்துமதத்துல இந்தக் கொள்கை எனக்கு பிடிக்கும். தனிமனித ஆன்மீகம். ஆனா விவேகானந்தர் சொன்னதுபோல மிகச் சிலர் 'அடையாளங்களையும் சடங்குகளையும் விட்டு அடுத்த கட்டத்துக்குப் போறாங்க.' (not exact words).

// சமூக, அரசியல் நோக்கில் தான் அவற்றுக்குப் பொருள் உள்ளது, தேவைப்படவும் செய்கிறது, இல்லையா?
//

Collective Spirituality ஒரு தனி Genre. இதை முற்றிலும் ஒதுக்கவும் இயலாது. ஆனா இறுதியில் அது
Man-God உறவுக்கு வழிவகுக்கணும் Man-God உறவிலேந்து man-man வரணும் என நினைக்கிறேன். (It can be the reverse too).

சிறில் அலெக்ஸ் said...

//சரியான உவமை தான். புத்தகங்கள் எல்லாம் வழிகாட்டிக் கற்கள், அவற்றைத் தூக்கிச் சுமக்கக் கூடாது என்று எங்கோ படித்த ஞாபகம்.//

கலக்கல்.
:))

சிறில் அலெக்ஸ்