.

Thursday, February 15, 2007

கவி தந்த விதை -2: தந்தாலே காதல் காதல் இல்லை

தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

யாசகமா காதல்?
நான் கேட்கவும்
நீ கொடுக்கவும்.

உன் வெட்கமும்
என் கர்வமும்
பலியாகும்
யாகம் காதல்.

எடுத்தேன்
கொடுத்தேன்
காதலல்ல.

பூவுக்கு வண்டைப்போல
வண்டுக்குப் பூவைப்போல
எடு தேன்
கொடு தேன்
காதல்.

தவத்தில் விளையும்
வரமே காதல்.
தாடிவைத்த
இளைஞரெல்லாம்
தவம் கலைத்த
ஞானிகள்.

தேடலில் விளையும்
தெளிவு காதல்.
உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்.

உன் பேரைக்கேட்டால்
நான் திரும்பிப் பார்ப்பது
என் பேரைக் கேட்டால்
நீ பூமி பார்ப்பது.

கவிதை தாங்கிய
காகிதமல்ல காதல்
காகிதம் காணா
கவிதைகளே காதல்.

வேண்டிப் பெறுவதா காதல்?
வேள்வியில் பெறுவது காதல்.
முத்தத் தீயில்
முனகல் மந்திரங்கள்

தானமல்ல காதல்.
தாகம்.
தீரத் தீரத்
தீரா தாகம்.

காதல்,
நிகழ்வல்ல
இருப்பு.
நீ நானாகவும்
நான் நீயாகவும்.

நீ வென்றபோதும்
நானே வெல்கிறேன்.
நீ தோற்றபோதும்
நானே தோற்கிறேன்.
நீ தோற்பதில்லை
நான் வெல்வதில்லை
இதுதான் காதல்.

எனை ஏற்றுக்கொள்
என்பதில்லை காதல்.
உனை ஏற்றுக்கொள்
என்பது காதல்.

நான் நீயாகவும்
நீ நானாகவும் மாறுவது
கொடுக்கல் வாங்கலா?

பருவகால உருமாற்றம் அது,
மனப்பிணைப்பில் உயிர்மாற்றம் அது.
மரங்கள் இலைகளை உதிர்ப்பதுபோல
என்னை உதிர்க்கிறேன்
மீண்டும்
நீயாய் துளிர்க்கிறேன்.

இது நீ தந்ததா?
நான் ஆனது.

நாம் ஆனது.

தந்தாலே காதல் காதலில்லை.

விதைத்தவர்: வாலி
விதை எடுத்துக் கொடுத்தவர்: கடற்புறத்தான் ஜோ
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்

முந்தைய கவி தந்த விதை.

12 comments:

ஜோ/Joe said...

சும்மா சொல்லணுமேன்ணு சொல்லல்ல ! ரொம்ப நல்லாயிருக்கு ..ரொம்ப பிடிச்சிருக்கு ! கலக்குறீங்க!

Unknown said...

சிறில்,

/எடுத்தேன்
கொடுத்தேன்
காதலல்ல.

பூவுக்கு வண்டைப்போல
வண்டுக்குப் பூவைப்போல
எடு தேன்
கொடு தேன்
காதல்./

தேனின்் தேன் இனிமை!!!

வாழ்த்துக்கள்!!!

ஜி said...

//உன் பேரைக்கேட்டால்
நான் திரும்பிப் பார்ப்பது
என் பேரைக் கேட்டால்
நீ பூமி பார்ப்பது.//

இந்த வரிகள்
எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு...

முதல் கவிதையை விட இந்த கவிதை சூப்பர்... அப்படியே கியர ஏத்திக்கிட்டே வர்றீங்க...

Anonymous said...

பிரமாதம் சிரில் !! கைதேர்ந்த கவிஞர் போல எழுதறீங்க !

வைரமுத்து கவிதையை வைரமுத்து சாயலிலும், வாலி கவிதையை வாலி சாயலிலும் வேற எழுதி அசத்தியிருக்கீங்க !

ப்ரியன் said...

/*உன் வெட்கமும்
என் கர்வமும்
பலியாகும்
யாகம் காதல்.*/

நிதர்சனம்

/*பூவுக்கு வண்டைப்போல
வண்டுக்குப் பூவைப்போல
எடு தேன்
கொடு தேன்
காதல்.*/

அருமை சிறில்

சிறில் அலெக்ஸ் said...

//சும்மா சொல்லணுமேன்ணு சொல்லல்ல ! ரொம்ப நல்லாயிருக்கு ..ரொம்ப பிடிச்சிருக்கு ! கலக்குறீங்க! //

ஜோ
நீங்க எடுத்து தந்த விதைய உங்களுக்கு புடிச்சமாதிரி வளத்துட்டேன். ரெம்ப சந்தோஷம்.
பாராட்டுக்கு நன்றிகள்.

ரெம்ப எதிர்பார்ப்ப வளர்த்துட்டேன்..
பாப்போம்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி அருட்பெருங்கோ. மிக்க நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி ஜி. அந்த வரிகள் கொஞ்சம் பழசுதான்.
//முதல் கவிதையை விட இந்த கவிதை சூப்பர்... அப்படியே கியர ஏத்திக்கிட்டே வர்றீங்க//

அடடா எதிர்பார்ப்பு அதிகமானாலே டென்ஷனாயிடுவேன் நான்...

:))

சிறில் அலெக்ஸ் said...

//பிரமாதம் சிரில் !! கைதேர்ந்த கவிஞர் போல எழுதறீங்க ! //

மிக்க நன்றி சேவியர்.

//வைரமுத்து கவிதையை வைரமுத்து சாயலிலும், வாலி கவிதையை வாலி சாயலிலும் வேற எழுதி அசத்தியிருக்கீங்க ! //

ஓ. நான் முயன்று அப்படி எழுதல..ஒருவேள அந்த வரிகள் அப்படி தூண்டுதாயிருக்கலாம்.

ரெம்ப நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நன்றி ப்ரியன்.
இப்டி மொத்தமா எல்லா கவிஞர்களும் வந்து இங்க கும்மி அடிச்சீங்கன்னா டென்ஷனாயிடுதுங்க.

இன்னும் முயல்கிறேன் பாப்போம்.
:))

tamizhppiriyan said...

ஆகா..கவிதை அருமை!..அற்புதம்.
வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தமிழ்ப்ரியன்.

சிறில் அலெக்ஸ்