.

Monday, February 05, 2007

தேன்200:உஷா, நிர்மல்

நிர்மல்
வலைபதிவுகளும் தமிழ்மணம் திரட்டியும் அறிமுகமானது சிறிலின் வலைப்பதிவுகள் மூலம்தான். குகிளின் தமிழ் தொடர்பான வார்த்தை தேடுதலின் போது பாறைகள் , அலைகள் மற்றும் மணல்மேடுகளில் முடிந்தது. ஆராவரமற்ற இயல்பான நடை கொண்ட அந்த பதிவுகள் தொடர்ந்து அவற்றை படிக்க வைத்தன.

பின் சிறிலின் தேன் பக்கங்கள் பழக்கமாயின. நகைச்சுவை பூசிய கருத்துக்கள் கொண்ட எழுத்துக்களை அங்கே காண முடிந்தது .

முதலில் படித்தது கிடா எனும் சிறுகதையைதான். உரையாடல் வடிவில் நகரும் அந்த கதை விரிசல்கள் இல்லாமல் உடையும் உறவுகளை படம் பிடித்துக் காட்டும் . வட்டார மொழியில் சிறிலின் ஆளுமை யை அக்கதையினில் பார்க்கலாம். பின்னொரு பொழுதில் மரணம் என்ற தலைப்பிலான தேன்கூடு போட்டிக்கு அந்த கதையை அனுப்பாறு சிறிலிடம் கேட்டிருந்தேன் .
கடவுளைபற்றிய சிறிலின் சிந்தனைகள் அவரது பதிவுகளில் நகரும. அண்மையில எழுதிய அகர முதலெல்லாம் எனும் குறளை கதைகள் வாயிலாக அறிமுகப்படுத்தும் பதிவிலும் அதை பார்க்கலாம் . அந்தணி டி மெலாவின் எழுத்துகளில் அவருடைய ஈர்ப்பையும் அதன் ரீதியிலான தனது கருத்துகளையும் புனிதராவது எப்படி, கடவுள் 100 கி.மீ மற்றும் கடவுள் பற்றிய விசாரணைகள் போன்ற பதிவுகளின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தார் .
சாதியின்மதம் தாண்டிய தாக்கங்கள, தலித் முன்னேற்றம் பற்றிய அவரது கருத்துகளை பதிவுகளில் பதிவு செய்துள்ளார். மதத்தை மதிப்பவராயினும் அதை விமர்சிக்க அவர் அஞ்சவில்லை. சுய பரிசோதனைக்கும், விமர்சனத்திற்கும் தான் சார்ந்த மதத்தை உட்படுத்தும் நேர்மையும் அவருக்கு உண்டு .

கட்டாய மத மாற்றம் பற்றிய அவரது கருத்துகளையும் பொதுவில் பதிவு செய்து விவாததுக்கு உட்படுத்தியிருக்கிறார். டாவின்சி கோட் பற்றிய சிறிலின் பதிவு அவரது மதம் பற்றிய விமர்சனங்களை நோக்கி அவரது கருத்துகளை வெளிப்படுத்தும் விதமாய் வந்துள்ளது .மரபுடைக்க நினைக்கும் குரல்களை நோக்கிய அவரது எதிர்வினையையும் மரபுடைத்தலின் சிதம்பர ரகசியத்தில் பதிந்திருக்கிறார்.

தனக்குதெரிந்த தனக்கு பிடித்த நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்ள சிறில் காட்டும் ஆர்வமுடையவர். ஆதிக்கு ஆஸ்கர் என்ற பெயரில் ஆஸ்கருக்கும் ,இந்திய படங்களுக்கும் உள்ள உறவை மிக அருமையாய் சித்தரித்துள்ளார். நான் அதிகம் ஆர்வம் காட்டாத குளிர்கால ஒலிம்பிக்ஸ் பற்றிய அவரது பதிவு அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவியது. பெட்டகம், யாகூவின் பீட்டா சேவை , டெலிஸியஸ் வலை தொகுப்பு போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் குறித்தும் தனக்கு தெரிந்ததை மற்றவருடன் பகிர்ந்துள்ளார்.

அவரதுபுகைபட ஆர்வத்தின் விளைவாய் வலைகளில் சிகாகோ தாவரவியல் பூங்காவையும் இலையுதிர் காலத்தையும் பார்க்க முடிந்தது .விடாமல் இன்னும் நிறைய முயற்சி செய்தால் சிறில் சிறந்த புகைப்பட கலைஞராய் வரலாம் . முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
தன்னைசிறுகதை எழுத்தாளராய் சிறில் அடையாளம் காட்டிக் கொள்வதை சில பதிவுகளில் படித்திருக்கின்றேன்.. கற்கோவில்கள் , நிலவில் நாளை போன்ற கதைகள் எனக்கு அவர் எழுதியதில் விருப்பமானவை. போர்களின் உட்சத்தில் மனித இனத்தின் நிலைமையை விளக்குவதாய் நிலவில் நாம் அமைந்திருந்தது . கோவில்களின் இருப்பையும் அதன் சமூக பயன்பாட்டையும் குறித்த கேள்விகளை தாங்கி கற்கோவில்கள் இருந்தது.

ரவிந்தீரரின்கீதாஞ்சலியில் இருந்து தனக்கு பிடித்த வரிகளை பதிந்திருக்கும் சிறில் தான் எழுதிய கவிதைகளையும் பதிந்திருக்கிறார் . வெறுப்புணர்வின் உச்சம் குறித்த அவரது கவிதையின்

என் உடல் உழுது,
இரத்தமிறைத்து இவன் விதைத்துச்செல்லும் தோட்டாக்கள்
விருட்சமாகும்போது,
இப்போது இயலாமல் நான் விடும்
என் மூச்சுக் காற்று கவசமணிந்த இவன் நெஞ்சைத் துளைக்கும்,
அப்போது இவன் முனகல் கேட்காதபடி
என் புலன்கள் மரத்துப் போயிருக்கும்.

போன்றவரிகள் மிகவும் ஆழமாய் உணர்வுகளில் பரவுகின்றது. கடவுள் குறித்த அவரது இன்னும் இருக்கிறது ஆகாயம் என்ற கவிதை தமிழ் சங்கத்தின் பரிசு போட்டியில் முதலிடம் பெற்றது.. கண் கட்டி வித்தையாய் கடவுளை காட்டுவதை அதில் கண்டித்து இருப்பார் .

மரணதண்டனைகுறித்து பல பதிவுகள் வந்த போது அவற்றை தொகுத்து தனிப்பதிவாக சிறில் வெளியிட்டார்.பலவகை தரப்புகளின் பதிவுகளை ஒரு இடத்திலிருந்து படிக்க அவரது தொகுப்பு உதவியது . அப்பதிவுகளை விமர்சித்து அவரது கருத்துகளையும் வெளியிட்டு இருந்தார் இது எனக்கு தெரிந்து ஒரு புது முயற்சியாய் இருந்தது. மற்ற சமூக விஷயங்கள் குறித்த பதிவுகளை தொகுத்து வழங்கும் ஒரு சேவையை வலைத்தள திரட்டிகள் வழங்க இது ஒரு முன்மாதிரியாய் கூட இருக்கும்.

எழுத்துதுறையில் எதேனும் சாதிக்க வேண்டுமென்ற ஆர்வத்தின் வெளிப்பாடாய் கடவுள் பற்றிய விவாதம் புரிய அழைப்பொன்றையும் விடுத்திருந்தார். பின் பொழுதில் வாரம் ஒரு தலைப்பில் ஏதேனும எழுத கோரி பதிவர்களுக்கு அழைப்பு விடுத்து சில வாரம் நடத்தினார் . அவருடைய ஆர்வத்திற்கு தீனியாய் இப்போது தமிழோவியம் ஆசிரிய குழுவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொடருங்கள் உங்கள் எழுத்துகளை. வாழ்த்துகள்!

இராமச்சந்திரன் உஷா

அன்புள்ள சிறில்,
விமர்சனம் என்றாலே கொஞ்சம் உதறல் எனக்கு. சன் டீவி விமர்சனம் பாணியில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்காந்துக்கொண்டு அருமை என்றோ அறுவை என்றோ ஒற்றை வார்த்தை சொல்வது சுலபம். ஆனால் பழையவைகளை எடுத்துப்படிக்க எந்த அவசியமும் இல்லாமல், மனதில் பசைப்போடு உட்கார்ந்திருக்கும் சிலவற்றை சொல்வது சுலபம் என்ற தைரியத்தில் இதோ ஆரம்பித்துவிட்டேன். முட்டம் என்ற பெயரைப் பார்த்ததும், (கடல் என்றால் மோகம் அதிகம்) பாரதிராஜா ஈரோயினி போல் ஸ்லோ மோஷனில் வராமல் வேகமாய் ஓடோடி வந்து படிக்கத் தொடங்கியது, கத்தோலிக்க கிறிஸ்துவ சபைகளில் இருக்கும் சாதி வேற்றுமைகளை பற்றி போட்ட பதிவே உங்கள் எழுத்துக்களைக் கூர்ந்து கவனிக்க வைத்தது. சிவந்த மண் என்ற கிராமத்தின் பெயர், அந்த கடலோர சிற்றூரில் இருந்து பள்ளிக்கூடம் போனக் கதை, மண்டைக்காடு சம்பவம், மீனவர்களின் வாழ்க்கை முறை, டிகிரி படித்த பெண்கள்கூட கருவாடு காயப்போடும் பரிதாபம் என்று அனைத்தையும் ஒரு நாவல் ஆக்கிவிடலாம். ஆனால் அங்கேயே வாழ்ந்த சிறில் உங்களால் மட்டுமே சம்பவங்களுக்கு உயிர் கொடுத்து பாத்திரங்களாய் படைக்க முடியும். அப்படிப்பட்ட எழுத்துக்களே வெல்லும் என்பது நியதி. நாவல் எழுதப் போகிறேன் என்று சொன்னது நினைவிருக்கிறதா :-)

எல்லாரும் வலைப்பதிவின் மூலம் இவ்வளவு சம்பாதிச்சேன், அவ்வளவு சம்பாதிச்சேன் என்று வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும்பொழுது, நீங்களும் உங்க பங்குக்கு ஒரு கணக்கு காட்டியிருந்தீர்கள். இதைவிட நான் அதிகம் "சம்பாதித்திருக்கிறேன்" என்று மட்டும் தன்னடத்துடன்கூறிக்கொள்கிறேன். இப்படிப்பட்ட குசும்பு அவ்வப்பொழுது எட்டிப் பார்க்கட்டும், ஆங்... முதல் பரிசு வாங்கி தந்தோமே "சொர்க்கம் இலவசம்" மறக்கமுடியுமா அதை? எனக்குக்கூட சொர்க்கம் கிடைக்க சான்ஸ் இருக்க என்று சொன்னீங்களே, அதுக்கேஓட்டுப் போட்டேன். நல்ல எழுத்து நிற்கும், அதற்கு எந்த சார்பும் தேவையில்லை. சில சமயம் குறும்பும், நையாண்டியும், அதே சமயம் சிந்தனையை தூண்டும், பிறர் மனதை புண்படுத்தாத எழுத்துக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்கள், முன்னூறு, எண்ணூறு என்று நானும் வாழ்த்துப்பாட வருகிறேன்.
வாழ்த்து வயதில்லை, வணங்குகிறேன் (மூத்த பதிவர் இல்லை)
இப்படிக்கு,
உஷா

1 comment:

Anonymous said...

205 பதிவு ஆயிடுச்சு இன்னமும் தேன் 200 ஆ..

சர்தான். இன்னும் 94 பதிவு இப்படி போட்டு கடைசியா தேன் 300ல 'ரத்தத்தின் ரத்த்துக்கு' கடிதம் எழுதிதான் முடிப்பீங்களா ?

சிறில் அலெக்ஸ்