.

Tuesday, December 26, 2006

(விண்) நட்சத்திரம்

விண்ணில் தோன்றியது வால் நட்சத்திரம்
மண்ணில் விண்ணவனே நட்சத்திரம் - மன்னன்
உறங்க இடமில்லா சத்திரம்
உலகில் இதுவன்றோ விசித்திரம்?
மாட்டுதொழுவம் மாளிகையானது
ஆடும் கோழியும் தோழர்களாயினர்
கந்தல் ஆடைக்கு கண்ணியம் வந்தது
கொசுவின் பாடலே தேவகானமாம்.

செவியுள்ளோர்க்கு விண் பாடல் கேட்டது
'விண்ணகத்தில் இறைவன் போற்றப் படுக
மண்ணகத்தில் நல்மனத்தோர் அமைதிபெறுக'
இதுவே இவர் பிறப்பின் தத்துவமானது.
இடையர்களுக்குத்தான் கிடைத்தது முதல் செய்தி
இறைவன் பிறந்துள்ளான் என்கிற புது செய்தி - இருள்
விலகிடும் என்பதே அந்நற்செய்தி.

ஏரோது அரசன் கொல்லத் தேடினான்
ஏழைமக்கள் காணத்தேடினர்
கிழக்கின் அரசர் மூவர் வந்தனர்
கிடையில் குழந்தையை வணங்கிநின்றனர்.

மாளிகை பலவும் உன் பேரில் இருக்குது - எங்கள்
மனங்கள் கூட வெறுமையாய் கிடக்குது
மாட்டுத் தொழுவமே போதுமென்றாலும்
அதைவிடக் கீழாய் பலர் வீடும் இருக்குது
இன்னும் ஒருமுறை இங்கே வந்திடு
குடிலோ, குடிசையோ எங்களில் தங்கிடு
அன்பே! அன்பு, அன்புதான் என்றிடு - எம்மில்
ஆலயம் வேண்டாம் அன்பே வேண்டிடு.


மீண்டும் ஒரு முறை இனிய கிறீஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

4 comments:

ஓகை said...

நண்பர்கள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நண்பர் சிறிலுக்கு கூடுதலாக நட்சத்திர வாழ்த்துக்கள்.

VSK said...

ஆலயம்தனிலா இருக்கிறான் ஏசு?
குவலயம் முழுதும் குடியிருக்கிறான்!

நாநயம் பேசும் மனிதரிடை இல்லை
பாநயம் பாடிடும் புலவரிடை இல்லை!

தொழுவத்தில் பிறந்தவன் எவனோ அவனே
தொழுபவர் உள்ளமெங்கும் துஞ்சி நிற்கிறான்!

அன்பென்பது அனைவரிடமும் இருக்கு
அவரவர்க்கு வேண்டியவரிடம் அது வருது!

அதனை விடுத்து, மறுப்பைத் தவிர்த்து
இதமாய்ப் பேசிட அனைவரும் பழகுவோம்!

அன்பெனும் இறைவன் அங்கே வருவான்!
இன்பமோடு இனி எவருடனும் இருப்பான்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

சிறில் அலெக்ஸ் said...

நன்றி ஓகை.

சிறில் அலெக்ஸ் said...

SK,

suuuuupppppeeeerrrr

சிறில் அலெக்ஸ்