.

Tuesday, March 07, 2006

இலக்கு என்ன?

கல்லூரியில் மாணவர் அமைப்பு ஒன்றுக்கு தலமை தாங்கியிருந்தேன். முதல் நாள் கூட்டத்தில் அமைப்பை வழிநடத்தும் ஆசிரியர் சொன்னது, "எந்த ஒரு (சமூக) அமைப்பும் தன் இலக்கை அடைய ஒரு கால வரையறை வைத்துக்கொள்ளவேண்டும். இன்னும் மூன்று வருடங்களில் இந்த ஊரில் தண்ணீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது, அல்லது 5 வருடங்களில் இந்த ஜாதியினர் செருப்பு போட்டு ஊரில் சைக்கிள் மிதித்துச் செல்ல வழிவகுப்பது எனபது போல. இந்த இலக்கை குறிப்பிட்ட காலத்தில் அடையவில்லையேல் அந்த அமைப்பு கலைக்கப்படவேண்டும்".

தலீத் இயக்கங்களின் இலக்கு(கள்) என்ன? தலித்துகளை திரட்டி அரசியலமைப்பாக மாற்றுவதா? அவர்களின் பொருளாதார, சமூக அந்தஸ்த்தை உயர்த்துவதா? தீண்டாமையை ஒழிப்பதா? இல்லை பிராமணர்களை திட்டித் தீர்ப்பதா?

தலித் என தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் பலரும் வெறும் பிராமணர்களை திட்டித் தீர்ப்பதையே வேலையாகக் கொண்டுள்ளனர். மலையேறிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு எப்படித் தன் சக்தி முழுவதையும் சேகரித்துக் கொள்ளவேண்டிய கட்டயம் உள்ளதோ அதுப்பொலத்தான் முன்னேறிக் கொண்டிருக்கும் சமுதாயமும், சமூகமும் தன் முழு சக்தியையும் தன் இலக்கு நோக்கி செலுத்தும் கவனம் தேவை.

தன் சக்தியெல்லம் பிறரை திட்டுவதிலேயே செலவிட்டுவிட்டால் எப்படி முன்னே செல்வது?

பிராமணர்களை திட்டித்தீர்க்கும் சிலர் தென் மாவட்டங்களில் தலீத்களின் உரிமையை பறித்து ஒடுக்கப்பட்டவர்களின் உயிருடன் விளையாடிக்கொண்டிருக்கும் சில சாதியினரை கண்டுகொள்லாமல் விட்டுவிடுகிறார்களே ஏன்?

பிராமணர்கள் இன்னும் பேதம் பார்க்கிறார்களா? நாமேதான் நமக்குள் ஆயிரம் பிரிவுகளை வைத்துக்கொண்டு செயல்படுகிறோம். சாதி அமைப்புகளை வெறுப்பவர்கள் நாமானால் ஏன் இன்னும் சாதி பெயர்களில் இயங்கும் அமைப்புகளை கொண்டுள்ளோம்?

நம் வீட்டிலேயே ஏழை உறவுக்காரப் பெண்பிள்ளைகளை வேலைக்காக வைத்து அவர்களின் எதிர்காலங்களை நாசம் செய்வதில்லையா? நம்மிடம் உதவி கேட்டுவரும் நம் சாதிக்காரன் ஏழை என்பதால் நம்மிடம் பணிந்து போகவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கவில்லையா? பணக்காரனுக்கு ஒன்றும் பாவத்திற்கு ஒன்றுமாய் நாம் நடந்துகொள்வதில்லையா? இப்படிப்பட்ட நேரங்களில் பிராமணர்களை எதற்காக வெறுக்கிறீர்களோ அதாகவே நாம் மாறுகிறோம்.

நம் இலக்கு முன்னேற்றம். வாழ்க்கை தரத்தை உயர்த்திப்பாருங்கள் உங்களை எல்லோரும் மதிப்பார்கள். பிராமணர்கள் மட்டும்தான் முன்னேற தடையாக இருக்கிறார்கள் என எண்ணுவது கண்களுக்குத் திரையிட்டுக்கொள்வது. சரி பிராமணர்களை அழித்துவிட்டால் மற்றவர்கள் முன்னேறிவிடுவார்களா?

மனிதர்களை எப்படிவேண்டுமென்றாலும் பிரிக்கலாம். சாதி மட்டுமல்ல பிரச்சனை.

சாதியை முன்னேற்றத் துவங்கிய கட்சித் தலைவர்கலெல்லாம் கோடீஸ்வரர்களாகிவிட்டன நாம்தான் இன்னும் டீ கடைகளிலிருந்தே விலக்கப்பட்டிருக்கிறோம்.

இத்தனை கால தலித் எழுச்சியில் என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தி எதிர்ப்பு போல ஏன் இந்த இயக்கம் கொழுந்துவிடவில்லை? நம் தலைவர்கலுக்கே தெரிகிறது, நாமெல்லாம் முன்னேறிட்டா அவர் வேலை போயிரும்.

ஒடுக்கப்பட்டவர் எல்லோருமே தலித் எனக் கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்டவன் என்பதற்கு மேலாய் எந்த ஒரு அடையாளமும் நமக்குத் தேவையில்லை. நம் பெயர்களிலிருந்து சாதியை விரட்டவேண்டும், நம் மனத்திலிருந்து விரட்டவேண்டும்.

முன்னேற்றம் பெற்ற ஒவ்வொருவரும் இன்னொரு கூடும்பம் முன்னேற உழைத்தாலே போதும் இன்னும் 20 வருடங்களில் ஒடுக்கப்பட்டவன் என யாரும் இல்லாமல் போகும்.

கோபம் கொள்ளுங்கள்..உதவுகிறேன் எனக் கூறி நம்மை உறிஞ்சும் தலைவர்கள் மேல், சாதி பேரில் சலுகைகள் வாங்கிவிட்டு, ஒதுங்கிப்போகும் தன்னலவாதிகள் மேல், கை தூக்கி விட்டாலும் மேலே வர மறுக்கும் சில அப்பாவிகள் மேல், மேல் கீழ் என பபகுபடுத்தும் எல்லோரின் மேல், உருப்படியா எதையும் செய்கிறோமா என உங்கள் மேல் கோபம் கொள்ளுங்கள்.

7 comments:

சிறில் அலெக்ஸ் said...

யாரங்கே?

நன்மனம் said...

matrum oru murpoku sindhanai pathivu.

Alex sir, idharku aadharavu therivithal naam muthirai kutha paduvom endra nokathinal idugaigal varamal irukkalam, poruthirunthu parpom: Sridhar

Radha Sriram said...

cyril,

very coherently written post...with thought provoking ideas in simple language.good one.....

leave alone caste and religion iam totally surprised by the status diffrences found among the followere to the so called gurujis. Have you ever noticed why and how....Sri Sri Ravishankar has so many followers from upper class society(most of them are from infosys,ibm.etcetra..and iam also aware that he started with stress relief for It pros....but still how come it is not reaching the lower strata??)and mel maruvathur.guru (i forget his name)has a huge following of the lower economic status....it is pathetic.

மனிதர்களை எப்படிவேண்டுமென்றாலும் பிரிக்கலாம். சாதி மட்டுமல்ல பிரச்சனை.

very true

Radha

சிறில் அலெக்ஸ் said...

:)

தமிழ்மணத்தில் சரியாகத் தெரியாமல் போனது இந்தப் பதிவு. நானும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

நீங்கள் சொல்வதும் இருக்கலாம்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

Thanks Radha,
நீங்கள் கூரும் கருத்து ஒரு வியாபார தந்திரமாகவே தெரிகிறது. உங்கள் கோணம் சிந்திக்கவைக்கிறது.

ROSAVASANTH said...

அன்புள்ள சிறில் அலெக்ஸ், உங்களூடைய இந்த பதிவை தவறவிட்டு, என் தளத்தில் நீங்கள் அளித்த பின்னூட்டத்தை தொடர்ந்து இங்கே வந்து இந்த பதிவை பார்த்தேன். உங்கள் பார்வையில் நேர்மை இருப்பதாக தோன்றியதால் இதை எழுதுகிறேன்.

முதலில் பார்பனர்களை மட்டும் திட்டுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையல்லாத ஒன்று. உண்மையை அறிய நீங்கள் முயற்சி எடுத்ததாகவும் தெரியவில்லை. பார்பன எதிர்ப்பு என்ற ஒற்றை பரிமாணத்திலிருந்து விலகி, வேள்ளாள ஆதிக்கம், தேவர் ஆதிக்கம் என்று பரவலாய் பேசத் தொடங்கி இப்போது ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. (வலைப்பதிவில் நடக்கும் சண்டைகளில், கருத்துருவ அடைப்படையில் நேரடியாய் பார்பனியத்தை (நேரடியாகவோ மறைமுகமாகவோ) நியாயபடுத்தும் கருத்துக்கள் பல தளங்களில் வருவதால் அவை குறித்தே விவாதங்கள் செல்கின்றன.)

தலித் கட்சிகள், இயக்கங்கள், இதர அறிவுரீதியான செயல்பாடுகள் அனைத்தும் பார்பனரல்லாத சாதி ஆதிக்கத்தையே குறிவைத்தே பிரதானமாய் இயங்குகிறது. புதிய தமிழகம் கட்சி தென்மாவட்ட தேவர் ஆதிக்கத்தை எதிர்த்தே துவங்கப்பட்டது. அதன் இருப்பே தேவர் எதிர்ப்பில்தான் இருக்கிறது. சண்டியர் படம் குறித்து கிருஷ்ணசாமி முன்வைத்த எதிர்ப்பு, கமல் பார்பனர் என்பதை முன்வைத்து அல்ல, சண்டியர் என்ற பெயர் தேவர்களின் வன்முறையை லெஜிடிமைஸ் செய்வதாக இருப்பதால்தான். திருமாவளவனின் பிரதான எதிரியாக வன்னிய ஆதிக்கமும், பாட்டாளி மக்கள் கட்சியுமே பல காலத்திற்கு இருந்தது. இப்போது ஒன்றரை வருட இணைந்த செயல்பாடுகள், அதன் மூலம் ஏற்பட்ட பகையுணர்வை தணித்து, புதிதாய் உருவான அதிகார சூழலில் அதை பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சியாகவும் பார்கலாம். அல்லது அதில் உள்ள பிரச்சனைகளையும் பார்கலாம். எப்படியாயினும் பார்பன எதிர்ப்பு என்ற ஒற்றை பரிமாணத்திலிருந்து விலகி, ஏற்பட்ட நிகழ்வுகள்தான் இவை. தமிழ் நாட்டில் தென்மாவட்ட வடமாவட்ட சாதி பிரச்சனைகளை முன்வைத்து, குறிப்பாய் பிற்படுத்தப் பட்ட மக்களின் ஆதிக்கத்தை பற்றி பேசவே 97லிருந்து எண்ணற்ற கூட்டங்கள் நடந்துள்ளன. நானே (என் வெளிநாட்டு வாழ்க்கையை மீறி) இரண்டு கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். இன்று பல அமைப்புகள் பார்பனர்ல்லாத ஜாதிகளின் ஆதிக்கம் பற்றியே அதிகம் பேசுகின்றன. இலக்கிய தளத்தில் வெள்ளாள ஆதிக்கத்தை விமர்சித்து வந்த திறனாய்வுகளுக்கு ஏராளமான உதாரணங்கள் தரமுடியும். இன்னும் சொல்லப் போனால் தலித்களினுள்ளேயும் ஒடுக்கப் படும் அருந்ததியினர், மற்ற தலித்கள் பற்றி தங்கள் விமர்ச்னனக்களையும் முன்வைக்கின்றனர். அயோத்திதாசரை விமர்சனமின்றி பீடத்தில் அமர்த்துவது பற்றி மதிவண்ணன் போன்றவர்கள் எழுதுவதை சொல்லலாம். இன்னொரு பக்கம் பெரியார்தான் தலித்களின் முக்கிய எதிரி என்பதாக ரவிக்குமார் தொடங்கி பலர் எழுதியுள்ள விமர்சனங்கள் இதன் இன்னொரு பரிமாணம். இது தவிர ஏகப்பட்ட அறிவு செயல்பாடுகளை உதாரணம் காட்டமுடியும். வலைப்பதிவில் 'காதல்' திரைப்படம் இன்ன பிறவற்றற முன்வைத்து நான் தேவர் ஆதிக்கம், சாதிவெறி பற்றிதான் அதிகம் எழுதியுள்ளேன். பாட்டளி மக்கள் கட்சி பற்றியும் விமர்சித்து எழுதியுள்ளேன். பாப்பாபட்டி கீரிபட்டி பிரச்சனையை முன்வைத்து பாலாஜி பாரி தொடங்கி பலரால் எழுதப்பட்டுள்ளது. ஆகையாய் பார்பன எதிர்ப்பு என்று மட்டும் பேசி ஜல்லியடித்துக் கொண்டிருப்பதாக சிலரை போல நீங்களும் சொல்வது அபத்தம். ஒரு சிலருக்கு அபடி சொல்வதும், விவாதத்தில் வெளிவரும் பல விஷனயங்களை கண்டுகொள்ளாமல் சில் தோற்றத்தை பயன்படுத்தி, தங்கள் அஜெண்டாவிற்கு ஏற்ப ஜல்லியடிப்பதும், அதை கொண்டாவும் தேவை இருக்கிறது. விவாதம் என்பது இதிலிருந்து விலகியே நடைபெறமுடியும். இன்னும் சொல்ல பல உண்டு. முடிந்தால் பிறகு.

சிறில் அலெக்ஸ் said...

ரோசாவசந்த்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

உண்மையில் எனக்கு கிடைத்த சாதி அமைப்புக்கள் பற்றிய தகவல்கள் பெரிதும் வலைப்பதிவுகளிலிருந்தே வந்திருக்கின்றன. மீனவ பாரம்பரியத்திலிருந்து வந்திருந்தபோதும் சாதி என்பது என்னை ஒருபோதும், எந்தவிததிலும் தாக்கியிருந்ததில்லை.

பலரும் பதிவுகளில் பிராமண எதிர்ப்பைத்தான் காட்டுகிறார்களே தவிர வேறொன்றுமில்லை. எனக்கது சரியாகப் படவில்லை.
உங்கள் பதில் மகிழ்ச்சியூட்டுகிறது, எனினும் இன்னும் பிராமண எதிர்ப்பு என்பதில் குளிர்காயும் சிலருக்காகவும், சாதி மட்டுமே ஏற்றத் தாழ்வுகளுக்கு அடித்தளம் என நினைப்போருக்காகவும் எனது சில எண்ணங்களை பதித்தேன்.

என் பார்வையில் இருக்கும் நேர்மையை புரிந்துகொண்டதற்கு நன்றி.

சிறில் அலெக்ஸ்