.

Wednesday, August 23, 2006

அன்னியர்கள்

இந்த வாரத்தில் மருமகளுடன் மூன்றாவது முறை விவாதித்துவிட்டார் மாரியப்பன்.

"ஓந்தங்கச்சிக்குத்தானே. நாம செய்யலேன்னா எப்படி?"

"மாமா. மருமகன் காசுல கல்யாணம் பண்றாருன்னு எங்கப்பாவுக்குப் பேரு வரணுமா?
எங்கப்பாவே என்கிட்ட கேக்கலை. இதப்பத்தி பேச வேண்டாம். ப்ளீஸ்."

"ஒரு கூடப் பிறந்தவங்களுக்குக்கூட உதவி செய்யமுடியாம இருக்கோம். அடுத்தவங்க என்ன சொன்னா நமக்கென்ன?"

"எங்க ஊர்ப் பக்கமெல்லாம்... வேண்டாம் மாமா. அவர்கிட்டக் கூட சொல்லிட்டேன். நீங்க... இவன் க்ரௌவுண்டுக்குப் போகணும்னு சொன்னான், கொஞ்சம் கூட்டிட்டுப் போங்களேன்."

"நல்லது செய்யக்கூட நாலுபேர் என்ன சொல்வான்னு பார்த்துச் செய்யவேண்டி இருக்கு. நீங்க செய்யலைன்னாலும் சரி எங்கிட்ட காசிருக்கு. மொய்யா எழுதினா சம்பந்தி வேண்டாம்னு சொல்லமுடியாதே. டேய் வாடாப் போலாம்."

பேரனோடு விளையாட்டு மைதானத்துக்குக் கிளம்பினார். பணிஓய்வு பெற்ற இயற்பியல் பேராசிரியர் மாரியப்பன். நண்பர் கூட்டம் அமரும் இடத்தில் யாருமில்லை. அரட்டைக் கச்சேரி இன்றைக்கு கொஞ்சம் தாமதம்.

'ஃபிசிக்ஸ் போலவே வாழ்க்கையிலும் விதிகள் இருந்துட்டா? இந்த மாதிரி விதிகள வச்சுக்கிட்டு எல்லாத்தையும் எளிதாய் மதிப்பிடலாம், செஞ்சிடலாம். கீழே விழும்னா விழணுமே, அதுதானே இயற்பியல். சமுதாய விதிகள எப்படின்னாலும் வளைக்கலாம். இத இவர் இப்படித்தான் செய்யணும்னு எதுவுமே..'

"என்ன வாத்தியாரே. பயங்கர யோசன போலிருக்கு?"

"வாங்க ஏட்டு சார். பங்சனெல்லாம் எப்டி போச்சு?"

"ம்.. ட்ராவல் ஜாஸ்தி. மூட்டு வலி திரும்பவும் வந்துடுச்சு. ஃபங்சன் பரவால்லாம போச்சு."

"ரெண்டுவாரமாச்சா?...இன்னிக்குத் தேதி என்ன?"

"மார்ச் 12. ஏன் கேக்குறீங்க?"

"ஃபிபொனாசி எண்தொடர் தெரியுமா?"

"ஒங்க ஃபிசிக்செல்லாம் போலீஸ்காரங்களுக்குத் தெரியுமா? இ.பி.கோ மாதிரி எதாவது கேட்டீங்கன்னா சொல்லலாம்.."

"இயற்பியல் இல்ல மாத்ஸ்தான். ஃபிபொனாசி எண் தொடர்ல உள்ள எண்கள் அதுக்கு முன்னால வர்ற இரண்டு எண்களோட கூட்டுத்தொகையா இருக்கும்."

"ஓகோ. இண்டரெஸ்ட்டிங்"

"இப்ப 0, 1, 1, 2, 3, 5, 8 ன்னு போட்டீங்கன்ன ஃபிபொனாசி தொடர் வரும்.."

"ஆமா..."

"இன்னைக்குத் தேதி 12-03-05 அட் ஒன் ஓ க்ளாக் சரியா ஃபிபனாசித் தொடரின் துவக்க எண்கள் வரும்."

"ம்ம்ம்... ஆமால்ல.. 01:00 12-03-05 வெறும் நம்பர் மட்டும் கணெக்கெடுத்தா.."

"ஆமா. இதுல இன்னும் பல சூட்சுமங்கள் இருக்கு. முந்தின நம்பர அடுத்த நம்பரால வகுக்கும்போது 1.6 பக்கத்துல விகிதம் வரும். இந்த ஃபிபனாசித் தொடர இந்தியாவுலத்தான் முதல்ல கண்டுபிடிச்சாங்கன்றதுதான் சுவையான தகவல்."

"இதையும் நம்மாளுங்கத்தான் கண்டு பிடிச்சாங்களா?", சிரிப்புடன் கேட்டார் ஏட்டு.

"'மாத்ராமெரு'. சமஸ்கிருத இலக்கண வித்தகர் பிங்கலா 'சந்த சாஸ்த்திரத்துல' சொல்லியிருக்கார்."

"மாதிரைன்னா ஏதோ பாட்டுல வர்ற ரிதம் மாதிரியா?"

"அதுமாதிரிதான் ஆனா பேச்சுல வர்ற மாத்திரைகள கணக்குப் போடுறது. தமிழ்ல அசைகள்னு சொல்லுறோம்னு நெனைக்கறேன். இந்த ஃபிபனாசி இத்தாலியர். நம்ம கோட்பாட்ட இன்னும் கொஞ்சம் ஆராய்ஞ்சி ப்ரபலமாக்கிட்டார்."

"நம்ம பயக கம்ப்யூட்டர்ல வெளுத்துக் கட்றானுங்கன்னா இது மாதிரி விஷயமெல்லாம் நம்ம மூளையில பதிஞ்சிருக்கு வாத்தியாரே."

"இருக்கலாம். இந்த 'மாத்ராமெரு' எண்கள் இயற்கையில நெறைஞ்ச்சிருக்குன்னா நம்பமுடியுமா?"

"எப்டி அது."

"ஒரு அன்னாசிப் பழத்துல ரெண்டு வளயமா செதில்கள் இருக்கு. ஒண்ணுல 8ம் இன்னொண்ணுல 13ம். ரெண்டுமே ஃபிபொனாசி எண்கள். இதுபோல பூக்களோட இதழ்களிலான ரேஷியோ, சில பழங்களோட விதைகள் எண்ணிக்கை எல்லாம் இந்த எண்கள்படி வருது.."

"சரிதான். இன்னைக்கு ரெம்ப விசேசமான நாள்தான். அதான் சாப்பிட்டிட்டு ஒடனே இங்க வந்துட்டீங்களா?"

"ஒரு மணி ஆறதுக்கு எட்டு நிமிசந்தான் இருக்கு."

"இந்த வெயில்ல பசங்களுக்கு க்ரிக்கட் ஆடணுமா?"

"நம்ம மட்டும் கொஞ்ச நிழல் கெடச்சா ஒக்காந்து பேச ஆரம்பிச்சிடறோமே?". நண்பர் பதில் சொல்ல ஆரம்பிக்கும்போதே எழுந்தார் மாரியப்பன்.

"கொஞ்சம் இருங்க, வீட்ல செல்ல வச்சுட்டு வந்துட்டேன். இப்ப வந்திர்றேன்."

திடீரென மின்னல்போல ஒளிக்கீற்று அவரைத் தாக்கியது. நிலைதடுமாற்றத்திலிருந்து மீண்டபோது அதீத ஒளியில் சுற்றியுள்ள எல்லாமே மறைந்து போயிருந்தன.
எரியும் விளக்குக்குள் நின்றுகொண்டிப்பதுபோல, வெள்ளை வெளிச்சத்தில் நின்றுகொண்டிருந்தார் மாரியப்பன்.

"சார்... ஏட்டு சார். இருக்கீங்களா?".

பதில் வரவில்லை.

'மிதந்து கொண்டிருக்கிறோமோ?' என நினைத்தார்.

கை கால் அசைக்க முடியாமல், இறகுகளை அசைக்காமல் பறவைகள் காற்றில் மிதப்பதுபோல மிதப்பதை உணர்ந்தார்.

ஒளி நீங்கியது.

அன்னியக் கிரகவாசி ஒருவன் அவரை விண்கலத்துள் வரவேற்றான். ஓடிப்போய்விடத் தோன்றியது மாரியப்பனுக்கு.

வேற்றுக்கிரக வாசிகள், அன்னியர்கள். இவர்கள் இருக்கிறார்களா? ஏதோ கனவுதானா? எங்கே ஓடிப்போவது? விண்வெளியில் பறந்து கோண்டிருக்கிறோமா? ஏலியன்களால் கடத்தப் பட்டவர்களைப் பற்றி படித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.

மந்திரம் ஓதுவதைப்போல அன்னியர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

'சமஸ்க்கிருதமா? அதை ஒத்த ஒரு மொழியாக இருக்கலாம்'.

தலை வலித்துக்கொண்டிருந்தது. 'திடீரென வந்த அதிக வெளிச்சத்தால் இருக்கலாம்'.

அங்கே சில மனிதர்களும் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் தைரியம் வந்தது.

"என்ன நடக்குது இங்க? எங்க இருக்கேன் நான்?" பயந்தபடியே அந்த அன்னியனிடம் பேசினார்.
அவன் அன்னிய மொழியில் ஏதோ சொன்னான். புரியவில்லை என்பது போல சைகை செய்தார்.

அன்னியன் தன் பெரிய கண்களை மூடினான்.

'தியானிக்கிறானா?' தலை இன்னும் வலித்தது. வசியம் செய்யப்படுவது போல உணர்ந்தார்.

"நாங்கள் சியமாவாசிகள். இன்னொரு கோள் தொகுப்பிலுள்ளது. ரவி என்னும் நட்சத்திரத்தைச் சுற்றும் கோள் சியமா."

அந்த அன்னியன் சொன்னதெல்லாம் மாரியப்பனுக்குப் புரிந்தது.

'இவனால் நம் மூளையை நேரடியாகத் தொடர்புகொள்ள முடிகிறது. நொடிப்பொழுதில் அவன் மொழியை மூளைக்குள் பதித்துவிட்டான்.' மிரட்சி ஆட்கொண்டது மாரியப்பனை.

"ஒவ்வொரு காலகட்டத்திலும் நாங்கள் பூமிக்கும் இன்னும் உயிரினங்கள் வசிக்கும் கோள்களுக்கும் சென்று விபரங்கள் சேகரிப்பதுண்டு. எங்கள் வருகையின் தடையங்கள் உலகில் பல இடங்களிலும் பரவிக் கிடக்கின்றன."

"க்ராப் சர்க்கிள். விளை நிலங்களில் நீங்க விட்டுப்போகும் ஜியோமெட்ரிக்கல் வடிவங்கள்."

"அது மட்டுமல்ல கற்களினாலான வடிவமைப்புக்கள் கூட."

"ஸ்டோன் ஸர்க்கிள்ஸ், ப்ரிட்டனைச் சுற்றியுள்ளத் தீவுகளில் பிரபலம்." மாரியப்பன் தான் படித்தவற்றையெல்லம் திரும்பக் கற்றுக்கொண்டிருந்தார்.

"ஆமா. ஆமெஸ்பரி ஸ்டோன்ஹெஞ்ச் வழியா எங்க கோள்தொகுப்ப பார்க்க முடியும்."

"நம்பவே முடியல. ஆதி மனுசன் செஞ்சு வச்சதுன்னு நாங்க நம்பிக்கிட்டிருக்கோம்."
மாரியப்பன் திடீரெனெத் தானும் அந்த அன்னியனின் மொழியில் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தார்.

"ஏன் நீங்க மனிதர்களத் நேரடியா தொடர்புகொள்றதில்ல?" மாரியப்பன் அன்னியனைக் கேட்டார்.

"தொடர்பு இருக்குது. தேவையான அளவுக்கே வச்சிருக்கொம். எல்லாமே ரகசியமாய் இருக்குது. சில தனி ஆட்களோடும் தொடர்பிருக்குது. இனிமே உங்களோடும் இருக்கும்."
வேண்டா வெறுப்பாகப் புன்னகைத்தார் மாரியப்பன்.

"நீங்க மின்னணுயியல்ல முன்னேறியிருப்பீங்கன்னு நாங்க நம்பிக்கிட்டிருக்கிறோம் ஆனா இங்க எந்திரங்களெல்லாம் அதிகமாயில்லையே?"

"நாங்க உயிரியல் மற்றும் நுண்ணியிரியலில் வளர்ந்திருக்கோம். மூளையின் முழு சக்திய யாருமே பயன் படுத்துறதில்ல. நாங்க இந்தத் துறையில் வெற்றி அடஞ்சிருக்கோம். எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்சன் - மேம்படுத்தப்பட்ட உணரும் தன்மை- எங்களுக்கு கைவந்த கலை."

"கை வந்த அறிவியல்.", கொஞ்சம் இலகுவாகப் பேச ஆரம்பித்தார்.

"எங்க கலம் வெளியைத் தாண்டி வர பாக்டீரியா போன்ற ஒரு உயிரியே காரணம். எங்க கலத்தின் வெளிப்பூச்சில் இந்த நுண்ணியிரிகள் கணிசமா வளரும். எந்த சூழ்நிலையையும் தாக்குப் பிடிக்கும் தன்மை இருக்கிறதால எங்கள் கலங்களுக்கு எதுவுமே ஆகிறதில்ல. சில ஒட்டுண்ணிகள் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் பாதுகாப்புத் தருதே அதுபோல. 'வெளி'யில் பயணிக்கும்போது இந்த உயிரிகள் சூட்டினால மடியிறதில்ல மாறாக அதன் வீரியம் அதிகமாகுது."

"கடலுக்குள்ள சுடு நீர் ஊற்றுக்கள் பக்கத்தில வாழமுடியாத சூழலிலேயும் வாழும் உயிரிகளைப்போல."

மாரியப்பன் சோர்வடைந்து உட்கார்ந்தார். இன்னும் தலை வலித்துக்கொண்டேயிருந்தது.

"நீங்க இப்பப் போகலாம். உங்களிடமிருந்து தேவையான தகவல்கள் ஏற்கனவே எடுத்தாச்சு. உங்களை விரைவில் தொடர்புகொள்வோம்."

"கொஞ்சம்..." மாரியப்பன் பேச நினைக்கும்போதே அவன் மறைந்துபோனான். மீண்டும் ஒளி சூழ்ந்தது.

"வாத்தியாரே... சார், மாரியப்பன் சார்." ஏட்டுவின் குரல் கேட்டது. "சார் எந்திரிங்க."
மெதுவாகக் கண் திறந்தார்.

"ஒங்க தலையில க்ரிக்கெட்பால் பட்டு விழுந்திட்டீங்க. கார் கூப்பிடப் போயிருக்காங்க."

'இவங்க யாருக்குமே அன்னியர்கள் வந்து போனது தெரியல. அவங்க நினைவுகளை அழிச்சிருப்பாங்க.'

"ஏட்டு சார் எனக்கொண்ணுமில்ல லேசா தலைவலிதான். கொஞ்சம் தண்ணி மட்டும் தாங்க."

ஏட்டு புரியாதது போல விழித்தார்.

"என்ன சொன்னீங்க?"

"கொஞ்சம் தண்ணி கொடுங்க போதும்."

ஏட்டு மாரியப்பனின் பேரனைப்பார்த்துக் கேட்டார்.

"டேய்.. ஒங்க தாத்தாவுக்கு சமஸ்க்கிரதம் தெரியுமாடா?"


நன்றி: தமிழோவியம்

2 comments:

குமரன் (Kumaran) said...

சிறில். கதை நல்லா இருக்கு. ரசிச்சுப் படிச்சேன். :-)

சிறில் அலெக்ஸ் said...

நன்றி குமரன்..

ரெம்ப நாளைக்கப்புறம் வர்றீங்க.

:)

சிறில் அலெக்ஸ்