.

Thursday, August 31, 2006

வரி குறைப்பு



வேறு தலைப்புக்கள் சொல்லுங்களேன்.

நிலவில் நாளை..

"மிமி எழுந்திரு இன்னிக்கு நாம விலங்கியல் பூங்காவுக்குப் போகப்போறொம்." அண்ணன் மித்தி தங்கை மிமியை உற்சாகத்துடன் எழுப்பிக்கொண்டிருந்தான்.

முந்தின நாள் சாயுங்காலம் அப்பா அனுமதிச் சீட்டு வாங்கிவந்ததுமே உற்சாகம் துவங்கிவிட்டது.

"நாளைக்கு குரங்கு பாக்கலாமே.."

"சிங்கம்?"

"ம்ம்ம் சிங்கம், புலி, மான், யான.."

"எலி?"

"மிமி.. எலி பாக்குறதுக்கு ஏன் அங்க போகணும்?"

விலங்குகள் பற்றிய புத்தக வாசிப்போடு உறங்கிப்போனார்கள் குழந்தைகள்.
காலையில் பூங்கா நோக்கிப் பயணம் துவங்கியது.

"பூமியிலிருந்து அழிந்துபோன விலங்கினங்களை மையமா வச்சு ஒரு கண்காட்சி இருக்குது" அப்பா சொல்ல மித்தி கேட்டான்.

"பூமியிலிருந்து விலங்கினங்கள் அழிஞ்சு போனதாப்பா?"

"ஆமா. பல இனங்கள் அழிஞ்சும் புதிதாய் சில புதிதாய் உருவாகியும்... பரிணாம தத்துவப்படி.."

"எப்படி ஒரு விலங்கினம் அழியும்ப்பா?"

"பல காரணங்கள் இருக்கு.."

"எப்படி.."

"தட்ப வெட்பநிலை சரியில்லைன்னா, அதிகமா வேட்டையாடப்பட்டா, உணவு ஆதாரங்கள் அழிக்கப்படும்போது.இப்படி இன்னும் பல காரணங்கள். சில நேரங்கள்ள ஒரே நேரத்துல, ஒண்ண ஒண்ணு சார்ந்திருந்த இரு இனங்கள் அழியிறதும் உண்டு."

"இண்டரெஸ்ட்டிங்." அம்மா சொன்னாள்.

விலங்கியல் பூங்கா வந்ததும் மிமி குஷியானாள். கூட்டம் அதிகமாயில்லாதது வசதியாய்ப் போனது. விலங்கின் பெயர்களை எழுத்துக்கூட்டி படித்துக்கிண்டிருந்தாள்.

"த..வ..ளை..அம்மா தவளை."

"ஆமா சிமி. ஆப்ரிக்கத் தவளை. ஆண் தவளைகளே இல்லைன்னா இந்த இனத்துல பெண்ணே ஆணா மாறிடுமாம்."

"அப்ப இந்த இனம் எளிதில அழியாதுலா." மித்தி கேட்டான்.

"ஆமா."

"'வல்லவன் வாழ்வான்' இதுதான் இயற்கையின் விதி. வெறும் உடல் வலிமையச் சொல்றதில்ல."

"ஒ..ட்..ட.."

"ஏய் சிமி இங்கப் பாரேன்."

"இருடா.. க..ம். ஒட்டகம்."

விலங்குகளைப் பார்த்து முடித்ததும் அழிந்துபோன விலங்கினங்களைப் பற்றிய கண்காட்சிக்கு வந்தனர்.

"வாவ் டைனசோர்." மித்தி

"ஸ்..டெ..கோ..சா..ர..ஸ்"

"டைனோசர்ஸ் இனம் அழிந்ததுபற்றி நிறைய கருத்துக்கள் இருக்கு. அதிகம் நம்பப்படுவது பூமிமீது மோதிய விண்கல்லால அழிஞ்சிருக்கலாண்றது."

"ஔ..ரோ..க். ஔரோக் அம்மா மாடு மாதிரி இருக்குதுமா." மிமி வாசித்துக்கொண்டிருந்தாள்.

"இதோ இந்த இனம் அழிஞ்சதுபோல வேறெந்த இனமும் அழிஞ்சதில்ல." அப்பா ஒரு கண்ணாடிக் கூண்டைக் காட்டிச் சொன்னார், "தன்னைத்தானே அழிச்சுகிச்சு இந்த இனம். அணுஆயுதம்."

"ம..னி..த......"

Wednesday, August 23, 2006

கற்கோவில்கள்

"மக்கா எழும்பு. மடிக்குப் போணும் எழும்பு." எலிசபெத்தா மகன் சேவியரை எழுப்பினாள்.

"ராவைக்கு ராவ நார்கோலுக்குப் போய் படம் பாத்துட்டு கடலுக்குப் போவ எழும்பாம கெடக்காம் பாரு. எல எழும்புல."

முனகிக்கொண்டே சேவியர் விழித்தான்.

"அப்பாக்கு காச்சலடிக்கு, நீ மச்சான்கூடப் போ."

சன்னலில் இருந்த பல்பொடியிலிருந்து கையில் கொஞ்சம் தட்டிக்கொண்டு கஞ்சியும் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த பையை எடுத்துக்கொண்டு கடற்கரை நோக்கி நடந்தான் சேவியர்.

தெருவிளக்குகள் இல்லாத இடுக்குகளில் கலங்கரை விளக்கின் சுழற்சியில் அவ்வப்போது ஒளிபரவி அதிகாலை இருளை விலக்கிப் பாதை காட்டியது.

கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை. "அன்னா வாரான் சேவியரு." சேவியரின் அக்காவின் கணவர் சைமன் கை அசைத்தார்.

"நேத்துமா படத்துக்குப் போன? ரெண்டுவாரத்துல வெளிநாட்டுக்குப் போறவனமாரியா இருக்க. இவ்ளோ நேரமா இங்க காத்துக் கெடக்காவு." அக்கா திட்டுவதையும் பொருட்படுத்தாமல். வலையை படகில் ஏற்றிக்கொண்டிருந்த மச்சானுக்கு உதவிசெய்தான் சேவியர்.

"அப்பாவுக்கு காச்சலாம்?" அக்கா கேட்டாள்

"ஓமு."

சேவியர் மச்சானுடன் கடலுக்குப் போகத் தயங்குவான். அவர் இவனைப் போலவே முன்கோபி. மச்சான் திட்டினால் எதிர்த்துப் பேசமுடியாது. அப்பா அப்படியல்ல. மொட்டையன் சாதுவானவர், கோயில் கமிட்டியில் அவர் இல்லாத சமயங்களிலும் அவரிடம் ஊர் பிரச்சனைகளை விவாதிக்கப்பட்டன. மீனவர் என்றாலும் படித்தவர்களே மதிப்புக் கொள்ளுமளவுக்கு ஞானி. பங்கு சாமியார்கள் ஊரில் முதலில் சந்திக்கும் பெரியவர் மொட்டையன் என அழைக்கப்படும் குருசு.

சேவியர் படகின் இயந்திரத்தை இயக்கினான். மிதமாக எழுந்த அலைகளின்மேல் பயணித்தது படகு.

"யாரெல்லாம் படத்துக்குப் போனியல?"

"நானு எதிர்வீட்டுக் குமாரு பெறவு நொண்டி."
மச்சான் தம்பிகூடப் போனதைச் சொன்னா அவனுக்கு வீட்டில அடிவிழும்.

"நேத்து நொண்டி எங்கூடப் பெரையில சிட்டு வெளையாடிட்டிருந்தான்? பொய், என்னா? ஏண்டே படிக்க பயலுவள கெடுக்குதிய?"

சேவியர் மெளமானான். 'இவர்கூடப் பேசுனா சண்டதான் வரும்'.

படகு உள்ளே செல்லச் செல்ல நிலம் மறைந்தது. கடல், நீரால் நிரம்பிய ஒரு பாலைவனம் போலக் காட்சிதந்தது. கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் நீலம். வழக்கமாய் மீன்பிடிக்கும் இடத்தை நெருங்கும்போது சைமன் பதட்டமானார்.

"எல சேவியரு அங்கபாரு அந்த போட்டுங்க நம்ம ஊர் போட்டுகமாரி தெரில?"

"நம்ம ஊர் போட்டிகயில்ல. இதோட நாலாது நாளு. இங்க வராதியன்னு அப்பா அன்னைக்குத்தான் சொன்னாவு, பெறவும் இங்கதா வாரானுவ."

வெளியூர் ஆட்களுக்கு அந்த இடத்தில் மீன் பிடிக்கத்தடை இருந்தது.

"லேய்.. யாருல அது? இங்க வரக்கூடாதுன்னு தெரியாதாக்கும்?" சைமன் சத்தம் போடத்துவங்கினார். இரண்டு வெளியூர் படகுகள் நின்றுகொண்டிருந்தன.

சேவியருக்கு எரிச்சல் வந்தது. மொட்டையன் மகன், அவருக்கு நேர் எதிர். நண்பர்களுக்காகப் பலமுறை சண்டைபோட்டுக்கொண்டு வந்திருக்கிறான். போலீஸ், கேசென்று ஒரு முறை நிலமை கைமீறிப்போனது. மொட்டையன் பங்குத் தந்தையிடம் சொல்லி பிஷப் கடிதத்துடன் போய் சேவியரை அழைத்துவந்தார்.

"ஐயா உங்களப் பத்தி கேள்விப் பட்ருக்கேன். இவன் உங்க பிள்ளையா? கோவம் ஜாஸ்த்தி இவனுக்கு. சொல்லி வைங்க. போலீசையே கை நீட்டுறான்." இன்ஸ்பெக்டர் எச்சரித்து அனுப்பினார்.

"எல எங்க மாமன் சொல்லியும் கேக்காண்டியளால. நாங்க ஒங்க ஊர்ப் பக்கம் வந்தா உடுவியளா?"

சைமன் வெளியூர் படகுகளிலிருந்தவர்களிடம் சப்தமாய் விவாதித்துக்கொண்டிருந்தார்.
வெளியூர் படகிலிருந்த பெரியவர் பேசினார்.

"மொட்டையன் மருமவனா நீயீ? இரப்பா, வல எறக்கியாச்சு இன்னக்கி ஒருநா இங்கன போட்டும்."

"நாலு நாள இங்கனதான் மடி எறக்குறீயளாம்? எங்க மாமன் சொல்லியும் கேக்கலேன்னா ..?"

"எல ஒங்க மாமன் என்ன கலெக்டரா?" வெளியூர் படகிலிருந்து இளைஞர் கோவத்துடன் கேட்டார்.

"மைக்கிளு, பெரியவங்க பேசிட்டிருக்கும்போது நீ ஏண்டே குறுக்க. சும்மா இரு."

"நீரு பெரியவரு. அவன் பெரியவனா?" சைமனைக் காட்டி மைக்கிள் பேசினான்.

"கலெக்டர் சொன்னாத்தான் கேப்பியளா? இங்க வரக்குடாதுன்னு சொல்லியும் திரியத் திரிய வந்துட்டு... மரியாதையா வலைய இழுத்துட்டு போங்க."

"மக்கா கொஞ்சம் பொறுங்கடே. இன்னைக்கு வலை எறக்கியாச்சு..." பெரியவர் கெஞ்சாத குறை.

"மச்சான் அந்த மைக்கிள்தான் கபடி ஆட்டத்துக்குப் போன நம்ம பயவள அடிச்சது. இன்னைக்கு நாயம் பேசுதான்." சேவியர் மச்சானுக்குத் தகவல் சொன்னான்.

"ஒங்கூருக்கும் எங்கூருக்கும் சும்மாவே சரிவராது, இதுல மடி போடுற எடத்துல வந்து சண்டைக்கு வராதிய." சைமன் கடைசியாய் எச்சரித்தார்.

"வலை எறக்கியாச்சுன்னு சொல்லுதேன்..ஒக்காளி." பெரியவர் முகத்தில் எரிச்சல்.
சேவியர் கடலில் குதித்தான். கடலுக்குள் மூழ்கி சில நிமிடங்களுக்குப் பின் மேல் வந்தான்.

"ஓ பெரியாளு. வலைய அறுத்துட்டாச்சு..இப்பவாவது போங்க."

பெரியவர் வலையைஇழுத்தார். வலை வெட்டப்பட்டிருந்தது.

"எல சின்னப்பயலுவளா.. புத்திய காட்டிட்டீலுவள்ள? " பெரியவர் சத்தம்போட்டார்.

வாய்த்தகறாரு துவங்கியது. கெட்டவார்த்தைகள் மிகுந்த ஒரு சப்தமான சண்டைக்கு நடுவில் மைக்கிளின் அலறல் கேட்டது. கையில் பலத்த வெட்டுக்காயத்துடன் இரத்தம் வழிந்தோட படகில் கீழே விழுந்தான் மைக்கிள்.

சேவியர் கத்தியை கடலில் வீசினான்.

மைக்கிள் படகிலிருந்தவர்கள் பெரியவர் படகுக்கு மைக்கிளைத் தூக்கிக்கொண்டு தாவினர். பெரியவர் படகை வேகமாகச் செலுத்த அந்த இடத்திலிருந்து மறைந்தது வெளியூர்ப் படகு. சைமன் இன்னும் கோபம் தீராமல் கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தான். படகிலிருந்த பெட்ரோலை ஊற்றி ஆளில்லாம நின்றுகொண்டிருந்த வெளியூர்ப் படகை கொழுத்தினான்.

சேவியர் எதுவும் நடக்காததுபோல, உடலில் தெறித்திருந்த இரத்தத்தையும் பொருட்படுத்தாமல், வலையை கடலுக்குள் இறக்கினான்.
....

ஞாயிற்றுக்கிழமை பூசையில் பங்குச் சாமியார் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்."பகைவனையும் அன்பு செய்யச் சொல்லி இயேசு சொன்னதைப் போல மனித வரலாற்றில் வேறு எவருமே சொல்லியிருக்கமுடியாது. லூக்காஸ், அதிகாரம் ஆறு, வசனங்கள் இருபத்தேழு துவங்கி முப்பத்தாறு முடிய. 'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள், உங்களை வெறுப்போருக்கு ...."

கோவிலின் வெளியே படிக்கட்டுகளில், சேவியர் தன் கழுத்தில் கிடந்த சிலுவையில் காய்ந்திருந்த இரத்தக் கறையை ஈர்க்குச்சியால் சுரண்டிக்கொண்டிருந்தான்.

நன்றி: திண்ணை

அன்னியர்கள்

இந்த வாரத்தில் மருமகளுடன் மூன்றாவது முறை விவாதித்துவிட்டார் மாரியப்பன்.

"ஓந்தங்கச்சிக்குத்தானே. நாம செய்யலேன்னா எப்படி?"

"மாமா. மருமகன் காசுல கல்யாணம் பண்றாருன்னு எங்கப்பாவுக்குப் பேரு வரணுமா?
எங்கப்பாவே என்கிட்ட கேக்கலை. இதப்பத்தி பேச வேண்டாம். ப்ளீஸ்."

"ஒரு கூடப் பிறந்தவங்களுக்குக்கூட உதவி செய்யமுடியாம இருக்கோம். அடுத்தவங்க என்ன சொன்னா நமக்கென்ன?"

"எங்க ஊர்ப் பக்கமெல்லாம்... வேண்டாம் மாமா. அவர்கிட்டக் கூட சொல்லிட்டேன். நீங்க... இவன் க்ரௌவுண்டுக்குப் போகணும்னு சொன்னான், கொஞ்சம் கூட்டிட்டுப் போங்களேன்."

"நல்லது செய்யக்கூட நாலுபேர் என்ன சொல்வான்னு பார்த்துச் செய்யவேண்டி இருக்கு. நீங்க செய்யலைன்னாலும் சரி எங்கிட்ட காசிருக்கு. மொய்யா எழுதினா சம்பந்தி வேண்டாம்னு சொல்லமுடியாதே. டேய் வாடாப் போலாம்."

பேரனோடு விளையாட்டு மைதானத்துக்குக் கிளம்பினார். பணிஓய்வு பெற்ற இயற்பியல் பேராசிரியர் மாரியப்பன். நண்பர் கூட்டம் அமரும் இடத்தில் யாருமில்லை. அரட்டைக் கச்சேரி இன்றைக்கு கொஞ்சம் தாமதம்.

'ஃபிசிக்ஸ் போலவே வாழ்க்கையிலும் விதிகள் இருந்துட்டா? இந்த மாதிரி விதிகள வச்சுக்கிட்டு எல்லாத்தையும் எளிதாய் மதிப்பிடலாம், செஞ்சிடலாம். கீழே விழும்னா விழணுமே, அதுதானே இயற்பியல். சமுதாய விதிகள எப்படின்னாலும் வளைக்கலாம். இத இவர் இப்படித்தான் செய்யணும்னு எதுவுமே..'

"என்ன வாத்தியாரே. பயங்கர யோசன போலிருக்கு?"

"வாங்க ஏட்டு சார். பங்சனெல்லாம் எப்டி போச்சு?"

"ம்.. ட்ராவல் ஜாஸ்தி. மூட்டு வலி திரும்பவும் வந்துடுச்சு. ஃபங்சன் பரவால்லாம போச்சு."

"ரெண்டுவாரமாச்சா?...இன்னிக்குத் தேதி என்ன?"

"மார்ச் 12. ஏன் கேக்குறீங்க?"

"ஃபிபொனாசி எண்தொடர் தெரியுமா?"

"ஒங்க ஃபிசிக்செல்லாம் போலீஸ்காரங்களுக்குத் தெரியுமா? இ.பி.கோ மாதிரி எதாவது கேட்டீங்கன்னா சொல்லலாம்.."

"இயற்பியல் இல்ல மாத்ஸ்தான். ஃபிபொனாசி எண் தொடர்ல உள்ள எண்கள் அதுக்கு முன்னால வர்ற இரண்டு எண்களோட கூட்டுத்தொகையா இருக்கும்."

"ஓகோ. இண்டரெஸ்ட்டிங்"

"இப்ப 0, 1, 1, 2, 3, 5, 8 ன்னு போட்டீங்கன்ன ஃபிபொனாசி தொடர் வரும்.."

"ஆமா..."

"இன்னைக்குத் தேதி 12-03-05 அட் ஒன் ஓ க்ளாக் சரியா ஃபிபனாசித் தொடரின் துவக்க எண்கள் வரும்."

"ம்ம்ம்... ஆமால்ல.. 01:00 12-03-05 வெறும் நம்பர் மட்டும் கணெக்கெடுத்தா.."

"ஆமா. இதுல இன்னும் பல சூட்சுமங்கள் இருக்கு. முந்தின நம்பர அடுத்த நம்பரால வகுக்கும்போது 1.6 பக்கத்துல விகிதம் வரும். இந்த ஃபிபனாசித் தொடர இந்தியாவுலத்தான் முதல்ல கண்டுபிடிச்சாங்கன்றதுதான் சுவையான தகவல்."

"இதையும் நம்மாளுங்கத்தான் கண்டு பிடிச்சாங்களா?", சிரிப்புடன் கேட்டார் ஏட்டு.

"'மாத்ராமெரு'. சமஸ்கிருத இலக்கண வித்தகர் பிங்கலா 'சந்த சாஸ்த்திரத்துல' சொல்லியிருக்கார்."

"மாதிரைன்னா ஏதோ பாட்டுல வர்ற ரிதம் மாதிரியா?"

"அதுமாதிரிதான் ஆனா பேச்சுல வர்ற மாத்திரைகள கணக்குப் போடுறது. தமிழ்ல அசைகள்னு சொல்லுறோம்னு நெனைக்கறேன். இந்த ஃபிபனாசி இத்தாலியர். நம்ம கோட்பாட்ட இன்னும் கொஞ்சம் ஆராய்ஞ்சி ப்ரபலமாக்கிட்டார்."

"நம்ம பயக கம்ப்யூட்டர்ல வெளுத்துக் கட்றானுங்கன்னா இது மாதிரி விஷயமெல்லாம் நம்ம மூளையில பதிஞ்சிருக்கு வாத்தியாரே."

"இருக்கலாம். இந்த 'மாத்ராமெரு' எண்கள் இயற்கையில நெறைஞ்ச்சிருக்குன்னா நம்பமுடியுமா?"

"எப்டி அது."

"ஒரு அன்னாசிப் பழத்துல ரெண்டு வளயமா செதில்கள் இருக்கு. ஒண்ணுல 8ம் இன்னொண்ணுல 13ம். ரெண்டுமே ஃபிபொனாசி எண்கள். இதுபோல பூக்களோட இதழ்களிலான ரேஷியோ, சில பழங்களோட விதைகள் எண்ணிக்கை எல்லாம் இந்த எண்கள்படி வருது.."

"சரிதான். இன்னைக்கு ரெம்ப விசேசமான நாள்தான். அதான் சாப்பிட்டிட்டு ஒடனே இங்க வந்துட்டீங்களா?"

"ஒரு மணி ஆறதுக்கு எட்டு நிமிசந்தான் இருக்கு."

"இந்த வெயில்ல பசங்களுக்கு க்ரிக்கட் ஆடணுமா?"

"நம்ம மட்டும் கொஞ்ச நிழல் கெடச்சா ஒக்காந்து பேச ஆரம்பிச்சிடறோமே?". நண்பர் பதில் சொல்ல ஆரம்பிக்கும்போதே எழுந்தார் மாரியப்பன்.

"கொஞ்சம் இருங்க, வீட்ல செல்ல வச்சுட்டு வந்துட்டேன். இப்ப வந்திர்றேன்."

திடீரென மின்னல்போல ஒளிக்கீற்று அவரைத் தாக்கியது. நிலைதடுமாற்றத்திலிருந்து மீண்டபோது அதீத ஒளியில் சுற்றியுள்ள எல்லாமே மறைந்து போயிருந்தன.
எரியும் விளக்குக்குள் நின்றுகொண்டிப்பதுபோல, வெள்ளை வெளிச்சத்தில் நின்றுகொண்டிருந்தார் மாரியப்பன்.

"சார்... ஏட்டு சார். இருக்கீங்களா?".

பதில் வரவில்லை.

'மிதந்து கொண்டிருக்கிறோமோ?' என நினைத்தார்.

கை கால் அசைக்க முடியாமல், இறகுகளை அசைக்காமல் பறவைகள் காற்றில் மிதப்பதுபோல மிதப்பதை உணர்ந்தார்.

ஒளி நீங்கியது.

அன்னியக் கிரகவாசி ஒருவன் அவரை விண்கலத்துள் வரவேற்றான். ஓடிப்போய்விடத் தோன்றியது மாரியப்பனுக்கு.

வேற்றுக்கிரக வாசிகள், அன்னியர்கள். இவர்கள் இருக்கிறார்களா? ஏதோ கனவுதானா? எங்கே ஓடிப்போவது? விண்வெளியில் பறந்து கோண்டிருக்கிறோமா? ஏலியன்களால் கடத்தப் பட்டவர்களைப் பற்றி படித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.

மந்திரம் ஓதுவதைப்போல அன்னியர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

'சமஸ்க்கிருதமா? அதை ஒத்த ஒரு மொழியாக இருக்கலாம்'.

தலை வலித்துக்கொண்டிருந்தது. 'திடீரென வந்த அதிக வெளிச்சத்தால் இருக்கலாம்'.

அங்கே சில மனிதர்களும் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் தைரியம் வந்தது.

"என்ன நடக்குது இங்க? எங்க இருக்கேன் நான்?" பயந்தபடியே அந்த அன்னியனிடம் பேசினார்.
அவன் அன்னிய மொழியில் ஏதோ சொன்னான். புரியவில்லை என்பது போல சைகை செய்தார்.

அன்னியன் தன் பெரிய கண்களை மூடினான்.

'தியானிக்கிறானா?' தலை இன்னும் வலித்தது. வசியம் செய்யப்படுவது போல உணர்ந்தார்.

"நாங்கள் சியமாவாசிகள். இன்னொரு கோள் தொகுப்பிலுள்ளது. ரவி என்னும் நட்சத்திரத்தைச் சுற்றும் கோள் சியமா."

அந்த அன்னியன் சொன்னதெல்லாம் மாரியப்பனுக்குப் புரிந்தது.

'இவனால் நம் மூளையை நேரடியாகத் தொடர்புகொள்ள முடிகிறது. நொடிப்பொழுதில் அவன் மொழியை மூளைக்குள் பதித்துவிட்டான்.' மிரட்சி ஆட்கொண்டது மாரியப்பனை.

"ஒவ்வொரு காலகட்டத்திலும் நாங்கள் பூமிக்கும் இன்னும் உயிரினங்கள் வசிக்கும் கோள்களுக்கும் சென்று விபரங்கள் சேகரிப்பதுண்டு. எங்கள் வருகையின் தடையங்கள் உலகில் பல இடங்களிலும் பரவிக் கிடக்கின்றன."

"க்ராப் சர்க்கிள். விளை நிலங்களில் நீங்க விட்டுப்போகும் ஜியோமெட்ரிக்கல் வடிவங்கள்."

"அது மட்டுமல்ல கற்களினாலான வடிவமைப்புக்கள் கூட."

"ஸ்டோன் ஸர்க்கிள்ஸ், ப்ரிட்டனைச் சுற்றியுள்ளத் தீவுகளில் பிரபலம்." மாரியப்பன் தான் படித்தவற்றையெல்லம் திரும்பக் கற்றுக்கொண்டிருந்தார்.

"ஆமா. ஆமெஸ்பரி ஸ்டோன்ஹெஞ்ச் வழியா எங்க கோள்தொகுப்ப பார்க்க முடியும்."

"நம்பவே முடியல. ஆதி மனுசன் செஞ்சு வச்சதுன்னு நாங்க நம்பிக்கிட்டிருக்கோம்."
மாரியப்பன் திடீரெனெத் தானும் அந்த அன்னியனின் மொழியில் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தார்.

"ஏன் நீங்க மனிதர்களத் நேரடியா தொடர்புகொள்றதில்ல?" மாரியப்பன் அன்னியனைக் கேட்டார்.

"தொடர்பு இருக்குது. தேவையான அளவுக்கே வச்சிருக்கொம். எல்லாமே ரகசியமாய் இருக்குது. சில தனி ஆட்களோடும் தொடர்பிருக்குது. இனிமே உங்களோடும் இருக்கும்."
வேண்டா வெறுப்பாகப் புன்னகைத்தார் மாரியப்பன்.

"நீங்க மின்னணுயியல்ல முன்னேறியிருப்பீங்கன்னு நாங்க நம்பிக்கிட்டிருக்கிறோம் ஆனா இங்க எந்திரங்களெல்லாம் அதிகமாயில்லையே?"

"நாங்க உயிரியல் மற்றும் நுண்ணியிரியலில் வளர்ந்திருக்கோம். மூளையின் முழு சக்திய யாருமே பயன் படுத்துறதில்ல. நாங்க இந்தத் துறையில் வெற்றி அடஞ்சிருக்கோம். எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்சன் - மேம்படுத்தப்பட்ட உணரும் தன்மை- எங்களுக்கு கைவந்த கலை."

"கை வந்த அறிவியல்.", கொஞ்சம் இலகுவாகப் பேச ஆரம்பித்தார்.

"எங்க கலம் வெளியைத் தாண்டி வர பாக்டீரியா போன்ற ஒரு உயிரியே காரணம். எங்க கலத்தின் வெளிப்பூச்சில் இந்த நுண்ணியிரிகள் கணிசமா வளரும். எந்த சூழ்நிலையையும் தாக்குப் பிடிக்கும் தன்மை இருக்கிறதால எங்கள் கலங்களுக்கு எதுவுமே ஆகிறதில்ல. சில ஒட்டுண்ணிகள் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் பாதுகாப்புத் தருதே அதுபோல. 'வெளி'யில் பயணிக்கும்போது இந்த உயிரிகள் சூட்டினால மடியிறதில்ல மாறாக அதன் வீரியம் அதிகமாகுது."

"கடலுக்குள்ள சுடு நீர் ஊற்றுக்கள் பக்கத்தில வாழமுடியாத சூழலிலேயும் வாழும் உயிரிகளைப்போல."

மாரியப்பன் சோர்வடைந்து உட்கார்ந்தார். இன்னும் தலை வலித்துக்கொண்டேயிருந்தது.

"நீங்க இப்பப் போகலாம். உங்களிடமிருந்து தேவையான தகவல்கள் ஏற்கனவே எடுத்தாச்சு. உங்களை விரைவில் தொடர்புகொள்வோம்."

"கொஞ்சம்..." மாரியப்பன் பேச நினைக்கும்போதே அவன் மறைந்துபோனான். மீண்டும் ஒளி சூழ்ந்தது.

"வாத்தியாரே... சார், மாரியப்பன் சார்." ஏட்டுவின் குரல் கேட்டது. "சார் எந்திரிங்க."
மெதுவாகக் கண் திறந்தார்.

"ஒங்க தலையில க்ரிக்கெட்பால் பட்டு விழுந்திட்டீங்க. கார் கூப்பிடப் போயிருக்காங்க."

'இவங்க யாருக்குமே அன்னியர்கள் வந்து போனது தெரியல. அவங்க நினைவுகளை அழிச்சிருப்பாங்க.'

"ஏட்டு சார் எனக்கொண்ணுமில்ல லேசா தலைவலிதான். கொஞ்சம் தண்ணி மட்டும் தாங்க."

ஏட்டு புரியாதது போல விழித்தார்.

"என்ன சொன்னீங்க?"

"கொஞ்சம் தண்ணி கொடுங்க போதும்."

ஏட்டு மாரியப்பனின் பேரனைப்பார்த்துக் கேட்டார்.

"டேய்.. ஒங்க தாத்தாவுக்கு சமஸ்க்கிரதம் தெரியுமாடா?"


நன்றி: தமிழோவியம்

Tuesday, August 22, 2006

'திரவ'வாதமும் தீவிர சிரிப்பும்

'க்ளினிக் ஆல் க்ளீயர்'

'கிருமிகளைத் தேடி..'

'வி'மானம்' போகுதே...'


'அந்த நாள் ஞாபகம்...'

'நிர்வாணா - முற்றும் துறந்தவர்'

'ஆன் லைன் - On Line'


'ப்ளேன்ல பாம்பு வச்சிருக்காங்களாம்'


'நடுவர் அவர்களே...'

மான்ஸ்டர் - சிறுகதை

"இராவணனுக்கு பத்து தலையாம். பாக்கவே பயங்கரமா இருப்பானாம்." துளசி பாட்டி பேத்திக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.

தூங்கும்போது மட்டுமே கதை கேட்பாள் பேத்தி அனு. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த குழந்தை. 'பெட் டைம்' கதைகள் கேட்பதில் அவளுக்கு அலாதி பிரியம். துளசி பாட்டி ஊரிலிருந்து வரும்போதெல்லாம் அவர்தான் கதை சொல்லவேண்டும்.

"மம்மி, நீ எப்பவும் ஸ்னோ ஒயிட் கதையே சொல்லுற, பாட்டிதான் வேற வேற கதையா சொல்வாங்க." என அன்னையை ஒதுக்கிவிடுவாள்.

துளசி முடிந்தவரை தனக்குத் தெரிந்த புராணக் கதைகளை சொல்லித் தருவார்.
'குழந்தைங்களுக்கு நம்ம தெய்வங்களப் பத்தி நாம சொல்லிக்கொடுக்கணும். வெறுமனே கோயிலுக்கு மட்டும் கூட்டிட்டுப்போயி வந்தா மட்டும் போதுமா? குழந்தைங்களும் எளிதா தெரிஞ்சுக்கணுங்றதாலத்தான் கதையா சொல்றாங்க.' துளசி மகனுக்கும் மருமகளுக்கும் சொல்லுவார்,

'முன்னால நாங்க திருநாள் பெருநாள்னா கோவிலுக்குப்போயி கதாகாலாட்சேபமோ, கூத்தோ, டிராமாவோ பாத்து தெரிஞ்சுகிட்டோம். இப்ப டி.வி முன்னாலேயே காலம் போயிடுது. இந்தியாவிலயே இப்படீன்னா இங்க எப்படி குழந்தைங்களுக்கு நம்ம மதம் பத்தி தெரியும்?'

'அம்மா, இங்க குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தராங்களோ அதத்தான் நாங்களும் சொல்லித் தர்றோம். நீங்க சொல்றதும் சரியாத்தான் படுது. முதல்ல எங்க தலைமுறைங்களுக்கே இந்தக் கதைங்க நெறையா தெரியாது.' ஏதவது சொல்லி மழுப்புவான் மகன்.

"பத்து தலையா பாட்டி? டென் ஹெட்ஸ். அதெப்படி ஒரு ஆளுக்கு டென் ஹெட்ஸ் இருக்கும்?"

"அவர் வில்லன்மா அதுனால அப்டி சொல்லியிருக்காங்க. பத்து தலண்ண எவ்வளவு பயங்கரமாயிருக்கும்?"

"பாட்டி ஒனக்கு சிண்டரெல்லா கத தெரியுமா?"

"தெரியாதும்மா..."

"அந்த பொம்ம பொய்சொன்னா மூக்கு நீளுமே அந்தக் கத?"

"தெரியாதே. சரி இப்ப நான் சொல்ற கதையக் கேளு."

"ம்."

"இராவணன் லங்கையில அரசனாயிருக்கும் போது."

"லன்கையின்னா?"

"ஸ்ரீலங்காம்மா..அது ஒரு. நாடு இந்தியாவுக்குக் கீழ குட்டியா இருக்குமே."

"ஸ்ரீலங்காவா? என் ஃப்ரெண்ட் சிமிக்கும் அந்த ஊர்தான்."

"அப்போ அனுமான் சீதையத் தேடி லங்கைக்குப் போனாரு."

"மங்கி மாதிரி இருப்பாரே அந்த அனுமாரா?"

"ஆமா."

"ம்."

"இராவணன் அவையில அனுமாருக்கு ஒக்கார எடமே குடுக்கல."

"ம்."

"ஒடனே அனுமார் என்ன செய்தார் தெரியுமா? அவரோட வால நீஈஈஈஈளமாக்கி வட்டமா சுத்தி இராவணன விடவும் ஒசரமான இடத்துல ஒக்காந்தாரு."

"ம். எதுக்கு?"

"இராவணன் சீதைய அடச்சு வச்சிருந்தான்ல.. அவள விடுவிக்கணும்னு அட்வைஸ் சொல்றதுக்கு."

"எப்படி பாட்டி? மங்கி பேசுமா?"

"அனுமார அப்படிச் சொல்லக்கூடாதும்மா. அவர் சாமி."

"ம்."

"அனுமார் பேசுவார். அவரப் போல இருக்குற வானரங்கள் எல்லாமே அந்தக் காலத்துல பேசும்."

"வானரம்னா?"

"ம்ம்ம்ம்....மங்கீஸ்."

"ம்."

"அனுமார் ஒயரமான எடத்துல இருந்ததால இராவணனுக்கு கோவம் வந்து வால்ல நெருப்பு வச்சுட்டாங்க."

"ம்."

"அனுமார் வால்ல எரியுற தீய வச்சி லங்கையில பெரிய அழிவயே உண்டாக்கிட்டாரு."

"ம்..அப்போ வால்ல தீ எரிஞ்சா அனுமாருக்கு பெயின் இருக்காதா?"

"ம்.. அவர் தெய்வம்மா ரெம்ப ஸ்ட்ராங்கானவர் அனுமார். ஒரு மலையத் தூக்கிட்டே பறக்க முடியும் அவரால."

"பாட்டி நீ எப்பவுமே இப்டிக் கததான் சொல்லுற. நம்பவே முடியல. நான் தூங்கப் போறேன்."
கண்களை மூடித் தூங்க ஆரம்பித்த அனுவை கொஞ்சம் கோபத்தோடும் எரிச்சலோடும் பார்த்தார் துளசி.

'எப்படி இவங்க நம்ம நாட்டப் பத்தியும் நம் பாரம்பரியம், மதம், தெய்வங்களப் பத்தியும்
தெரிஞ்சுக்கப் போறாங்க?' யோசனையுடன் ஹாலிலிருந்த ஃப்யூட்டானில் படுத்து தூங்கிப்போனார்.

நள்ளிரவில் தன் அருகே யாரோ நின்று தன்னை தட்டுவதை உணர்ந்தார்.

"அனு... என்னம்மா தூக்கம் வரலையா?"

"பாட்டி என் கூட வந்து படுத்துக்கிறியா?"

"ஏம்மா?"

"என் ரூம் க்ளாசட்ல மான்ஸ்டர் இருக்குது."

Thursday, August 17, 2006

திண்ணையில் - தமிழோவியத்தில்

திண்ணையிலும் தமிழோவியத்திலும் நான் எழுதிய கதைகள் வெளிவந்திருக்கின்றன. இரண்டிலும் ஒரே நேரத்தில். இரட்டைப் பிள்ளை பெற்றவன்போல மகிழ்ச்சி. படிச்சு எப்டி இருக்குன்னு சொல்லுங்களேன்.

1. அன்னியர்கள் - தமிழோவியம்
2. கற்கோவில்கள் - திண்ணை

Tuesday, August 15, 2006

சுதந்திரம்

"எங்கே மனம் பயமற்றிருக்கிறதோ,
தலை நிமிர்த்தப்பட்டிருக்கிறதோ,
எங்கே அறிவு கட்டுப்பாடற்றுள்ளதோ*,
எங்கே உலகம் குறுகிய சுவர்களைக்கொண்டு துண்டாடப் படவில்லையோ,
எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழங்களிலிருந்து வருகின்றனவோ,
எங்கே அயராத வேட்கை தன் கரங்களை முழுமை நோக்கி நீட்டுகிறதோ,
எங்கே பகுத்தறிவு எனும் வெள்ளோடை,செத்த பழக்கங்களெனும் பாலைக்கு வழிதவறவில்லையோ,
எங்கே மனம், உம்மால், என்றும் பரந்துபடும், எண்ணங்களுக்கும் ஆக்கத்திற்கும்அழைத்துச்செல்லப்படுகிறதோ...
அந்த சுதந்திர சொர்க்கத்தில் இறைவா**, என் நாட்டை எழச்செய்"
---தாகூர்

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit; Where the mind is led forward by thee into ever-widening thought and action---
Into that heaven of freedom, my Father, let my country awake

சுதந்திர தின மலர்


சுதந்திர தின
நல் வாழ்த்துக்கள்
சகோதர சகோதரிகளே!


Friday, August 11, 2006

பாக்'கிஸ்'தானுக்கு நன்றி

என்நன்றி கொன்றார்க்கும் ....

தீவிரவாதிகளைக் காட்டிக்கொடுத்த நம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நன்றி. பக்கத்துவீடுன்னா போட்டி, பொறாம, சாக்கடச் சண்ட, வேலிச் சண்ட எல்லாம் இருக்கத்தான் செய்யும் இருந்தாலும் ....


மேலும் விபரங்களுக்கு அணுகவும் SK.

சிறில் அலெக்ஸ்