Thursday, June 21, 2007
பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் - 9
சிந்தாநதி'யின் ஞாபகம் -1
வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2
CVR'ன் ஞாபகம் 3
ஜி'யின் ஞாபகம் - 4
இம்சை அரசியின் ஞாபகம் - 5
வைகை ராமின் ஞாபகம் - 6
தேவின் ஞாபகம் - 7
ஜி. ராவின் ஞாபகம் - 8
முன்கதை சுருக்கம்
ரோட்டோரத்தில் வரும் போகும் பேருந்துகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பொன்னுச்சாமி. பத்து வருடங்களுக்கு முன்னர் ஓடிப்போன மகளைப் பற்றி ஒரு செய்தி. அதான் வந்திருக்கிறார். காவேரி அவர் மகள். பள்ளிக்கூடத்தில் உடன் படித்தவன் வினோத். நல்ல பையன். ஒரு நாள் காதல் என்று உளற...நட்பு மறைகிறது. பட்டினம் போகிறாள் காவேரி. பொறியியல் படிக்க. அங்கு நண்பர்களாகிறார்கள் உமாவும் வசந்தும். வசந்தின் மீது ஒரு வித நட்பு கலந்த காதலில் இருக்கிறாள் காவேரி. உமா யாரையோ காதலிப்பதாகவும் அறிமுகப் படுத்த விரும்புவதாகம் உமாவை அழைத்துச் செல்கிறாள். அது பழைய வினோத். அப்பொழுது பூக்கொத்தோடு காவேரியிடம் தன்னுடைய காதலைச் சொல்கிறான் வசந்த்.
கதை மீண்டும் காத்திருக்கும் பொன்னுசாமிக்கு திரும்புகிறது. அவரை வினோத் சந்திக்கிறான். காவேரியும் அவர் பேத்தியும் இருக்குமிடத்தொற்கு கூட்டிச் செல்வதாக அவரை காரில் அழத்துச் செல்கிறான் வினோத்.
பார்த்த நியாபகம் இல்லையோ பாகம் - 9
கார் வயல்வெளிச் சாலையத் தாண்டி பிரதான சாலைக்கு வந்தது. குளிரூட்டியை இயக்கினான் வினோத். காருக்குள் மின் விசிறியின் மெல்லிய சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எண்ணற்ற கேள்விகள் நிறைந்த மௌன இடைவெளியில் வினோத்தும் பொன்னுசாமியும் வெகுதொலைவில் பிரிந்திருந்தனர்.
"மாமா." மௌன இடைவெளியின்் மோனக் கூக்குரலாய் அவன் விளிப்பு ஒலித்தது. சின்னசாமி அதற்குள் உறங்கிவிட்டிருந்தார். 'இரவு தூங்கியிருக்க் மாட்டார்' வினோத் நினைத்தான். நினைவுகள், தன் வாழ்வை மாற்றிப்போட்ட அந்த நாளை நோக்கித் திரும்பின.
"வினோத் என் ஃப்ரெண்ட் காவேரிகிட்ட வசந்த் ப்ரொப்போஸ் பண்ணப் போறான்."
"நிஜமாவா? வாவ்."
"என்ன நல்ல பொருத்தம் தெரியுமா. நம்ம விட அவங்கதான் ஐடியல்."
"அது எனக்கு அப்பவே தெரியுமே." சிரித்தான்.
"டேய். இப்ப நல்ல மூட்ல இருக்கேன் சண்டைய கெளப்பாத. நாளைக்கு ஒரு காதல் உருவாகப் போகுது. வசந்தப் பாத்தாவது ரொமாண்டிக்கா இருக்கிறது எப்டீன்னு கத்துக்க."
"ரொமான்ஸ் ஃபார் இடியட்ஸ் புக் எழுதியிருக்காரா அவரு?"
"இடியட்டுன்னு ஒத்துகிட்டியே."
"இல்லண்ணா ஒன்ன கா.... ஏ கிள்ளாத? நாம நாலு வரி பேசுனா அஞ்சாவது வரி சண்டதான்."
"நாளைக்கு ஈவினிங் ஷோ. சத்யம் காம்ப்ளெக்ஸ். காதலன். மறக்காம வா."
"ரெண்டுபேர் அசடு வழியுறதப் பாக்க கட்டாயம் வருவேன்."
அடுத்த நாள்.
"டேய் மச்சான் நான் லெட்டுடா ஏற்கனவே. உமாவப் பத்தி ஒனக்குத் தெரியும்ல. ப்ளீஸ் மச்சான் வண்டி வேணும்டா."
"டேய் பக்கத்துலதான் இருக்கேன் வந்துருவேண்டா?"
'என் பைக்க கேக்குறதுக்கே கெஞ்ச வேண்டியிருக்குது!'. இரவல் வாங்கிப்போன பைக் வந்து கிளம்புவதற்குள் லேட் ஆகியிருந்தது. உமா சொன்ன இடத்திற்கு வரும்போது அங்கே...அது... 'இவளா! இந்தக் காவேரியா உமா சொன்ன காவேரி?'
உமா காவேரி புராணம் பாடும்போதெல்லாம்... அவள் கவிதைகளை வாசித்தபோதெல்லாம் எப்படி புரியாமல் போனது என நொந்துகொண்டான் வினோத். தன் தோழியை மீண்டும் கண்டுகோண்டதில் மகிழ்ந்தான். 'உமாவுக்கு செம சர்ப்ரைஸ் இண்ணைக்கு.'
வசந்த் தந்த பூவைக் கையில் ஏந்தியபடி வினோத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் காவேரி. வினோத்தா வசந்தா யாரிடம் முதலில் பேசுவது?
"வினோத்... ஏ வினோத்...எப்டி இருக்க ஆளே மாறிட்ட."
எதிரே வரும் வினோத்தை நோக்கி அடியெடுத்து வைத்தாள். கையிலிருந்த பூ ரோட்டில் விழுந்தது. எடுக்க கீழே குனிந்தவள் செருப்பு தடுக்கி ரோட்டில் விழுந்தாள். "காவேரீ..." வசந்த, உமா, வினோத்தின் கூக்குரலின் மத்தியில் தண்ணி லாறி காவேரியை இடித்து தூக்கிப் போட்டது.
ஐ.சி.யுவில் ஒரு வாரம் கழிந்தது. காவேரி சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தாள்.
டாக்டர் வசந்த், உமா, வினோத்தை அழைத்திருந்தார். அறையில் இரு டாக்டர்களும் நண்பர்கள் மூவரும் உட்கார்ந்திருந்தனர்.
"உங்கள்ல யாராவது காவேரியோட ரிலேட்டிவா?" டாக்டர் கேட்டார்.
"இல்ல. நான் ரூம் மேட். க்ளோஸ் ப்ரண்ட். வினோத் அவளோட ஸ்கூல் ஃபிரெண்ட். வசந்த் அவளோட பாய் ஃப்ரண்ட்." உமா சொன்னாள்.
"ம். பைத வே. இவர் டாக்டர் மாயன். சைக்கியாட்ரிஸ்ட். பொதுவா தலையில அடி பட்டவங்களுக்கு சைகியாட்ரிக டெஸ்ட் செய்வோம்."
"எனிதிங் ராங்்்? அவ நார்மலாத் தெரியுறாளே?" வசந்த் சொன்னான்.
"ஆமா. உடல் ரீதியா ஷீ லுக்ஸ் நார்மல்."
"அப்டீன்னா?"
"ஷீ ஹாஸ் பார்ஷியல்் அம்னீஷியா."
மூவரும் உறைந்து போய் உட்கார்ந்திருந்தனர்.
"பழசு பலதும் அவங்களுக்கு நியாபகமில்ல. அவங்க அப்பா பேரக் கூட ஒரு சில நேரந்தான் நியாபகம் வச்சிருக்காங்க. கொஞ்சம் டிபிக்கல்ட் கேஸ்தான்."
"கடவுளே." உமா கண்கள் நிறைந்திருந்தன.
"அவ நினைவுல இருக்கிற ஒரே ஆள் வினோத்தான்."
"வினோத்தா?" வசந்த் அதிர்ந்துபோனான்.
"யெஸ். பள்ளித் தோழன் வினோத். சின்ன வயசுல அவளோட அப்பாவுக்கடுத்ததா நெருங்கிப் பழகிய முதல் ஆண் வினோத். அது அவளுக்குள்ளால ஆழமான பாதிப்ப ஏற்படுத்தியிருக்கு. வினோத்தோட காதல ஏத்துக்காமப் போனதப் பத்தி ரெம்ப பீல் பண்ணியிருக்கா. அவளோட கவிதகள்ல அவ ஏங்கி அழக்கூடிய நட்பு வினோத்துடையதுதான்." டாக்டர். மாயன் தொடர்ந்தார்்.
"ஆனா பிரச்சன வினோத்த பிரிஞ்சதோ அவனோட நினைவுகளோ இல்ல? இப்ப அவ வினோத்தான் தன் காதனண்ணு நம்பிகிட்டிருக்கா. சொல்லப்போனா வினோத்த பிரிஞ்சதுலேர்ந்தே அவனோட ஒரு கற்பனை உலகத்துல வாழ்ந்துகிட்டிருக்கா. இப்ப அந்த கற்கனைகள் நிஜமாயிடுச்சு. வினோத் இஸ் ஹெர் பாய் ஃப்ரெண்ட். இத அழமா நம்புறா."
"வசந்தோட நல்லா பழகினாளே டாக்டர்." உமா குழப்பத்துடன் கேட்டாள்.
"ம். அது வினோத்துடைய குணங்கள் வசந்த்கிட்ட இருந்ததால இருக்கலாம். அல்லது வசந்த வினோத்தா அவ கற்பனை செய்திருக்கலாம். ஷி இஸ் எ க்ரியேட்டிவ் பெர்சன். சிலருக்கு கற்பனைசக்தி தங்களோட தினசரி பிரச்சனைகளை சமாளிக்கவும், மனத ஸ்திரமா வச்சிருக்கவும் உதவுது."
"உங்க மூணுபேரப் பத்தியும் ஓரளவு எனக்கு தெரிஞ்சதால டாக்டர் மாயன வச்சி பேசலாம்ணு முடிவு செஞ்சேன்."
"இதுக்கு ட்ரீட்மெண்ட்."
"லாங் டெர்ம். ரெம்ப நாள் ஆகலாம். ஆனா அதுவரைக்கும் காவேரியோட கற்பனை உலகத்த கலைக்கக் கூடாது. உண்மைகள அவளால ஜீரணிக்க முடியாமப் போயிடுச்சுண்ணா. இட் மைட் பி ஃபேட்டல். உயிரே கூடப் போகலாம்".
"அப்ப..?"
"அவள வினோத்தால.. வினோத்துடைய காதலால மட்டுந்தான் காப்பாற்ற முடியும். காவேரிக்கு இப்ப இருக்கிற முழுமையான நினைவு அல்லது கனவுண்ணும் சொல்லலாம், வினோத்த பத்தினதுதான்."
உமா வினோத்தின் கையைப் பற்றி அழ ஆரம்பித்தாள். வினோத் அவளை மெலிதாய் அணைத்திருந்தான். வசந்த் கண்களில் கண்ணீர் கசிய ஆரம்பித்திருந்தது.
==================================================>>>>>>>>
நண்பர்களே
இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.
இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.
இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.
ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.
இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.
அடுத்ததாக பத்தாவது பகுதியை எழுத சேவியரை அழைக்கிறேன்.
அன்புடன்,
சிறில் அலெக்ஸ்
Tuesday, March 06, 2007
மேதா பட்கர், ஜெயந்தி சங்கர் பேட்டியுடன்...
தராசு : பந்த் பயன் தருமா? [மீனா]
நெய்வேலி விஷயத்தில் மத்திய அரசு தங்களுக்குச் சாதகமான முடிவை
எடுக்காவிட்டால் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒப்புக்காவது
ஒரு அறிக்கை வெளியிட்ட முதல்வர் காவிரி விவகாரத்தில் மறந்தும் கூட வாயைத் திறக்கவில்லை.
பேட்டி : மேதா பட்கர் பேட்டி - வேண்டாம் அணு உலை வேண்டாம் [திருமலை கோளுந்து]
நீங்கள் முகத்தை துடைக்கும் பொழுது கூட, இங்கு கிராமத்து பெண்கள்
செய்வது போல் சேலையின் முந்தனையால் தான் துடைத்துக் கொள்கிறீர்கள். அதே போல் முகத்தை தண்ணீரால் கழுவும் பொழுது, கையால் தரையில் இருக்கும் மண்ணை தொட்டு அதனை கொண்டு முகத்தில் தேய்த்து முகத்தை கழுவுகிறீர்கள். இவ்வளவு எளிமையை எப்படி கடைபிடிக்க முடிகிறது?
கவிதை : உறுதிகொள் தமிழா!! [கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்]
நீ வளர்ந்த மொழியை நீ வளர்க்க
மறுத்தல் நியாயமோ? சொல் தமிழா!
பேட்டி : எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஒரு இ-நேர்காணல் [திருமலை கோளுந்து]
புத்தகங்களை நண்பர்களா ஆக்கிக் கொண்ட இந்த 17 வருடங்களில்
புத்தகங்களும் அதற்கு இணையாக நான் சந்திக்கும் மனிதர்களும் என்று இன்றைய வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. தினமும் கற்றுக்கொள்ள எனக்கு ஏதாவது இருந்து கொண்டேயிருக்கிறது. இதுதான் நான் உயிர்ப்புடன் இருப்பதற்கான அடையாளம் என்று நான் நினைக்கிறேன்
World Cup 2007 : முதல் சுற்றில் இந்தியாவின் வாய்ப்பு [மணிகண்டன் அழகப்பன்]
எல்லா க்ரூப்புமே ரெண்டு பலமான அணி, ரெண்டு சற்றே அனுபவம் குறைந்த
அணின்னு பிரிக்கப்பட்டிருக்கு. நம்ம க்ரூப்புல இந்தியாவும் இலங்கையும் பலம் வாய்ந்த அணிகள்.
திரைவிமர்சனம் : தாமிரபரணி [மீனா]
ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்யும் விஷால் மற்ற படங்களிலிரிந்து வேறுசிறுகதை : மனசாட்சி சொன்னது [குகன்]
பட்டு இதில் நன்றாக நடிக்கவும் முயற்சி செய்திருக்கிறார்.
2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வர்த்தக மையம் இடிக்கப்பட்டதிலிருந்து,
அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது.
கவிதை : காதலே, என் கணவனே! [சுரேஷ், சென்னை]
சிறுகதை : ஜீன்ஸ் [சிறில் அலெக்ஸ்]துப்பட்டாவின் வீழ்ச்சியும் சேலையின் விலகலும் கண்டு மகிழ்ந்ததாமே
உந்தன் கண்காட்சி!
"நீங்க பாட்டுக்கு டூர் போயிடுங்க. இவங்கள வச்சுகிட்டு, வயித்துலகவிதை : அத்தை பெண்கள் என்னும் அழகிகள் [கார்த்திக் பிரபு]
நெருப்ப கட்டினமாதிரி.. எப்ப வருவாங்கன்னு பாத்துட்டிருக்கவேண்டியிருக்குது. ஊர்லயே இருந்திருக்கலாம்."
"வந்து வருஷம் நாலாச்சு. இப்ப சொல்ற."
நம் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளின் இறுதியில் எடுக்க பட்ட
புகைப் படங்களிலும் என்னை பார்த்துக் கொண்டே நிற்கிறாய் நீ.
Thursday, February 15, 2007
கவி தந்த விதை -2: தந்தாலே காதல் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
யாசகமா காதல்?
நான் கேட்கவும்
நீ கொடுக்கவும்.
உன் வெட்கமும்
என் கர்வமும்
பலியாகும்
யாகம் காதல்.
எடுத்தேன்
கொடுத்தேன்
காதலல்ல.
பூவுக்கு வண்டைப்போல
வண்டுக்குப் பூவைப்போல
எடு தேன்
கொடு தேன்
காதல்.
தவத்தில் விளையும்
வரமே காதல்.
தாடிவைத்த
இளைஞரெல்லாம்
தவம் கலைத்த
ஞானிகள்.
தேடலில் விளையும்
தெளிவு காதல்.
உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்.
உன் பேரைக்கேட்டால்
நான் திரும்பிப் பார்ப்பது
என் பேரைக் கேட்டால்
நீ பூமி பார்ப்பது.
கவிதை தாங்கிய
காகிதமல்ல காதல்
காகிதம் காணா
கவிதைகளே காதல்.
வேண்டிப் பெறுவதா காதல்?
வேள்வியில் பெறுவது காதல்.
முத்தத் தீயில்
முனகல் மந்திரங்கள்
தானமல்ல காதல்.
தாகம்.
தீரத் தீரத்
தீரா தாகம்.
காதல்,
நிகழ்வல்ல
இருப்பு.
நீ நானாகவும்
நான் நீயாகவும்.
நீ வென்றபோதும்
நானே வெல்கிறேன்.
நீ தோற்றபோதும்
நானே தோற்கிறேன்.
நீ தோற்பதில்லை
நான் வெல்வதில்லை
இதுதான் காதல்.
எனை ஏற்றுக்கொள்
என்பதில்லை காதல்.
உனை ஏற்றுக்கொள்
என்பது காதல்.
நான் நீயாகவும்
நீ நானாகவும் மாறுவது
கொடுக்கல் வாங்கலா?
பருவகால உருமாற்றம் அது,
மனப்பிணைப்பில் உயிர்மாற்றம் அது.
மரங்கள் இலைகளை உதிர்ப்பதுபோல
என்னை உதிர்க்கிறேன்
மீண்டும்
நீயாய் துளிர்க்கிறேன்.
இது நீ தந்ததா?
நான் ஆனது.
நாம் ஆனது.
தந்தாலே காதல் காதலில்லை.
விதைத்தவர்: வாலி
விதை எடுத்துக் கொடுத்தவர்: கடற்புறத்தான் ஜோ
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்
முந்தைய கவி தந்த விதை.
Tuesday, February 13, 2007
கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு
'கவி தந்த விதை' என ஒரு குறுகிய தொடரில், திரைப்பாடல்களில் வந்த சில வரிகளை மூலமாகக் கொண்டு சில கவிதைகளை புனையப் போகிறேன். திரைப்பாடல்களில் கவித்துவம் நிறைந்த வரிகள் ஏராளம். மனதைத் தொட்ட சில வரிகளை விரித்திருக்கிறேன் கவிதை நடையில். காதலர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு
கன்னித்தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
அவள்.
சங்கத் தமிழ்முன் ஓர்
அங்கமானோமே
எதற்கு?
அவன்.
கன்னித்தமிழாயிருக்கும் உன்னை
அன்னைத்தமிழாக்கத்தான்.
அவள்.
இனிய தமிழில்
என்ன பிடிக்கும் உனக்கு?
அவன்.
'முத்த'மிழ்.
தரவா?
அவள்.
தீந்தமிழ்போல்
தீண்டலில் இன்பமுண்டா?
அவன்.
செந்தமிழாய்ச் சிவக்கும் உன்
கன்னத்தைக் கேளேன்?
அவள்.
பால்?
அவன்.
இன்பத்துப் பாலே
இந்த
இரவுக்குப் போதும்.
அவள்.
'இதில்' நீர்
மூத்த தமிழோ?
அவன்.
இல்லை நான்
பிள்ளைத் தமிழ்
சொல்லித்தா உன்
கிள்ளைத்தமிழ்.
அவள்.
மரபுக்கவிதை ஒன்றை
புதுக்கவிதையாக்கப் பார்க்கிறாய்.
அவன்.
இலக்கணம் கற்கும் இரவா இது?
இலக்கியம் படைப்போம் வா.
இன்பத்தமிழ் பருகவே இந்த இரவு
தாய்த் தமிழ் சொன்னதில்லையா உனக்கு?
அவள்.
பேச்சுத் தமிழ் குறைத்துவிட்டு
நாடகத் தமிழ் பழகச் சொல்கிறாய்.
இசைத் தமிழாய்
அவள் இசைந்தாள்
வன் தமிழாய்
அவன் இசைத்தான்.
வீரத் தமிழ் வீழ்ந்து கிடந்தது
விழிப் பார்வையிலே
மறத்தமிழ் மறந்துபோனது
காதல் மயக்கத்திலே.
சந்தத்தமிழாய் இதயங்கள் துடித்தன
முந்தைத் தமிழ் கவிதைகள் புரிந்தன.
இனித் தமிழ்
இனிதமிழ்.
==============
விதைத்தவர்: வைரமுத்து
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்
Monday, January 29, 2007
ஒரு சிந்தசைசரும் மகாகவியும்
ஸ்ரீகாந்த் தேவராஜன் என்பவரின் இனிய இசையில் பாரதி பாடல்களை கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது.
எஸ்.பி. பி, சுஜாதா, ஸ்ரீனிவாஸ், ஹரீஷ் ராகவேந்த்ரா போன்றவர்களின் இனய குரலில் மெல்லிய மெட்டுக்கள் மனதை வருடுகின்றன. மெல்லிசையில், மேற்கும் கிழக்கும் சந்திக்கும் பாடல்களாய் இவை அமைந்துள்ளன.
சின்னஞ்சிறு கிளியே - எஸ். பி. பாலசுப்ரமணியம்
காக்கைச் சிறகினிலே - சுஜாதா
மோகத்தை கொன்றுவிடு - ராஜா கோவிந்தராஜா (குரல் எஸ்.பி.பியின் குரலை ஒத்துள்ளது)
நல்லதோர் வீணை செய்தே - ஸ்ரீனிவாசஸ்
தீராத விளையாட்டுப்பிள்ளை - எஸ். பி. பி
வாழ்க தமிழ் - ஹரீஷ் ராகவேந்த்ரா
பாடல்களை இங்கே கேட்கலாம். பதிவிறக்கலாம், இலவசமாக.
ஸ்ரீகாந்த் இசையில் H1bees எனும் தொகுப்பு பிரபலமானது.
தற்போது "பாடல்" எனும் குறுந்தட்டு வெளியிடப்பட்டுள்ளது.
"பாடல்" வாங்க, முன்னோட்டமிட க்ளிக்குங்கள்.
ஸ்ரீகாந்த் அவர்களின் வலைத்தளம்.
Saturday, December 30, 2006
e-த்திச் சூடி
அமேசானில் ஆர்டர் செய்
ஆர்க்கூட்டில் பழகு
இணைப்பை கைவிடேல்
ஈபேயில் விற்றுவிடு
உரல்களை சேமி
ஊரெல்லாம் நண்பர்கொள்
எண்ணியதை கூகிள் தரும்
'ஏ' த்ளங்கள் பாப் அப் தரும்
ஐயம் தீர்க்கும் விக்கிப்பீடியா
ஒரே மெயில் ஐடி கொள்ளேல்
ஓசியிலேயே ப்ரவுசிங் செய்
ஔவ் ஆர் யூவில் துவங்கு(How are you?)
இஃதே e-நயம்.
சும்மா டைம் பாஸ் மச்சி (மச்சினி?)
Thursday, December 28, 2006
நாவல் எழுதுறேங்க....
ஒரு நாவல் எழுதணும்னுதான் பதிவு எழுதத் துவங்கினேன். பின்பு அதையே மாற்றி முட்டம் பற்றிய பதிவாக எழுதினேன். மீண்டும் நாவல் முயற்சியில் இறங்கியுள்ளேன். இறங்கினேன்னு சொல்லலாம். ஐந்து அத்தியாயங்களுக்குப் பிறகு கிடப்பில் கிடக்கிறது நாவல்.
இதுவரைக்கும் எழுதுனதுலேர்ந்து சில அத்தியாயங்கள் உங்கள் பார்வைக்கு.
நாவல் தற்காலத்துல நடக்குற கதை ஒரு அத்தியாயமும், நடந்து முடிந்த கதை இன்னொரு அத்தியாயமுமாய் போகுது. (எச்சரிக்கை: கொஞ்சம் நீளமான பதிவு. )
அத்தியாயம் ஒன்று : விடியல்
கடலும், வானமும் இரவின் கருநீலம் களையத் துவங்கின. கலங்கரை விளக்கொளி மங்கலாகத் துவங்கியிருந்தது. சேவல்கள் ஏற்கனவே விழித்துவிட்ட ஊரை எழுப்பக்கூவின. பாறை மீது சில கடல் பறவைகள் தங்கள் நாட்குறிப்பை சரிபார்த்துக்கொண்டன. கிழக்கே வானம் மெல்ல சிவந்திருந்தது. தூக்கம் கலைந்தெழுந்தன கடல் அலைகள், விடியலில் தினமும் பாடும் பாடல்களைப் பாடிக் கொண்டும், கடற்கரையில் தவமிருக்கும் பாறைகளை விழிக்கச்சொல்லியும். நண்டுகள் சில கடலலை மூடிவிட்டிருந்த குழிகளின் கதவுகளைத் திறந்துகொண்டிருந்தன. கடல்மேல், தூரத்தில், மின்மினி விளக்கொளிகள் மீனவர்கள் விடியலுக்கு முன்னமே கடலுக்குப் போனதைக் காட்டின. இரவின் குளிர்தென்றல் கடைசியாய் ஊரை வலம் வந்துகொண்டிருந்தது. ஆண்களை கடலுக்கு அனுப்பிய பெண்கள் விடியலென்றும் பாராமல் சத்தமாய் பேசிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். கையில் செபமாலையுடன் சில கிழவிகள் கோவில் நோக்கி நடந்துகொண்டிருந்தனர்.
கோவிலில் இரண்டாம் மணி அடித்தது. கடற்கரையில் தூங்கிக்கொண்டிருந்த விக்டர் விழித்துக்கொண்டான்.
'வீட்டுக்குப் போணுமா?' குழப்பமாயிருந்தது விக்டருக்கு.
"எல..பத்தாங்க்ளாஸ் வரைக்கும் படி. பெறவு கடலுக்குப் போ." அம்மா சொன்னது நியாபகம் வந்தது.
"எம்மா எனக்கு படிக்க இஸ்டமில்ல. ஸ்க்கூல்ல வாத்தியார் அடிக்காரு தெரியுமா?"
"நீ பாடம் எழுதாம போனியோ? வாத்தியார்ட்ட நான் சொல்லுதேம்புள்ள ஸ்கூலுக்குப் போல ராசா."
"நான் அண்ணங்கூட வலைக்குப் போறேன்."
"அண்ணன் கேட்டா அடிப்பான்ல. ஒழுங்கா பள்ளியூடத்துக்கு போ."
அம்மா என்ன சொல்லியும் கேட்காமல் அண்ணன் பையிலிருந்து 30 ரூபாய் எடுத்துக் கொண்டு நாகர்கோவில் சென்று இரண்டு திரைப்படங்கள் பார்த்துவிட்டு பரோட்டா சகிதமாய் ஊருக்கு வரும்போது இரவு 10:30.
பஸ் ஸ்டாப்பில் விக்டரின் அண்ணன் நின்றுகொண்டிருந்தான்.
"எல இங்க வா. அம்மாட்ட ஸ்க்கூல் போவ மாட்டென்னியாம்? இங்க வால எல." அண்ணன் அடிப்பான் எனத் தெரிந்ததும் ஓட்டம்பிடித்தான் விக்டர்.
மெத்தைகளை விட மென்மையான மணல் பரப்பை சமன் செய்து படுத்துக்கொண்டான். 'கடலுக்குப் போணும், காசு சேத்து தங்க வாட்ச் முழுக்கை சட்ட எல்லாம் போடணும். நெனச்ச நேரம் நார்கோலுக்குப் போயி படம் பாக்கணும். ஃபாரின் போயிட்டு மச்சி வீடு கட்டணும். அண்ணனையும் ஃபாரினுக்கு கூட்டிட்டுப் போணும்.' பல எண்ணங்களோடு கடல் காற்றின் மெல்லிய வருடலில் தூங்கிப் போனவன் காலையில் கோவில் மணி அடிக்க எழுந்துகொண்டான். இன்னும் முழுதுமாய் விடிந்திருக்கவில்லை. மெல்லிய இருள் சூழ்ந்த விடியல் சமையம் அது.
கடல் அலை நனைத்துச் சென்ற மணல் கொஞ்சம் எடுத்து பல்துலக்கி உப்புத் தண்ணீரிலேயே கழுவினான். பாறை மறைவில் காலைக் கடன் கழித்துவிட்டு கடலில் கழுவிக்கொண்டிருக்கும்போது ஈரமாய் ஒரு கை அவன் பின்பக்கம் தொட்டது. திடுக்கிட்டு எழுந்தான். கால் சட்டையை மாட்டிக்கொண்டு இரண்டு எட்டு ஒடிச் சென்று திரும்பிப் பார்த்தான். கடலினுள்ளே திரும்பிச் சென்ற அலை மட்டுமே தெரிந்தது. பயத்தில் பார்வை உறைந்துபோனது. மீண்டும் அலை கரை திரும்பியது. அப்போது அவன் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது திரும்பிவந்த அலையில் கிடந்த பிணம்.
அலை உடலை மீண்டும் உள்ளிழுத்தது. விக்டர் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அலை கரைக்குத் திரும்பியது. சாப்பாட்டு இலையில் வேண்டாத பதார்த்தத்தை விலக்கி வைக்கும் ஒரு சிறிய செயல்போல, கடல், பிணத்தை விக்டரின் காலடியில் விட்டுச் சென்றது.
அத்தியாயம் 2 - ஜூலை 7 1974
'ஆலையத்தில் நாம் நுழைகையிலே
புது நினவுகள் நுழைகின்றன..'
பாடற்குழுவின் வருகைப்பாடலோடு ஞாயிற்றுக்கிழமையின் முதல் பூசை ஆரம்பித்தது. பாதிரியார் செல்வராஜ் பூசைக்கு உதவி செய்யும் சீசர் பிள்ளைகள் முன் நடக்க பலி பீடம் வந்து வணங்கி பாடலில் சங்கமித்தார். முதல் பூசைக்கு வழக்கமாக வரும் கூட்டம். காலையில் ஆறுமணிக்கே எழுந்து பூசைக்கு வருவதென்பது பலருக்கும் பாவ பரிகாரமாய் பட்டது. சிலரே அந்தப் பரிகாரம் செய்துகொண்டனர்.
"பிதா சுதன் பரிசுத்தா ஆவியின் பெயரால்." பாடி ஆரம்பித்தார் செல்வராஜ்.
"ஆஆஆஆ மென்" மக்களும் பாட்டில் பதிலளித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பூசை ஃபாதர் செல்வராஜுக்கு பிடிக்கும். திருவிழாக்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலுமே பாடல் பூசை நடத்தப் படுமென்பதால். இசையில் ஆர்வமுள்ளவர். சில பாடல்களை இயற்றி, இசையமைத்து கோவிலில் பாடவும் வைத்திருக்கிறார்.
"இயேசுவில் அன்பானவர்களே, இன்று இறைவன் நம்மை அவரின் சாட்சிகளாக வாழ அழைக்கிறார். இன்றைய சுவிசேஷ வாக்கியங்கள், இயேசுவை உலகுக்கு பறைசாற்ற நம்மை அழைக்கிறது. 'இறை அழைத்தல்' சாமியார்களுக்கும் திருக்கன்னியர்களுக்கும் மடுமல்ல பொதுமக்களுக்கும் உரித்தானது என்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன. இந்த இறை அழைத்தலை மறுதலித்து நாம் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்துவோமாக." பூசைக்கான அறிமுகவரிகளை பேசி பாவத்திற்காக மனம் வருந்த மக்களை அழைத்தார். கூட்டம் அமைதியாய், கைகூப்பி தலை தாழ்த்தி நின்றது, சிலர் பாவங்களை நினைத்து மனம் வருந்தியும் சிலர் வழமையாகவும்.
கோவிலின் வெவ்வேறு கதவுகள் வழியாக எப்போதும் சிலர் உள்ளே வந்துகொண்டேயிருந்தனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடந்திருநாட்கள் என குறிக்கப்பட்ட சில நாட்களிலும் முழுப் பூசையில் பங்கெடுக்கவேண்டும் என்பது திருச்சபையின் சட்டங்களில் ஒன்று. 'பூசையில் சுவிசேஷ வாசகத்துக்கு முன்னால போனா முழுப் பூச பாத்த மாதிரி.' என்கிற நினைப்பு பலவிசுவாசிகளுக்கும் இருந்தது.
பெண்கள் சேலையால் தலையை மூடியிருந்தனர். ஆண்கள் வேட்டி சட்டையிலும் சில வயதானவர்கள் சட்டையில்லாமல் வெறும் தோள் துண்டோடும் அமர்ந்திருந்தனர். முன் வரிசையில் சில சிறுவர்கள் ஏற்கனவே தூங்கி விழுந்துகொண்டிருந்தனர். பாடகர் குழுவில் ஆர்மோனியம் வாசிக்கும் சிஸ்டர் ஆரோக்கியம் ஆர்மோனியத்தை, தனக்கு மட்டுமே கேட்கும்படி முனகவைத்து ராகம் பழகிக்கொண்டிருந்தார்.
"சகோதர சகோதரிகளே நம் பாவங்களின் பொருட்டு இறைவனிடமும் நம் சகோதரிடமும் மன்னிப்பை வேண்டுவோமாக. எல்லாம் வல்ல இறைவனிடமும்..." பாவமன்னிப்பு ஜெபத்தை ஆரம்பித்துவைத்தார் செல்வராஜ்.
"சகோதரே உங்களிடமும்," மக்கள் தொடர்ந்தனர்,"நான் பாவி என்பதை ஏர்றுக்கொள்கிறேன். ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமைகள் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே! என் பாவமே! என் பெரும்பாவமே!..."நெஞ்சில் மூன்றுமுறை தொட்டுக்கொண்டனர். செபம் தொடர்ந்தது. 'ஆண்டவரே இரக்கமாயிரும்' மற்றும் 'உன்னதங்களிலே இறைவனுக்கு' பாடல்களுக்குப் பின் மக்கள் அமர்ந்திருக்க, முதல் வாசகம் வாசிக்க வந்தார் உபதேசியார்.
"முதல் வாசகம். இசையாஸ் எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். அதிகாரம் 66 வசனங்கள் பத்திலிருந்து பதிநான்கு வரை. எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லோரும் அவளோடேகூட மகிழ்ந்து, அவளைக் குறித்து களிகூறுங்கள்; அவள் நிமித்தம் துக்கத்திலிருந்த நீங்கள் எல்லோரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்."
பெண்கள்பகுதியில் இரண்டாம் கதவின் அருகே அமர்ந்திருந்த 'மூக்கி' எனப்படும் தெரசம்மாவிற்கு கீழே அமர்ந்திருப்பது அசௌகரியமாயிருந்தது.
"நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு நிறைவடைந்து, நீங்கள் சூப்பிக் குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்", உபதேசியார் வாசகத்தை தொடர்ந்தார். "கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்:..."
மூக்கிக்கு இடுப்பு வலிக்க ஆரம்பித்தது.
"இதோ நான் சமாதானத்தை ஒரு நதியைப் போலவும், இனங்களின் மகிமையை கரைபுரண்டு ஓடுகிற ஆற்றைப் போலவும் ஓடச்செய்வேன்."
மூக்கி முகத்தை சுளித்துக்கொண்டு முனகலோடு வலியை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தாள். எழுந்து நிற்கவும் இயலவில்லை அவளால்.
"பால்குடிக்கும் மகவைப் போல நீங்கள் அவளின் கரங்களில் சுமக்கப்படுவீர்கள்; அவளின் தொடைகளில் தாலாட்டப் படுவீர்கள்"
பெண்கள் பகுதியில் மூக்கி இருந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
"ஒரு தாய் தன் மகனை தேற்றுவது போல.." உபதேசியார் தொடர்ந்தார்."நான் உன்னை தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்".
"எம்மா..." நிறைமாதக் கர்ப்பிணி மூக்கி அலறினாள். சப்தம் கேட்டதும் ஃபாதர் செல்வராஜ் எழுந்தார் உபதேசியாரை வாசகத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு.
"என்னாச்சு?" என்றார்.
பெண்கள் சிலர் மூக்கியை சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர்.
உபதேசியாரின் மனைவி முன்வந்தார்,"நம்ம பரட்டையார் மவளுக்கு ப்ரசவ வலி. இப்ப வெளிய கொண்டுபோகமுடியாது. இங்கயே பாக்கணும். ஆம்பிளைகள வெளிய போச்சொல்லிருங்க."
"ஏன் இவங்க கோயிலுக்கு வந்தாங்க? கூட யாராவது வந்திருக்காங்களா? "
"அவ ஆத்தா இருக்கு."
"பரட்டையார் மகன்னா செபாஸ்டின் தங்கச்சியா?"
"ஆமா ஃபாதர்."
"டேய் நீ போய் செபாஸ்டின் சார்கிட்ட சொல்லிடு." சீசர் பிள்ளை ஒருவனை ஏவினார் ஃபாதர்.அங்கே வியப்பாய் கூடியிருந்த மக்களைப்பார்த்து,"எல்லாம் கொஞ்சம் வெளியப் போங்க ரெண்டாம்பூசைக்கு வாங்க." எனச் அறிவித்தார். சிஸ்டர் ஆரோக்கியத்திடம் போய்,"சிஸ்டர் என்னானு பாருங்க. நான் பின்னால இருக்கேன் அவசரம்னா சொல்லுங்க." எனச் சொல்லிவிட்டு சக்ரீசுக்குள் நுழைந்தார்.
மூக்கி வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். கீழே படுத்துக் கொண்டு இரண்டு பெண்கள் அவள் கையை பிடித்திருக்க பிரசவிக்கத் தயாரானாள். உபதேசியாரின் மனைவி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளை வெளியே போகச் சொல்லிவிட்டு கோயிலின் கதவுகளை மூடிக்கொண்டிருந்தாள்.
மூக்கியின் போராட்டம் தொடர்ந்தது. ஆளுக்காள் ஏதேதோ பேசிக்கொண்டும் அவளை முயற்சி செய்யச் சொல்லிக்கொண்டுமிருந்தனர்.
"எக்கி, தல தெரியுது இன்னும் கொஞ்சம் முக்கு." செவிலியாய் செயல்பட்டுக்கொண்டிருந்த பெண் கூறினாள். கவலையும் எதிர்பார்ப்பும் படர்ந்த முகத்துடன் மூக்கியின் ஆத்தா பார்த்துக்கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரப் போராட்டத்துக்குப் பின் குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஒரு பொம்மையைக் கையாழுவதுபோல இரத்தமும் இன்னும் திரவங்களும் சொட்டிக்கொண்டிருந்த அந்தக் குழந்தையைத் தூக்கினாள் செவிலிப் பெண். குழந்தையின் அழுகுரல் கோவிலுக்குள் எதிரொலித்தது. சன்னல்களில் கூடுவைத்திருந்த சில சிட்டுக்குருவிகள் குரலெடுத்துப் பாடின.
"மூக்கி, பொட்ட புள்ள பொறந்துருக்குடீ." செவிலி சொன்னாள்.
"சம்மனசு பொறந்திருக்கு தெரசம்மா." சிஸ்டர் ஆரோக்கியம் சொன்னார்.
"கோயிலுக்குள்ள பொறந்தபுள்ள. ஏஞ்சல்னு பேர் வைங்க."
கோவிலின் வெளியே செவத்தியான் என அழைக்கப்பட்ட செபஸ்டியான் வாத்தியார் தங்கையின் குழந்தையைப் பார்க்க ஆவலோடு நின்றுகொண்டிருந்தார். செவத்தியான் மகன் இனியனும் அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு குழந்தையைப் பார்க்கும் ஆவலில் நின்றுகொண்டிருந்தான். கோவில் கதவு திறந்தது. செவத்தியானின் அம்மா வெளிவந்தார்.
"ஆத்தா என்னாச்சு?"
"திடீர்னு வலி வந்து படுத்துட்டா. கோயில்லையே கொழந்த பொறந்திடுச்சு." செவத்தியானின் அம்மா சொன்னார். பேரனைப் பார்த்து,"ஏல, இனியா, ஒன் பொண்டாட்டி பொறந்துருக்கால."
இனியன், கண்கள் பிரகாசிக்க வெட்கத்தோடு சிரித்தான்.
அத்தியாயம் 3: கடலும் கடல் சார்ந்த இடமும்
முட்டம் ஒரு சராசரி மீனவக் கிராமம். நாகர்கோவிலிலிருந்து 16 அல்லது 17 கி,மீ தென் மேற்கில் அமைந்துள்ளது. 'சேரியா முட்டம்' எனவும் 'லைட் ஹவுஸ் முட்டம்' எனவும் வழங்கப்படுகிறது. முட்டத்தின் சிறப்பு அதன் நிலப்பரப்பு எனலாம். கடலுக்குள் முட்டி நிற்கும் நிலம். கடலைத் தடுத்து நிற்கும் குன்றின்மேல் ஊர். வீடுகள் குன்றின்மேல் கட்டப் பட்டிருப்பதை அங்கு வாழ்பவர்கள் உணர்ந்திருக்கவில்லை. உற்றுநோக்கியே அதை உணர முடிந்தது.
முட்டத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பது அதன் கரையில் வீழ்ந்து கிடக்கும் பாறைகள். காலம் செதுக்கிய சிலைகளாக, என்றோ சிலர் பூஜித்துவிட்டு விட்டுப் போன கோவில்கள் போல அவை நின்றுகொண்டிருக்கின்றன.
மேலமுட்டம், நடுமுட்டம், கீழமுட்டம் மற்றும் ஏப்பு முட்டம் என ஊர் பிரிக்கப் பட்டிருந்தது. எழுபதுகளில் மேற்கே இருந்த செம்மண்காட்டை சமன் செய்து 'சிவந்தமண்' என்ற ஊர் உருவாக்கப்பட்டது. இன்று 'ஜேம்ஸ் நகர்' எனவும் அழைக்கப்படுகிறது. இயற்கை எழுப்பிய செம்மண் அகழிகள் நிறைந்த இடம் சிவந்தமண்.
சிறிய ஓட்டு வீடுகளுக்கும் மத்தியில் எழுந்து நிற்கும் பழமையான கோவில். கடலுக்கு மிக அருகில் கட்டப்பட்டிருக்கும் வெகுசில அழகிய கோவில்களில் ஒன்று. கடவுள்கள் பக்தர்களைக் காட்டிலும் பணக்காரர்கள் என்பதை உணர்த்தும் கோவில். கோவில் தவிர்த்து ஒவ்வொரு தெருவிலும் ஒரு புனிதரின்பெயரில் அமைந்திருக்கும் சில குருசடிகள்.
படகுகளை கரையில் நிறுத்திக்கொள்ளவும், பிடித்துவந்த மீன்களை விற்கவும் உள்ள கடற்கரை தவிர்த்து ஆள் நடமாட்டம் அதிகமில்லாத கோட்டாமடை எனும் கடற்கரைப் பகுதி மேற்கில் உள்ளது. இங்கே எப்போதாவது வரும் சில சுற்றுலா பயணிகள் தவிர்த்து ஆள் நடமாட்டம் அதிகம் இருப்பதில்லை. இரவில் அலைகள் மட்டுமே இங்கே சஞ்சரித்தன.
விக்டர் அங்கேதான் அலைகள் இவன் பொறுப்பில் விட்டுச் சென்ற பிணத்தின் முன் நின்றுகொண்டிருந்தான். ஊருக்குள் கடற்கரையில் உறங்க பலரும் வருவதுண்டு என்பதால் விக்டர் தனித்துறங்க கோட்டாமடையே நல்ல இடமாயிருந்தது.
ஊருக்குள் குளிப்பாட்டி சிலுவை எழுதப்பட்ட கறுப்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் சில வயதானவர்களின் உடல்களைத் தவிர வேறு உயிரற்ற மனித உடல்களை பார்த்திருக்கவில்லை விக்டர். பயத்தில் தன் கால்சட்டை ஈரமாயிருப்பாதை உணர்ந்தான்.
பிணத்தின் நீலச் சட்டை கிழிந்துபோயிருந்தது. இடுப்புக்குக் கீழே சிவப்பு நிற உள்ளாடை மட்டுமே இருந்தது. மண்ணுக்குள் செல்ல விளைந்தோ என்னவோ, கவிழ்ந்தே கிடந்தது. அழுகிப் போயிருக்கவில்லை. உடல் முழுவதும் சிராய்ப்புக் காயங்கள். சில பெரிய காயங்களில் வெள்ளையாய் சதை தெரிந்தது. உற்றுக் கவனித்ததில் கால்கள் முறிந்ததுபோல வளைந்திருந்ததைப் பார்த்தான் விக்டர். கையில் தங்க வாட்ச் உள்ளே தண்ணீர் ஏறி பனித்திருந்தது.
கொஞ்சம் சுதாகரித்து பக்கவாட்டில் நடந்து முகம் தெரிகிறதா எனப் பார்த்தான். கவிழ்ந்திருந்த முகத்தை திருப்பிப்போட காதைப் பிடித்து தூக்கினான். விறைத்துப்போயிருந்தது காது. வேண்டாத ஒன்றை நுனிவிரல்களில் பிடித்து தூக்குவதைப் போல தூக்கி முகத்தை திருப்பினான்.
பிணத்தின் முகம் சிதைந்திருந்தது. முன்தலை பாறையில் அடிபட்டு நைந்து அடையாளம் தெரியாமல் கோரமாயிருந்தது முகம். பற்கள் கோரமாய் கிழிந்து தொங்கின. கடல்மணல் ஒட்டியிருந்தும் கோரம் தெளிவாய் தெரிந்தது.
கழுத்தில் சிலுவை டாலருடன் தங்கச் சங்கிலி.
இன்னொருமுறை முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு ஊரை நோக்கி ஓட்டம் பிடித்தான் விக்டர்.
அத்தியாயம் 4: 1979 ஒரு பள்ளி நாள்.
பள்ளிக்கூட மணி அடித்து குழந்தைகள் கூட்டமாய் வகுப்புகளிலிருந்து வெளியே ஒடினர். பள்ளிக்கு வெளியே பெட்டியில் வறுத்த காணம், தேங்காய் புண்ணாக்கு, புளிப்பு மிட்டாய், தேன்மிட்டாய், தெங்கா முட்டாய் முதலான தின்பண்டங்கள் விற்கும் கடைகளில் கூட்டம் சேர்ந்தது. குச்சி ஐஸ் பால் ஐஸ் விற்பவர் உலோகத்தால் செய்யப்பட்டைருந்த ஒலிஎழுப்பியை இயக்க ஆரம்பித்தார். பள்ளிக்கூட மணியின் தொடர்ச்சியாய் அது ஒலித்தது.
வகுப்பறைக்கு வெளியே இனியன் முழங்காலில் நிற்கவைக்கப்பட்டிருந்தான். அந்த நீண்ட திண்ணையின் கடைசித் தூணின் பின்னால் மறைந்து நின்று சிறுமி ஏஞ்சல் இவனை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
வகுப்பிலிருந்து செபஸ்டியான் வாத்தியார் வெளியேவந்தார்.
"டேய். எழும்பு. இனிமே இப்படி பண்ணுன. அடி பின்னிருவேன். வீட்டுக்குப்போ. வீட்ல வந்து இருக்கு ஒனக்கு. போ..போ."
தந்தையை இறுகிய முகத்துடன் பார்த்தான். முறைப்பிற்கும் அவன் பார்வைக்கும் சற்றே வித்தியாசம் இருந்தது.
கணக்கு வாத்தியார் வந்தார்.
"என்ன சார், பையன் என்ன செஞ்சாங்?"
"இவனா நம்ம செலின் டீச்சர பட்டப்பேர் சொல்லி கூப்டிருக்கான் சார். அதுவும் பஸ்டாண்ட்ல எல்லார் முன்னாலயும் வச்சு கோழீன்னுட்டு ஓடியிருக்கான்"
"இவனா?"
"ம்."
இனியன் இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்தான். கணக்குவாத்தியாரும் செபஸ்டியானும் ஆசிரியர் அறையை நோக்கி நடந்தனர்.
"அவுங்க பேரு கோழியா?"
"மெதுவா சார். பாவம் எங்கிட்ட சொல்லும்போ அழுதுட்டாங்க. அவங்க கொண்ட போடுறதப்பாத்து .."
"ஓகோ. இவனுக்கு செலின் பாடம் எடுக்கமாட்டாங்களே சார்."
"என் தங்கச்சி பொண்ணு ஒண்ணாங்க்ளாஸ் படிக்கிறாளே, அவள அடிச்சுட்டாங்கன்னு இந்தக் கோவம்." சிரித்தபடியே சொன்னார் செவத்தியான்.
"ஓகோ. சின்னப்பசங்க. சார் ஒங்ககிட்ட வாங்குன அந்த ஃபைவ் ஹண்ரட் இந்தாங்க. ரெம்ப தேங்க்ஸ்."
"பையனுக்கு அட்மிஷன் கெடச்சுதா சார்?"
"ஆமா சார். அடுத்தவாரம் மெட்ராஸ் போறோம்."
பள்ளிக்கு வெளியே ஏஞ்சலுக்கு ஐஸ் வாங்கித் தந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தான் இனியன்.
"இனியா, மாமா ஏன் ஒன்ன மொழங்கால்ல நிக்கவச்சாவு?" ஏஞ்சல் கேட்டாள்.
"குச்சி ஐஸ் நல்லா இருக்காடி?" இனியன் பதிலை தவிர்த்தான்.
"நாளைக்கு சேமியா ஐஸ் வாங்கித் தருவியா?"
"சரி." இனியன் தலையாட்டினான்.
ஏஞ்சலின் புத்தகப் பையையும் சேர்த்து தோளில் ஏற்றிக்கொண்டிருந்தான் இனியன் அவன் வலக்கை ஏஞ்சலின் வலக்கையை பற்றியிருந்தது.
"இனியா எங்கம்மா கலர்குச்சி வாங்கி தந்துச்சே?" சிறு துள்ளலோடு சொன்னாள் ஏஞ்சல். இனியனின் பின்னால் தொங்கிக்கொண்டிருந்த பையிலிருந்த பென்சில் பெட்டியை திறந்து காண்பித்தாள்.
"கலர் குச்சி."
"எங்கிட்ட சாக்கட்டி இருக்குதே?" பைகளை கீழே இறக்கி வைத்து தன் பென்சில் பெட்டியிலிருந்த வெள்ளை சாக்பீசை எடுத்துக் காட்டினான் இனியன்.
"ஐ. எனக்கு?"
சாக்பீசை உடைத்துப் பகிர்ந்தான். வகுப்புத் தலைவன் என்பதால் சாக்பீஸ் எடுத்துவரும் பொறுப்பு அவனுக்கு இருந்தது. அவ்வப்போது ஒரு சாக் பீசை பாக்கெட்டில் போட்டுவைப்பது வழக்கம். வாத்தியார் பையன் என்பதில் பல சௌகவுரியங்கள் இருக்கவே செய்தன. சாக் பீஸ் வைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் அந்தஸ்தை பெற்றுத் தந்தது.
ஏஞ்சல் வீடு வந்தது. பக்கத்து வீட்டில் பொனிப்பாஸ் கிழவர் இவர்கள் கைகோர்த்து வருவதைப் பார்த்து சிரித்தார்.
"ஏல. ஒங்களுக்கு எப்பம் கல்யாணமாச்சு? எப்பப் பாத்தாலும் கையப் புடிச்சுட்டு சேந்தே நடக்கிய? ஒரு சோடியாத்தான் போவுது."
"போம் வோய். போய் வேலையப் பாரும்."
"ஏஞ்சல் புள்ள. இந்தப் பயகூட சேராத. எம் பேரனக் கட்டிக்க என்னா?" எதிர் வீட்டு திண்ணையிலிருந்தவர்கள் தெருக்குழாயில் தண்ணி பிடித்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட அனைவரும் சிரிக்க. வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே ஓடினர் இருவரும். ஏஞ்சலின் அம்மா, மூக்கி வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள்.
"மக்கா, இனியன் வந்துருக்கானா?"
"ஓமும்."
"அவன நிக்கச்சொல்லு. சேர்ல பணியாரம் இருக்கு ரெண்டுபேரும் தின்னுங்க." வேலையிம் கையுமாயிருந்தபடியே சொல்லிக்கொண்டிருந்தாள் மூக்கி.
"சரி."
மூக்கியின் மாமியார் தன்ணி குடத்தோடு உள்ளே வந்தார்.
"ஏ கேட்டியா? இவங்க ரெண்டுபேரும் சேந்து வந்தா தெருவே சிரிக்கு. பொனிப்பாசு இவங்களுக்கு கல்யாணமாயாச்சான்னு கேக்காரு. பைப்ல இருந்தவ எல்லாம் சிரிச்சு.." சிரித்துக்கொண்டே சொன்னார்.
"எல அப்டியா?" கொஞ்சம் பெருமையோடே கேட்டாள் மூக்கி.
இனியன், ஏஞ்சல் இருவர் முகத்தில் வெட்கம்.
"மக்கா. எவ்வளவு பெருசானாலும் இந்த பாவப்பட்ட மாமிய மறந்துராத என்னல?" பாசம் பொங்க கேட்டாள் மூக்கி. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தான் இனியன்.
அலமாறியின் உள்ளிருந்து செய்தித் தாள் துண்டில் பொதியப் பட்டிருந்த சிறு பொதியலை எடுத்து இனியனின் பையில் வைத்தாள் மூக்கி.
"மக்கா, இதுல பைசா இருக்கு அம்மாட்ட குடு என்ன? அப்பாட்ட சொல்லாத, என்ன மக்கா?."
"சரி அப்பா வர நேரமாவும் அதுக்குள்ளால கொடுக்கேன். வரட்டா?" கதவுவரைப் போனவன் திரும்பி,"மாமி ஏஞ்சலக் வெளையாட கூட்டிட்டு போட்டா?" என அத்தையைக் கேட்டான்.
"போறியாடீ?"
ஏஞ்சல் தலையாட்டினாள்.
"போயி அரங்கூட்ல துணிமாத்திட்டு போ. மக்கா நீயே கொண்டுவந்து வுடு என்னா?"
"சரி" சம்மதித்தான் இனியன்.
"எடி நாக்குல நீலமாயிருக்கு. ஐஸ் வாங்கித் தின்னியோ."
"இனியந்தா வாங்கித்தந்தாங்...."
இனியனினும் ஏஞ்சலும் மீண்டும் கைகோர்த்துக் கொண்டே இனியனின் வீடு நோக்கி நடந்தனர்.
அத்தியாயம் 5: சேதி
விக்டர் வீட்டை அடைந்தான். கதவு திறந்திருந்தது. விக்டரின் அம்மா ஊரெல்லாம் விக்டரைத் தேடிக்கொண்டிருந்தாள். அவன் அண்ணன் கடலுக்குப் போயிருந்தான். அரங்கு வீட்டில் நுழைந்தான். கடற்கரையில் கண்ட பிணத்தின் நினைவுகளிலிருந்து மீளமுடியாதவனாய், பயம் மேற்கொள்ள அரங்கிலிருந்த கட்டிலின் கீழ் படுத்துக் கொண்டான்.
ஊரின் வடக்கு எல்லையிலிருந்து ஊருக்குள் ஒரு நீல நிற அம்பாசடர் கார் நுழைந்தது. உள்ளே புதிதாய் மணமான தம்பதியர் இருவரும் கல்யாண வீடியோ எடுப்பவரும் அவரின் உதவியாளரும் ஒரு சின்னப் பெண்ணும் இருந்தனர். திருமண வீடியோக்களில் முட்டத்தில் கடல் மணல் பாறைகள் பின்னணியில் தம்பதிகள் நிற்பதுபோன்ற காட்சிகளை சேர்த்துக்கொள்வது வழக்கமாயிருந்தது.
காரை கடற்கரைக்கு அருகில் நிறுத்திவிட்டு ட்ரைவர் சிகரட் பத்தவைத்துக்கொண்டார். புதுமணத் தம்பதிகள் பாறைகளின் மேல் நின்று காமெராவுக்குப் போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். "சார் கையப் புடிங்க. மேடம் கொஞ்சம் நெருங்கி நில்லுங்க." எனும் கட்டளைகளுக்கு தம்பதிகள் கட்டுப்பட்டனர்.
காரின் ட்ரைவர் பாலு காரின் டேப் ரெக்கார்டரில் சிக்கிக்கொண்ட ஒலிநாடாவை வெளியே எடுத்துக்கொண்டிருந்தான். "சார், ஸ்டாண்ட்ல எல்லா கார்லயும் சி.டி இருக்கு. நம்மளும் போட்ரலாம். லாங்ல போம்போது மக்கள் ஆசப் படுதாங்கல்லா?" பலமுறை முதலாளியிடம் சொல்லிப்பார்த்தும் அவர் கேட்காததால் ஒலிநாடா சிக்கும்போதெல்லாம் அவருக்கு வசவு கிட்டிக்கொண்டிருந்தது.
பாலு டிரைவர் ஆனது பெரிய கதை. சுருங்கச் சொன்னால். வீட்டில் கஷ்டப் பட்டு படிக்கவைத்தார்கள். பாளையங்கோட்டையில் கல்லூரி போகும்வரை நல்லபிள்ளையாகத்தான் இருந்தான். ஹாஸ்டலில் இடம் கிடைக்காமல் வெளியே தங்கியிருந்தான். ஒரேவருடத்தில் அத்தனை 'நல்ல' பழக்கங்களையும் கற்றுக்கொண்டான். படிப்பு பாழானது. வீட்டில் அவனை நல்லவன் என நம்பிக்கொண்டிருதனர். மூன்றுவருடம் முடிந்ததும் வீட்டில் பி.காம் படிப்புக்கேத்த(?) வேலை தேட ஆரம்பித்தனர். பாலுவின் அப்பா பக்கத்துவீட்டு வாத்தியாரிடம் சொல்லியிருந்தார்.
"நம்ம பைக் டீலர் இருக்கான்லா அவன் கேசியர் வேணும்னான் போறியாடே. ஆயிறத்து ஐநூறு தருவான். பெறவு அப்பப்ப ஏதாது கெடைக்கும்." வாத்தியார் கேட்டார்.
'படிப்புக்கேத்த வேலை இல்லை' என மகன் மறுப்பான் என நினைத்தார் பாலுவின் அப்பா. எதிர்பார்த்ததற்கு மாறாய் ஒத்துக்கொண்டான். மூன்றுமாதத்திற்குப் பிறகு ரிசப்சனிஸ்ட் ப்ரியாவுடன் பழக ஆரம்பித்தான். காதல் முத்திப்போனது. ப்ரியாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. பாலுவின் அப்பா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு பாத்துக்கலாமென்றார். ப்ரியாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து இருவரும் பாளையங்கோட்டைக்கு ஓடிப் போய் நண்பர்கள் முன்னிலையில் கல்யாணம் செய்துகொண்டனர். கல்லூரி நாட்களிலேயே இதுபற்றிய ஒப்பந்தம் ஒன்றை விளையாட்டாகச் செய்திருந்தனர். "எல, யாராவது பொண்ணக் கூட்டிட்டு ஓடி வந்தா அடுத்தவங்க பாத்துக்கணும் என்னா?" இதுதான் அந்த ஒப்பந்தம்.
பாளையங்கோட்டைக்கும் நாகர்கோவிலிக்கும் அதிக தூரமில்லையே. ப்ரியாவின் மாமா இவர்களை கண்டுபித்தார். வீட்டிற்கு கூட்டிவந்து பேச்சு நடந்தது. இரண்டுபேர் வீட்டிலும் சமாதானம் செய்துவைக்கப் பட்டது. ஓடிப் போனதில் பைக் டீலரிடம் வேலையும் போயிருந்தது. ப்ரியாவின் அப்பா 'வேலை வாங்கித் தருகிறேன் டிக்ரி சர்ட்டிபிக்கேட்டத் தாங்க' எனக் கேட்டார். பூகம்பம் வெடித்தது. பாலு டிக்ரி முடிக்கவே இல்லை. தீவிர விசாரிப்பில் அவன் மூன்றாமாண்டு கல்லூரிக்கே போகவில்லை எனவும் சென்னையில் சினிமா வாய்ப்புத் தேடி அலைந்ததாகவும் தெரிய வந்தது. பாலுவின் அம்மா மண்ணை வாரித் தூற்றினார். ப்ரியாவின் அப்பா தலையில் அடித்துக்கொண்டார். அவள் மாமா இவைனை ஆள்வைத்து அடிக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்,"பச்ச புள்ளைய ஏமாத்திட்டியேல." என சீறினார். பாலுவின் அப்பா,"என் மொகத்துல முழிக்காதல"எனச் சொல்லிவிட்டுப் போனார். ப்ரியா ரெம்ப ஏமாந்தவளாய் அழுதுகொண்டேயிருந்தானள். பாலு மட்டும் தவறே செய்யாதவனைப் போல மாப்பிள்ளை மிடுக்கில் சுற்றிக்கொண்டிருந்தான். "என்ன செய்ய சொல்லுதிய? நான் மட்டும் சினிமால பெரியாளா ஆயிருந்தா இப்டி சொல்லுவேளா?" ஏதோ மற்றவர்கள் மேல்தான் தவறு என்பதுபோல நடந்துகொண்டான்.
நிலமை சமனாக நாள் பிடித்தது. ட்ரைவிங் தெரிந்திருந்ததால் ஸ்டாண்டில் தன் பள்ளித் தோழனிடம் சொல்லி ட்ரைவரானான். ப்ரியாவைக் கூட்டிவந்து தனிக்குடித்தனம் வைத்தான். இதுதான் பாலு டிரைவர் ஆன கதை. இன்னும் எப்போதும் ஏதாவது சென்னைக் கதைகளை சக ட்ரைவர்களோடு சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்வான்
காரின் வெளியே வந்து இன்னுமொரு சிகரட் பத்தவைத்தான். அப்போதுதான் அதைப் பார்த்தான். கடற்கரையில் கிடந்த பிணம். ஆர்வம் தூண்ட அருகில் சென்றான். காரில் வந்தவர்களைத் தேடினான். தூரத்தில் ஒரு பாறைமேல் புதுப்பெண் பரதநாட்டிய அபிநயம்பிடிக்க அருகில் பத்மினியுடன் சிவாஜிபோல மாப்பிள்ளை நின்று போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
மேட்டிலேறி ஊரை நோக்கி நடந்தான். . போஸ்ட் ஆபீஸ் பக்கம் 'லைட் ஹவுஸ் பஸ் ஸ்டாப்' இருந்தது. பஸ்ஸுக்காக காத்திருக்கும் சிலரும், வெட்டியாய் பேசிக்கொண்டு சிலரும் இருந்தனர்.
"அங்க கடக்கரையில பொணம் ஒதுங்கி கெடக்கு." கூட்டமாய் பேசிக்கொண்டிருந்த பெரியவர்களிடம் சொன்னான்.
"ஆம்பிள்ள பொணம். சின்ன வயசுதான். பாத்தா தெக்க உள்ள ஆள்மாறிதான் தெரியுது."
பெரியவர்கள் எழுந்தனர்.
"எங்கைய்யா? கோட்டாமடையிலையா?"
"ஆமா."
"நீ எப்ப பாத்த?"
"இப்பத்தான். பார்டி ஒண்ண கூட்டிட்டு வந்தேன். நார்கோவில் வேப்பமூடு ஸ்டாண்ட்ல கார் ட்ரைவர்."
கோட்டாமடை நோக்கி சின்னக் கூட்டம் நகர்ந்தது. போஸ்ட்மேன் செல்வம் போஸ்ட் ஆஃபீசில் செய்தியை பரப்பினான்.
---
பிணத்தைச் சுற்றி சற்றே பெரிய கூட்டமொன்று கூட ஆரம்பித்தது. சிறுவர்களை சிலர் விரட்டிக்கொண்டிருந்தனர்.
"நம்மூரு ஆளில்ல." பெரிய்யவர் ஒருவர் சொன்னார்.
"ஒமக்கு எப்டித் தெரியும். மூஞ்சியே தெரிலியே?" இளைஞர் மறுத்தார்.
"எல நம்ம ஊர்ல இந்தமாரி சட்டையும் ஜட்டியும் எவன்ல போடுதான்?" பெரியவர் அறிவுபூர்வமாக பதிலளித்துவிட்டோம் என்பதைவிட இளஞனை மடக்கிவிட்டோம் என்கிற பெருமிதத்தில் சொன்னார்.
"இப்ப எல்லாரும் போடுதாவு. வேணும்னா பாக்கீரா?" இளைஞன் லுங்கியை பாதி உயர்த்தியபடி பதிலளித்தான்.
"ஒங்க ஆத்தாட்ட போய் காட்டுல தேவ்டியாமோன." பெரியவர் கோபத்தில் சொல்ல. இளைஞனும் அவன் நண்பர்களும் கேலியாய் சிரித்தனர்.
"இது இங்கன கெடந்தா சரியாவாது." இன்னொரு பெரியவர் ஆலோசனை சொன்னார்,"தொளவைய எடுத்து கடலுக்குள்ள தள்ளிவுட்லாம். என்னா?"
"ஆமாடே நல்ல யோசனதான். போயி பழய தொளவ ஒண்ண கொண்டாங்க."
"தொளவ எதுக்கு? அப்டியே காலப் புடுச்சி இழுத்துப் போட்ருவோம்." இளஞர் ஒருவர் முன்வந்தார்.
"எல கொலக் கேசா இருக்கப்போவுது. போலீஸ் மோப்ப நாய் வந்தா ஒங்க வீட்டுக்குத்தான் வரும் பெறவு போய் களி திங்கணுமால?"
"இவனுவளுக்குத்தான் எல்லாந் தெரியுண்ணு வந்துட்டானுவ. போங்கல அங்க. பெரியாளு சொன்னா கேக்கணும்." முதலில் கடுப்பேத்தப்பட்ட பெரியவர் பழிதீர்த்துக்கொண்டார்.
கொஞ்ச நேரத்தில் தொளவை எனப்பட்ட கடலில் கட்டுமரங்களை தொடுக்க பயன்படுத்தப்படும் துடுப்பு எடுத்துவரப் பட்டது. ஐந்து முதல் ஆறடியில் இரண்டாய் பிளக்கப்பட்டிருந்த மூங்கிலின் தடித்த அடிப்பாகத்தில் ஒரு பாகம் இந்தத் துடுப்பு.
பிணத்தின் அடியில் துளவை சொருகப்பட்டது. இரண்டு நடுவயது ஆண்கள் ஒரு புரட்டு புரட்டிப் போட்டனர்.
பாலு காரில் வந்த புதுமணப்பெண் காருக்கருகில் நின்றுகொண்டே பிணத்தருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கணவனை அழைத்துக்கொண்டிருந்தாள். "ஏய் இங்க வாங்க. வாங்க போலாம்." .
ட்ரைவர் பாலு, "வாங்க சார். இது சரியாப் படல. அங்க மேடம் கூப்ட்றாவல்லா? போவோம். இவனுக போலீஸுக்கெல்லாம் போறமாறி தெரியல." எனச்சொல்லி புது மாப்பிள்ளையை கிளப்பினான்.
"அவ்ளவுதாம்புள்ள. இன்னும் ரெண்டு பொரட்டு போடுங்க அந்தால போட்டும்." பெரியவர் சொல்ல துளவை பிணத்துக்கடியில் சொருகப்பட்டது.
"என்னங்க இவைங்க போலிசுக்குப் போறதில்லியா?" புது மாப்பிள்ளை பரிதாபமாகக் கேட்டார்.
"சார் இது மதுர சிட்டியில்ல. முட்டம் கடற்கர. இங்க கடற்கரையில ஒரு போலீஸ் ஸ்டேசன்கூடக் கெடையாது தெரியுமா? மணவாளக்குறிச்சி போணும். இங்கேர்ந்து நாலு கிலோமீட்டர். சிட்டியிலயே தெருவுல நடக்கத கண்டுக்கமாட்டென்றானுவ."
மதுரக்கார மாப்பிள்ளையின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் பாலு.
பாலுவின் கார் சற்று வேகமாகவே முட்டத்தை விட்டுக் கிளம்பியது.
Tuesday, December 26, 2006
(விண்) நட்சத்திரம்
மண்ணில் விண்ணவனே நட்சத்திரம் - மன்னன்
உறங்க இடமில்லா சத்திரம்
உலகில் இதுவன்றோ விசித்திரம்?
மாட்டுதொழுவம் மாளிகையானது
ஆடும் கோழியும் தோழர்களாயினர்
கந்தல் ஆடைக்கு கண்ணியம் வந்தது
கொசுவின் பாடலே தேவகானமாம்.
செவியுள்ளோர்க்கு விண் பாடல் கேட்டது
'விண்ணகத்தில் இறைவன் போற்றப் படுக
மண்ணகத்தில் நல்மனத்தோர் அமைதிபெறுக'
இதுவே இவர் பிறப்பின் தத்துவமானது.
இடையர்களுக்குத்தான் கிடைத்தது முதல் செய்தி
இறைவன் பிறந்துள்ளான் என்கிற புது செய்தி - இருள்
விலகிடும் என்பதே அந்நற்செய்தி.
ஏரோது அரசன் கொல்லத் தேடினான்
ஏழைமக்கள் காணத்தேடினர்
கிழக்கின் அரசர் மூவர் வந்தனர்
கிடையில் குழந்தையை வணங்கிநின்றனர்.
மாளிகை பலவும் உன் பேரில் இருக்குது - எங்கள்
மனங்கள் கூட வெறுமையாய் கிடக்குது
மாட்டுத் தொழுவமே போதுமென்றாலும்
அதைவிடக் கீழாய் பலர் வீடும் இருக்குது
இன்னும் ஒருமுறை இங்கே வந்திடு
குடிலோ, குடிசையோ எங்களில் தங்கிடு
அன்பே! அன்பு, அன்புதான் என்றிடு - எம்மில்
ஆலயம் வேண்டாம் அன்பே வேண்டிடு.
மீண்டும் ஒரு முறை இனிய கிறீஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.
Thursday, December 14, 2006
திருக்குறள் குழுமம்
திருக்குறளுக்கென்றே ஒரு பதிவைத் துவங்கி ஒவ்வொரு பதிவிலும் ஒரு அதிகாரமென எளிமையாய் இனிமையாய் விளக்கம் அளிக்கலாம் எனும் எண்ணத்தில் ஒரு பதிவை துவங்கியுள்ளேன்.
இதை தனியாய் செய்வதைவிட குழுவாய் செய்வதே எளிதானதாகும் என்பதால் இந்த அறிவிப்பு.
'குறள் பக்கங்கள்' எனும் இந்த புதிய குழுமப் பதிவில் பங்குபெற விரும்புபவர்கள் cvalex at yahoo .com அல்லது cyril.alex@gmail.com ற்கு தனிமடல் அனுப்பவும்.
விரைவில் எதிர்பாருங்கள் 'குறள் பக்கங்கள்'.
பி.கு: SK, மயிலை மன்னாரை குழுமத்துக்கு வரவேற்பது எங்கள் மகிழ்ச்சியும் பாக்கியமும் ஆகும்.
Friday, November 10, 2006
இ.இ.ஆ முதல் பரிசு எனக்கே எனக்கே
நடுவராய் மு. மேத்தா அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது எனக்கு தலைகால் புரியாத சந்தோஷமாயிருக்குதுங்க. ரெம்ப எளிமையான ஒரு கருத்த வச்சு எளிமையா எழுதின கவிதை. பொதுவா கவிதைன்னா நமக்கு அவ்வளவு தன் நம்பிக்கை கிடையாது. இனிமேல் முயல நம்பிக்கை வந்திருக்கு.
கொஞ்ச வருஷத்துக்கு முன்னால என் மீனவ உறவினர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஆகாயம் ஒரு திடமான இடமென பேசினனர். அவருக்கு என்ன சொல்லி புரியவைப்பது? சில உண்மைகள் சிலருக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை என விட்டுவிட்டேன். Ignorance is bliss. அறியாமை ஆனந்தமானது. உண்மை, உண்மை.
அந்த உரையாடலின் ஆதாரத்தில் பிறந்த இந்தக் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.
நம்ம வ. வா தமிழ் சங்கத்தாருக்கும் ஊக்குவித்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
'இன்னும் இருக்கிறது ஆகாயம்'
'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.
சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு ஆனால்
தெய்வமாயில்லை.
பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.
மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும் சுவர்க்கமுமில்லை.
ஆகாயம் ஒரு மாயை.
மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
Thursday, November 02, 2006
சொர்க்கம் இலவசம்
நாயர்கடைக்கே கூகிள் மேப்பில் வழிதேடி, அதை செல்போனில் இறக்கி, உலகளாவிய சுட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (அதான் ஜிபிஎஸ்), போய் ஹோம் டெலிவரி ஆர்டர் செய்துவிட்டு வர்றமாதிரி காலம் மாறியிருக்கு.
பூமியில மட்டுந்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்ன? சுவர்க்கமும் மின்னணு எந்திரமயமாகியிருந்தது. ஏக்கர் கணக்கில் மெயின்ஃப்ரேம்களை நிர்மாணித்திருந்தனர். பாவக்கணக்கு புண்ணியக் கணக்கு என மெயின்ப்ஃரேம்கள் எப்பவுமே கூட்டல் கழித்தல் மட்டுமே போட்டுக்கோண்டிருந்தன. ஓயாது டெலிஃபோன் மணி அடிக்கும் வேண்டுதல்களுக்கான கால் செண்டரும், வி எம் எஸ் (விதி மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) நிர்வகிக்கும் குழுவும் தனித்தனியே செயல்பட்டுக்கொண்டிருந்தன.
கடவுளர்களால் ஒருவரோடு ஒருவர் பேசாமலேயே கருத்துப் பரிமாற முடியுமென்றாலும் யார் யாரோடு பேசுகிறார்கள் என கண்டுபிடிக்க இயலாமல் போனதால் செல்ஃபோன் இண்டர்நெட்ட் என தொலைத்தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.
சுவர்க்கம்னு ஒத்தையா சொல்றதவிட சுவர்க்கங்கள்னு சொல்றதுதான் சரி. மதங்கள் ஒவ்வொன்றுக்குமாய் பல சுவர்க்கங்கள் இருக்கின்றன. சுவர்க்கங்களுக்கிடையே அடிக்கடி பேச்சுவார்த்தைகளும் கூட்டு முயற்சிகளும் பிரச்சனைகளைதல்களும் நடைபெறும்.
பீட்டர் கிறித்துவ மோட்சத்தின் வாசலை நிர்வகிப்பவர். யாருக்கு மோட்சம் அளிப்பது யாரை லூசிபரிடம் அனுப்புவது என்பதை அவர்தான் நிர்ணயிப்பார்.
இந்துமதத்தின் எமலோக எம்ப்ளாயீஸ் எல்லோருக்கும் பரிட்சயமானவர்கள்.
அன்று காலையில் மோட்சத்திலிருக்கும் புனித பீட்டருக்கு எமலோகத்தின் சி. குப்தனிடமிருந்து செ. போனில் தொ. பேசி அழைப்பு வந்திருந்தது.
"ஹலோ பீட்டர் ஹியர். ஹூ இஸ் தெயர்?", பீட்டர் சித்ரகுப்தன் எனத் தெரிந்தும் தன் வழக்கமான பாணியில் பேச ஆரம்பித்தார். அவர் பெயர் ராசி அப்படி.
"யோவ் பீட்டரு. பேருக்கேத்தாப்ல ஏன்யா காலையிலேயே பீட்டருடுற. நான் சித்ரகுப்தன் பேசுரேன்யா. உங்க செல்போன்ல என்ஃபோட்டோ வந்திருக்கணுமே. ரம்பா 25000 வருட ஜூபிளி பார்ட்டில எடுத்த ஃபோட்டோ. எப்படி? சிரிச்சுக்கிட்டேயிருப்பேனே? காலெர் ஐ.டி எல்லாம் உங்க மோட்சத்துல இல்லியா?"
"சித்ரகுப்தன்! நீங்களா? கண்ணாடி போடல அதான்...? என்ன காலையிலேயே எதாவது டேட்டா ப்ராப்ளமா?"
"டேட்டா ப்ராப்ளமெல்லாம் பாக்கத்தெரியாதா எனக்கு? எத்தன வருஷமா பாக்குறேன்? உம்ம வயசக் காட்டியும் என் அனுபவம் எவ்வளவு அதிகம்னு கணக்குப் போடவே நாலு நாள் ஆகும்."
"சரிதான்.. சொல்லுங்க என்ன விஷயம்.?"
"நேத்து எம்.டி மீட்டிங் வச்சாரு.."
"எம்.டியா?"
"ஆமா இப்ப நாங்க எம Daர்மர எம் டின்னு தான் கூப்புடுறோம்."
"சரி என்ன மீட்டிங்?"
"வரவர பாவிங்க எண்ணிக்க அதிகமாயிடுச்சு. போனவாரம் 'பாவி20000', மெயின்ஃப்ரேம் க்ராஷ் ஆயிடுச்சு."
"ஹெவன் டுடேல சேதி பாத்தேன். நல்லவேள நாங்க பாவிகள் 30000க்கு அப்கிரேட் பண்ணிட்டோம்."
"நாங்க கொஞ்சம் பழசுதான் அத சொல்லிக் காமிக்கதீங்க பீட்டர்."
"ஐயையோ அப்படி இல்லீங்க.."
"பரவாயில்ல. சமாளிக்காதீங்க. அப்கிரேட் பண்ணுங்கோ, அப்கிரேட் பண்ணுங்க்கோன்னு கைலாசம் முதல் பாற்கடல் வரை எல்லா மீட்டிங்லேயும் பவர்பாயிண்ட் போட்டு சொல்லியாச்சு. எல்லாரும் பட்ஜட் கணக்கு சொல்றாங்களே தவிற யாரும் கேட்கிறதாயில்ல?"
"ஏழுமைலையான்கூடவா?"
"குபேரன் இண்ட்ரஸ்ட் ரேட்டை அதிகமாக்கினதுலேந்து அவருக்கு கொஞ்சம் தட்டுப்பாடாயிடுச்சு, ஏண்டா கடன வாங்கினோம்னு நொந்துக்கிறாரு."
"எம் டி மீட்டிங்ல என்ன நடந்துச்சு சொல்லுங்க?"
"நீங்க எங்க சொல்ல விடுறீங்க? அதாவது பாவிகள் எண்ணிக்கை அதிகமானதால நரகத்துல கூட்டம் அதிகமாகவும் சொர்க்கம் காலியாகவும் இருக்குது."
"இங்க மட்டும் என்ன வாழுது?"
"முழுசா கேளுங்க பீட்டர். எம் டி சொர்கத்துக்கு அதிகமா ஆள் சேர்க்க என்ன வழின்னு கேக்கிறாரு? "
"அத்தனபேரு இருக்காங்களே நீங்க ஏன் இதப்பத்தி வொரி பண்ணிக்கிறீங்க?"
"பீட்டர்ஜி அடிக்கடி நீங்க இப்டி வெறுப்பேத்துறீங்க. கணினி மயமாக்கல் வந்தபிறகு எவனுக்கு எப்ப வேலபோகும்னு தெரியல. அதனால இந்த பிரச்சனைக்கு ஒரு ஐடியாவ தந்தா எம் டி கிட்ட நல்ல பேர் கிடைக்குமேன்னு பாக்குறேன். எங்க டேட்டா எண்ட்ரி டீம் சார்புல இந்த ஐடியாவ எப்படியாவது தரணும்னு முடிவு பண்ணியிருக்கோம். "
"டேட்டா எண்ட்ரிக்கு டிமாண்ட் எப்பவுமே இருக்குமே?"
"போங்க பீட்டர். நரகத்துக்கு ஆஃப் ஷோர் பண்ணப் போறாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுது."
"அடப் பாவமே! நல்லவங்களுக்கு காலமில்ல பாருங்க."
"என்ன ஜோக்கா?"
"இல்லங்க நிஜமாவே. நரகத்துக்கு பாவக்கணக்க ஆஃப்ஷோர் பண்றதால ஃப்ராடு அதிகமாகுமே?"
"அங்கயும் கூட்டம் அதிகமாயிடுச்சே அதனால அவங்க ஃப்ராடு செஞ்சாவாவது சொர்க்கத்துக்கு ஆள் வருவாங்கண்ணு நினைக்கிறாங்களாம்."
"இந்த ஐடியா நல்லாயிருக்கே."
"நான் ஐடியா கேட்டா நீங்க நம்ம வேல போற ஐடியாவ சொல்றீங்களே பீட்டர்."
"ஐடியாவா? எங்கிட்டையா? எங்களுக்கும் உங்க பிரச்சனதான். போன மீட்டிங்ல பிதா சுதன் பரிசுத்த ஆவீன்னு மூணுபேரும் மாறி மாறி கேள்வி கேட்டு தொலச்சிட்டாங்க. இதுல மூணுபேரும் ஒரே ஆளுங்கிறது வேற. யாரோ ஒருத்தன் நான் கேட்ல தூங்குரதாவும் அதனால குழப்பம் நடக்குதுன்னும் ஸ்பாம் மெயிலலடிச்சுட்டான். நான் என்ன செய்ய? வர வர ஃபாதர், பிஷப் கூட பரலோகம் வரமாட்டேங்கிறாங்க."
"அட நம்ம பேரக் கெடுக்கிறதே இந்த சாமியாருங்கதானே. கம்ப்யூட்டருக்கு வைரஸ் மாதிரி நம்ம மதங்களுக்கு இந்த சாமியாருங்க. உள்ள இருந்துகிட்டே அழிச்சிடுறானுவ."
"அங்க முகமதுவும் இதத்தான் சொல்றாரு. ஜிகாதுன்னு இவர் ஒண்ணச் சொல்ல அவுங்க அத வச்சுகிட்டு போடுற ஆட்டத்துல அங்கயும் கூட்டம் கொறஞ்சு போயிடுச்சாம்."
"நாங்க தளர்த்தாத சட்டமில்ல கோடுக்காத சலுக இல்ல இருந்தாலும் கூட்டம் வரவே மாட்டேங்குது பீட்டர். இப்ப பாருங்க முன்னாலெல்லாம் பெருநாள் திருநாள்னா கோயிலுக்குப் போகணும்னு இருந்துச்சு. இப்ப? கோவிலுக்குப் போனாதான் பக்தியான்னு கேக்குறாங்க. சரி கோயிலுக்கு போகாத, நல்லவனா இருன்னா கேக்குறானா?"
"சண்டே சர்ச்சுக்குப் போன்னு சட்டம் போட்டாலும் எங்க பசங்க வீட்ல சப்த சுரங்கள் பாத்துட்டு உக்காந்துர்றாங்க."
"நாங்ககூட ஸ்பெசல் இபஃக்ட்ல சீரியல் வழியாத்தான் மக்களப் போய் சேரமுடியுது. இருந்தலும் நீங்க கிரிஸ்டியன். மதத்த மார்கெட் பண்றதுல ஒங்கள விட்டா வேற யாரு இருக்க முடியும் சொல்லுங்க? சும்மா கடவுள் ஒரு விசிட் அடிச்சத வச்சே ஒரு டைட்டிலப் போட்டு மதத்த உருவாக்கி பெரிய மதமாக்கிட்டீங்க. இன்னைக்கும் மூல முடுக்கெல்லாம் ஒளிஞ்சிருக்குறவனயெல்லாம் பிடுச்சு தண்ணி தெளிச்சு மாத்திர்றீங்க. உங்களுக்கில்லாத ஐடியாவா? ப்ளீஸ் பீட்டர் ஒரே ஒரு ஐடியா. எனக்காக இல்லீன்னாலும் என் டேட்டா ப்ராசசிங் டீம் மக்காளுக்காகவாவது ஒரு ஐடியா குடுங்க பீட்டர்."
பீட்டர் வெண்ணிற தாடியை தடவிக் கொடுத்தபடியே யோசிக்க ஆரம்பித்தார்.
"என்ன பீட்டர்ஜீ. அமைதியாகிட்டீங்க."
"யோசிக்கிறேன் சித்ரகுப்த்தன்."
"சரி யோசிச்சு சொல்லுங்க."
"ஆமா. யோசிச்சு சாயங்காலத்துக்குள்ள மெயில் போடுறேன்."
"மெயிலா? வேணாம் பீட்டர். எங்க ஆபீஸ்லமெயில ஓப்பன் பண்ணி படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த நாரதர் டீம் இருக்குதே அவர் 'கலகம்' னு ஒரு ஸ்பைவேரத் தட்டி உட இப்ப மெயில் அனுப்பவே தயக்கமாயிருக்கு. இப்பவே ஒரு ஐடியா குடுத்தீங்கன்னா...?"
"சட்டுன்னு ஒரு ஐடியா தோணுது..."
"சொல்லுங்க பீட்டர்..."
........
சாயுங்காலம் எமதர்மனின் சபையில் நடந்த மீட்டிங்கில் சித்ரகுப்தன் பீட்டர் தந்த ஐடியாவை விவரித்துக்கொண்டிருந்தார்.
"இலவசத்தப்போல ஒரு மார்க்கெட்டிங் டேக்னிக்கே இல்ல. அதனால ஒரு ஆத்மா மோட்சம் வந்தா இன்னொருவருக்கு மோட்சம் இலவசம்னு அறிவிப்போம்."
Friday, October 20, 2006
தீபாவளி வாழ்த்துக்கள்
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் - இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.
தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்
பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.
கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் - குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.
காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்
அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.
பண்டிகைகள் Funடிகைகளாக
அந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Saturday, September 30, 2006
விடுதலை
ரெம்ப தயக்கத்தோடத்தான் ஜேம்சிடம் அந்த ஐடியாவச் சொன்னேன். அவனுக்கு தயக்கமேயில்ல. அப்புறமம வேணாம்டான்னேன். 'இல்லடா ரெம்ப சிம்பிள், நீ ஒண்ணும் பண்ணவேண்டாம் நான் பாத்துக்கிறேன்.' னு சொன்னான். 'நீ சொன்ன மாதிரி போட்டி நடத்துறதுல ஒரு சின்ன ஓட்டை இருக்குது அத யூஸ் பண்ணலாம். போட்டி விதிப்படி பாத்தா நாம செய்றது தப்பேயில்ல.' அவன் சொல்லச் சொல்ல எனக்கும் அது தப்பேயில்லன்னு தோணுச்சு.
சின்னவயசிலேர்ந்தே எதுலயாவது ஜெயிக்கணும்னு ரெம்ப ஆசை. நோஞ்சானாயிருந்தேன். ஸ்போர்ட்ஸ்லயெல்லாம் ஈடுபாடே கிடையாது. படிப்புல எப்பவுமே 3, 4 அல்லது ஐந்து ராங்குகளுக்குள்ளால வந்தேன். வீட்டுல திட்டு கிடைக்காட்டியும் பெரிய பாராட்டெல்லாம் கிடச்சதில்ல.
அம்மாதான் சும்மா சொல்லுவா நான் குழந்தையா இருக்கும்போது அழகிய குழந்தைன்ன்னு பரிசு வாங்கியிருக்கிறதா. அது என்ன சமாதானப் படுத்தத்தான் சொல்லுறான்னு எனக்கும் என் மனைவிக்கும் தெரியும். இருந்தாலும் ஆமோதிப்போம்.
இந்த ஜேம்ஸ்கூட சாப்பாட்டு போட்டி வெற்றிக் கோப்பை வீட்டுல வச்சுருக்கான். ஸ்கூல்ல மூணுதடவை அவந்தான் சாம்பியன். ஒருதடவை மிளகாய கடிச்சு கண்ணீரோட அவன் பரிசு வாங்கினது நியாபகம் இருக்கு.
இப்ப ஒரு வழியா வெற்றி கெடச்சாலும் சந்தோசமே இல்ல. என்னதான் விதிகள் படி நடந்துகிட்டாலும் ஏமாத்தினது ஏமாத்தினதுதானே. மத்தவங்களும் இதச் செஞ்சிருந்தா அது சமமான போட்டியா இருந்திருக்கும். ஒருவேள அப்டி செஞ்சிருப்பாங்கன்னு சமாதானப் படவும் முடியல.
"ஜேம்ஸ் மனச ஒண்ணு உறுத்திகிட்டே இருந்துச்சுன்னா என்ன செய்வ?"
"நண்பர்கள் அல்லது வீட்ல சொல்லுவேன்."
"தெரிஞ்சவங்ககிட்ட பகிர்ந்துக்க முடியலண்ணா?"
"எங்க சர்ச்சுல பாவசங்கீர்த்தனம்ணு ஒண்ணு இருக்கு. சினிமாலகூட கொல செய்றதுக்கு முன்னால ஹீரோ போயி ஃபாதர்ட்ட சொல்றமாதிரியெல்லாம் காண்பிச்சிருக்காங்க. நாம பாவசங்கீர்தனத்துல சொல்றத சாமியார் யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சட்டம் இருக்கு."
'கோவில் போகும் பழக்கமில்லையே. இல்லண்ணா சாமிகிட்ட சொல்லலாம்.' மனதில் சஞ்சலம் அதிகரித்து பாரமானது.
டெலிஃபோன் டைரக்டரியைத் திறந்து எண்ணை சுழற்றினேன்.
"ஹலோ. யார் வேணுங்க?"
"நான் அலுவலகத்துல நடந்த போட்டில குறுக்கு வழியில பரிசு வாங்கிட்டேன்."
"ஹலோ யாருங்க. என்னது?"
"இதச் சொல்லத்தான் ஃபோண் பண்னினேன்"
"ஹலோ யாருங்க இது டிம்ப்பர் டிப்போ. ராங் நம்பருங்க"
'ராங் நம்பர்னு தெரியுங்க.' மனதில் நினைத்தபடியே தொடர்பை துண்டித்தேன்.
மனம் கொஞ்சம் இலகுவானது.
Tuesday, September 19, 2006
இன்னும் இருக்கிறது ஆகாயம்
'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.
சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு ஆனால்
தெய்வமாயில்லை.
பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.
மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும் சுவர்க்கமுமில்லை.
ஆகாயம் ஒரு மாயை.
மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
Friday, September 01, 2006
லிஃப்ட்
'அங்க பஸ் வர நேரமாகும். கொஞ்சம் தள்ளி முக்குல நின்னீங்கண்ணா யாராவது டூ வீலர்ல வரும்போது லிஃப்ட் கேக்கலாம்.' மகன் சொல்லியிருந்தான்.
முதலில் வந்த மாட்டுவண்டியில் உரம் ஏற்றப்பட்டிருந்தது.
"பெரியவரே.. பஸ் வர நேரமாகுமே. வண்டியில வர்றீங்களா?" மாட்டுவண்டிக்காரர் கேட்டார்.
எளிய மக்களின் உபசரிப்பும் கருணை மனமும் படித்தவர்கள் பலருக்கும் இருப்பதில்லை. அடுக்குமாடி கலாச்சாரத்தில் வீட்டுக்கதவை எப்போதும் மூடிவைக்கப் பழகிக்கொள்கிறோம்.
"இல்லப்பா, கொஞ்சம் வெயிட் பண்ணி பாப்போம்" பெரியவர் புன்னகையோடு பதிலளித்தார். "வண்டில என்ன ஒரமா?'
"சாணம் சார். நாலு மாடு இருக்கு. அங்க தோப்புல கொண்டு வித்துருவேன்." பதில் சொல்லியபடியே மாட்டை ஒட்டினார்.
வண்டிகள் அதிகம் வராததாலேயே கிராமங்களில் இன்னும் மெதுவான, சாந்தமான வாழ்க்கை சாத்தியமாகிறது போலும். சக்கரம் கட்டிய நகர வாழ்க்கை இலக்கே இல்லாத, முடிவில்லா பயணம்போல காலத்தைக் கடக்கிறது. எப்போதும் பயணங்கள் சாத்தியமாகிறதாலேயே நகர மக்களும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
வாழ்நாளில் இயந்திரத்தால் ஓடும் ஒரு வண்டியைக்கூடக் கண்டிராமல் இறந்தவர்களை நினைவு கூர்ந்தார். ஆச்சர்யம் மேலிட்டது.
'இங்கேர்ந்து நடந்தே கோட்ட வரைக்கும் போயிருக்கோம்.' தாத்தா
'ரயிலுன்னா என்னடா?' குருட்டு மாமி
'ஒரு நாளாவது இந்த ப்ளெசர்ல ஓடனும்டா.' அப்பா
கிராமங்களுக்கு ரோடு போடாமல் இருப்பதே நல்லது. நகரத்தின் அவசரத்திலும் கிராமத்தின் நிதானத்திலும் வாழ்க்கையின் சுக துக்கங்களில் வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை. கிராமத்தின் நிதானம் வாழ்க்கையை அனுபவமாக்குகிறது, நகரவாழ்வில் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாய், திரைப்படக் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கின்றது.
அடுத்தடுத்து வந்த லாறிகளில் லிஃப்ட் கேட்கவில்லை. 'டூ வீலர்ல மட்டும் ஏறுங்க. தெரியாத கார்ல, லாறில ஏறிராதீங்க.' மனைவியின் எச்சரிப்பு.
வெற்றிலையில் மீந்த சுண்ணாம்புகள் தேய்க்கும் கல்லாய் மாறியிருந்த மைல் கல்மீது அமர்ந்தார். கோடையின் நாட்டியமாய் கானல். தெளிந்த ஓடையில் விழுந்த பிம்பங்களைப் போலக் காட்சியளித்தது.
அயர்ந்து கண்களை மூடப்போகும் நேரம் இருசக்கர வாகனத்தின் சப்தம் எழுப்பியது. எழுந்து நின்றார். கானலைக் கிழித்துக்கொண்டு பைக் வந்தது. லிஃப்ட் கேட்க கைகளை நீட்டினார். பைக்கில் வந்தவன் இவரைப் பார்க்காதது போல தொடர்ந்தான். பெரியவர் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். பைக் இவரைக் கடந்ததும் பின்னால் கைக்குழந்தையுடன் பெண் இருப்பது தெரிந்தது.
அவனை சபிக்க நினைத்த இரு வினாடிகளை எண்ணி நொந்தபடியே மீண்டும் மைல் கல்லில் அமர்ந்தார். 'வீட்டுக்கு அவசரமாப் போயி என்ன பண்ணப்போறோம். அரட்டை, டிவி அல்லது சின்னச் சின்ன வீட்டு வேலைகள்'. எந்தவித நினைப்புமின்றி, செயலுமின்றி வெறுமையாய் சில மணித்துளிகளை கடத்துவது காலத்தை ஏமாற்றுவதுபோலத் தோன்றியது பெரியவருக்கு.
அடுத்த பைக் சத்தம் கேட்டது. இந்தமுறையும் தாண்டிப் போய்விட்டான் பைக்காரன். பின்னால் யாருமில்லை.
"தம்பி.." கொஞ்சம் சப்தமாகக் கூப்பிட்டார். பைக் நின்றது.
"எங்க போணும் சார்? நீங்க நிக்குறதக் கவனிக்கலையே?" பைக்கிலிருந்த பையன் கரிசனையோடு கேட்டான்.
'நல்லவந்தான்'.
"மேட்டு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும்."
"வாங்க."
வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஏறி உட்கார்ந்தார் பெரியவர்.
"இங்க பஸ் வராதா?" பெரியவர் கேட்டார்.
"ரெண்டுமணிக்கு ஒரு பஸ் வரும் சார். அப்புறம் ஆறு மணிக்குத்தான். சென்னையா சார்?"
"ஆமா. போனவாரம் எறந்துபோனாரே வாத்தியார். அவர் என்கூட வேல பாத்தார். துக்கம் வெசாரிக்க வந்தேன். பென்சன் விஷயமா சென்னைக்கு வந்தா எங்கூடத்தான் தங்குவார்."
"அவர் பொண்ணு என் கூடப் படிச்சிச்சு."
"தேவியா?"
"ஆமா."
உரையாடல் கிராமத்துப் பள்ளிக்கூடம்பற்றியும், பையன் பத்து முடித்ததும் தேங்காய்மண்டியை கவனிக்க நேர்ந்ததையும் பற்றியும், இறந்துபோன நண்பனைப் பற்றியும் தொடர்ந்தது.
'அடுத்தவர்மீதான சார்புநிலை இந்தக் காலத்தில் அதிகமாயுள்ளது. உறவு, ஊர்க்காரன்னு இருந்த மக்கள் அதையெல்லாம் விட்டுட்டு முகந்தெரியாத மனுசங்களோடப் பழகிவாழனும்னு ஆயிடுச்சு'.
புதியவர்களை சந்தேகத்துடனும் வேடிக்கையாகவும் மட்டுமே பார்த்துப் பழகிய அந்தக் காலத்து மனிதர் அவர். ஒரு முகம் தெரியாத மனிதனை, நம்பி லிப்ட் தரும் மனிதர்கள் இருப்பது பெரியவருக்குப் பெருமையாயிருந்தது.
பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டான்.
"ரெம்ப நன்றிப்பா?"
"பரவாயில்ல சார்." வண்டி நகர்ந்தது.
வாழ்க்கையில் முதன் முதலில் லிப்ட் கேட்டுப் பயணித்த அனுபவத்தை சந்தோசமாய் உள்வாங்கிக்கொண்டிருந்தார் பெரியவர். 'அறிமுகமில்லாத மனிதனுக்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், இவரால் தீங்கு வருமோ என எண்ணாமல் உதவி செய்யும் உள்ளம் எல்லோருக்கும் இருக்குதா? ஒரு வேளை சரியான ட்ரெஸ் போடலன்னா லிப்ட் தந்திருக்க மாட்டானோ.'
பைக்கில் பையன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்றுத் தொலைவில் போனதும் பைக் பையன் பேண்ட் பாக்கட்டில் தன் பர்ஸ் இருக்கிறதா என சோதனை செய்துகொண்டது தெரிந்தது.
சின்ன புன்னகையுடன் பஸ் நோக்கி நடந்தார் பெரியவர்.
Thursday, August 03, 2006
நட்பு வாரம் - இளக்கியப் பதிவு
ஐயம் நீக்கும் ஐயன் வள்ளுவன் 'இணைய நட்பு' பற்றி என்ன சொல்லியிருக்கிறார் எனப் பார்க்கலாம்.
781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்(தொடர்ந்து) நல்ல பின்னூட்டம் வழங்கும் நண்பர்களைப் பெறுவதைப்போல
வேறெந்த கடினமான செயலும் இல்லை? தனிநபர் தாக்குதலிலிருந்து நம்மைக் காக்க வேறென்ன வழி?
பின்னீர பேதையார் நட்பு.
அறிவுசீவி பதிவர்களின் நட்பு வளர் பிறை; மற்றவர்களின் நட்பு தேய்பிறை.
783. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
பதிவுகளைப் படிக்கப் படிக்க வெறுப்பு வளர்வது போல பின்னூட்டம் இட இட நட்பு சுகம்
தரும்.
784. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
எப்பவுமே 'சூப்பர் சார்', 'கலக்கல் பதிவு', 'பின்னிட்டீங்க' மற்றும் :) போடாம
அப்பப்ப 'என்னடா பதிக்கிற', 'சோம்பேறி', 'கஸ்மாலம்' :( போன்ற பின்னூட்டங்களும்
இடுவதே நல்ல நட்பு.
785. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
வலைப்பதிவர் சந்திப்பு, ஜிகர்தண்டட பகிர்வு, எல்லாம் தேவையில்ல சும்மா இணையத்திலே
பதிவுகளைப் படித்து பின்னூட்டம் போட்டாலே பொதும் நட்பு தானா வளரும்.
786. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
சும்மா :) - ஸ்மைலி- போட்டுக்கிட்டு அலையிறது நட்பில்ல உள்ளத்துல இருக்குறத
வார்த்தையில எழுதுவதே நட்பு. (கவனிக்கவும் - பாய்ஸ் படப் பாடலிலிருந்து ஐயன் காப்பி
செய்துள்ளார்)
787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
சகிக்க முடியாம பதிவு போட்டுக்கொண்டு பின்னூட்டமே பெறாத ஒரு பதிவரை நல்ல பதிவு
போடுவதற்கு 784ல் சொன்னமாதிரி பின்னூட்டம் போட்டு வழிநடத்துவதே நட்பு
788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
பின்னூடமெனும் ஆடையிழந்த பதிவருக்கு கைகொடுத்து பின்னூட்டமிடுவதே நல்ல நட்பாகும்.
789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
நட்சத்திரமாய் மின்னும்போது மட்டுமில்லாமல் தேன்கூடு போட்டியில் தோற்று
வருந்தும்போதும் ஒரே மாதிரி பின்னூட்டங்கள் போடுவதே நட்பு.
790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
இவர் என் குழு, அவர் என் ஊர் எனப் பேசினனலும், பல பட்டங்கள் கட்டினாலும்,
எப்போதும் தங்கள் நட்பப பற்றியே பேருமமயாகப் பேசிக்கொண்டாலும், அந்த நட்பு இழிவாகவே
கருதப்படும். (இனையர் = இணையர்; இணையம் + அவர்)
இந்தப் பாவம் போக்க ஐயன் சிலையை ஐம்பது முறை வலம்
வருவதுதான் பரிகாரம் என தீட்சிதர்கள் எனக்குத் தனிமடல் (தமிழில்தான்)
அனுப்பியுள்ளனர்ர்
Friday, March 03, 2006
கீதாஞ்சலி - பூ
பூ.
இந்தப் பூவை பறித்து எடுத்துக்கொள்ளும்,
தாமதம் வேண்டாம்!
துவண்டு மண்ணில் விழுந்துவிடும்
என பயப்படுகின்றேன்.
நான் உன் பூமாலையில் இடம்பெறாமல் போகலாம்
ஆனால்,
உம் கரங்களால் நான் வலியேர்க்கும்
பெருமை பெறும் பொருட்டு என்னை ப் பறியும்
நான் உணரும் முன் இந்த நாள் முடிந்துவிடுமோ,
காணிக்கை தரும் நேரங்கள் ஓடிவிடுமோ
என பயப்படுகிறேன்
அதன் வண்ணங்கள் ஆழமானதாயில்லாதபோதும்,
குறைவாகவே மணம்வீசியபோதும்
இந்த மலரை
உம் பணிபுரியும்படி,
நேரம் இருக்கும்போதே, பறித்துவிடும்.
Tuesday, February 14, 2006
காதலர் தினம்
==================================
காதல் அங்கீகார முத்திரை
வெட்கம் பலி கொடுக்கப்படும்
ஒரு வேள்வி
'இச்' எனும்
ஒரு மந்திரம்
ஹார்மோன் கச்சேரியின்
முதல் பாடல்
இதழ்களின் காதல்
வெளியீடு
காதலின் இதழ்
வெளியீடு
அந்த அம்புக் காயத்திற்கு
கைமருந்து
வார்த்தைகளுக்கு
முற்றுப்புள்ளி
தோல்வியே இல்லாத
விளையாட்டு
பல கவிதைகளுக்கு
ஆதாரம்
என் கன்னத்தில் நீ செய்யும்
மின் கெஞ்சல்
நீண்டதொரு பயணத்தின்
முதல் அடி
என் அத்தனை கேள்விகளுக்கும்
ஒரே பதில்
Friday, February 10, 2006
குழந்தே
Tuesday, February 07, 2006
விடுதலை
கீதாஞ்சலி - தாகூரின் எழுத்துக்களில் உன்னதமானது. இறைவனுக்கும் இவருக்குமான உரையாடல்தான் கீதாஞ்சலி. கீதாஞ்சலியின் பாடல்கள் தத்துவக் களஞ்சியங்கள். கீதாஞ்சலியில் எனக்குப் பிடித்த ஒரு பாடலை தமிழாக்கியிருக்கிறேன். தாகூர் எந்தவிதமான விடுதலையை விரும்பினார் என்பதற்கு இஃது (Q தான் ஆயுத எழுத்தா?- டைப் டெஸ்டிங்) எடுத்துக்காட்டு.
"எங்கே மனம் பயமற்றிருக்கிறதோ, தலை நிமிர்த்தப்பட்டிருக்கிறதோ,
எங்கே அறிவு கட்டுப்பாடற்றுள்ளதோ*,
எங்கே உலகம் குறுகிய சுவர்களைக்கொண்டு துண்டாடப் படவில்லையோ,
எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழங்களிலிருந்து வருகின்றனவோ,
எங்கே அயராத வேட்கை தன் கரங்களை முழுமை நோக்கி நீட்டுகிறதோ,
எங்கே பகுத்தறிவு எனும் வெள்ளோடை,செத்த பழக்கங்களெனும் பாலைக்கு
வழிதவறவில்லையோ,
எங்கே மனம், உம்மால், என்றும் பரந்துபடும், எண்ணங்களுக்கும் ஆக்கத்திற்கும்அழைத்துச்செல்லப்படுகிறதோ...
அந்த சுதந்திர சொர்க்கத்தில் இறைவா**, என் நாட்டை எழச்செய்"
(*இலவசமாயுள்ளதோ எனவும் பொருள் கொள்ளலாம்)
(**இறைவா - என் தந்தையே)
ஆங்கிலத்தில் கிழே...
Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up
into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason
has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action---
Into that heaven of freedom, my Father, let my country awake
சிறில் அலெக்ஸ்