.

Showing posts with label இந்துமதம். Show all posts
Showing posts with label இந்துமதம். Show all posts

Sunday, February 18, 2007

Gas chambers அல்லது அரவிந்தன் நீலகண்டனுக்கான பின்னூட்டம்

கிறீத்துவ வழிபாட்டு முறைகளில் என்னைக் கவர்ந்த ஒன்று சிலுவைப்பாதை. இயேசுவை தீர்ப்பிடுதல் துவங்கி அவரை கல்லறையில் அடக்கம் செய்தல் வரை நிகழும் நிகழ்வுகளாக மொத்தம் 14 நிலைகள் வகுக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் ஒரு தியானமும் செபமும் செய்யப்படும்.

இயேசு ஒரு மனிதன் என்றே வைத்துக்கொள்வோம், அவரின் அகால மரணத்தை அசைபோடுவதென்பது அதுவும் ஆன்மீகப் பழக்கமாக செய்வதென்பது எனக்குள் பல சிந்தனைகளைத் தூண்டியிருக்கிறது ஆனால் ஒருபோதும் வெறுப்பைத் தூண்டியதில்லை. சாதாரணமாக ஒரு கல்லறையைக் கடந்துபோகும்போதே வாழ்க்கையைப் பற்றி அலசத்தூண்டப் படும் என்னால் சிலுவைப்பாதைகளை விரும்பாமல் இருக்க இயலவில்லை

பொதுவாக சிலுவைப்பாதைகள் எழுதி வாசிக்கப்படுகின்றன. கிறீத்துவ புத்தகக் கடைகளில் நிச்சயம் கிடைக்கும் அதை வாங்கிப் படித்தால் உங்களுக்கு சிலுவைப் பாதைகள் நடக்கும்போது கிறீத்துவர்கள் என்ன தியானிக்கிறார்கள் என்பது புலப்படும்.

சிறிய உதாரணம். முதல் நிலையில் (ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறது இது) இயேசு தீர்ப்பிடப் படுகிறார். இயேசு, தான் இறைமகன் என்கிறார், யூதர்கள் தேடிக்கொண்டிருந்த மீட்பர் நான் என்கிறார். இதனால் யூதர்களின் ஆதிக்க சக்திகளும் அவர்கள் பின்னிருந்த மக்களும் இயேசுவை சிலுவையில் அறையும்படி கையளிக்கின்றனர். ரோம ஆளுனன் போஞ்சியஸ் பைலட் (பிலாத்து) இவரிடம் நான் எந்தக் குறையையும் காணவில்லை என்கிறான்.

பிலாத்து ஆளுனன். நீதிவழங்குபவன். அரசின் சட்டங்கள் எதையும் இயேசு மீறாதபோது தாண்டனை வழங்கத் தயங்கினான்.

யூதர்கள் இவன் இரத்தப் பழி எங்கல் மேல் விழட்டும் எனச் சொல்கிறார்கள். பின்பு பிலாத்து இயேசுவை சிலுவைமரணத்துக்கு தீர்ப்பிடுகிறார்.

இந்த நிலை சிலுவைப்பதையில் எப்படி இருக்கும்.

'இயேசு நாதர் பாடுபட்ட முதலாம் ஸ்தலம்: இயேசுவை தீர்ப்பிடுகிறார்கள்' என்பார் நடத்துனர். மக்கள் எல்லோரும் 'திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றிஅறிந்த தோத்திரம் செய்கீறோம். ஏனெனில் அந்த பாரமான சிலுவையைக் கொண்டு உலகை மீட்டு ரட்சித்தீர்.' என பதிலளிப்பார்கள்.

அப்புறமா ஒரு சின்ன தியானம். தியானிக்க ஒரு கருத்து சொல்லப்படும் இது 100க்கு 99 முறை 'இந்த முதலாம் நிலையில் நாம் யாரையெல்லாம் தீர்ப்பிட்டிருக்கிறோம், அநியாயமாய் குற்றம் சாட்டியிருக்கிறோம் என எண்ணிப்பார்த்து வருந்துவோம்' என்பதுபோலத்ததன் இருக்கும். மீதம் ஒரு முறை ஒரு மாற்றுச் சிந்தனையாக இதுபோன்ற சிந்தனை ஏதாவது சொல்லப்படும்.

இதுபோல 14 தலங்களும் சுயபரிசோதனைக்கான உந்துதல்களே தவிர அரவிந்தன் நீலகண்டன் சொல்வதைப்போல வெறுப்பை விதைக்க அல்ல.

சரி சிலுவைப்பதை பற்றிய பெரிய புரிதலை அவரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. எனவே தொடர்புள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்.

மெல்கிப்சன் எடுத்த இயேசுவின் பாடுகள் (Passion of Christ) என்கிற படம் யூதர்களுக்கு எதிரான படம் என்கிறார். இதை க்ரஃபிக்ஸ் கலக்கல் எனவும் சொல்லிவிடுகிறார். இந்தப்படம் இயேசுவின் கடைசிப்பயணமான சிலுவைப் பயணத்தை விவரிக்கிறது.

சிலுவை மரணம் என்பது அப்போது மிகக் கொடிய தண்டனை. இயேசுவை கட்டிவைத்து சாட்டையால் அடிக்கின்றனர் பின்னர் தோளில் சிலுவையை சுமக்கச்சொல்லி கொல்கத்தா எனும் மலைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே சிலுவையில் அறைகின்றனர். இயேசு மரிக்கிறார்.

மேல்சொன்ன இந்த வரிகளைப் படிக்கும்போது உள்ளுக்குள் ஒரு காட்சிபோல (Visualization) தோன்றியிருக்கும். நானும் இயேசு சிலுவையில் தொங்குவதாக வடிக்கப்பட்டிருக்கும் சிருபங்கள் பலதையும் பார்த்திருக்கிறேன். அத்தனை கோரமானதாக அவை இருப்பதில்லை. பொதுவாக பார்த்தால் ஓரளவு பரிதாபம் வரும். இப்படி இயேசு தொங்கும் சிலுவைகள் ஒரு அடையாளமாகத்தான் அப்படி வைக்கப்படுகின்றனவே தவிர அவையே தத்ரூப மறுவடிப்புக்கள் அல்ல.

உண்மையில் சிலுவைப்பயணம் எப்படி இருந்திருக்கும்? தசைகள் கிழிய சாட்டையடிபட்டு, தெருத்தெருவாக விழுந்து எழுந்து, ஒரு ஆளைத் தாங்கும் பலம் கொண்ட மரங்கள் இரண்டினால் செய்யப்பட்ட சிலுவையை அடிபட்டத் தோளில் தசைகள் நையச் சுமந்து, தலையில் முள்ளினால் ஆக்கப்பட்டு இறுக்க பிணைக்கப்பட்ட முடியை, முகமெங்கும் இரத்தம் வழியத் தாங்கிக்கொண்டு, முள்குத்தினாலே இரத்தம் வழிந்தோடும் கைகளிலும் காலிலும் உலோக ஆணியால் துளைக்கப்பட்டு இறந்துபோன ஒருவரின் உடல் நம் கோவில் சிலுவையில் தொங்கும் உடல்போலவா இருக்கும்?

அது வேலிமீது விழுந்த துணிபோலக் கிழிந்திருக்கும். தசைகள் கிழிந்து தொங்கியிருக்கும், இரத்தம் வழிந்தோடும் புண்களும், ஆடையையும் தோலையும் இரத்தப் பிசினால் ஒன்றாக ஒட்டிவைக்கும் புண்களுமாய் இருந்திருக்கும். எச்சில் துப்பல்களும் ஏளனப் பேச்சுக்களும் நிறைந்த பயணமாயிருந்திருக்கும். உருக்குலைந்து போயிருக்கும் அந்த உடல்.

மெல் கிப்சனின் திரைப்படம் இந்த உண்மையைத்தான் எடுத்துரைக்கிறது.

என் அப்பா படத்தை பார்க்க இயலாமல் பாதியிலே வந்துவிட்டார். ஏன் எனக் கேட்டேன். 'இப்படியெல்லாம் நடந்திருக்குமா?' எனச் சொன்னார். நான் சொன்னேன்,"அப்புறம்? சிலுவை மரணம்னா சும்மாவா." இன்றைக்கு ஒரு திருடனை ஊரில் பிடித்துவைத்தால் என்ன செய்கிறோம்? எல்லாருமா செர்ந்து இரத்தம் வரும்வரைக்கும் அடிக்கிறோம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர். சமத்துவம், சகோதரத்துவம், மக்களாட்சி, நீதிமன்ரம் எனும் இன்றைய நிலமைகள் எல்லாம் துவக்கநிலைகளில் இருந்த காலங்களில் ஒருவனுக்கு சிலுவை மரணம் தருகிறார்கள் என்றால் சும்மா அழைத்துச் சென்று. வாங்க, இந்த சிலுவையில் படுங்க உங்களை அறைகிறோம் எனவா சொல்வார்கள்?

பைபிளில் சொல்லப்படாத எதுவும் 'இயேசுவின் பாடுகளில்' சொல்லப்படவில்லை என்பது நானறிந்தவரையில் உண்மை. அதுபோல யூதர்களுக்கு எதிராக பைபிளில் இல்லாத எதையும் மெல் கிப்சன் படத்தில் சொல்லவில்லை.

அப்ப பைபிள் யூதர்களுக்கு எதிரானதா? இயெசுவின் போதனைகள் மதத்தின் பெயரால் சட்டதிட்டங்கலைப் போட்டுக்கொண்டு தங்களைத் தாமே உயர்த்திக்கொண்டும், சடங்குகளின் பெயரில் மக்களை ஏமாற்றிக்கொண்டுமிருந்த மதக்குருக்களின் இருப்பை கேள்வி கேட்டது. அவர் இவர்களை 'விரியன் பாம்புக் குட்டிகளே', 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்' எனத் திட்டினார். ஒரு கட்டத்தில் கோவிலில் வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களை கயிறால் கட்டிய சாட்டையால் 'என் தந்தையின் இல்லத்தை வியாபாரக்கூடாரமாக்காதீர்கள்' எனக் கூறி விரட்டியடிக்கிறார்.

வெறும் சட்ங்குகளை வலியுறுத்தவில்லை இயேசு. புதிய மனித மனித உறவு மனித இறை உறவுக்கான போதனைகளை, படிப்பினைகளை உருவாக்கினார் இயேசு. பத்துக் கட்டளைகளையும் 'எல்லாவற்றிற்கும் மேலாக இறறவனன நேசி. தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசி' எனும் இரண்டு கட்டலலகளுக்குள் அடக்கினார் இயேசு. இதுதான் இயேசுவின் போதனையின சாரம்.

நோன்பிருக்கிறேன் என முகத்தை வாட்டமாக வைத்துக்கொண்டு வெளி அடையாளமாக கிழிந்த ஆடைகளை அணிந்துகொண்டும் திரிபவர்களை வெளிவேடக்காரர்கள் என்றார். நோன்பிருக்கும்போது அறையில் தனித்திருந்து இறைவனை வேண்டுதல் போதுமானது என்றார் இயேசு. வெளி அடையாளம் எதுவுமே தேவையில்லை என்றவர். இதெல்லாம் யூத 'ஆச்சார்யார்களுக்கு' ஆட்டத்தைத் தந்தது. இதுபோன்ற ஆட்டம்கண்டு அழிக்கத் துணிபவர்களை எல்லா கலாச்சாரங்களிலும் காண முடிகிறது. இப்படி யூத மதத்தின் அதிகார வர்கத்தில் இருந்துகொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்த யூத 'ஆச்சாரியார்களை'க் கேள்விகேட்டார் இயேசு அவர்களின் தூண்டுதலாலும் முழுமுயற்சியாலும் கொல்லப்பட்டார் இயேசு.

அரவிந்தன் ஒரு பைபிள் வாசகத்தை கையாளுகிறார்.

//நாடகங்களில் ரோமானிய அதிபன் போண்டியஸ் பைலேட் ஏசுவை கொல்ல மிகவும் தயங்குவான். யூதர்களும் அதன் ஆச்சாரியர்களும் அவனை கட்டாயப்படுத்துவர். அதன் விளைவாகவே அவன் அவனுக்கு இஷ்டமில்லாது இந்த அப்பாவியின் இரத்தத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதைக் காட்ட கை கழுவுவான். யூதர்களோ இந்த கொலைக்கான பழி எங்கள் மீதும் எங்கள் சந்ததியினர் மீதும் விழட்டும் என குரலெழுப்புவர். இது மத்தேயு எழுதியதாகக் கூறப்படும் 'பரிசுத்த நற்செய்தி 'யிலிருந்து (மத்தேயு-27:25). பின்னர் சிலுவைபாடுகள் தொடங்கும்.//

அரவிந்தன் இதை யூதர்கள் மீது விழுந்த இரத்த சாபம் என்கிறார். மீண்டும் வசனத்தை படியுங்கள். இது சாபமா? யார் பேசுவதுபோல அமைந்துள்ளது இது. இயேசுவோ அவரது சீடர்களோ சொல்வதைப்போலவா இல்லை யூதர்கள் சொல்வதுபோலவா?

தாங்களே தங்களை சபித்துக்கொண்டார்கள் என்கிறாரா அரவிந்தன்?

பைபிளில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இயேசு மரணத்தின் முன்பு சிலுவையிலிருந்த 'இவர்கள் செய்வதென்ன என்பதை உணராமல் செய்கிரார்கள் இவர்களை மன்னியும்' என வேண்டிக்கொள்வதாகச் சொல்கிறது பைபிள். இதன் உள் அர்த்தத்தத உணர்ந்து நடப்பவந்தான் உண்மையான கிறீத்துவன், மனிதன். இதை செய்யாத எவனுமே பாவி எனவும் நீங்கள் குற்றம் சாட்டியிருக்கும் அதே கத்தோலிக்க கிறீத்துவ சபை எனக்குச் சொல்லித் தந்திருக்கிறது.

மிச'நரி'கள் என நீங்கள் எல்லாம் சதா திட்டிக்கொண்டிருக்கும் கிறீத்துவ சாமியார்களைப்பற்றி என்ன குற்றச்சாட்டுக்களை வைக்கிறீர்களோ அத்தனையும் உங்களுக்கு எவ்வளவு பொருந்துகிறது என சுயசோதனை செய்யுங்கள் நண்பரே.

ஹிட்லர் காலத்தில் நடந்தது என்ன?

போப்தான் ஹிட்லரைத் தூண்டி விட்டார் என்பதுபோல அரவிந்தன் பேசுகிறார். ஆனால் அவரின் முந்தையக் கட்டுரை ஒன்றில் (ரெம்ப முந்தையது அல்ல 2 கட்டுரைக்கு முன்னால்) இவர் ஹிட்லரைப் பற்றிய குஜராத் பாடபுத்தகத்தில் இருப்பதைச் சொல்லும்போது ஹிட்லர் தன் மக்களின் பொருளாதார பலகீனத்தை பயன்படுத்திக் கொண்டார் என்பதை அவரே மேற்கோள் காட்டுகிறார். உண்மையும் அதுவே. யூதர்கள் தங்களுக்கே உரிய (நல்ல) குணமான வியாபாரத் திறமையைக் கொண்டு செல்வச் செழிப்பில் வாழ்ந்துவந்தனர். இதுகுறித்து எழுந்த 'அரசியல் சிந்தனையில் உதித்ததுதான் நாஜியிசம். இது கட்டுரையில் எங்கும் காணப்படவில்லை. நாஜியின் அடையாளமாக ஹிட்லர் தேர்ந்தெடுத்தது சிலுவையா அல்லது வேறெதுவுமா என்பது அரவிந்தன் நீலகண்டனுக்குத் தெரியாமலில்லை.

ஹிட்லர்காலத்தில் கத்தோலிக்க திருச்சபை செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது திருச்சபை. தப்பே செய்யலேன்னா எதுக்கு மன்னிப்பு? கத்தோலிக்க திருச்சபை செய்த தவறு என எல்லோரும் குறிப்பிடுவது திருச்சபை ஹிட்லரைக் கண்டுகொள்ளாமல் இருந்ததைத்தான். திருச்சபை யூதர்களுக்கெதிராக ஹிட்லரைத் தூண்டிவிட்டது என்பது யூதர்கள்கூட சொல்லாத கதை. ஹிட்லரின் உண்மை முகம் தெரிய வந்ததும் அவனை விட்டு விலகி நின்றது கத்தோலிக்கம். கத்தோலிக்கம் ஹிட்லர் காலத்து செயல்களுக்காக (சயலின்மைக்காக) மன்னிப்பபக் கோரவில்லை மாறாக தன் பெயரில் நிகழ்த்தப்பட்ட அனைத்து தவறுகளுக்ககவும்.

"It is appropriate that, as the Second Millennium of Christianity draws to a close, the Church should become more fully conscious of the sinfulness of her children, recalling all those times in history when they departed from the spirit of Christ and his Gospel and, instead of offering to the world the witness of a life inspired by the values of faith, indulged in ways of thinking and acting which were truly forms of counter-witness and scandal".

இதைப்போல ஒரு மன்னிப்பை. பகிரங்கமாகத் தன் தவறை ஒப்புக்கொண்டு வரலாற்றில் தன் பெயரில் நடந்த கொடுமமகளை நினைந்து கணக்கெடுத்து வெளிக்கொண்டுவரும் மற்றொரு மதத்தை அரவிந்தன் நீலகண்டன் சொல்வாரா?

பின்சாஸ் லபைட் எனப்படும் யூத மதகுரு தனது புத்தகத்தில் கத்தோலிக்க திருச்சபை போப் 12ஆம் பயஸ்'ன் கீழ் கிட்டத்தட்ட 8,60,000 யூதர்களின் உயிரைக் காப்பாற்றியிருப்பதாக எழுதியிருக்கிறார்.

//The Israeli consul, Pinchas E. Lapide, in his book, Three Popes and the Jews (New York: Hawthorn Books, Inc., 1967) critically examines Pope Pius XII. According to his research, the Catholic Church under Pius XII was instrumental in saving 860,000 Jews from Nazi death camps (p. 214).//

பயஸ் குரல் விடுத்திருந்தால் மேலும் பலரை காப்பாற்றியிருக்க இயலுமா? மேல்கூறிய யூதர் கூறுகிறார் ஹிட்லரின் concentration campல் இருந்த மக்கள்கூட போப் ஹிட்லருக்கு எதிராகப் பேசுவதை விரும்பவில்லை என்று. ஏன்? அது மேலும் பல கிறீத்துவர்களையும் கிறீத்துவ குருக்களையும் ஹிட்லர் கொல்ல வழிவகுத்திருக்கும்?

அப்ப ஹிட்லர் கிறீத்தவர்களையே கொன்றிருக்கிறானா? ஆமாங்க ஆமா. அரவிந்தனுக்குத் தெரிந்தும் இதை மறைத்திருப்பர் அல்லது எப்படி சிலர் ஹோலொகஸ்ட் என்பதே இல்லை என மறுப்பார்களோ அதுபோல மறுக்கலாம்(அவ்வளவு தூரம் சிந்திக்கத் தெரியாதவரல்ல என் நண்பர்). யூதர்களுக்கு உதவிய லட்சக்கணக்கான கிறீத்துவர்களை சிறையில் அடைத்தான் ஹிட்லர். அவர்களில் பலர் இறக்கவும் செய்தனர். இப்படி ஹிட்லரை எதிர்த்து உயிர்விட்டவர்களை புனிதர்கள் என அறிவித்திருக்கிறது திருச்சபை. ஹிட்லரை அல்ல.

டிசம்பர் 23, 1940 டைம் பத்திரிகை ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் கருத்தத வெளியிட்டது,
Being a lover of freedom, when the revolution came in Germany, I looked to the universities to defend it, knowing that they had always boasted of their devotion to the cause of truth; but, no, the universities immediately were silenced. Then I looked to the great editors of the newspapers whose flaming editorials in days gone by had proclaimed their love of freedom; but they, like the universities, were silenced in a few short weeks...

Only the Church stood squarely across the path of Hitler's campaign for suppressing truth. I never had any special interest in the Church before, but now I feel a great affection and admiration because the Church alone has had the courage and persistence to stand for intellectual truth and moral freedom. I am forced thus to confess that what I once despised I now praise unreservedly.

இதைச் சொன்னவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அதனாலென்ன? இவர் நீங்க நினைப்பதுபோல கிறீத்துவர் அல்லர். இவர் ஒரு யூத வம்சாவளியில் வந்த ஜெர்மெனிக்காரர்.

Dec, 23 1940 Time மற்றுமொருமுறை கத்தோலிக்க ப்ராட்டஸ்டாண்ட் 200,000 கிறீத்துவர்கள் எப்படி யூதர்களுக்கு உதவியதால் ஹிட்லரால் சிறையிலடைக்கப் பட்டார்கள் எனச் சொல்கிறது. அதே பதிப்பில் பக்கம் 40ல் மூனிக்(Munich) ஆர்ச் பிஷப் பூசையின்போது ஜெர்மனிய கிரீத்துவ மக்களுக்குச் சொன்ன போதனையை குறிப்பிடுகிறது.

"Let us not forget that we were saved not by German blood but by the blood of Christ!" நாம் நாஜி ரத்தத்தால் அல்ல இயேசுவின் ரத்தத்தாலேயே மீட்கப்பட்டோம் எனப் பொருள். பின்னர் இவரைக் கொல்ல நாஜிகள் செய்த முயற்சியிலிருந்து தப்பினார்.

போப் பயஸ் முழுவதுமாக அமைதிகாக்கவில்லை.

According to The New York Times editorial on December 25, 1941 (Late Day edition, p. 24):

The voice of Pius XII is a lonely voice in the silence and darkness enveloping Europe this Christmas... he is about the only ruler left on the Continent of Europe who dares to raise his voice at all... the Pope put himself squarely against Hitlerism... he left no doubt that the Nazi aims are also irreconcilable with his own conception of a Christian peace.

Also The New York Times editorial on December 25, 1942 (Late Day edition, p. 16) states:This Christmas more than ever he is a lonely voice crying out of the silence of a continent... Pope Pius expresses as passionately as any leader on our side the war aims of the struggle for freedom when he says that those who aim at building a new world must fight for free choice of government and religious order. They must refuse that the state should make of individuals a herd of whom the state disposes as if they were lifeless things.

கத்தோலிக்க திருச்சபை தன் நடுநிலமையை தக்கவைத்துக்கொண்டு யூதர்களுக்கு எத்தனை உதவிகளை மறைமுகமாகச் செய்ய இயலுமோ அதைச் செய்துகொண்டிருந்தது என்பதே உண்மை.

போப் பயசின் முயற்சிகளையும், இரண்டாம் உலகப் போரின்போது செய்த தொண்டுகளையும் முன்வைத்து ரோமின் ராபை 1944 கத்தோலிக்கராக மதம் மாறியதாகச் சொல்கிறது வரலாறு.

முடிவாக...

நண்பர் திரு அவர்கள் கீதையைக் குறைவாக எழுதிய பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தில் "மத புத்தகங்களைப் படித்து நல்லகாரியங்களைச் செய்பவனும் இருக்கிறான் கெட்டதைப் பிடித்துக்கொண்டு அல்லாடுகிறவனும் இருக்கிறான்" எனச் சொன்னேன். இது பைபிளுக்கும் பொருந்தும்.

பைபிளின் பெயரால் கிறீத்துவின் பெயரால் பல கொடுமைகள் நடந்துள்ளன. அன்று இயேசு எதை எதிர்த்தாரோ அதாகவே கிறீத்துவம் பல கட்டங்களில் வாழ்ந்து வந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. இவற்றை ஒரு முழு வரலாற்றுப் பார்வையில் கத்தோலிக்க கிறீத்துவம் இந்த தவறுகளை நிகழ்த்திய காலங்களையும் அப்போது இருந்த நியாயங்களளயும் சீர்தூக்கிப் பபர்த்தோமானால் இராமன் பின்னாலிருந்து அம்பு எய்ததன் தர்மம் எப்படி தர்மமோ அதுபோலவே இதுவும் எனப் புரியும். சில கொடுமைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதில் ஐயமில்லை.

கத்தோலிக்கம் ஒரு காலகட்டத்தில் உலகின் பல வலுவாய்ந்த அரசர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருந்தது. பல அரசியல் முடிவுகளையும் எடுத்துவந்த ஒரு அமைப்பாக இருந்தது. இந்த கால கட்டங்களில் பல அரசியல் தவறுகளையும் செய்துள்ளது.

வரலாற்றைக்கொண்டே நம் எதிர்காலத்தை முடிவு செய்வோமென்றால் நாமெல்லாம் ஆடையின்றித் திரியவேண்டியதுதான் போலும்.

திருச்சபை தன்னை திருத்திக்கொள்ள தன் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட பல தவறுகளையும் தேடிப்பிடித்து ஆராய்ந்து தவறுகளை தவிர்க்க தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறது. இதுபோன்றதொரு முயற்சி எத்தனை மதங்களில் சாத்தியம்?

இந்து மதம் கிறீத்துவத்தால் அழிக்கப்பட்டுவிடுமோ எனும் அரவிந்தனின் போன்றோரின் பயம் ஓரளவுக்கு நியாயமானது. ஆனால் இதை எதிர்கொள்ள இவர்கள் எடுத்துக்கொள்ளும் முயர்சிகள் மிசனரிகளின் முயற்சிகளைவிட வருந்தத்தக்கதாகவே தெரிகிறது.

கிறீத்துவத்தையும் இஸ்லாமையும் குறைசொல்ல எடுத்துக்கொள்ளும் முயற்சிகளில் சமபங்கு முயற்சியையாவது தன் மக்களை ஒன்றுபடுத்துவதிலும், இந்துமதத்தின் தத்துவக் கூறுகளை விளக்குவதிலும் தூக்கி நிறுத்துவதிலும் செயல் படுத்தலாம். நடராஜரின் Cosmic dance போன்ற கருத்துக்களள இந்துமதம் உண்மையில் எப்படிச் சொல்லியுள்ளது என்பதுபோன்ற கட்டுரைகளை வரையலாம். சாதியை ஒழிக்கவேண்டும் எனும் உயரிய கருத்தைச் சொல்லும் (தீவிர) இந்து நீங்கள். சாதியை தூக்கிப்பிடித்தவரைச் சாடினீர்கள். இதை எப்படிச் செய்யப்போகிறோம் எனச் சொல்லலாம். இன்னும் எத்தனையோ வழிகளில் உங்கள் பிரச்சாரங்களைச் செய்யலாம். கிறீத்துவம் போர்களாலும் ஏமாற்று வேலைகளாலும் வளர்க்கப்பட்டிருந்தாலும் அது அழியாமல் நிலைத்திருப்பதற்கான ஒரே காரணம் அதன் அடிப்படியில் அமமந்திருக்கும் கிறீத்துவின் போதனைகள், மற்றும் இந்தப் போதனைகளை தொடர்ந்து போதிக்கும் கட்டுக்கோப்பு. இந்தக் கட்டுக்கோப்பை உருவாக்காதவரை அரைகுறை இந்துக்கள் மதம் மாறிக்கொண்டேதான் இருப்பார்கள்.

நூற்றுக்கணக்கான வருடங்களாயிருந்த இஸ்லாமியரின் ஆட்சியில், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இல்லாத மதவாதா தேசியம் இன்றைக்கு மக்களாட்சியில் தென்படுகிறதென்பது வருந்தத்தக்கதே.

தன் மதத்தை பலரும் குறை சொல்லும்போது அடுத்தமதமும் இப்படிக் குறைகளள செய்திருக்கிறது என்ச் சொல்வதன்மூலம் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கிறீர்கள் இல்லையா?

'புற்றில் வாழ் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்..' எனும் திருவாசகப் பாடல் ஈசனை நம்பாதவர்களை மூடர்கள் எனப் பழிக்கிறது. இந்தத் திருவாசகம் இசையை கத்தோலிக்க திருச்சபை வெளியிடுகிறது. (தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது). எதற்காக? நல்லிணக்கம் வரவேண்டும் என்பதற்கான முயற்சிகளில்லையா இவை?.

அந்தப் பாடலில் ஈசனைப் புகழ அன்றி மற்றவரை இகழ அவர் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ள எத்தனை புத்தகங்கள் நாம் படிக்கவேண்டும்? 'முருகா உன்னையல்லால் வேறு தெய்வமில்லை...' எனப்பாடினால் அவர் தெய்வ நிந்தனையாளரா?

நீங்கள் இந்து மதம் பற்றி எழுதும் கட்டுரைகளை தவறாது படித்து பயன்பெறும் வாசகன். இரசிகன் எனவே சொல்லுவேன். ஆனால் வரலாற்றை ஒருபக்கமாகப் பார்த்து பதிவிடுவதற்குப்பதிலாய், அதுவும் சில கடுமையான வார்த்தைகளோடு, இந்துமதத்தைப் பற்றிய புதைந்துகிடக்கும் உண்மைகளை, அவை எனக்குத் தெரிந்த அளவுக்குக் கூடத் தெரியாமல் இருக்கிற இந்துக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

பிரிந்துகிடக்க ஏராளம் காரணங்கள் இருக்கின்றன ஆனால் சேர்ந்திருக்க நாம் மனிதர்கள் எனும் ஒரே காரணம்தான் இருக்கின்றது.

இனியும் இதுபோல எழுதிக்கொண்டிருக்கப்போவதில்லை(கைவலிக்குது :) ). இதுபோன்ற விஷயங்களை எழுதுவதில் எனக்கு அதிகம் விருப்பமில்லை. கடவுள், ஒரு தனிமனித அனுபவமாயிருக்க வேண்டும். மதங்கள் வழிகாட்டிகளே தவிர அவையே நம் பயணத்தின் இலக்கு அல்ல. எல்லா மதங்களின் வரலாறுகளும் இரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை உங்களைப்போலவே நானும் உணர்ந்திருக்கிறேன்.

எதை நீ கொண்டுவந்தாய் இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய் வீணாவதற்கு?

இது நம் மத அடையாளங்களுக்கும் பொருந்தும். என்னை வழிநடத்தும் தத்துவங்களில் இதுவும் ஒன்று. (Thanks to De Melo: you know what I mean).

(அவசரமாய் எழுதியது பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்; யார் மனதையும் புண்படுத்த அல்ல சில சிந்தனைகளைத் தூண்டவே இந்தப் பதிவு. நானும் அரவிந்த நீலகண்டனும் சண்டைக்காரர்கள் என நினைத்து நண்பரை கேலிசெய்தோ தனிப்பட்டமுறையில் தாக்கி எதையும் எழுதினால் அதை வெளியிடப் போவதில்லை. நல்ல கருத்துக்களை மட்டும் முன்வைக்கவும். முன்வைக்கலன்னாலும் பரவாயில்ல.)

தன் நண்பருக்காக உயிரை விடுவதைவிட மேலான அன்பு எதுவுமில்லை - இயேசு

Thursday, September 28, 2006

நரகாசுரன்

நரகாசுரன் என்று தலைப்பை தந்துவிட்டு என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. தலையை சொறிந்துகொண்டிருக்கும்போது தோன்றிய சில சிந்தனைத் துளிகள்.

வரலாறு வல்லவர்களால் எழுதப் படுகிறது. வெற்றிக்களிப்பே வரலாற்றில் மேலோங்கி நிர்க்கிறது தோல்வியில் காயப்பட்டவர்களின் முனகல்கள் அவர்களின் நெரிக்கப்பட்ட தொண்டைகளிலேயே நின்றுபோகின்றன.

விடாது கறுப்பு தன் பதிவொன்றில் நரகாசுரனின் கதை/வரலாறுபற்றிய மாற்று செய்தி ஒன்றை தந்திருக்கிறார்.

இடைக்குறிப்பு: விடாது கறுப்பிவின் பதிவுகளில் தனிமனித/இன எதிர்ப்புகளை நீக்கிவிட்டால் சில நல்ல தகவல்கள் இருக்கின்றன. அவரை ஒதுக்கிவிட்டவர்கள் மீண்டும் படிக்கவேண்டும், நேர் அல்லது எதிர்வினைகள் ஆற்றவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

விடாது கறுப்பு வரலாற்றைப் பற்றிய மறு பார்வை ஒன்றைத் தருகிறார் என்பதில் சந்தேகமேயில்லை.

'ஒரு வடக்கன் வீரகாதா' மம்மூட்டி நடித்த மலையாளத் திரைப்படம். பெயர்போன இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் எம்.டி வாசுதேவன் நாயரின் எழுத்தில் உருவான திரைப்படம். இந்தப்படமும் வரலாற்றை மாற்றிப் பார்க்கும் ஒரு பார்வையைக் கொண்டது.
களரிப் பயிற்று வீரர்களை வைத்து காலாகாலமாக சொல்லிவரப் பட்ட வரலாற்றுக்(?) கதைகளே இவை.


சாந்து என்பவன் அந்த வரலாற்றில் வில்லன். தன் சொந்தக்கார வீரனுக்கு எதிராய் சதிசெய்து கொன்றவன். ஆனால் திரைக்கதை இவனை சூழ்நிலைக் கைதியாயும் குற்றமற்றவனாகவும் காண்பிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

வாசுதேவன் நாயர் சமூகத்தில் விலக்கப்பட்டவர்களைப் பற்றி திரைக்கதைகள் பல எழுதியுள்ளார். இவரின் படங்கள் அதிகம் சமூகத்தில் அடிவாங்கியவர்கள் பற்றியே இருக்கும். பெருந்தச்சன், பஞ்சாக்னி போன்ற சில குறிப்பிடத்தக்கவை.

இந்தப் படத்தில் யேசுதாஸ் பாடிய 'இந்துலேக கண்துறந்து' , 'சந்தனலேப சுகந்தம்' எனக்கும் மிகவும் பிடித்த பாடல்களில் சில.

கிறீத்துவ நம்பிக்கையில் யூதாஸ் ஒரு பெரும் துரோகியாகக் காண்பிக்கப் படுவதுண்டு. புதிய ஏற்பாட்டுத் திருமுகங்களில் இவர் இயேசுவுக்குத் துரோகியாகக் காண்பிக்கப் படுகிறார். சமீபத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வெளிவந்த யூதாசின் நற்செய்தி (Gospel) யூதாஸ் இயேசுவின் கட்டளைப்படி நடந்ததாகக் கூறுகிறது. இதில் வரலாறாக பைபிளில் தெரிவு செய்யப்பட்டவைகளே கருதப்படும் என்பதில் ஐயமில்லை. பைபிளில் தரப் பட்டிருக்கும் யூதாசின் இறப்பு பற்றிய தகவல்களே முரணானதாக உள்ளன.


நரகாசுரனின் கதையில் இன்னொரு சுவாரஸ்யம் தன் இறப்பை மக்கள் சிறப்பிக்கவேண்டும் என அவனே வேண்டியதாகச் சொல்வது. தேவர்களின் வெற்றிக்கொண்டாட்டத்தைவிட நரகாசுரனின் நினைப்பதே தீபாவளியின் நோக்கமாகிவிட்டது.

அரக்கர்கள் தேவர்கள் என்பதை இனங்களாகப் பார்க்காமல் குணங்களாகப் பார்க்கும்போது எல்லோரிலும் அரக்கனும் தேவனும் ஒன்றாயிருப்பதைக் காணலாம். நம்மில் நொடியும், தினமும் நடக்கும் மனப் போராட்டங்களே காவியங்கள் சொல்லும் போர்கள். இதில் இரண்டுபக்கமும் அரக்ககுணங்களும் தேவகுணங்களும் செயல்பட்டன எனக் கொள்ளலாம்.

நமக்குள் இருக்கும் நல்லகுணங்கள் கெட்டவைகளை வெல்லும்போதெல்லாம் தீபவளியே.

டிஸ்கி: இந்தப் பதிவுக்கு என்னெல்லாம் டிஸ்கி தேவை என நீங்கள் எண்ணுகிறீர்களோ அத்தனையும் நான் இட்டுவிட்டதாகக் கருத வேண்டுகிறேன்.

Monday, July 24, 2006

மரபுடைத்தலின் சிதம்பர இரகசியம்

மரபுகளை உடைத்தெறியத் தூடிக்கிறோம் நம்மில் பலர். புரட்சிகரமான கருத்து, வரவேற்வேண்டிய முயற்சி. ஆனால் யாரின் மரபுகளை நாம் உடைத்தெறியத் துடிக்கிறோம் என்பது பெரிய கேள்வி.

அடுத்தவரின் மரபுகளை உடைத்தெறிந்து நம் மரபுகளைத் திணித்து
நிலைநிறுத்தச் செய்யும் முயற்சிக்குப்பெயர் மரபுடைத்தலா?

மரபுகள் பலவும் சட்டங்களாக்கப்பட்டுள்ளன அவற்றையும் உடைத்தெறியலாமா?
சிதம்பரம் விஷயத்தில் முதல்வர் சொல்லியிருப்பதுபோல சட்டப்படி உரிமை யாருக்கு உள்ளதோ அதை அவருக்குத் தருவதே நியாயமாகும்.

பெரியார் கோவிலுக்குள் நுழைந்து போராடியது சட்டப்படி ஒழிக்கப்பட்ட தீண்டாமையை ஒழிக்கும் பெரும் முயற்சி. அதற்கும் ஒருவருக்கு ஒரு நிறுவனத்தின்மேலுள்ள பொறுப்பை/உரிமையை அபகரிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கின்றது.

அடுத்தவர் நமக்குச் செய்யும் தீங்குகளே நமக்குப் பெரிதாய் படுகிறது நாமே நமக்குச் செய்யும் துரோகங்களை நாம் எண்ணிப்பார்க்கும் நாள் எந்நாளோ? நம் வீட்டுக் குப்பையைப் பெருக்கி தெருவில் போடும் பழக்கம் எப்பத்தான் போகுமோ?

தமிழ் ஒரு ஒப்பற்ற மொழி என்பதி சந்தேகமேயில்லை. அடுத்த மொழியை அழித்துத்தான் இதைக் காப்பார்றவேண்டுமென்கிற கட்டாயம் இதற்கு வந்திருப்பதை எண்ணி கலங்குகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்பவர்கள் முக்கால்வாசிபேர் தமிழர்களே. இதில் எத்தனை தமிழ்த்தலைவர்கள் அடக்கம் என்பது ஊருக்கே வெளிச்சம்.

அடுத்தவர் மரபுகளை மாற்றத் துடிப்பவர்கள் தன் மரபுகளை சுய ஆய்வு செய்து களையவேண்டியவற்றை களைந்துவிட்டு வரவேண்டும்.

பலரும் தமிழ் நாடு தனி நாடென்றே நினைக்கிறார்கள். உலகம் முழுவதும் தமிழ் பேசிவிட்டால் எவ்வளவு வசதியாயிருக்கும் எனவும் கனவு காணலாம் சிலர்.

குறுகிய வட்டங்களிலிருந்து, அடையாளங்களிலிருந்து அடையாளப்படுத்துவதிலிருந்து (மனிதர்களாகிய)நாம் விடுதலை பெறவேண்டும். இல்லையென்றால் எல்லையில்லா இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தனிமைப்படுத்தப்படுவோம்.

இந்தியர்களுக்கே உரிய குணம் தங்கள் நாட்டைப்பற்றி மிகயாகவும் அடுத்தவர்களைக் குறையாகவும் பேசுவது எனப் படித்திருக்கிறேன். எவ்வளவு உண்மை.

Friday, July 21, 2006

சிதம்பரத்தில் சிறில் அலெக்ஸ்

எங்கு பார்த்தாலும் சிதம்பரதில் தமிழில் பாடுவது குறித்த சூடான விவாதங்கள். பதிவுகள் பல பல செய்திகளையும் கோணங்களையும் தந்தாலும் முகமூடியின் பதிவும், 100சில பின்னூட்டங்களும் பிரச்சனையை முழுமையாய் அலசியிருக்கின்றன.

உண்மையில் நம்(பதிவர்கள்) மத்தியிலிருக்கும் பிரிவினை மனப்பாங்குகளின் காரணத்தால் இந்த விஷயத்தைப் பற்றி எந்த கருத்தையும் வெளிப்படுத்த எனக்கு தயக்கமிருந்தது. இருப்பினும் சில பதிவுகளில் பின்னூட்டமிட நேர்ந்தது.

என் தயக்கத்தை உறுதி செய்யும் வண்ணம் முகமூடியின் பதிவில் ஜோவின் பின்னூட்டங்களுக்கு எதிர் பின்னூட்டமிட்ட ஒரு பெயரிலி நம்மை வம்புக்கிழுத்துள்ளார்.

இவரின் முதல் நோக்கமென்ன, கிறித்துவர்கள் இந்து பிரச்சனைகளை விவாதிக்கக் கூடாது என்பதே. உண்மையில் சிதம்பர பிரச்சனை ஒரு சமூக பிரச்சனையாக (திரிக்கப்பட்டு?) கையாளப்பட்டுவருகிறது. 'தமிழ்' பிரச்சனை எனத்தான் இது அறியப்படுகிறது. இருந்தாலும் ஜோ, சிறில் எல்லாம் மூடிக்கிட்டு இருக்கணும்.

முகமூடியின் பதிவில் நான் எந்த பின்னூட்டமும் இடாதபோது என்னை கிறித்துவ அடிப்படைவாதி என முத்திரை குத்தி வம்புக்கிழுத்த பெயரிலியை வன்மையாக கண்டிக்கிறேன்.

அவருக்குத்தான் அவர் பெயரிலி ஆனால் அவர் யாரென்பது அவரின் பின்னூட்ட்டங்களில் எளிதாய் தெரிகிறது.

ஜொவின் பின்னூட்டங்கள் நாகரீகமாய், பிரச்சனைபற்றி எல்லோருக்கும் எழும் சில கேள்விகளை மட்டுமே கேட்டிருந்தார் என்பதும் ஒரு போதும் அவர் யாரையும் இழிவாய் பேசவில்லை என்பதும் அவரை அந்தப்பதிவிலேயே பாராட்டியிருக்கும் மற்ற பதிவர்களின் (முகமூடி உட்பட) பின்னூட்டங்கள் சொல்லும்.

சிதம்பரம் பிரச்சனையில் என் கருத்து என்ன? எல்லா நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுக்குள் இயங்குகின்றன. கல்வி நிலையங்கள் முதல் நம் வீடுவரை எழுதப்படாத விதிகள் பல நியமத்திலுள்ளன. இவை அந்தந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எல்லொருக்கும் செம்மையாய் சென்றடைய உதவுகின்றன என்பதே உண்மை.

தீக்சிதர்களைப்போல நானும் உள்ளே சென்று ஓதுவேன் என இவர் கேட்பது மொழி பிரச்சனையாகத்தெரியவில்லை. வீம்பாகத்தான் தெரிகிறது. மொழி பிரச்சனை என்றால் இது தமிழில் வழிபாடு நடத்தாத, நடத்த அனுமதிக்காத எல்லா கோவில்களுக்கும் பொருந்துமே, ஏன் சிதம்பரத்தில் மட்டும் போராட்டம்?

முகமூடி கேட்பதுபோல் சர்ச்சில் ஃபாதருக்குப்பதில் ஒரு கிறித்துவரே போய் நாந்தான் பூசைவைப்பேன் எனக் கேட்பது முட்டாள்தனமில்லையா?

மதங்கள் என்பதே கடவுளைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுப்பாட்டு வளையம்தானே. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லையென்றால் அந்த மதத்தில் நாம் இல்லை என்றுதான் பொருள்.

தமிழ் வளர்ச்சி தேவைதான் ஆனா அதையே ரெம்ப அதிகமா எல்லா விஷயங்களிலும் புகுத்துவது ஏனோ நமக்கு தமிழ், தமிழர் பற்றிய தாழ்வு மனப்பன்மையக்காட்டுதோன்னு தோணுது.

எந்த கலாச்சாரமும் அழியும், புதுமைபெறும். இறப்பு எப்படி மனிதனுக்கு நிச்சயமோ அதுபோலத்தான், சில கலாச்சாரங்கள் சிதையும், மருவும், மாறும். இறப்பும், அழிவும் எத்தனை நல்லவிஷயங்கள் என்பது நடராசரின் பேரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

'சிவா', அழிக்கும் கடவுள். அவரின் பெயரின் அர்த்தம் 'மங்களம்'. அழிக்கும் கடவுளுக்கு மங்களமானவர் என எப்படிப் பெயர் வந்தது? பழையன அழியும்போதுதான் புதியன தோன்றும். அதுக்காக தமிழை அழிப்போம் எனச் சொல்லவில்லை, ஆனால் தமிழ் மெல்லச் சாகிறதென்றால் அதை நிம்மதியாகச் சாகவிடுவதே மேல் என நினைக்கிறேன்.

எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் வரவேற்க்கத்தக்கதே ஆனால் எல்லா சாதியினரும் எல்லா கோயிகளிலும் முதன்மையான பூசைகள் செய்யலாம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது. அது ஒருசாரருக்கு நன்மமசெய்கிறோம் எனநினைத்து மற்றவர்களின் உரிமைகலை பறிப்பதுபோலாகும்.

பல இந்து நண்பர்கள் கேட்கும் கேள்வி நியாயமாகப் படுகிறது. ஏன் இந்து மதம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது? மதம் அரசிலிருந்து விடுபடவேண்டியது அவசியம். உண்மையில் தங்கள் வழிபாட்டு முறைகாளை அரசாங்கம் கட்டுப்படுத்துவதை வேறெந்த மதமும் ஏற்றுக்கொள்ளுமா?

சரி விஷயத்துக்குவருவோம். நம் அனானியின் பின்னூட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்(சிரித்துக்கொண்டே). இதே அனானி தூண்டப்படாமலே பிற மதங்களைத் தாக்கியிருக்கிறார் தன் பின்னூட்டங்களில். ஆனால் மத்தவங்கள அடிப்படைவாதின்னு நினைத்தமாட்டிலே எழுதிட்டுப்போவாரு.

எனக்கு ஒரே கேள்வி... எப்படி நாம் இப்படி சிந்திக்க கத்துக்கொண்டோம்?
நான் சார்ந்த எதுவுமே கேள்விகளுக்கும், குறைகூறுதலுக்கும் அப்பாற்பட்டது எனநினைக்கிறோமே. ஏன்.. எப்படி? கேள்வி எனக்கும்தான்.

Friday, February 10, 2006

எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்



ஒரு புகைவண்டி பயணத்தில் பார்வையில்லாத ஒருவர் பாடியபடியே நன்கொடை கேட்டுக்கொண்டு வந்தார்.

"கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்"

டி. எம். எஸ் குரலில் அருமையான ஒரு பாடல். பாடலின் இறுதியில் "கந்தனே உனை மறவேன்.. கந்தனே உனை மறவேன்.." என தூக்கிப்பாடுவார். மிக இனிமையான அர்த்தம் மிகுந்த பாடல். கந்தனே என்பதை நீக்கி கடவுளே எனப் பாடினால் எல்லா கடவுளர்களுக்கும் பொருந்திவிடும் இந்த வரிகள்.

இதே தொகுப்பில் "அழகென்ற சொல்லுக்கு முருகா", "ஓராறு முகமும்", "சொல்லாத நாளில்லை", "உள்ளம் உருகுதையா உன்னைக் காண்கையிலே" அற்புதமான பாடல்கள். மெய்மறந்து ரசித்திருக்கிறேன்.

யாராவது இந்தப் பாடல்களை வார்த்தைகளோடு பதிவிட்டால் மீண்டும் கேட்கலாம்.

இளைய ராஜா பாடிய 'ஜனனி ஜனனி', தாய் மூகம்பிகை படத்திலிருந்து. இந்தப் பாடலை கேட்கும்போதெல்லம் கண்ணோரம் ஈரம் கசியும், அத்தனை பக்தி மயமான ஒரு பாடல். அருமையான வரிகள். யார் எழுதிய பாடலென்று தெரியவில்லை. குழுவினர் பாடும்போது தீபன் சக்ரவர்த்தியை தனியாகக் கண்டுகொள்ளலாம்.

எம். எஸ். விஸ்வநாதன் இசையில், கண்ணதாசனின் பாடல்களென்று நினைக்கிறேன், ஒன்பது கிருஷ்ணன் பாடல்கள். அத்தனையும் ரத்தினங்கள்.

டி. எம் எஸ் பாடிய, 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே', எஸ். பி. பி பாடிய 'ஆயர்பாடி மாளிகையில்', ஜானகியின் 'கோகுலத்து பசுக்களெல்லாம்' , எல். ஆர். ஈஸ்வரி பாடிய, 'கோபியரே கோபியரே', எம். எஸ். வீ யே பாடிய ஒரு அருமையான பாடல் 'அமர ஜீவிதம் சுவாமி...' என நினைக்கிறேன், எல்ல பாடல்களும் எங்கு கேட்டாலும் நின்று கேட்டுவிட்டுத்தான் நகருவேன்.

எம். எஸ். வி இதேபோல வேளங்கண்ணி மாதா பாடல்களும் இசையமைத்துள்ளார் அவையும் இனிமையான பாடல்கள்.

எல். ஆர். ஈஸ்வரியின் 'தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி', அவர் குரலுக்கேற்ற இசையமைப்பு. 'கற்பூர நாயகியே கனகவல்லி', 'செல்லாத்தா எங்க மாரியாத்தா, 'வேற்காட்டில் வீற்றிருக்கும்', இவர் குரலில் மற்ற இனிமையான பாடல்கள்.

சீர்காழி பாடிய 'வினாயகனே வினை தீர்ப்பவனே'. சின்ன வயதில் இவர் கச்சேரியில் பாட நேரடியாக கேட்டிருக்கிறேன்.

இன்னும் 'மருத மலை மாமணியே முருகையா', 'திருச்சந்தூரில் கடலோரத்தில்'' எல்லாம் மறக்க முடியாத பாடல்கள்.

பாடல்களை பதிக்கும் வலைப்பதிவாளர்கள் யாரவது இவற்றை தொகுக்கலாம். பரிசாக 10 பின்னூட்டங்கள். எவ்வளவு பாடல்கள் இல்லையோ அதற்கேற்றாற்போல் பின்னூட்டங்கள் குறைத்துக்கொளளப்படும்

Monday, February 06, 2006

கிருஷ்ணரின் காதல் கவிதை

அமர்நாத் கோவிந்தராஜனின் இந்தப் பதிவில் கீழேயுள்ள ஆங்கிலக் கவிதை பதித்துள்ளார்.. அதை மொழிபெயர்த்துள்ளேன்.

For heaven's sake, listen, listen, O my darling:
Do not dart your cruel, angry glances at me,
For I swear by the lovely pitchers of your breasts,
And by your golden, glittering, snake-like necklace:
If ever on earth I dare touch anyone except you,
Let your necklace turn into a real snake, and bite me;
And if ever my promise and words prove false,
Chastise me, O darling, in the way you want to.
But, now, don't hesitate to take me in your arms,
Bind, bind my thirsty body with yours; bruise me
With your thighs, and bite, bite me with your teeth.
Let your fingernails dig deep, deep into my skin!
Strangle me, for heaven's sake, with your breasts,
And lock me in the prison of your body forever!

சுவர்கத்தின் பொருட்டு செவிகொடு, செவிகொடு என் அன்பே:
உன் கோபப் பார்வைக் கணைகளை என்மேல் தொடுக்காதே,
நான் உன் அழகிய கொங்கைகள்மேலும்
ஜொலிக்கும் உன் தங்க அரவம் போன்ற உன் கழுத்தணி மேலும் சத்தியமிடுகிறேன்,
உலகில் உன்னைத்தவிர வேறெவளையும் நான் தொடத்துணிவேனாகில்
உன் கழுத்தணி விஷப்பாம்பாகி என்னைத் தீண்டுவதாக.
இந்த சத்தியமும் என் வார்த்தைகளும் பொய்யாகிப் போனால்
அன்பே, உனக்கு வேண்டும் வழிகளில் என்னைத் தண்டிப்பாயாக!

ஆனால் இப்போது, உன் கரங்களில் என்னைத் தாங்கத் தயங்காதே,
தாகம்கொண்ட என் உடலை உன் உடல்கொண்டு கட்டிப்போடு
உன் தொடைகளால் என்னைக் காயப்படுத்து
உன் பற்கலால் என்னைக் கடி
என் தோலில் உன் விரல்நஹங்களை ஆழப்பதி,
உன் மார்பில் என்னை நெரித்துப்போடு, சுவர்கத்தின் பொருட்டு.
உன் உடலென்னும் சிறைக்குள் நிரந்தரமாய் என்னை அடைத்துப்போடு.

இதுபோன்ற கவிதைகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் 'சாலமனின் பாடல்' (Song of Solomon)
என்ற புத்தகத்தில் காணக்கிடைக்கின்றன.

சிறில் அலெக்ஸ்